Ilayaraja and Beyond
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

குறள் இன்பம் - #1 - #948

+3
fring151
Usha
V_S
7 posters

Page 12 of 40 Previous  1 ... 7 ... 11, 12, 13 ... 26 ... 40  Next

Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 12 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Tue Jul 29, 2014 5:44 pm

#250
வலியார்முன் தன்னை நினைக்க தான் தன்னின்
மெலியார்மேல் செல்லுமிடத்து

எனக்கு மிகவும் பிடித்த, அழகான திருக்குறள்!

மிக எளிதாகப் பொருள் விளங்கக்கூடிய செய்யுள் என்பதோடு இது சொல்லும் நீதி மனதுக்கு மிக உவப்பானது!

தான் தன்னின் மெலியார்மேல் செல்லுமிடத்து
தன்னை விட மெலிந்த / நலிந்த / எளியவர் மீது துன்பம் செலுத்தச்செல்கையில்
(அதாவது அருளுடைமை இல்லாமல் செயல்படத்துணிகையில்)

வலியார்முன் தன்னை நினைக்க
தன்னிலும் வலியவர் முன் தனது நிலை எப்படி இருக்கும் என்று எண்ணிப்பார்க்க வேண்டும்!

இந்தக்குறளுக்கு விளக்கம் தேவையில்லை Smile

எல்லாரையும் விட வலியவன் இறைவன் என்ற விதத்தில், சில நாட்களுக்கு முன் வாசித்த ஒன்றை மேற்கோள் காட்ட (மட்டும்) விழைகிறேன்:

இறைவன் - மூசா / மோசஸ் / மோசே வழி சட்டங்கள் தரும் போது, விவிலியத்தில் wrote:
விதவை, அனாதை யாருக்கும் நீ தீங்கிழைக்காதே.

நீ அவர்களுக்குக் கடுமையாகத் தீங்கிழைத்து அவர்கள் என்னை நோக்கி அழுது முறையிட்டால், நான் அவர்கள் அழுகுரலுக்குச் செவிசாய்ப்பேன்.

மேலும் என் சினம் பற்றியெரியும். நான் உங்களை என் வாளுக்கு இரையாக்குவேன்.

app_engine

Posts : 10099
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 12 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Wed Jul 30, 2014 4:59 pm

#251
தன்னூன் பெருக்கற்குத் தான்பிறிது ஊனுண்பான்
எங்ஙனம் ஆளும் அருள்
(அறத்துப்பால் , துறவறவியல், புலான்மறுத்தல் அதிகாரம்)

இறைச்சி மறுத்தல் / உண்ணாதிருத்தல் என்ற புதிய அதிகாரம்.

இதன் கடைசிக்குறள் தவிர்த்து மற்றவை முன்னெங்கும் கேட்ட நினைவில்லை. அதுவும் கூட பள்ளிப்பாடங்களில் இருந்ததாக நினைவில்லை.

மிகத்தெளிவாகவே வள்ளுவர் அசைவ எதிரி என்று தெரிய வருகிறது!

அதனால் தானோ என்னவோ சைவ மரபில் வரும் பரிமேலழகரும் சமண மரபில் வரும் மணக்குடவரும் இதன் உரையாசிரியர்களில் குறிப்பிடத்தக்க பங்கு வகிக்கிறார்கள் Smile

இந்தக்குறளின் பொருள் நேரடியானது.

தன்னூன் பெருக்கற்குத் தான்பிறிது ஊனுண்பான்
தன் உடலை வளர்ப்பதற்காக இன்னொரு (உயிரைக்கொன்று அதன்) உடலை / இறைச்சியை உண்ணுபவன்

எங்ஙனம் ஆளும் அருள்
எப்படி அருள் உள்ளவனாக இருக்க முடியும்?

அவ்வாறாக, அருளுடைமை என்பது (தாவரங்கள் அல்லாத) எல்லா உயிர்கள் மீதும் செலுத்தப்பட வேண்டும் என்று சொல்லுகிறார்

app_engine

Posts : 10099
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 12 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Fri Aug 01, 2014 2:50 am

#252
பொருளாட்சி போற்றாதார்க்கு இல்லை அருளாட்சி
ஆங்கில்லை ஊன் தின்பவர்க்கு


"அருள் இல்லார்க்கு அவ்வுலகில்லை" போன்ற அதே வடிவில்  எழுதப்பட்ட புலால் மறுப்புக்குறள் Smile

முரண் இரண்டடி முறையில் வருகிற இந்தச் செய்யுளிலும் அருளோடு ஒப்பீடு செய்யப்படுவது பொருள் தான் என்பதும் கவனிக்கத்தக்கது.

பொருளாட்சி போற்றாதார்க்கு இல்லை
பொருள் வைத்து ஆளுதல் (உயர்ந்த / சிறப்பான நிலையில் இருத்தல்) அதைப் போற்றிப்பேணுவோர் அல்லாதவருக்கு இல்லை!

அருளாட்சி ஆங்கில்லை ஊன் தின்பவர்க்கு
(அது போல) அருள் ஆட்சி (அருள் உள்ளவர்களுக்குக் கிட்டும் உயர்ந்த / சிறந்த நிலை) புலால் உண்ணுவோருக்கு இல்லை!

"இறைச்சி உண்ணுபவர் அருளுடைமை உள்ளவராகக் கருதப்பட மாட்டார்" என்று நேரடியாக அடித்துச்சொல்லும் இரண்டாம் குறள்!

app_engine

Posts : 10099
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 12 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Mon Aug 04, 2014 7:06 pm

#253
படைகொண்டார் நெஞ்சம்போல் நன்னூக்காது ஒன்றன்
உடல்சுவை உண்டார் மனம்


(நன்மை / நன்று) "ஊக்காது" என்றால் என்ன பொருள்?

ஊக்குதல் என்ற சொல்லுக்குப் பல பொருட்கள் இருந்தாலும் (தூண்டுதல், ஆட்டுதல், அவிழ்த்தல் என்றெல்லாமும் பொருள் சொல்லுகிறார்கள்), இங்கே மிகவும் பொருந்தி வருவது "நினைத்தல், ஆழ்ந்து சிந்தித்தல்" என்பது தான்.

ஏன்?

"நெஞ்சம் / மனம்" அதைத்தானே செய்யும்? Smile

ஒன்றன் உடல்சுவை உண்டார் மனம்
ஒரு உயிரின் உடலைச் சுவைத்து உண்ணுபவரின் மனம்

படைகொண்டார் நெஞ்சம்போல்
படைக்கருவியினைக் கொண்டவரின் நெஞ்சத்தைப் போன்றே

நன்னூக்காது
நன்மையானதைச் சிந்திக்காது! (அருள் செய்ய எண்ணாது)

மனிதனைக் கொல்லக் கொலைக்கருவி எடுப்பவனது மனமும், புலால் உண்ணுபவனது மனமும் ஒரே போல் அருளற்ற இடங்கள் என்கிறார் வள்ளுவர்!

app_engine

Posts : 10099
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 12 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Tue Aug 05, 2014 4:49 pm

#254
அருளல்ல தியாதெனிற் கொல்லாமை கோறல்
பொருளல்ல தவ்வூன் தினல்


கோறல் = கொல்லுதல்!

கொல்லாமை கோறல் = கொல்லாமை / கொலை செய்யாமை (எனும் நற்பண்பைக்) கொல்லுதல் Smile

அல்லது, எளிதாகச் சொன்னால், "கொலை செய்தல்" Smile

பல எதிர்ப்பதங்கள் கொண்டுள்ள சொல் விளையாட்டு. சுற்றி வளைத்துத்தான் பொருள் கொள்ள வேண்டும்!

அருளல்ல தியாதெனிற் கொல்லாமை கோறல்
அருளற்ற தன்மை யாதென்றால் கொல்லாமையைக் கொல்லுதல்!
(எளிதாக: அருளற்ற தன்மை = கொலை செய்தல்)

பொருளல்ல தவ்வூன் தினல்
(கொன்று கிட்டிய) அவ்விறைச்சியை உண்ணுதல் நன்மை அல்ல!
("பொருள்" என்பதற்கு இவ்விடத்தில் "நன்மை / அறம்" என்று பொருள் கொள்ள வேண்டியிருப்பது வேடிக்கை தான்)

"கொன்றால் பாவம், தின்றால் தீரும்" என்ற பழமொழி நினைவுக்கு வருகிறது.

கொலை செய்த பாவத்தை அதற்கான தண்டனை அனுபவித்துத்தான் ("தின்று தான்") தீர்க்க வேண்டும். Smile

app_engine

Posts : 10099
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 12 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Wed Aug 06, 2014 5:07 pm

#255
உண்ணாமை உள்ளது உயிர்நிலை ஊனுண்ண
அண்ணாத்தல் செய்யாது அளறு


அளறு என்றால் சேறு என்று அகராதி சொல்லுகிறது.

சேற்றுக்குழி / புதை குழி என்றெல்லாம் எடுத்துகொள்ளலாம். சிக்கினால் வெளிவர முடியாமல் அமிழ்ந்து இறக்க நேரிடும்.

"அண்ணாத்தல்" என்ற சொல்லுக்கு இந்தக்குறளைச் சுட்டிக்காட்டி "வாய் திறத்தல்" என்று அகராதி பொருள் சொல்லுகிறது.

ஆக, "அளறு அண்ணாத்தல் செய்யாது" என்பதை "சேற்றுக்குழி வாய் திறக்காது" என்று மொழி பெயர்க்கலாம். மாட்டினால், உள்ளே போய்ச் சாவது ஒன்றே வழி.

"ஊன் உண்ணுவோருக்கு மீள்வு இல்லாத சாவு" என்று சொல்லுவதாகக் கொள்ளலாம். (அதனால், சில உரை ஆசிரியர்கள் அளறு = நரகம் என்றே சொல்லி விடுவதையும் காண முடிகிறது).

உண்ணாமை உள்ளது உயிர்நிலை
(புலால்) உண்ணாமல் இருப்பதில் தான் உயிர் நிலை இருக்கிறது.
(தனக்கும் பிற உயிர்களுக்கும் என்று கொள்ளலாம்)

ஊனுண்ண
(மீறி) ஊன் உண்டால்

அண்ணாத்தல் செய்யாது அளறு
வாய் திறவாத சேற்றுக்குழியில் சிக்கிய நிலை தான்.
(மீளவே முடியாத அழிவு வரும் என்று பொருள்)

"உயிர்களை உணவாக்கிக் கொள்ளச் சகதிக்குழியும் வாய் திறவாது" என்று மு.க. பொருள் சொல்லுவது தலைகீழ் (மற்றும் உண்மை நிலைக்குப் புறம்பானது)! Laughing

app_engine

Posts : 10099
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 12 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Thu Aug 07, 2014 7:36 pm

#256
தினற்பொருட்டால் கொல்லாது உலகெனின் யாரும்
விலைப்பொருட்டால் ஊன்றருவாரில்


'தின்போரில்லை என்றால் விற்போருமில்லை' என்ற எளிய வணிகத்தத்துவம் மேலோட்டமாகப் பார்த்தால் தெரியும்.

அதன் உள்ளே பொதிந்திருப்பதோ 'நான் கொலை செய்யவில்லை, யாரோ செய்து விற்றதை வாங்கித்தின்னேன், அவ்வளவே' என்று தப்ப முயலக்கூடாது என்னும் அறிவுரையும் தான் Smile

புலால் உண்ணுவதற்கு வேண்டிக்கொல்லுவதும் அது சார்ந்த வணிக அமைப்பும் வள்ளுவருக்குப் பிடிக்கவில்லை என்பது தெளிவு!

தினற்பொருட்டால் கொல்லாது உலகெனின்
உலகத்தார் உண்ணுவதற்காகக் கொல்லமாட்டார்கள் என்றால்

விலைப்பொருட்டால் ஊன்றருவார் யாரும் இல்
விலைக்கு ஊன் தருவோர் யாரும் இருக்க மாட்டார்கள்

ரெண்டு விதத்தில் எடுத்துக்கொள்ளலாம் :

1. கொல்ல ஆளில்லை என்றால் விற்க இறைச்சி கிடையாது  (விற்பவனும் இல்லை)
2. தின்ன ஆளில்லை என்றால் இறைச்சி விற்பவனும் இல்லை

app_engine

Posts : 10099
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 12 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Fri Aug 08, 2014 5:31 pm

#257
உண்ணாமை வேண்டும் புலாஅல் பிறிதொன்றன்
புண்ணது உணர்வார்ப் பெறின்


குற்ற உணர்வு உண்டாக்குதல், வெட்கப்பட வைத்தல், அருவருப்பு வரும்படி செய்தல் என்பனவெல்லாம் தீங்கு செய்வதிலிருந்து ஒருவரைத் தடுக்கச் செய்யப்படும் உத்திகள்.

வள்ளுவரின் கொள்கைப்படி இறைச்சி உண்ணுதல் தீங்கு என்பதால் அதைத்தடுக்கும் முயற்சியில் இத்தகைய எல்லா உத்திகளையும் முயல்வதைக் காண முடிகிறது.

"பிறிதொன்றன் புண்" என்று சொல்லி அருவருப்பு / குமட்டல் உண்டாக்கும் முயற்சி இந்தக்குறளில்!

புலாஅல் பிறிதொன்றன் புண்
இறைச்சி என்பது வேறொரு உயிரின் (உடலின்) புண்

அது உணர்வார்ப் பெறின் உண்ணாமை வேண்டும்
என்ற உணர்வு பெற்று, உண்ணாதிருக்க வேண்டும்!

அருகில் உட்கார்ந்திருக்கும் நண்பரிடம் இந்தக்குறள் பற்றிச்சொன்ன போது அவரது மறுமொழி / கற்பனை:
"ஸ்டார் ஓட்டல் பஃபே வரிசையில் நிற்கும் கூட்டத்திடம் இந்தக்குறள் மற்றும் உரையை சத்தமாகச் சொன்னால் எப்படி இருக்கும்"  Laughing

app_engine

Posts : 10099
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 12 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Mon Aug 11, 2014 6:38 pm

#258
செயிரின் தலைப்பிரிந்த காட்சியார் உண்ணார்
உயிரின் தலைப்பிரிந்த ஊன்


'செயிர்' என்றால் குற்றம் என்றும் 'தலைப்பிரிதல்' என்றால் நீங்குதல் என்றும் அகராதி பொருள் சொல்லுகிறது.

இவை இரண்டும் அறிந்தால், பொருள் கொள்ளுதல் கடினமல்ல Smile

செயிரின் தலைப்பிரிந்த காட்சியார்
குற்றம் நீங்கிய (தெளிவான) காட்சி உடையவர்கள் (அல்லது மாசற்ற அறிவுள்ளோர்)

உயிரின் தலைப்பிரிந்த ஊன்
உயிர் நீங்கிய (அல்லது, உயிர் நீக்கியதால் விளைந்த) இறைச்சியை

உண்ணார்
உண்ண மாட்டார்கள்!

குற்றமற்ற அறிவும் புலால் உண்ணாமையும் ஒன்றோடொன்று இணைந்து வருவதாக வள்ளுவர் சொல்லுவது குறிப்படத்தக்கது!

ஊன் உண்ணுவோர் குற்றம் செய்கிறார்கள் என்று மட்டுமல்ல, அவர்கள் அறிவிலேயே பிழை உள்ளது என்று ஒரு படி மேல் செல்லுகிறார் Embarassed

app_engine

Posts : 10099
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 12 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Tue Aug 12, 2014 5:51 pm

#259
அவி சொரிந்தாயிரம் வேட்டலின் ஒன்றன்
உயிர் செகுத்துண்ணாமை நன்று


'அவி சொரிந்து' என்பதில் உள்ள அவி என்ன?

"வேள்வித்தீயில்  தேவர்க்குக் கொடுக்கும் உணவு" என்று அகராதி சொல்லுகிறது.

நெய் என்றும் ஒரு பொருள் இருக்கிறது. (தீயில் நெய் ஊற்றும் சடங்கு நம்மில் பலரும் திருமணம் போன்ற நிகழ்ச்சிகளில் பார்ப்பது தான், அது "தேவர் உணவு", அதாவது "அவி")

வேட்டல் = வேள்தல், வேள்வி செய்தல். யாகம் நடத்துதல்.

அவி சொரிந்தாயிரம் வேட்டலின் நன்று
நெய் சொரிந்து ஆயிரம் வேள்விகள் செய்வதை விடவும் நல்லது

ஒன்றன் உயிர் செகுத்துண்ணாமை
ஒரு உயிரைக் கொன்று அதன் இறைச்சியை உண்ணாமல் இருத்தல்!

புலால் உண்ணாதிருத்தல் உயர்ந்த இறை வழிபாடு என்கிறார் வள்ளுவர்!

இறைவழிபாட்டின் ஒரு நிகழ்வாக விலங்குகளை வெட்டும் வழக்கம் இன்றுமுள்ள தமிழ் நாட்டில் எழுதப்பட்ட நூல்!

அவ்விதத்தில், வள்ளுவரின் இந்த அதிகாரம் குறிப்பிடத்தக்கது

app_engine

Posts : 10099
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 12 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Wed Aug 13, 2014 3:54 pm

#260
கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி
எல்லா உயிருந் தொழும்


பொருள் காண மிக எளிய குறள் - எல்லாச்சொற்களும் தற்காலத்திலும் பயன்பாட்டில் உள்ளவை Smile

கொல்லான்
(பிற உயிர்களைக்) கொல்லாதவன்

புலாலை மறுத்தானை
(மற்றும்) புலால் உண்ண மறுத்து வாழ்பவனை

கைகூப்பி எல்லா உயிருந்தொழும்
எல்லா உயிர்களும் கைகூப்பி (கும்பிடு போட்டு) வழிபடும்!

இவ்விரு பண்புகளும் உள்ளோர் தொழுவதற்குத் தகுதி பெறுகிறார்கள் - தேவர்கள் ஆகிறார்கள் என்று வள்ளுவர் சொல்ல வருகிறார்.

துறவறம் பூண்டு, பொது மக்களை விட உயர்ந்த நிலைக்குச் செல்ல விரும்புவோருக்கு இவை தேவையான பண்புகள் என்றும் எடுத்துக் கொள்ளலாம்.

app_engine

Posts : 10099
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 12 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Thu Aug 14, 2014 10:15 pm

#261
உற்றநோய் நோன்றல் உயிர்க்குறுகண் செய்யாமை
அற்றே தவத்திற் குரு
(அறத்துப்பால், துறவறவியல், தவம் அதிகாரம்)

நோய் = பிணி / துன்பம் / துயரம்
நோன்றல் = பொறுத்தல் / சகித்தல்
உறுகண் = வருத்தம் / துன்பம் / நோய்

நேரடியான பொருள் சொல்லும் குறள் . சொல்லப்போனால், தவம் என்றால் என்ன என்று வரையறை சொல்லும் செய்யுள்!

தவத்திற் குரு
தவம் என்பதற்கான உருவம் / வடிவம் / வரையறை

உற்றநோய் நோன்றல்
(தமக்கு) வரும் துன்பங்களைப் பொறுத்தல்

உயிர்க்குறுகண் செய்யாமை அற்றே
(பிற) உயிர்களுக்குத் தீங்கு செய்யாதிருத்தல் என்பனவே!

ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தைக்காட்டு = தவம் !

app_engine

Posts : 10099
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 12 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Fri Aug 15, 2014 11:39 pm

#262
தவமும் தவமுடையார்க்கு ஆகும் அவம் அதனை
அஃதிலார் மேற்கொள் வது


இணையத்தில் இந்தக்குறளில் "அவம்" என்ற சொல் பொதுவாக எந்தத்தளத்திலும் காண முடிவதில்லை.
திருக்குறள்.காம் தளத்திலும், பரிமேலழகர் உரையினுள் உண்டென்றாலும் தலைப்பில் அவம் இல்லாமல் தானிருக்கிறது.
 
அவம் (வீண் / பயனின்மை) என்ற சொல் இல்லாமல் எப்படிப் பொருள் விளங்கும் என்று எனக்குத் தெரியவில்லை.

இதில் வரும் இரு தவங்களை தவக்கோலம் என்றும் தவ ஒழுக்கம் என்றும் பொருள் சொல்லுகிறார்கள். பொருத்தமாகத்தான் இருக்கிறது Smile

தவமும் தவமுடையார்க்கு ஆகும்
(மெய்யாகவே) தவம் இருப்போருக்குத்தான் தவக்கோலம் பொருந்தும்

அஃதிலார்
அவ்வித (ஒழுக்கம்) இல்லாதார்

அவம் அதனை மேற்கொள்வது
அந்தக்கோலம் பூணுதல் (அல்லது தவசி என்று சொல்லித்திரிதல்) வீணே!

துறவியாக நடிப்பது வீண் என்கிறாரோ?
(நாட்டில் பெரும்பாலும் அப்படித்தானே இன்று? வள்ளுவர் நாளிலும் அப்படித்தானோ?)

app_engine

Posts : 10099
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 12 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Mon Aug 18, 2014 9:20 pm

#263
துறந்தார்க்குத் துப்புரவு வேண்டி மறந்தார்கொல்
மற்றை யவர்கள் தவம்


துப்புரவு என்ற சொல்லுக்கு நாமெல்லாம் அறிந்திருக்கும் பொருள் "தூய்மை(ப் படுத்தல்), சுத்தம்" என்பதாகும். (எ-டு : துப்புரவுத் தொழிலாளர்கள்)

இது அல்லாமல் நாட்டுப்புறங்களில் "முழுமை" என்ற பொருளிலும் பயன்படும் சொல் இது. ("துப்புரவா எங்கிட்ட ஒரு பைசா கூட இல்ல").

இந்தக்குறளில் வள்ளுவர் என்ன பொருளில் எழுதினாரோ தெரியாது. உரை ஆசிரியர்கள் எல்லாரும் வேண்டற்பாடு,தேவை என்ற பொருளை மட்டுமே எடுத்துக்கொள்கிறார்கள்.
(அதாவது, "துறந்தார்க்குத் துப்புரவு" = துறவிகளுக்குத் துணை செய்தல், தேவைகளை நிறைவேற்றுதல், உணவு முதலியன கொடுத்தல்...)

தூய்மை என்ற பொருளில் எடுத்தாலும் குழப்பமில்லை என்றே எனக்குப்படுகிறது.
 
பொருள் பார்க்கலாம் :

துறந்தார்க்குத் துப்புரவு வேண்டி
துறவிகளின் தேவைகளை நிறைவேற்ற மட்டும் எண்ணி
(எனது குழப்ப உரை: துறவிகள் தூய்மையாய் இருக்கவேண்டும் என்று சொல்லிச்சொல்லி)

மற்றையவர்கள் தவம் மறந்தார்கொல்
மற்றவர்கள் தாமும் செய்ய வேண்டிய தவம் மறந்து விட்டார்களோ? (மறக்கக் கூடாது என்று பொருள்).

மணக்குடவர் சொல்வது : தானத்தை விடத் தவம் இன்றியமையாதது Smile

நமது குழப்ப உரை : தூய்மையும் தவமும் துறவிகளுக்கு மட்டுமல்ல, மற்றோருக்கும் தேவையே Smile

app_engine

Posts : 10099
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 12 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Tue Aug 19, 2014 11:24 pm

#264
ஒன்னார்த் தெறலும் உவந்தாரை ஆக்கலும்
எண்ணின் தவத்தான் வரும்


ஒன்னார் = பகைவர்

தெறல் = அழித்தல்

இந்த இரு சொற்களும் புரிந்து விட்டால் பொருள் கொள்ளுதல் எளிதே Smile

ஒன்னார்த் தெறலும்
பகைவரை அழித்தலும்

உவந்தாரை ஆக்கலும்
விரும்பியவரை ஆக்குதலும்
(உயர்த்தல் / பெருக்குதல் என்றெல்லாம் கொள்ளலாம். ஆக்குதல் அழித்தலுக்கு எதிர்ச்சொல் அல்லவா?)

எண்ணின் தவத்தான் வரும்
தவத்தால் (அது தரும் வலிமையால்) எண்ணியவுடனே நடக்கும்!

தவம் செய்து பெறும் வலிமையின் புகழ் பாடும் குறள்!

app_engine

Posts : 10099
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 12 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Wed Aug 20, 2014 6:09 pm

#265
வேண்டிய வேண்டியாங் கெய்தலால் செய்தவம்
ஈண்டு முயலப் படும்


"துறவிகள் பற்று அற்றவர்கள்" என்ற  (தவறான) பொதுப்புரிதலை வள்ளுவர் எள்ளும் குறள் என்று சொல்லத்தக்கது இது.

ஏன்?

பொருள் பாருங்கள்:

வேண்டிய வேண்டியாங்கெய்தலால்
விரும்புவனவற்றை  வேண்டிய விதத்தில் பெறமுடியும் என்பதால் (தான்)

செய்தவம் ஈண்டு முயலப்படும்
தவம் செய்தல் (அல்லது, செய்யத்தக்க தவம்) ஈண்டு (அதாவது, இங்கே / இப்பொழுது / இம்மையில்) முயலப்படுகிறது!

அதாவது, தவம் செய்வது "பற்றற்ற" நிலைக்குச் செல்வதற்கு அல்ல

என்னெல்லாம் வேண்டுமோ அவையெல்லாம் பெற முடியும் (அதற்கான வலிமை கிட்டும்) என்பதற்காகத் தான்! Laughing

இனிமேல் யாராவது "போதி மரத்தின் கீழ் தவமிருந்து பற்றற்ற நிலை அடைந்தேன்" என்று சொல்லட்டும் பார்க்கலாம் Smile

app_engine

Posts : 10099
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 12 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Thu Aug 21, 2014 7:16 pm

#266
தவஞ்செய்வார் தங்கருமஞ்செய்வார் மற்றல்லார்
அவஞ்செய்வார் ஆசையுட்பட்டு


அவம் என்பதற்குக் 'கேடு' என்று அகராதி பொருள் சொல்லுகிறது. (அங்கே இந்தக்குறள் மேற்கோளாக இருப்பது குறிப்பிடத்தக்கது).

இன்னொரு பொருள் வீண் / பயனின்மை என்பதால் அதையும் சில உரையாசிரியர்கள் சொல்லுவதைக் காண முடிகிறது.

இந்தக்குறளைப் பொருத்தவரைக்கும் கருமத்துக்கு (கடமைக்கு) எதிர்ச்சொல் Smile

"கடமைக்கு எதிரான / வீணான / கேடான எதுவும்" என்று கொள்ளலாம்.

தவஞ்செய்வார் தங்கருமஞ்செய்வார்
தவம் செய்பவர்கள் தமது கடமைகளைச் செய்வார்கள்

மற்றல்லார்
அல்லாத மற்றவர்கள்

ஆசையுட்பட்டு அவஞ்செய்வார்
ஆசை உள்ளவர்களாக வீணான / கேடானவற்றைச் செய்வார்கள்!

"என் பணி கடன் செய்து கிடப்பதே"  = தவம்!

மற்றதெல்லாம் அவம் Smile

app_engine

Posts : 10099
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 12 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Fri Aug 22, 2014 9:25 pm

#267
சுடச்சுடரும் பொன்போல் ஒளிவிடும் துன்பஞ்
சுடச்சுட நோற்கிற்பவர்க்கு

எளிய ஆனால் அழகான உவமை உள்ள குறள் Smile

"புடமிட்ட பொன்னைப்போல்" என்று பொதுவே வழங்கும் உவமை தான். அதற்குச் "சுடச்சுட" என்று அழகுபடுத்திச் சொல்லுகிறார் வள்ளுவர்!

துன்பஞ் சுடச்சுட நோற்கிற்பவர்க்கு
துன்பங்கள் மீண்டும் மீண்டும் சுட்டாலும் (விடாமல்) தவம் இருப்பவர்கள்  

சுடச்சுடரும் பொன்போல் ஒளிவிடும்
(தீயில்) சுடுவதால் ஒளி வீசும் பொன்னைப்போல் (அறிவு) ஓளி வீசுவார்கள்!

மண்ணில் இருந்து எடுக்கப்படும் தங்கத்தில் சேர்ந்திருக்கும் அழுக்குகள் நெருப்பினால் நீக்கப்படுகின்றன.

அவ்வாறே, சுட்டெரிக்கும் துன்பங்கள் தவம் செய்வோருக்குள்ள குழப்பங்கள் நீங்கி அறிவொளி மிளிரச்செய்யும் என்று பொருள்!

app_engine

Posts : 10099
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 12 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Mon Aug 25, 2014 5:33 pm

#268
தன்னுயிர் தான்அறப் பெற்றானை ஏனைய
மன்னுயிரெல்லாந் தொழும்


துறவு / தவம் குறித்த எளிய வரையறை சொல்லும் குறள்.

அறவே பற்று இல்லாமல் செல்வதைப் பற்றி இது சொல்வதில்லை என்பது கவனிக்கத்தக்கது.

தவ வலிமையால் அறுக்க வேண்டியன "தன்னுயிர் & தான்" என்று இரண்டை மட்டும் சொல்லுகிறது.

தனது உடல், சொந்த வசதி வாய்ப்புகள், தனது நலம் மட்டும் காத்தல், தனது உயிர் காத்தல் (அதற்காக என்ன வேண்டுமானாலும் செய்தல்) என்று மொத்தமாகத் தன்னலம் மட்டுமே நாடுதல் பெரும்பாலான மனிதருக்குள்ள குழப்பம்.

உயர்ந்த குணமுள்ளோர் தனது நன்மைகளோடு மற்றவர்கள் நலமும் நாடுவார்கள். எந்த அளவுக்கு இவை இரண்டுக்குமான சமநிலை காக்கிறார்கள், நேர்மை காக்கிறார்கள் என்பதெல்லாம் மனிதரின் உயர்வு தாழ்வுகளாக நல்ல நெறிகளில் காண முடியும்.

துறவு என்பது அதன் மற்ற இறுதி என்கிறார் வள்ளுவர்!

அதாவது, தன்னுடல் / தன்னுயிர் காக்க நினையாமல் மற்றவர் குறித்து மட்டும் கருதும் நிலை! அப்படிப்பட்டோரைப் பிற உயிர்கள் தொழுவத்தில் வியப்பென்ன?

தன்னுயிர் தான்அறப் பெற்றானை
தன்னுயிர், தான் (என்று எண்ணும் தன்னலம்) அறவே நீகியவனை

ஏனைய மன்னுயிரெல்லாந் தொழும்
பிற மன்னுயிர்கள் எல்லாம் தொழுது வணங்கும்!

app_engine

Posts : 10099
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 12 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Tue Aug 26, 2014 5:01 pm

#269
கூற்றம் குதித்தலும் கைகூடும் நோற்றலின்
ஆற்றல் தலைப்பட்டவர்க்கு


"கூற்றம்" என்றால் என்ன?


கூற்றம்¹ kūṟṟam
, n. < கூறு². 1. Species, class; பகுதி. கூற்றங்கள் பலவுந் தொக்க கூற்றத் தில் (சீவக. 1143). 2. Lit., one who separates soul from body. Yama; [உயிரை உடலினின்று பிரிப்பவன்] யமன். மாற்றருங் கூற்றம் (தொல். பொ. 79). 3. That which ruins, destroys; அழிவுண் டாக்குவது. அல்லவை செய்வார்க் கறங்கூற்றம் (நான் மணி. 84). 4. Division of a country, in ancient times; தேசத்தின் ஒருபகுதி. மிழலைக்கூற்றத்துடனே . . . முத்தூற்றுக் கூற்றத்தைக்கொண்ட (புறநா. 24, உரை).

இந்தக்குறளுக்கு "கூறு போடுதல் (அழித்தல்) / கூறு போடுபவன்" என்ற பொருள் வருகிறது.

அவ்விதத்தில், "கூற்றம் குதித்தல்" = உயிர் அழிக்கும் நிலையையும் தாண்டுதல் (தப்பித்தல்)!

தவ வலிமையால் இறப்பும் வராமல் தப்பிக்கலாம் என்று (மிகைப்படுத்திச்) சொல்லும் குறள். உண்மை நிலை வேறு என்பது தெளிவு - ஒரு மனிதனும் இறக்காமல் வாழ்ந்த வரலாறு இல்லை! ஆதலால், இது உயர்வு நவிற்சி அணியே Smile

நோற்றலின் ஆற்றல் தலைப்பட்டவர்க்கு
தவத்தால் வரும் ஆற்றலைப் பெற்றவர்களுக்கு

கூற்றம் குதித்தலும் கைகூடும்
உயிர் அழிக்கும் நிலையையும் (எமனையும்) தாண்டித் தப்ப முடியும்!

Smile

app_engine

Posts : 10099
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 12 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Wed Aug 27, 2014 4:33 pm

#270
இலர் பலராகிய காரணம் நோற்பார்
சிலர் பலர் நோலாதவர்


வெண்பா அடிப்படையில் பிரித்திருக்கும் சீர்களைப் பொருள் புரியத்தக்க விதத்தில் மாற்றி ஒழுங்கு செய்தால் இது உரைநடை போல எளிதாக இருப்பதைக்காண இயலும் Smile

இலர்-சிலர்-பலர் என்று எதுகையுடன் சொல்லும் எளிமையான குறள்!

இலர் பலராகிய காரணம்
(இவ்வுலகில்) இல்லாதவர்கள் பெரும்பான்மையாக (பலராக) இருப்பதற்கான காரணம்

நோற்பார் சிலர் பலர் நோலாதவர்
தவம் செய்பவர்கள் குறைவாகவும் (சிலர்), செய்யாதவர் பெரும்பான்மையாகவும் (பலர்) இருப்பது தான்!

வள்ளுவர் பொதுவாக "இலர்" என்று மட்டுமே கூறி இருக்கிறார். அதாவது, "இல்லாதவர்கள்". அதை எப்படி வேண்டுமானாலும் விளக்கிக்கொள்ளலாம்.

"ஆற்றல் இல்லாதவர்கள்" என்று சில உரையாசிரியர்கள் சொல்ல மற்றவர்கள் "பொருள் இல்லா ஏழைகள்" என்று பொழிப்புரை சொல்லுகிறார்கள்.

தவம் செய்வதற்கும் பொருள் நிறைய இருப்பதற்கும் என்ன தொடர்போ தெரியவில்லை Smile

பொருள் ஈட்ட உழைப்பதைத் தவம் என்று சொல்ல மாட்டார்.

"தவம் செய்வோர் பெருகும் போது உலகம் செழிக்கும்" என்று பொதுப்படையாகச் சொல்லுகிறார் என்று விளக்குகிறார்களோ என்னமோ Wink

app_engine

Posts : 10099
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 12 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Thu Aug 28, 2014 9:33 pm

#271
வஞ்ச மனத்தான் படிற்றொழுக்கம் பூதங்கள்
ஐந்தும் அகத்தே நகும்
(அறத்துப்பால், துறவறவியல், கூடாவொழுக்கம் அதிகாரம்)

ஒழுக்கம் என்றால் வாழ்க்கை வழி / நெறி என்று முன்னமேயே கண்டிருக்கிறோம்.

அப்படியாக, கூடா ஒழுக்கம் = வேண்டாத / தகாத வாழ்க்கை வழி!

இந்தக்குறள் தெளிவாக இருந்தாலும் உரைகள் எல்லாம் ஒரே போலக் குழப்பும் ஒன்று இதனுள் இருப்பதைக்காணலாம்.

"பூதங்கள் ஐந்தும்" என்று மட்டுமே குறள்  சொல்லுகிறது. (அதாவது, நிலம், நீர், தீ, காற்று, வெளி என்னும் ஐந்து இயற்கைக்கூறுகள்).

ஏன் எல்லா உரையாசிரியர்களும் "உடலில் இருக்கும்" என்று கூட்டிச்சேர்த்துக் குழப்புகிறார்கள் என்று விளங்கவில்லை Smile

படிறு = பொய் / ஏமாற்று / வஞ்சகம் / களவு என்றெல்லாம் வருகிறது.

வஞ்ச மனத்தான் படிற்றொழுக்கம்
வஞ்சக எண்ணமுடையவனுடைய பொய் / போலி வாழ்க்கை முறை (கண்டு)

பூதங்கள் ஐந்தும் அகத்தே நகும்
ஐம்பூதங்களும் தமக்குள்ளே சிரித்துக்கொள்ளும்!

"துறவி என்ற வேடத்தில் களவு வழி செல்வோரைப் பார்த்து இயற்கை சிரிக்கும்" என்று கொள்ளலாம்!

app_engine

Posts : 10099
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 12 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Fri Aug 29, 2014 8:18 pm

#272
வானுயர் தோற்றம் எவன்செய்யும் தன்னெஞ்சம்
தான்அறி குற்றப் படின்


துறவி எனும் அடையாளம் "வானுயர் தோற்றம்" என்கிறார்.

நமது சமுதாயத்தில் இன்றளவும் அது உண்மை தான்.
(உடம்பு முடியாமல் சக்கர வண்டியில் வரும் சாமியாரை "அற்புதம் செய்யும் கடவுள்" என்று வணங்க பக்தர்கள் வரிசையில் நிற்கும் நிலை தானே இன்றும்!).

அப்படிப்பட்ட உயர்ந்த தோற்றம் கொண்டு ஒரு பயனும் இல்லாத ஒரு நிலைமையை விளக்கும் குறள்!

தன்னெஞ்சம் தான்அறி குற்றப் படின்
தனது நெஞ்சம் தான் குற்றம் என்று அறிந்த ஒன்றில் பட்டிருக்கும் போது
(தீய ஒழுக்கம் நெஞ்சில் உள்ள போது அல்லது தன நெஞ்சே தன்னைச் சுடும் போது)

வானுயர் தோற்றம் எவன்செய்யும்
(பிறர் முன்) வானளாவ உயர்ந்து நிற்பது போன்ற தோற்றம் என்ன பயன் செய்யும்?

உள்ளே சிறுமை உள்ள நேரத்தில் பெரிய வெளித்தோற்றம் கொண்டு பயனொன்றும் இல்லை தானே!

app_engine

Posts : 10099
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 12 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Tue Sep 02, 2014 6:31 pm

#273
வலியில் நிலைமையான் வல்லுருவம் பெற்றம்
புலியின்தோல் போர்த்து மேய்ந்தற்று


துறவு வலிமை உள்ளோரை வள்ளுவர் புலி என்று அழைக்கிறார்.

அத்தகைய மனவலிமை இல்லாதோர் மாடு / எருமை என்று பொருள் தரும் "பெற்றம்" என்ற சொல்லால் அழைக்கப்படுகிறார்கள் Smile

அப்படியாக எளிய ஒரு உவமையுடன் சொல்லப்படும் குறள்.

வேடிக்கை என்னவென்றால், "பசுத்தோல் போர்த்திய புலி" என்று நல்லவன் போல் நடிக்கும் வஞ்சகனைப் பொது வழக்கில் சொல்லுவதுண்டு. ("ஆட்டுத்தோல் போர்த்திய ஓநாய்" என்ற வழக்கும் நிறையக் கேட்டிருக்கிறோம்).

இங்கோ, அதன் எதிர் வகையான உவமை.

அதாவது, புலித்தோல் போர்த்திய எருமை Laughing

வலியில் நிலைமையான் வல்லுருவம்
(துறவு) வலிமை இல்லாதவன் (துறவி போன்ற) வலிய உருவம் / வேடம் இட்டுக்கொள்வது

பெற்றம் புலியின் தோல் போர்த்து மேய்ந்தற்று
எருமை மாடு புலியின் தோலைப் போர்த்திக்கொண்டு (புல்) மேய்வது போலாகும்!

app_engine

Posts : 10099
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 12 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Wed Sep 03, 2014 5:26 pm

#274
தவமறைந்து அல்லவை செய்தல் புதல்மறைந்து
வேட்டுவன் புள் சிமிழ்த்தற்று


புள் / புள்ளினம் தெரியும் (பறவை), ஆனால் புதல்?

புதல் = புதன் = புதர் Smile

அப்படியாக, புதல் மறைந்து புள் சிமிழ்த்தல் = புதரில் மறைந்திருந்து பறவைகளைப் பிடித்தல்!

கடந்த குறள் போன்றே, வஞ்சித்தலை அறிவிக்கும் இன்னொரு உவமை Smile

தவமறைந்து அல்லவை செய்தல்
தவ வேடத்தில் மறைந்து கொண்டு (துறவி போன்ற கோலத்தில் இருந்து கொண்டு, நடித்துக்கொண்டு) அதற்குத் தகாதவற்றைச் செய்வது

வேட்டுவன் புதல்மறைந்து புள் சிமிழ்த்தற்று
வேட்டைக்காரன் புதருக்குள் மறைந்திருந்து பறவைகளைப் பிடிப்பதற்கு ஒப்பானது!

கவிஞர்கள் தொன்று தொட்டே மங்கையரைப் பறவைகளுக்கு உவமைப்படுத்துவது தெரிந்ததே. (கிளி / புறா / அன்னம் / மயில் இப்படியெல்லாம்).

அவ்வாறாக, இந்தக்குறள் குறிப்பாகத் துறவு வேடத்தில் நடித்துக்கொண்டே பெண்களை வலையில் வீழ்த்தும் வஞ்சகர் குறித்தது எனலாம்!

app_engine

Posts : 10099
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 12 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 12 of 40 Previous  1 ... 7 ... 11, 12, 13 ... 26 ... 40  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum