Ilayaraja and Beyond
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை

3 posters

Page 9 of 16 Previous  1 ... 6 ... 8, 9, 10 ... 12 ... 16  Next

Go down

குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை - Page 9 Empty Re: குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை

Post  app_engine Tue Mar 06, 2018 9:19 pm

#1144
கவ்வையால் கவ்விது காமம் அதுவின்றேல்
தவ்வென்னும் தன்மை இழந்து


சென்ற குறளில் "கௌவை" என்று கண்ட சொல்லை இங்கே "கவ்வை" என்று காண்கிறோம். இப்படி இரண்டு விதமாக எழுதும் முறை தொன்று தொட்டே உள்ளது என்பதற்கான சிறிய சான்று.
(இதற்கென்றே - அதாவது, ஐ-அய் / ஒள-அவ் என்ற பயன்பாடுகள் குறித்து - தொல்காப்பியத்தில் இலக்கண விதி இருக்கிறது).

இங்கே கவ்வை என்ற பயன்பாடு கொண்டு சொல் விளையாட்டும் செய்கிறார் வள்ளுவர். கவ்விது என்கிறார், தவ்வென்னும் என்று எதுகை சேர்க்கிறார். இப்படியெல்லாம் Smile

மற்றபடி, சென்ற செய்யுள் போன்ற அதே பொருள் தான் இங்கும்.

காமம் கவ்வையால் கவ்விது
(எங்கள்) காதல் மற்றவர் அலர் தூற்றுவதால் (ஊரார் புறங்கூறிப் பழி தூற்றுவதால்) வளர்த்து பெருகுகிறது!
(கவ்விது  என்ற சொல் கவ்வை என்பதலில் இருந்து உண்டாக்கப்படுவதாக மணக்குடவர் சொல்கிறார். அதாவது, அலரால் அலர்கிறது - தூற்றுவதால் எங்கும் பரவுவது போல், காதல் மற்றவர் பழிப்பதால் முனைப்புக் கூட்டப்படுகிறது)

அதுவின்றேல் தன்மை இழந்து தவ்வென்னும்
அது (அலர்) மட்டும் இல்லாதிருந்தால், காதலின் தன்மை இழந்து தேய்ந்து (கெட்டு / சிறுத்து) இல்லாமல் போயிருக்கும்

ஆதலினால், காதல் செய்வோர் மற்றவர் எல்லாம் அறியத்தக்க விதத்தில் செய்க! குறிப்பாக, உங்கள் காதலை ஊரார் அலர் தூற்றாவிடில் அது வாடிப்போகும். அதாவது, ரெண்டு பேருக்கும் மையல் இருந்தால் மட்டும் போதாது - அதை ஊராரும் அறிய வேண்டும்!

மனதுக்குள்ளேயே வைத்துப்புதைக்கும் காதல் கொண்டு ஒரு பயனும் இல்லை! (உண்மையோ உண்மை!)


Last edited by app_engine on Mon Mar 12, 2018 11:58 pm; edited 1 time in total

app_engine

Posts : 10100
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை - Page 9 Empty Re: குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை

Post  app_engine Wed Mar 07, 2018 7:17 pm

#1145
களித்தொறும் கள்ளுண்டல் வேட்டற்றால் காமம் 
வெளிப்படுந்தோறும் இனிது

கள்ளுண்ணாமை எழுதிய வள்ளுவர் இங்கே கள்ளுண்ணுதலை - அதன் இனிமையை - உவமை ஆக்குகிறார் Smile
(அதாவது, வள்ளுவர் கள்ளுண்டு மயக்கும் இன்பம் உற்றிருக்கிறார் என்று சுருக்கம் - அல்லாமல், இப்படி உறுதியாக அவர் எழுத முடியுமா?)

"அலர் வழியாகக் காமம் எல்லோரும் அறிய வெளிப்படுவது நல்லதே" என்று அறிவுறுத்தும் பாடல்களை இந்த அதிகாரம் முழுவதும் கண்டு வருகிறோம். அது இன்பம் தரும் இனிமையான ஒன்று என்று இந்தப்பாடல் சொல்லுகிறது.

அதாவது, பேசித்திரிவோருக்கு மட்டுமல்ல அது இன்பம் தருவது - பேசப்படும் காதலர்களுக்கும் கள்ளுண்ணுவது போன்று இனிமையான, விரும்பத்தக்க மயக்கம் தரும் ஒன்றே அலர்! 
(தமது "புகழ்" ஊர் முழுக்கப்பரவி இருப்பது குறித்து அவர்கள் இன்புறுவது சரிதான் - "யாரும் வந்து அடித்து உதைப்பார்களோ" என்று அஞ்சி நடக்கும் கோழைகளுக்குக் காதல் தேவையில்லை தானே?)

கள்ளுண்டல் களித்தொறும் வேட்டற்றால்
கள்ளுண்பது களிக்கும் (மயங்கி மகிழும்)  தோறும் விரும்பப்படுவது போன்று

காமம் வெளிப்படுந்தோறும் இனிது
காமம் (ஊரறிய) வெளிப்படும் தோறும் இனிமையானது

காதல் வழி வரும் புகழ் (அல்லது இகழ், எப்படியானாலும் சரி) மயக்கம் தரக்கூடியது என்பதில் ஐயமில்லை! 

இதற்கு வழி செய்வோர் அலர் தூற்றுவோர் என்பதால் அவர்கள் கள் விற்போருக்குச்சமம்!

app_engine

Posts : 10100
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை - Page 9 Empty Re: குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை

Post  app_engine Thu Mar 08, 2018 10:21 pm

#1146
கண்டது மன்னும் ஒருநாள் அலர்மன்னும்
திங்களைப் பாம்புகொண்டற்று


இன்று போலவே வள்ளுவர் நாட்களிலும் ஞாயிறும் திங்களும் "மறைக்கப்படும்" நிகழ்வுகள் (சூரிய / சந்திர கிரகணங்கள் என்று பொதுவாக அறியப்படுபவை) பேரளவில்  பேசப்பட்டவை என்று சுட்டிக்காட்டும் குறள்.

அந்நிகழ்வுகளின் விளைவாகத் தோன்றும் நிழல்களை வைத்து அக்காலத்தில் கதிரவனையும் நிலாவையும் பெரிய பாம்புகள் விழுங்குவதாகக் கதைகள் சொல்லப்பட்டன என்றும் நாம் கேள்விப்பட்டிருக்கிறோம்.

காதலர்கள் குறித்த பழி தூற்றலும் திங்கள் விழுங்கப்படுவது போன்ற அளவில் பரப்பப்பட்டது என்று இந்தக்குறளில் வள்ளுவர் உவமை சொல்கிறார். படிப்பதற்கு மிகுந்த சுவை தான்!

கண்டது மன்னும் ஒருநாள்
(காதலர் ஒருவரை ஒருவர்) சந்தித்துக்கொண்டது என்னவோ ஒரே ஒரு நாள் மட்டும் தான்

அலர்மன்னும் திங்களைப் பாம்புகொண்டற்று
(ஆனால்) அது குறித்த அலர் தூற்றியதோ திங்களைப் பாம்பு விழுங்கியது போன்ற அளவில்!

தொடக்க அளவிலான - அதாவது, ஒரே ஒரு நாள் மட்டும் சந்தித்துக்கொண்ட - காதலைக்குறித்து நிலவைப் பாம்பு விழுங்கியது போல் பரபரப்பான செய்தியாகப் பரப்பி விட்டார்கள் என்பதில் இருந்து அன்றைய சமுதாய நிலையும் ஓரளவுக்குப் புரிந்து கொள்ளலாம்.

அதாவது, ஊருக்குள் அதை விடப்பெரிதாக வம்புச்செய்திகள் இல்லாதிருந்த காலம் Smile

app_engine

Posts : 10100
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை - Page 9 Empty Re: குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை

Post  app_engine Fri Mar 09, 2018 6:54 pm

#1147
ஊரவர் கெளவை எருவாக அன்னைசொல்
நீராக நீளும் இந்நோய்


இங்கே "அன்னை சொல்" என்பது பெண்ணுக்கா ஆணுக்கா என்று நேரடியாக இல்லை என்றாலும் பொதுவான தமிழ்ச்சூழல் அடிப்படையில் பெண்ணுக்கு என்று கொள்ள வழியுண்டு. ("காதல் கீதல் எல்லாம் வேண்டாம்" என்று பையனுக்கு அம்மா சொல்வார்களா என்று தெரியவில்லை, பெண்ணுக்குக் கண்டிப்பாகச் சொல்வார்கள் என்பது நம் காலங்களில் நேரில் கண்டது).

காதலை ஒரு பயிராக உருவகப்படுத்தி இங்கே எழுதுகிறார் வள்ளுவர். அன்னையின் சொல் (கடிந்து கொள்ளுதல்) காதலுக்கு நீரூற்றுதல் போலவாம் , ஆக அம்மா சொன்ன பேச்சை காமம் என்பதில் பொதுவாக யாரும் கேட்பதில்லை - எதிர்மறையாகவே செல்கிறார்கள் என்பது வேடிக்கை! மற்றபடி, இந்த அதிகாரத்தின் மையப்பொருளான அலர் தூற்றலை அந்தப்பயிருக்கு எரு என்கிறார்.

ஊரவர் கெளவை எருவாக
ஊரார்கள் அலர் தூற்றுவது எருவாகவும்

அன்னைசொல் நீராக
அன்னையின் (கடிந்துரைக்கும்) சொற்கள் நீராகவும்
(இப்படியாக, காதலை நீக்க வேண்டும் என்று எல்லோரும் எடுக்கும் முயற்சிகள் அதற்கு மாறாக வளர்ப்பதாகவே செயல்பட்டு)

நீளும் இந்நோய்
இந்தக்காதல் நோய் (என்னும் பயிர்) நீண்டு வாழும்

ஆக மொத்தம் தொன்று தொட்டே காதல் என்பது ஒரு எதிரெழுச்சி / புரட்சி / கிளர்ச்சி போன்று தான் வளர்ந்து வந்திருக்கிறது என்று இந்தக்குறள் சொல்லிக்கொடுக்கிறது!

எதிர்க்க எதிர்க்க வளரும் நோய் - எதிர்ப்பையே உரமாக / நீராகக் கொண்டு உயரும் பயிர் - அதற்குப்பெயர் தான் காதல்!

app_engine

Posts : 10100
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை - Page 9 Empty Re: குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை

Post  app_engine Mon Mar 12, 2018 6:24 pm

#1148
நெய்யால் எரிநுதுப்பேம் என்றற்றால் கெளவையால்
காமம் நுதுப்பேம் எனல்


"எரிகிற தீயில் எண்ணெய் ஊற்றுதல்" என்று சொல்வது நாம் அடிக்கடி கேட்கும் ஒன்று. (அதாவது, ஏற்கனவே எரிந்து கொண்டிருக்கும் தீயில் நெய் ஊற்றினால் இன்னும் சீற்றத்துடன் எரியும் - இதை "நடந்து கொண்டிருக்கும் கலவரத்துக்கு இன்னும் கூடுதல் வன்முறை சேர்க்கும் பேச்சு" என்பதற்கு உவமையாகச் சொல்வதுண்டு).

இங்கே அந்த உவமை கொஞ்சம் மாறுபட்ட விதத்தில் வள்ளுவர் கையாண்டிருக்கிறார். அதாவது, " தீயை அணைக்க யாராவது நெய் ஊற்றுவார்களா?" என்று Smile

காதலை அழிக்கும் நோக்கத்தோடு செய்யப்படும் அலரை ஏளனம் செய்கிறார். அலர் தூற்றுவதால் காதல் இன்னும் கூடும் / உறுதிப்படுமே ஒழிய அவிந்து போகாது என்று சொல்லுகிறார்.

உண்மை தான் - எந்த அளவுக்குக் காதலை அவித்துப்போட முயல்கிறார்களோ அந்த அளவுக்குக் காதலர்களும் இன்னும் கூடுதல் உறுதியோடு ஒட்டிக்கொள்வார்களே ஒழியப்பிரிவதில்லை!

கெளவையால் காமம் நுதுப்பேம் எனல்
அலர் தூற்றுவதால் காமத்தை அவித்துப்போடுவோம் என்று சொல்வது

நெய்யால் எரிநுதுப்பேம் என்றற்றால்
நெய்யை ஊற்றித் தீயை அணைப்போம் என்று சொல்வதற்கு ஒப்பானது

ஆக, வள்ளுவர் சொல்ல வருவது - ஊரார் நினைப்பது நடக்காது - அதற்கு நேர் மாறானது நடக்கும் !

நெய்யால் தீ கூடுமே ஒழியக் குறையாது - அது போலத்தான் காதல் எனும் நெருப்பும்! கௌவை கொண்டு அதை இன்னும் ஊதிப்பெரிதாக்கலாமே ஒழிய அவித்துப்போட முடியாது!

app_engine

Posts : 10100
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை - Page 9 Empty Re: குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை

Post  app_engine Mon Mar 12, 2018 11:53 pm

#1149
அலர்நாண ஒல்வதோ அஞ்சலோம்பு என்றார்
பலர்நாண நீத்தக் கடை


பொருள் சட்டென்று பிடிபடாத குறள் Embarassed
(அதற்கு ஒரு காரணம் எப்போதாவது பாடும் "பெண் குரல்" Laughing - பொது நோக்கிலோ அல்லது ஆணின் நோக்கிலோ 99% செய்யுள்கள் உள்ளதால் நடுவில் பெண்ணின் நோக்கில் ஒன்று வரும்போது புரிந்து கொள்ள நேரம் எடுக்கிறது. மட்டுமல்ல, உரையாசிரியர்களும் ஆளுக்கொரு விதத்தில் விளக்குவதால் தெளிவு இல்லை).

மேலோட்டமான பொருள் உடனே கிடைத்து விடும் தான் - "இந்த அலருக்கெல்லாம் நாணக்கூடாது" - இது தானே இந்த அதிகாரம் முழுவதும் வருகின்ற கருத்து.

என்றாலும், எதற்காக நாணக்கூடாது என்பதில் தான் சிறிய தடுமாற்றம். பெண்ணின் நோக்கில் என்று பார்த்தால் தான் கொஞ்சமாவது விளங்கும். (என்றாலும் முழுமையாகப் பிடிபட மாட்டேன் என்கிறது)

அஞ்சலோம்பு என்றார்
"அஞ்ச வேண்டாம்" என்று சொன்னார் (என் காதலர்)

நீத்தக் கடை பலர்நாண
(என்னைப்) பிரிந்த இடத்தில் பலரும் நாணும்படியாக!

அலர்நாண ஒல்வதோ
(இப்படிப்பட்ட சூழலில்) அலர் தூற்றுதல் கண்டு நாணக்கூடுமோ? ("கூடாது" என்று பொருள்)

இரண்டு வழிகளில் புரிந்து கொள்ள முயல்கிறேன்:

1. பேதைப்பெண்ணாக : "அஞ்சாதே" என்று எல்லோருக்கும் முன்னால் சொல்லிவிட்டுத்தான் அவர் போயிருக்கிறார் (போருக்கோ / வேலைக்கோ / வேறெங்கோ). திரும்ப வந்து என்னைச்சேருவார்! நானெதற்கு ஊரார் பேச்சுக்கு நாணவேண்டும்?

2. தன்னம்பிக்கை உள்ளவளாக : அவர் என்னைப்பிரிந்தாலும் மற்றவர்கள் நாணும்படி "அஞ்சாதே" என்று சொல்லித்தானே சென்றார். (பிரிக்கும்படி சூழ்ச்சி செய்த) அவர்கள் தானே நாண வேண்டும், நான் ஏன் வெட்கப்பட வேண்டும்?

app_engine

Posts : 10100
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை - Page 9 Empty Re: குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை

Post  app_engine Tue Mar 13, 2018 6:52 pm

#1150
தாம்வேண்டின் நல்குவர் காதலர் யாம்வேண்டும்
கெளவை எடுக்கும் இவ்வூர்


களவியலின் கடைசிக்குறள் பெண்ணின் குரலாக அமைந்திருக்கிறது.
(அப்படியாக, இரண்டு பேரும் சேர்ந்து விடுவார்கள், அடுத்து அவர்களது மணவாழ்வு / கற்பியல் தொடங்கும் என்று தெரிவிப்பதாகச் சில விளக்கங்கள் வலையில் காண முடிகிறது. பொருத்தமான ஒன்று தான்!)

மற்றபடி, இதுவரை இந்த அதிகாரத்தில் மீண்டும் மீண்டும் வரும் அதே பொருள் தான் - அதாவது, அலர் நல்லது / கௌவை வேண்டும் என்று தான் நாம் விரும்புகிறோம் / இதன் வழியாக நமது காதல் நிறைவேறும்!

யாம்வேண்டும் கெளவை எடுக்கும் இவ்வூர்
நாம் விரும்புகின்ற அலரை இந்த ஊரார் கையில் எடுத்திருக்கிறார்கள்
(நம்மைக்குறிந்து அலர் தூற்றுதல் நல்லதே)

தாம்வேண்டின் நல்குவர் காதலர்
(அதன் வழியே) அவர்களே விரும்பி என் காதலரை எனக்குத் தருவார்கள்

சில உரைகள் சொல்கிறபடியும் எடுத்துக்கொள்ளலாம் - அதாவது, கௌவை பெருகியதன் விளைவாக நான் விரும்பிய என் காதலர் என்னை விரும்பி வரும்படி இணைக்கும் வேலை நடந்து விட்டது!

எப்படி எடுத்துக்கொண்டாலும், அலர் நல்லதே என்று வள்ளுவர் அறிவுறுத்துகிறார்.

ஒரு வழியாக ஊரார் எல்லாரும் சேர்ந்து இவர்களைக்குறித்துக் கௌவை பேசிப்பேசி முடிவில் இருவரையும் ஒன்று சேர்த்து விடுகிறார்கள் என்று இந்த இயலை முடித்து வைப்பதாக எடுத்துக்கொள்ளலாம்.

அடுத்து வருவது கற்பியல்!

app_engine

Posts : 10100
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை - Page 9 Empty Re: குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை

Post  app_engine Wed Mar 14, 2018 10:04 pm

#1151
செல்லாமை உண்டேல் எனக்குரை மற்றுநின்
வல்வரவு வாழ்வார்க் குரை

(காமத்துப்பால், கற்பியல், பிரிவாற்றாமை அதிகாரம்)

கற்பியலைத் தொடங்கும் போதே "பிரிவாற்றாமை" என்று இருப்பது - இனிவரும் குறள்களில் நிறையத்துன்பியல் உண்டாகும் என்று அறிவிப்பதற்கோ?

அதற்கு நல்ல வாய்ப்பு இருக்கிறது என்று அடுத்து வரும் அதிகாரங்களின் பெயர்களைக்கண்டாலே தெரிகிறது.

மட்டுமல்ல, இது வரை மிகக்குறைவாகவே பேசிய / பாடிய பெண் குரல் இனி வரும் குறள்களில் பெரும்பங்கு வகிக்கும். அதாவது, அன்றைய "அகவாழ்வு" நிலையில் பெண்களுக்குப் பொதுவாக இருந்த "வீட்டில் இருந்து கொண்டு புலம்புதல்" என்ற நிலையையே நிறையப்பார்க்கப்போகிறோம் என்று தோன்றுகிறது.

என்றாலும், முன்முடிவு ஒன்றும் இல்லாமல், எப்போதும் போலவே படிப்பதாக இருக்கிறேன் Smile

"நீ என்னைப்பிரிந்து சென்றால் செத்துப்போவேன்" என்று மிரட்டிக்கொண்டு தொடங்குகிறது.

செல்லாமை உண்டேல் எனக்குரை
"பிரிந்து செல்ல மாட்டேன்" என்றால் மட்டுமே என்னிடம் சொல்
(செல்லாத நிலை உண்டு என்றால் மட்டும் என்னிடம் உரை)

மற்றுநின் வல்வரவு வாழ்வார்க் குரை
மற்றபடி உனது "விரைவில் திரும்பி வருதல்" குறித்து என்றால், அது வரை வாழுவோரிடம் சொல்லிக்கொள்

சட்டென நம்மைத்தாக்கும் வலிமை கொண்ட கவிதை என்பதை மறுக்க முடியாது! "விரைவில் வருவேன்" போன்ற வாக்குறுதி எல்லாம் எனக்கு வேண்டாம் என்று அச்சுறுத்தும் குரலில் பெண் சொல்கிறாள். அதுவரை உன்னைப்பிரிந்து உயிரோடிருக்க மாட்டேன் என்கிறாள்.

இதிலுள்ள முரணையும் நாம் காணலாம் - அதாவது, சிறிய காலத்துக்குக்கூட காதலனின் பிரிவைப் பொறுக்க இயலாத, இறந்தே போகும் அளவுக்கான மென்மை / முறிந்து போகும் தன்மை. அதே நேரத்தில், அதைத் தன தலைவனிடம் நேரடியாக அடித்துச்சொல்லச் சற்றும் தயங்காத அச்சமின்மை! அவனை அச்சுறுத்தும் வன்மை!

மென்மையான பெண் - ஆனால் தலைவனிடம் மட்டும் மிரட்டும் வன்மை Wink

app_engine

Posts : 10100
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை - Page 9 Empty Re: குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை

Post  app_engine Thu Mar 15, 2018 8:36 pm

#1152
இன்கண் உடைத்தவர் பார்வல் பிரிவஞ்சும்
புன்கண் உடைத்தால் புணர்வு


இந்த அதிகாரம் முழுவதுமே பெண் குரல் பாடுவது தானோ என்று தோன்றுகிறது. அதனால, இனிவரும் ஒவ்வொரு குறளிலும் அதைக்குறித்து எண்ண வேண்டியதில்லை. (ஒரு வேளை ஆணாக இருந்தால் மட்டும் குறித்து வைப்போம்).

பார்வல் - என்று ஒரு சொல் இங்கே வருகிறது. அதற்கு அகராதி சொல்லும் பல பொருள்களில் "பார்க்கை" (பார்த்தல்) என்பதே மிகப்பொருத்தம். அங்கே இந்தக்குறளை மேற்கோள் காட்டுகிறார்கள். ("அவர் என்னைப் பார்த்தாலே இன்பம்"  என்று சொல்கிறாள் பெண்).

"இன்கண்" இன்பமென்றால் "புன்கண்" துன்பம் தானே?  அதுவும், பார்வையின் போதல்ல - புணர்வின் (கட்டிப்பிடித்துக்கூடும்) போது!  

ஏனப்படி?

அங்கே தான் அதிகாரத்தின் மையப்பொருள் வருகிறது - பிரிவஞ்சுதல் / பிரிவு ஆற்றாமை!

இன்கண் உடைத்தவர் பார்வல்
அவர் பார்ப்பதே இன்பமாக இருந்தது
(உரையாசிரியர்கள் "முன்பெல்லாம்" என்று சொல்கிறார்கள்)

பிரிவஞ்சும் புன்கண் உடைத்தால் புணர்வு
(ஆனால் / இப்போதோ) பிரிவுக்கு அஞ்சும் போது புணர்வின் போதும் துன்பம் தோன்றுகிறது

இதிலிருந்து ஆக மொத்தம் புரிந்து கொள்ள வேண்டிய ஒரு குறிப்பிடத்தக்க உளவியல் உண்மை இருக்கிறது.

மானிட மனம் எப்போதும் அடுத்து வருவதற்காகத் தான் காத்திருக்கிறது! அதோடு ஒப்பிடுகையில், நிகழ் காலத்தின் இன்பத்தைத் துய்ப்பதற்குக்கூட சிறிய அளவிலேயே நாட்டம் இருக்கிறது! இது எப்படிப்பட்ட ஒரு முரண்!

"இன்று, இப்பொழுதில் என் கூட உறவாடுகிறார்" என்று இன்புறுவதில்லை - "ஐயோ, நாளைக்கு இருக்க மாட்டாரே" என்று துன்புறுகிறது அவள் மனம்.

முன்காலத்தில் அவன் பார்வை நேரடியாக உடலுக்கு ஒன்றும் தரவில்லை என்றாலும் எதிர்காலத்தில் வரப்போகிற தழுவலை நினைத்து இன்புற்றாள் என்பது இதனுடைய இன்னொரு புறம், ஆக மொத்தம் இன்பமோ துன்பமோ எதிர்காலம் தான் வாழ்வு என்று நினைக்கிறோம். Laughing

app_engine

Posts : 10100
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை - Page 9 Empty Re: குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை

Post  app_engine Fri Mar 16, 2018 9:22 pm

#1153
அரிதரோ தேற்றம் அறிவுடையார் கண்ணும்
பிரிவோரிடத்துண்மையான்


சட்டென்று பொருள் பிடிபடாத பாடல்.

சரி மற்ற உரைகள் என்ன தான் சொல்கின்றன என்று பார்க்கப்போனால் "உரைக்கு உரை எழுதும் நிலையில்" போட்டுக்குழப்பி இருக்கிறார்கள். இவற்றையெல்லாம் ஆய்ந்து "குறள் திறன்" என்று எழுதும் வலைத்தளம் இந்தக்குறளை சற்றே தெளிவாகக் கற்றுக்கொள்ள உதவுகிறது!

"தேற்றம்"  என்ற சொல்லுக்கு உள்ள பல பொருள்கள் கொண்டு உரைகள் இதைப் பலவிதத்தில் பொழிக்கின்றன.

உறுதி, தெளிவு என்ற பொருட்கள் இந்தச்சொல்லுக்கு இருந்தாலும் அவை அதிகாரத்தலைப்புக்குப் பொருத்தமில்லை. "மனம் கலங்காமை / ஆறுதல்" என்ற பொருளே சேர்கிறது. பிரிவு ஆற்றாமை = மனதுக்கு ஆறுதல் இல்லாத நிலை, தேற்றம் இல்லாத நிலை!. ஆக, அதுவே "அரிதரோ தேற்றம்" - அதாவது, "தேறுவது அரிது / ஆறுதல் கிடைப்பது கடினம்" என்று சொல்லும் குறளோடு ஒத்துப்போகிறது.

இனி பொருளைப்புரிந்து கொள்வது எளிது!

அறிவுடையார் கண்ணும்
(என்னைக்குறித்து) நன்கு அறிந்தவரிடத்திலும்
("நான் பிரிவைத்தாங்க மாட்டேன், செத்தே போய் விடுவேன்" என்றெல்லாம் நன்றாகத் தெரிந்த என் காதலரிடத்திலும்)

பிரிவோரிடத்துண்மையான்
ஒரு கட்டத்தில் பிரிவு ஏற்படும் என்பது உண்மையானால்

தேற்றம் அரிதரோ
தேற்றுவது / ஆற்றுவது அரிதல்லவா?

"நாமெல்லாரும் என்றாவது ஒரு நாள் போக வேண்டியவர்களே" என்ற சிந்தனையோடு இந்தக்குறளைப் பொருத்திப்பார்த்தால் விளங்குவது இன்னும் எளிது. அதாவது, எவ்வளவு நெருங்கியவர்களும் ஏதோ ஒரு சூழலில் அல்லது சாவில் பிரிய நேரிடும் என்னும் அறிவு.

என்ன தான் இந்த உண்மை நன்றாகத் தெரிந்திருந்தாலும், பிரிவு வரும்போது தாங்கவா முடிகிறது?

ஆற்றாமை கொண்டு அழுது, உடைந்து, நொறுங்கித்தானே போகிறோம்?

தேற்றம் அரிது என்பது மெய் தானே?

app_engine

Posts : 10100
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை - Page 9 Empty Re: குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை

Post  app_engine Mon Mar 19, 2018 9:54 pm

#1154
அளித்தஞ்சல் என்றவர் நீப்பின் தெளித்தசொல்
தேறியார்க்கு உண்டோ தவறு


தலைவன் பிரிந்து செல்லும் நிலையில் ஆற்றாமையில் பெண் புலம்பும் செய்யுள்!

"அஞ்சாதே, உன்னைப்பிரியவே மாட்டேன் - அது என் உயிரைப் பிரிவதற்குச்சமம்! நாமிருவரும் ஓருயிர்" என்றெல்லாம் உறுதி சொல்லியவர் பிரிந்து போகிறார்.

புலம்பும் பெண் கேட்கிறாள் "சொன்னதை நம்பியது என் தவறா? ".

ஆற்றாமை என்பதற்கு இதை விடவும் பொருத்தமான எடுத்துக்காட்டு இருக்க முடியுமா? "பேசிப்பேசி மாய்ந்து போதல்" என்று இதைத்தானே சொல்கிறார்கள்?

அளித்தஞ்சல் என்றவர் நீப்பின்
கருணையோடு என்ன நோக்கி "அஞ்சவேண்டாம்" என்று சொன்னவர் பிரிந்தால்

தெளித்தசொல் தேறியார்க்கு உண்டோ தவறு
அவ்வாறு சொன்ன உறுதிமொழியை நம்பித் தெளிந்தவளிடமா (அதாவது, என்னிடமா) தவறு இருக்கிறது?

"தவறு உன்னிடம் இல்லை தான்" என்று எல்லோரும் ஒத்துக்கொள்ள வேண்டும் என்பதல்ல இப்படிப்பாடுவதன் நோக்கம். (மற்றவர்கள் ஒத்துக்கொள்வதால் மட்டும் என்ன ஆகி விடப்போகிறது? வேண்டியவர் பிரிந்து விட்டால் மற்றவரது ஒப்புதல் கொண்டு ஒன்றும் கிட்டப்போவதில்லையே).

ஆக மொத்தம் தனது ஆற்றாமையை இப்படியெல்லாம் பாடி வெளிப்படுத்தித் துன்பத்தைத் தணித்துக்கொள்ளுதல் என்பது தான் இங்கே கருத்து என்று நினைக்கிறேன்.

தனக்குத்தானே ஆறுதல் சொல்லும் ஒரு விதமான தன்னிரக்கம்!

app_engine

Posts : 10100
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை - Page 9 Empty Re: குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை

Post  app_engine Tue Mar 20, 2018 8:28 pm

#1155
ஓம்பின் அமைந்தார் பிரிவோம்பல் மற்றவர்
நீங்கின் அரிதால் புணர்வு

"பிரிந்தவர் சேர்தல் கடினம்" என்ற பொருளில் இருக்கிறது இந்தச்செய்யுள். சண்டையிட்டுப் பிரிந்தாலும் மீண்டும் மீண்டும் சேர்ந்து கொள்வோர் நிறையப்பேரைப் பார்த்திருப்பதால் இக்கருத்தை உட்கொள்ளக் கடினமாக இருக்கிறது.

என்றாலும், சங்ககாலக் காதலர்கள் என்ற சூழலை மனதில் கொண்டு "அப்போதெல்லாம் காதல் என்றால் அவ்விதத்தில்" என்று புரிந்து கொள்ள முயல்கிறேன்.

"பிரிவாற்றாமை" அதிகாரத்துக்கு மிகப்பொருத்தமான குறள் தான் என்பதில் ஐயமில்லை. பிரிந்து விட்டுப்பின்னர் அதைக்குறித்து ஒப்பாரி வைப்பதை விட அது நடக்காமலேயே காத்துக்கொள்ளுதல் நன்று தானே?

சில உரையாசிரியர்கள் இதைப் பெண்குரல் பாடுவதாகப் புரிந்து கொண்டு, "என் உயிரைக்காக்க விரும்பினால்" என்று ஓம்பின் என்ற சொல்லை விளக்குகிறார்கள். அப்படியும் புரிந்து கொள்ளலாம் தான்.

ஓம்பின் அமைந்தார் பிரிவோம்பல்
காக்க வேண்டும் என்றால் காதலராக அமைந்தவரின் பிரிவு நேராமல் காக்க வேண்டும்
(என் உயிரைக் காக்க விரும்பினால், என் காதலர் பிரியாமல் தடுங்கள்)

மற்றவர் நீங்கின் அரிதால் புணர்வு
அல்லாமல் அவர் பிரிந்து விட்டால் பின்னர் ஒன்று கூடுதல் அரிது

இது வேண்டுகோளா அல்லது எச்சரிக்கையா என்பது யாரிடம் சொல்கிறார் என்பதைப்பொறுத்து இருக்கிறது. (ஒருவேளை காதலனிடம் சொல்கிறார் என்றால், எச்சரிக்கை ஒலி என்று எடுத்துக்கொள்ளலாம் Laughing )

app_engine

Posts : 10100
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை - Page 9 Empty Re: குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை

Post  app_engine Wed Mar 21, 2018 8:51 pm

#1156
பிரிவுரைக்கும் வன்கண்ணர் ஆயின் அரிதவர்
நல்குவர் என்னும் நசை


தமிழர் பழக்க வழக்கங்களில் ஒன்று சந்தித்து விட்டு விடைபெறும் போது "போய் வருகிறேன்" என்று சொல்வது!

"போகிறேன்" என்று சொன்னால் திட்டுவார்கள். ( இதற்கு விலக்கு இழவு வீடு மட்டுமே - அங்கே அப்படிச்சொல்லி விடைபெறத்தேவை இல்லை. சொல்லப்போனால், அங்கே "வருகிறேன்" என்று சொல்வது இன்னொரு இறப்பு விழப்போகிறது என்ற எதிர்பார்ப்பாகத் தவறாகப் புரிந்து கொள்ளப்படும்).

ஆக, முழுக்கூட்டமுமே "என்றென்றுமான பிரிதல்" என்பதை விரும்பாதவர்கள்.

அதாவது, காதலர் அல்லாதவர் போலும் பிரிவு சொல்வதை விரும்புவதில்லை.

அப்படிப்பட்ட சூழலில், "நான் பிரிந்து செல்கிறேன்" என்று ஒரு காதலன் பெண்ணிடம் சொன்னால் அவள் எப்படி உணருவாள்? ஆற்றாமை கொண்டு பொங்கமாட்டாளா?

அப்படிப்பட்ட ஒரு குறள்!

பிரிவுரைக்கும் வன்கண்ணர் ஆயின்
"பிரிந்து செல்கிறேன்" என்று சொல்லுமளவுக்குக் கடினமான மனம் உள்ளவர் (கருணையற்றவர் / கல் நெஞ்சர்) என்றால்

அரிதவர் நல்குவர் என்னும் நசை
அவர் (மீண்டும்) அன்பு காட்டுவார் என விரும்புவது (எதிர்பார்ப்பது) அரிது (வீண்)

கல் நெஞ்சத்தில் ஈரம் இருக்காது என்கிறாள் பெண்.

பிரிவாற்றாமையில் வரும் கடுமை என்று புரிந்து கொள்ள வேண்டும்!

app_engine

Posts : 10100
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை - Page 9 Empty Re: குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை

Post  app_engine Thu Mar 22, 2018 9:27 pm

#1157
துறைவன் துறந்தமை தூற்றாகொல் முன்கை
இறைஇறவா நின்ற வளை


"கையில் இருந்து வளை கழன்று விழுதல்" - அதாவது, காதலன் பிரிவால் துன்புற்ற பெண் மெலிவதன் விளைவாக அவளது கையிலிருந்து வளையல் தானாகவே கழன்று விழுதல் - இப்படிப்பட்ட ஒரு துன்பம் குறித்துப் பல சங்ககாலப் பாடல்களிலும் உள்ளது என்று தெரிந்து கொள்கிறோம்.

அப்படியாக, "கைவளை கழன்று விழல்" பிரிவாற்றாமையில் எப்போதும் சொல்லப்படும் ஒன்று.

அதை இங்கே வள்ளுவர் பதிவு செய்கிறார்.

முன்கை இறை இறவா நின்ற வளை
முன்கை மூட்டில் இருந்து கழன்று விழும் வளையல்
(இறை = மூட்டு / மணிக்கட்டு / முன்கை - இப்படிப்பல பொருள்கள்)

துறைவன் துறந்தமை தூற்றாகொல்
தலைவன் பிரிந்து போனதை எல்லோரும் அறியத் தெரிவிக்காதோ?
(தூற்றுதல் = எல்லோரும் கேட்கும் படி ஓசையில் பழித்தல்)

இங்கே நாம் அறியும் இன்னொரு தகவல் - பிரிவு குறிப்பாகப் பெண்களை எந்த அளவுக்குத் துன்புறுத்தியது என்பதை.

காதல் தொடங்கிய பொழுதில் ஆண் உணவு உறக்கம் எல்லாம் இல்லாமல் துன்புற்றான். ஆனால், பிரிந்த பின் அவனைப்பற்றி இங்கே நாம் பெரிதாக ஒன்றும் காண்பதில்லை. (கற்பியல் என்பதால் ஆணை விட்டு விடுகிறார் என்று நினைக்கிறேன் - அப்போதெல்லாம் பெண்ணுக்குத்தானே கற்பு / பிரிவு / துன்பம் எல்லாம்? ஆண் ஒரு மலரை விட்டு இன்னொரு மலருக்குச்செல்லும் வண்டு என்று எளிதாக விளக்கி விடுவார்கள்!)

பிரிவு என்னும் நோயால் பெண் மெலிதல் - இடையில் இருந்து அணி / ஆடை இளகுதல், கையில் வளை கழலுதல் என்று நிறையக்கவிதைகள் / பாடல்கள் நூல்களில் காண்பதாகப் படிக்கிறோம்.

app_engine

Posts : 10100
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை - Page 9 Empty Re: குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை

Post  app_engine Fri Mar 23, 2018 11:35 pm

#1158
இன்னாது இனன்இல்ஊர் வாழ்தல் அதனினும்
இன்னாது இனியார்ப் பிரிவு


இளையராசாவின் "அது நம்மூரைப்போல வருமா" - முன்னமேயே இதைக்குறித்து ஏதோ ஒரு குறள் படிக்கையில் எழுதி இருக்கிறேன் என்று நினைவு.

அந்தக்கருத்தை ஒப்பீடாக இந்தக்குறளில் வள்ளுவர் பயன்படுத்துகிறார்.

நம் இனம் / உறவு இல்லாத ஊரில் வாழ்வது துன்பமானது - இந்தக்கருத்தைச்சொல்லி, அதைவிடவும் துன்பமானது காதலரின் பிரிவு என்கிறார்.

அதாவது துன்பத்தின் அளவு எவ்வளவு என்பதைக்காட்ட எடுத்துக்கொள்ளும் சூழலின் தான் இன்று வெளிநாட்டில் வாழும் தமிழர்கள் நிலையும் என்பதற்காகச் சொல்கிறேன் Embarassed

இன்னாது இனன்இல்ஊர் வாழ்தல்
நமது இனத்தார் (உறவுகள்) இல்லாத ஊரில் வாழ்தல் கொடுமையானது (துன்பமானது)

அதனினும் இன்னாது இனியார்ப் பிரிவு
அதை விடவும் கொடுமையானது இனியவரின் (காதலரின்) பிரிவு

நம்மைச்சுற்றும் வேறு பழக்க வழக்கங்கள் / மொழிகள் / வாழ்வு முறைகள் உள்ளோர் இருப்பதில் அல்ல குழப்பம். நம்மைப்போன்ற அதே கூட்டத்தினர் ஒருவர் கூட இல்லாத சூழல் என்பதைத்தான் இங்கே வள்ளுவர் சுட்டுகிறார். ஆதலால், இது வேற்று இனத்தவர் மீதான வெறுப்பு அல்ல. மாறாக, நம் இனத்தவர் தோள் மீது சாய்ந்து ஆறுதல் காண வழியில்லாத வேற்று மண்ணில் உள்ளவரது மனநிலை!

அன்றாட வாழ்வில் இதை நாம் பலரும் உணராவிட்டாலும், மனஅழுத்தங்கள் உள்ள சூழலில் கூடுதல் களைப்பை உண்டாகும் ஒன்று. (வள்ளுவர் காலத்தில் தொலை பேசி / அலைபேசி எல்லாம் கிடையாது என்பதையும் நினைவில் கொள்க!)

அதை விடவும் கொடுமை காதல் பிரிவு - எளிதில் உணர்த்த மிக நல்ல ஒப்பீடு!

app_engine

Posts : 10100
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை - Page 9 Empty Re: குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை

Post  app_engine Mon Mar 26, 2018 6:53 pm

#1159
தொடிற்சுடின் அல்லது காமநோய் போல
விடிற்சுடல் ஆற்றுமோ தீ

அருமையான ஒப்பீடு உள்ள குறள் - காம நோயை நெருப்புடன் ஒப்பிட்டு அதிலும் கொடுமையானது என்று உணர்த்துகிறார் - ஒரு ஏளனச்சுவையும் இதில் இருப்பதைக்காண முடியும்!

தீயைத் தொட்டால் தான் சுடும் - காமமோ, பிரிந்து சென்றாலும் சுடும் Smile

"தொடா விட்டால் தீயால் சுட முடியாதே" என்று எள்ளும் ஒலியில் காதலர் பிரிவின் துன்பத்தைச்சொல்லுகிறார் வள்ளுவர்!

தொடிற்சுடின் அல்லது காமநோய் போல
தொட்டால் சுடுவது அல்லாமல் காம நோயைப்போல

விடிற்சுடல் ஆற்றுமோ தீ
பிரிந்தாலும் சுடும் வலிமை தீயிற்கு இருக்கிறதா என்ன? (இல்லை என்று பொருள்)

பிரிந்த பின் காம நோயின் சூட்டால் துன்புறுவது ஆட்கொல்லி என்றும் உணர்த்துகிறார். (தீயைத்தொடும் உடல் வெந்து போகும் - காம நோயிலும் உடல் வேகும்; ஆனால், சேர்ந்தாலும் பிரிந்தாலும் வேகுதல் என்பது காமத்துக்கு மட்டுமே)


app_engine

Posts : 10100
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை - Page 9 Empty Re: குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை

Post  app_engine Mon Mar 26, 2018 10:39 pm

#1160
அரிதாற்றி அல்லல்நோய் நீக்கிப் பிரிவாற்றிப்
பின்இருந்து வாழ்வார் பலர்


பிரிவாற்றாமை குறித்த அதிகாரத்தை "வேறு வழியில்லாமல் நடைப்பிணமாக வாழும் நடைமுறை உண்மை நிலை" குறித்துப்பேசி முடிக்கிறார்.

அதாவது, பிரிவு வந்து தாங்க முடியாத அல்லல் உற்றாலும் பெரும்பாலானோர் அதையெல்லாம் மெல்லக்கடந்து எப்படியோ வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார்கள் என்கிறார் Smile

முக உரையில் கவித்துவமாக ஒன்றைக்கூட்டிச்சேர்க்கிறார் - "ஆனால் நான்?" என்று. அதாவது, ஊரில் பல பெண்கள் அப்படியெல்லாம் வாழ்ந்தாலும் என்னால் முடியவே முடியாது. இந்த நோய் என்னைக்கொன்றே தீரும் என்பது போன்ற ஒரு பொருள் புதைந்து கிடப்பதாக அவர் சேர்க்கிறார்.  "பலர்" என்ற சொல்லை வைத்துப்பார்த்தால் அது சரி தான். (நாம் யாருமே "பலர்" என்ற கூட்டத்தில் நிற்காமல் தனித்துவத்துடன் திகழத்தானே விரும்புவோம்? தலைவியும் அப்படித்தானே இருப்பாள் என்ற முடிவு) Smile அழகு தான்!

அரிதாற்றி
அரிதான செயலான பிரிவை ஏற்றுக்கொண்டு

அல்லல்நோய் நீக்கி
(அதனால் வந்த) துன்பம் என்னும் நோயைச் சுமந்து தீர்த்து

பிரிவாற்றிப் பின்இருந்து வாழ்வார் பலர்
(அப்படியாக,நாட்கள் செல்லச்செல்லப்) பிரிவுத்துன்பத்தை ஒருவாறு ஆற்றிப் பின்னர் உயிர் வாழ்வோர் பலர் இருக்கிறார்கள்.

நடைமுறை உண்மை இது தான்.

காதலன் கைவிட்டுப்போனால் அதன் பின்னர் வேறு மணம் முடித்து வாழ்வோர் பெருகி வரும் காலத்தில் நாம் வாழ்வதால் இது ரொம்பவே நடைமுறையான உண்மை! பிரிவால் நோய் கண்டு, வளை கழன்று இடை மெலிந்து இறப்போரெல்லாம் கிட்டத்தட்ட இல்லாத ஒரு காலத்தில் நாம் வாழ்கிறோம்.

என்றாலும், வேறு ஒருத்தனை ஒருக்காலும் நினையேன் என்று வாழுவோர் இன்றும் இருக்கத்தான் செய்கிறார்கள். அதே போல், இறந்து போகும் ஏழை உள்ளங்களும் இல்லாமலில்லை Sad

app_engine

Posts : 10100
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை - Page 9 Empty Re: குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை

Post  app_engine Tue Mar 27, 2018 11:43 pm

#1161
மறைப்பேன்மன் யானிஃதோ நோயை இறைப்பவர்க்கு
ஊற்றுநீர் போல மிகும்

(காமத்துப்பால், கற்பியல், படர் மெலிந்திரங்கல் அதிகாரம்)

அதிகாரத்தின் பெயருக்கே ஒரு ஆராய்ச்சி தேவைப்படுகிறது Laughing

இரங்கல் - அழுகை (இறந்தவர்களுக்கு இரங்கல் சொல்லுதல், இரங்கற்பா என்பதெல்லாம் தெரிந்தது தானே?)

மெலிந்து - இளைத்துப்போதல், வருந்துதல்

படர் - இங்கே தான் குழப்பம், இதற்குப் பல பொருள்கள் இருக்கின்றன. அவற்றுள் எது மிகப்பொருத்தம் என்று தேட வேண்டியிருக்கிறது. எல்லாவற்றையும் பார்த்த பின் "நோய்" என்ற அளவில் மட்டுமே எடுத்துக்கொள்ள முடிவு செய்திருக்கிறேன். (நினைவினால் உண்டாகும் வருத்தம் என்றெல்லாம் விளக்கலாம், ஆக மொத்தம் இது ஒரு நோய். இங்கே, காதலன் பிரிவினால் பெண் அடையும் நோய்).

நோயினால் துவண்டு அழுதல் = படர் மெலிந்து இரங்கல்.
பிரிவாற்றாமைக்கு அடுத்து வருவதால், காதல் பிரிவு நோய் Smile

மறைப்பேன்மன் யான் நோயை
காதல் நோயை நான் மறைத்து வைப்பேன் (ஆனால்)

இஃதோ இறைப்பவர்க்கு ஊற்றுநீர் போல மிகும்
இந்த நோயோ இறைப்பவர்க்கு ஊறும் நீரைப்போல மிகுந்து பொங்குகிறதே!

உரையாசிரியர்கள் இது காதலி தோழியிடம் சொல்லுவதாக விளக்குகிறார்கள். அதாவது, "கவலையை மற - காதல் பிரிவு என்பதை வெளியில் காட்டாதே - மறைத்துக்கொள்" என்று தோழி சொல்கிறாளாம். அப்போது தலைவி "நான் அடக்கினாலும் இது சுனை போலப்பொங்கி வெளியே கொட்டுகிறதே " என்று அழுது புலம்பி நொந்து கொள்கிறார்.

app_engine

Posts : 10100
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை - Page 9 Empty Re: குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை

Post  app_engine Wed Mar 28, 2018 8:33 pm

#1162
கரத்தலும் ஆற்றேன் இந்நோயை நோய்செய்தார்க்கு
உரைத்தலும் நாணுத்தரும்


காதல் நோயால் துவண்டு அழுகின்ற பெண் "மறைக்கவும் முடியவில்லை, சொல்லவும் நாணம் தடுக்கிறது" என்று பாடும் செய்யுள்.

எப்பேர்ப்பட்ட கடினமும் கொடுமையான சூழலில் பெண்ணினம் வைக்கப்பட்டிருந்தது என்று இதிலிருந்து புரிந்து கொள்ளலாம். (அண்மைக்காலம் வரை கிட்டத்தட்ட அதே நிலை தான் - தற்போது தான் விடுதலையான சூழலும் மாற்றங்களும் என்று தோன்றுகிறது).

கரத்தலும் ஆற்றேன் இந்நோயை
இந்தக்காதல் நோயை என்னால் மறைக்கவும் முடியவில்லை
(இயல்பாக வரும் உணர்வை எந்த அளவுக்குத்தான் அடக்க முடியும்? அதுவும் சுனை போல வழிந்து பொங்கும் போது?)

நோய்செய்தார்க்கு உரைத்தலும் நாணுத்தரும்
இந்த நோயைத் தந்தவருக்கு (என் காதலருக்கு) என்நிலையை எடுத்துச்சொல்லவும் நாணம் தடுக்கிறது

தனிக்குறளாக மட்டும் பார்த்தால், காதல் தொடங்கும் பொழுதில் என்றோ காதலன் பிரிந்து சென்ற பின்னர் என்றோ எப்படி வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளலாம். எப்படி எடுத்துக்கொண்டாலும், பெண்ணின் நிலை கொடுமையானதே.

முன்பு களவியல் படிக்கையில் காதலன் இப்படியெல்லாம் புலம்புவதைக்கண்டிருக்கிறோம். அப்போதெல்லாம், சேர்ந்து பிரிந்ததாக நாம் எண்ணுவதில்லை. ஆனால் இங்கோ பெரும்பாலும் எல்லா உரைகளும் அப்படித்தான் எண்ணுகின்றன. சாலமன் பாப்பையா "கடிதத்தில், தொலைபேசியில்" என்றெல்லாம் வேறு கூட்டிச்சேர்க்கிறார். Laughing
(காதலன் என்றால் களவு & காதலி என்றால் கற்பு என்றும் சொல்லுவதும் நம் கண்ணை உறுத்த வேண்டிய ஒன்று).

app_engine

Posts : 10100
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை - Page 9 Empty Re: குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை

Post  app_engine Thu Mar 29, 2018 6:49 pm

#1163
காமமும் நாணும் உயிர்காவாத்தூங்கும் என்
நோனா உடம்பின் அகத்து


தூங்குவது என்றால் உறங்குவது என்று மட்டுமே பேச்சு வழக்கில் நாம் புரிந்து கொள்கிறோம். அதற்குத் "தொங்குவது" என்றும் பொருள் உண்டு. இந்தக்குறளில் அப்பொருளில் "தூங்கும்" என்ற பயன்பாடு.

தூங்குவது என்ற சொல்லில் இருந்து வந்தது தான் "தூக்குத்தண்டனை" (தொங்கிச்சாவது). இந்தச்சொல்லை மலையாளத்தில் "தொங்குதல்" என்ற பொருளில் மட்டுமே பயன்படுத்துகிறார்கள் என்பது வேடிக்கை. அங்கே "தூங்கி மரிச்சு" = தூக்குப்போட்டுத் தற்கொலை செய்வது.

உயிர் காவாத் தூங்கும் = உயிரைக் காவு தடி (காவடி) போல ஆக்கி அதில் தொங்கும் ; இது தெரிந்தால் பொருள் விளக்குவது எளிது.

என் நோனா உடம்பின் அகத்து
தாங்க முடியாத நோவு (துன்பம்) கொண்டுள்ள என் உடம்பின் உள்ளே

காமமும் நாணும்
காமமும் (காதல் நோயும்), நாணமும்
(அதாவது, காதலும் அதைச் சொல்ல முடியாத நாணமும்)

உயிர்காவாத்தூங்கும்
உயிரைக் காவு தடி (காவடி) போல ஆக்கி அதன் இருபுறமும் தொங்கும்

காதலும் நாணமும் ஒன்றுக்கொன்று எதிரான பக்கத்தில் என்றும் புரிந்து கொள்கிறோம். மட்டுமல்ல, இவை இரண்டுமே உயிருக்குப் பளுவானவை - அதை இழுத்துத் துன்புறுத்தும் தன்மை கொண்டவை.

இரண்டிலும் மாட்டிக்கொண்டு பெண்ணின் உயிர் ஊசலாடுகிறது. அதைத் தாங்கும் உடம்பும் நோய் கொண்டு வாடுகிறது.

அருமையான உவமைப்படம் கொண்ட பொருள் செறிந்த கவிதை.


app_engine

Posts : 10100
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை - Page 9 Empty Re: குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை

Post  app_engine Tue Apr 03, 2018 9:11 pm

#1164
காமக்கடல் மன்னும் உண்டே அது நீந்தும்
ஏமப்புணை மன்னும் இல்


உருவகம் கொண்டு அழகுபடுத்தும் இன்னுமொரு பாடல்.

காமத்தைக் கடல் என்று உருவகப்படுத்துகிறார். "மன்னும்" என்று அசைச்சொல் இட்டு சலித்துக்கொள்கிறார்.  அதைக் கடக்கவோ தோணியில்லை என்று கவலைப்படும் பெண்ணின் அழுகை.

கடல் என்பது மிகப்பொருத்தமான உருவகம். அதாவது, காதல் என்பது நோயாக மாறும்போது அதைவிடவும் வாழ்வில் பெரிதாக வேறொன்றும் தோன்றுவதில்லை. அப்படி ஒன்று. இன்னொன்று அதில் "மூழ்கும்" நிலை. என்னவாவது செய்து அதைக்கடக்க வேண்டும், இல்லையேல் வாழ்வே மூழ்கிப்பாழாகும்.

இப்போது கேள்வி என்னவென்றால், காமக்கடலை நீந்த உதவும் தெப்பம் யாது? (வள்ளுவர் அதற்கு விடை சொல்லாமல் விட்டு விடுகிறார் - ஒவ்வொருவரும் அவரவர் வழி கண்டுபிடித்துக்கொள்ள வேண்டும் என்று பொருள்)

காமக்கடல் மன்னும் உண்டே
காமநோய் கடல் போல் பெரிதானது / பொங்குகிறது

அது நீந்தும் ஏமப்புணை மன்னும் இல்
அதை நீந்திக்கடக்க உதவும் (பாதுகாப்பான) தெப்பம் தான் இல்லை

எழவு, கழுதை போன்ற அசைச்சொற்கள் நாட்டுப்புறங்களில் (முன்பெல்லாம்) பேச்சு வழக்கில் அடிக்கடி வந்து விழும் - சலிப்போ அல்லது எரிச்சலோ சுட்டிக்காட்டும் வண்ணம். இங்கே "மன்னும் - மன்னும்" என்று தலைவி தனது அழுகையில் சொல்லிக்கொள்கிறார்.

app_engine

Posts : 10100
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை - Page 9 Empty Re: குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை

Post  app_engine Wed Apr 04, 2018 10:29 pm

#1165
துப்பின் எவனாவர் மன்கொல் துயர்வரவு
நட்பினுள் ஆற்றுபவர்


"நல்ல நாளிலேயே அழுது வடிகிறாயே - துன்பம் வந்தால் எப்படி இருப்பாய்" என்று கொண்டாட்ட நாட்களில் இன்பத்தை வெளிப்படையாகத் தெரிவிக்காதவர்களிடம் சிலர் சொல்வதுண்டு. "நல்ல துணியைக்கட்டிக்கொண்டு நல்ல சாப்பாடு எடுத்துக்கொள்" என்றெல்லாம் ஊக்குவிப்பார்கள்.

அந்தக்கருத்தை இங்கே தலைவி தன் அழுகை புலம்பலில் உட்படுத்துகிறார்.

நட்பு - துப்பு என்று எதிர்ச்சொற்களை இங்கே பயன்படுத்துகிறார். நட்பு என்பது உறவு என்பது தெரிந்ததே.

அப்படியானால், துப்பு என்பது பகைமையா? (திருக்குறளின் இரண்டாவது அதிகாரத்தில் துப்பு என்றால் உணவு என்று படித்தது நினைவுக்கு வருகிறது. மற்ற நல்ல பொருள்களும் இந்தச்சொல்லுக்கு உள்ளன. அறிவு, திறமை, தூய்மை என்றெல்லாம்).

ஆமாம், பகை என்ற பொருளும் உண்டு என்று இந்தக்குறளை மேற்கோளாகக் காட்டி அகராதி சொல்கிறது Smile அல்லாமல், வலிமை என்ற பொருளைக்கொண்டு விளக்கும் உரையும் (மு.வ.) இருக்கிறது.

நட்பினுள் துயர்வரவு ஆற்றுபவர்
நல்லுறவில் இருக்கும் போதே (பிரிந்து சென்று) துயரத்தைத் தருகிறவர்

துப்பின் எவனாவர் மன்கொல்
பகையானால் என்னவெல்லாம் செய்வாரோ?
(அல்லது வலிமை தேவைப்படும் கடினமான சூழலில் என்ன ஆவாரோ?)

அழுகை - புலம்பல் என்று வந்து விட்டால் உயிருக்குயிராய் அன்பு கொண்டிருந்த காதலர் மீதும் வெறுப்பு / சலிப்பு எல்லாம் வரும் என்று உணர்த்தும் பாடல்.

app_engine

Posts : 10100
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை - Page 9 Empty Re: குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை

Post  app_engine Thu Apr 05, 2018 6:40 pm

#1166
இன்பம் கடல்மற்றுக் காமம் அஃதடுங்கால்
துன்பம் அதனிற்பெரிது


கடல் உருவகம் மீண்டும்.

ஆனால், இங்கே காமத்தால் உண்டாகும் இன்பத்துக்கு Smile

காமம் இன்பம் கடல்
காமத்தால் (காதலால் / கூடலால்) வரும் இன்பம் கடல் போன்றது
(பெரியது / அலையலையாய்ப் பொங்குவது)

மற்று அஃதடுங்கால் துன்பம் அதனிற்பெரிது
மாறாக, அதுவே (பிரிவின் விளைவாக) வருத்தும்போது உண்டாகும் துன்பம் கடலினும் பெரிது

"நமக்கு எது மிகப்பெரும் இன்பம் தருகிறதோ அதுவே பெரும் துன்பத்துக்கும் காரணமாக ஆக முடியும்" என்ற மாபெரும் உண்மை இங்கே ஆவணப்படுத்தப்படுகிறது. இருக்கும் வரை எவ்வளவு இன்பமோ அதைவிடக்கூடுதல் துன்பம் இல்லாதபோது வரும். (அடிப்படைத்தேவைகளுக்கு அப்பாற்பட்ட எல்லா நல்லவற்றுக்கும் கிட்டத்தட்ட இது பொருந்துவதைக்காணலாம்).

அதனால் தான் "வாழ்ந்து கெட்டவர்கள்" படும் துன்பம் "எப்போதுமே இல்லாதவர்கள்" படும் துன்பத்தை விடவும் கூடுதல் கொடுமையாகச் சொல்லப்படுகிறது.

காதல் சிறப்பில் இன்புறுவோரை "வாழ்ந்தால் இப்படி வாழ வேண்டும்" என்று மற்றவர் கண்டு பொறாமைப்படுவது ஒரு புறம் இருக்க, பிரிவு வந்தால் அவர் படும் துன்பம் எவ்வளவு அளவற்றது என்று அறிந்தவரும் ஆயிரக்கணக்கில் உண்டு!

app_engine

Posts : 10100
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை - Page 9 Empty Re: குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை

Post  app_engine Fri Apr 06, 2018 6:50 pm

#1167
காமக் கடும்புனல் நீந்திக் கரைகாணேன்
யாமத்தும் யானே உளேன்


பிரிவுத்துயரின் உச்சத்தில் இருக்கும் காதலி அழுது புலம்புவதை மிக அழுத்தமாகச் சொல்லும் பாடல்.

இங்கே காமத்துக்கு உருவகம் கடும் புனல் (காட்டாற்று வெள்ளம்)!

அதில் நீந்த முயலுவோரைக் கற்பனை செய்து பார்த்தால் புரியும் கொடுமை / இயலாமை எல்லாம். ஆழ அழுத்தி மண்ணில் குத்திச்சொருகி விடும் கொடிய ஒன்று தான் காட்டாற்று வெள்ளம் - கடலை விடவும் கடுமையான கொலைக்களம். அதில் எங்கே நீந்த?

காமக் கடும்புனல் நீந்திக் கரைகாணேன்
காமம் எனும் கடுமையான வெள்ளத்தில் நீந்திக் கரை சேர முயன்று தோல்வி அடைகிறேன்.
(கரையைக்காண முடியவில்லை = இந்த நோயில் இருந்து தப்ப வழியில்லை)

யாமத்தும் யானே உளேன்
நள்ளிரவிலும் தனித்து விழித்துக்கிடக்கிறேன்

"மயக்கும் மாலைப்பொழுது - இனிக்கும் இன்ப இரவு" என்று திரைப்பாடலில் கேட்டிருக்கிறோம். இங்கோ கொடுமையான நள்ளிரவு - உறக்கம் வராமல் தவிக்கிறாள் தலைவி, ஏனென்றால் துணைவன் உடனில்லை! காதல் நோயோ கடும்புனல் போலச்சுழற்றுகிறது.

இயலாமையின் கொடுமையில் புலம்புதல் "படர் மெலிந்து இரங்கல்" என்னும் அதிகாரத் தலைப்புக்கு மிகப்பொருத்தமான குறள்!

app_engine

Posts : 10100
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை - Page 9 Empty Re: குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை

Post  app_engine Tue Apr 10, 2018 6:48 pm

#1168
மன்னுயிர் எல்லாம் துயிற்றி அளித்திரா
என்னல்லது இல்லை துணை


"இரவுக்கு என்னையல்லாது வேறு துணை இல்லை" - என்ன ஒரு அழகான கற்பனை!

மனதை மயக்கும் கவிதை!

நொந்து போய் அழும்போதும் பெண் மனதின் ஆழத்தில் இருக்கும் பரிவு இங்கே பார்க்கிறோம். "உறங்காமல் தவிக்கிறேன்" என்று பலமுறை நேரடியாகச்சொன்னவள் இங்கே கவியழகோடு "எல்லாரும் உறங்கி விட்டதால் வேறொரு துணையின்றித்தவிக்கும் இரவுக்கு நான் மட்டும் தான் இருக்கிறேன்" என்கிறாள்.

மிகச்சிறப்பு!

மன்னுயிர் எல்லாம் துயிற்றி அளித்திரா
உலகில் உள்ள எல்லா உயிர்களையும் துயிலில் ஆழ்த்திய இரவு இரங்கத்தக்கது
(ஐயோ பாவம் இரவே - உனக்கு இரங்குகிறேன் - எல்லோருக்கும் நன்மை செய்தாய், உனக்கோ துணையில்லை)

என்னல்லது இல்லை துணை
(ஏனென்றால், இந்த இரவுக்கு) என்னை அல்லாமல் வேறு துணை இல்லையே

தலைவன் விட்டு விட்டுப்போய் விட்டான். அழுது புலம்பித் துவண்டு உறக்கமின்றித் தவிக்கும் தலைவியின் மனநிலை இரவோடு ஒட்டிக்கொள்ளத்தூண்டுகிறது.

"ஏ இரவே, நானும் உன்னைப்போல் யாருமில்லாதவள் - உனக்கு நான், எனக்கு நீ" என்று சொல்கிறாள்!

app_engine

Posts : 10100
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை - Page 9 Empty Re: குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை

Post  Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 9 of 16 Previous  1 ... 6 ... 8, 9, 10 ... 12 ... 16  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum