Ilayaraja and Beyond
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை

3 posters

Page 10 of 16 Previous  1 ... 6 ... 9, 10, 11 ... 16  Next

Go down

குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை - Page 10 Empty Re: குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை

Post  app_engine Wed Apr 11, 2018 10:28 pm

#1169
கொடியார் கொடுமையின் தாம்கொடிய விந்நாள்
நெடிய கழியும் இரா


"கழியாத இரவுகள் விடியாத பொழுதுகள்" என்ற சொற்றொடரைக் கல்லூரிக்காலத்தில் எழுதிய ஒரு காதல் கவிதையில் பயன்படுத்தியது நினைவுக்கு வருகிறது.

அது நான் கோர்த்தெடுத்ததோ அல்லது கடன்வாங்கிக் கையாண்டதோ என்பது நினைவில் இல்லை.

இந்தக்குறள் அதே கருத்தில் தலைவி புலம்புவதைச் சொல்கிறது.

இந்நாள் நெடிய கழியும் இரா
(பிரிவில் துன்புறும்) இந்நாட்களில் நீண்டு நெடிதாகக் கழியும் இரவுகள்
(துன்பத்தின் விளைவாக நீண்டதாக / முடிவில்லாததாகத் தோன்றும் இரவுப்பொழுதுகள்)

கொடியார் கொடுமையின் தாம்கொடிய
கொடியவரின் கொடுமையை விடவும் கூடுதல் துன்பம் தருவன
(கொடியவர் = பிரிந்து சென்று துன்பம் தந்த காதலர்)

அவர் பிரிந்து சென்ற கொடுமையை விடவும் கூடுதல் கொடுமை இழு இழுவென்று நீண்டு இழுத்துக்கொண்டிருக்கும் இரவுகளாம்.

உண்மையில் இரவுப்பொழுது யாருக்காகவும் நீளுவதில்லை. கதிர் தோன்றுவதும் மறைவதும் முழு உலகுக்கும் பொதுவானது / ஒரே அளவினது. நம் மனநிலையைப் பொறுத்தே நேரம் குறைவாகவும் நீளுவதாகவும் தோன்றுவதெல்லாம். மிகவும் மகிழ்வு தரும் ஒரு பொழுதுபோக்கு நிகழ்ச்சி விரைவில் முடிந்துவிட்டது போலவும் தாங்க முடியாத அறுவை நிகழ்வோ நெடுநேரம் நடப்பது போலவும் தோற்றம் தரும்.

அது போன்ற கொடுமை தான் இது.

app_engine

Posts : 10097
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை - Page 10 Empty Re: குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை

Post  app_engine Thu Apr 12, 2018 8:56 pm

#1170
உள்ளம்போன்று உள்வழிச் செல்கிற்பின் வெள்ளநீர்
நீந்தலமன்னோ என் கண்


மனது செல்லும் வேகத்தில் உடல் செல்ல முடியுமா?

குருதிச்சதை கொண்ட உடலால் அது முடியாது என்பது தான் உண்மை. (வேறு விதமான மனங்கள் / உடல்கள் அவ்வாறு செய்யக்கூடும் என்றாலும் அவற்றின் வேகம் நாம் அறிந்திராதது என்பதால் அவை குறித்தெல்லாம் பேச / எண்ண முடியாது).

"நினைத்த உடனே வேறொரு இடத்தில் இருக்க முடிந்தால்" என்பது கனவில் மட்டுமே நடக்கும் என்றாலும், "அப்படி முடிந்தால் நன்றாக இருக்குமே" என்று ஒரு முறையாவது வாழ்வில் எண்ணாதவர் யாருமே இருக்க முடியாது.

அப்படிப்பட்ட ஒரு நிலையில் தலைவனைப்பிரிந்த தலைவி புலம்பும் பாடல்.

உள்ளம்போன்று உள்வழிச் செல்கிற்பின்
(என்னவர்) உள்ள இடத்துக்கு என் மனதைப்போன்றே நானும் செல்ல முடியுமென்றால்

வெள்ளநீர் நீந்தலமன்னோ என் கண்
என் கண்கள் கண்ணீர் வெள்ளத்தில் நீந்த வேண்டி இருக்காதே?

கடந்த சில குறள்கள் போன்ற கற்பனைச்சிறப்பு இல்லாவிட்டாலும் நொந்து போன உணர்வை அருமையாகவே பதிவு செய்திருக்கிறார் இதிலும்.

குறிப்பாக, நம் எல்லோருக்கும் இருக்கும் "நான் அங்கே இருந்தால்" என்ற அந்த உணர்வினைப் படம் பிடித்ததில் தான் எப்பேர்ப்பட்ட மக்கள் கவிஞன் என்று (ஆயிரத்துக்கும் கூடுதலான முறையாகத்) தெளிவிக்கிறார் Smile

app_engine

Posts : 10097
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை - Page 10 Empty Re: குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை

Post  app_engine Fri Apr 13, 2018 11:47 pm

#1171
கண்தாம் கலுழ்வ தெவன்கொலோ தண்டாநோய்
தாம்காட்ட யாம் கண்டது

(காமத்துப்பால், கற்பியல், கண்விதுப்பழிதல் அதிகாரம்)

விதுப்பு  என்பதற்கு நடுக்கம், விரைவு, பரபரப்பு, வேட்கை என்றெல்லாம் அகராதி பொருள் சொல்கிறது.

கண்விதுப்பு என்றாலோ? "கண்கள் காண்டற்கு விரைகை" என்று சொல்கிறது.  அதாவது, பார்ப்பதற்கு ஏங்குதல் என்று பொருள்.

கண் விதுப்பழிதல் என்றால் "காண்பதற்கு ஏங்கி அழுது வருந்துதல்" என்று புரிந்து கொள்ளலாம்.

ஆக, இந்த அதிகாரம் முழுவதும் தலைவனைப்பிரிந்த தலைவி அவனை எப்போது காண்போம் என்று தவியாய்த் தவிக்கும் கண்களைப்பற்றிப் பாடுவதாக வரும் என்று தோன்றுகிறது.
("கண்கள் இரண்டும் என்று உம்மைக்கண்டு பேசுமோ" என்ற திரைப்பாடல் இந்த வகைப்பட்டது என்பது உடனே தோன்றினால் நீங்களும் நானும் ஒரேபோன்று எண்ணுகிறோம் என்று பொருள் Smile )

கண் தண்டாநோய் தாம்காட்ட யாம் கண்டது
ஏ கண்களே! தணியாத இந்தக்காதல் நோய் நீங்கள் அவரை எனக்குக்காட்டியதால் தானே பெற்றேன்?

தாம் கலுழ்வ தெவன்கொலோ
(அப்படியிருக்க, எனக்குத்தானே துன்பம்? செய்வதையும் செய்து விட்டு) நீங்கள் இப்போது ஏன் அழுது கொண்டிருக்கிறீர்கள்?

"அந்த ஆளைப்பார்க்க வைத்ததும், காதல் உணர்வைத்தூண்டியதும், உரையாடி என்னை வலையில் வீழ்த்தியதும் - இப்படி எல்லாவற்றையும் செய்து என்னை இந்த நோயில் தள்ளி விட்ட கண்களே! இவ்வளவு போதாதா? பிரிந்து சென்ற அவரைப் பார்க்கத்துடித்து, அழுது நீர் சுரந்து இன்னும் என்னை ஏன் வருத்துகிறீர்கள்?" - இப்படியெல்லாம் தன் கண்களைத் தானே நொந்து கொள்கிறார்.

மிக அழகான கவிதை!

app_engine

Posts : 10097
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை - Page 10 Empty Re: குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை

Post  app_engine Mon Apr 16, 2018 9:28 pm

#1172
தெரிந்துணரா நோக்கிய உண்கண் பரிந்துணராப்
பைதல் உழப்பது எவன்


உண்கண் என்றால் மையெழுதிய கண் என்று முன்னமே ஒரு பாடலில் பார்த்திருக்கிறோம். "பைதல்" என்ற சொல்லுக்கு வேறு பல பொருள்கள் இருந்தாலும் இங்கே "துன்பம்" என்று வருவதாக இந்தக்குறளை மேற்கோள் காட்டி அகராதி சொல்கிறது.

மொத்தத்தில் "கண் படும் துன்பம்" என்ற அதிகாரத்தின் மையப்பொருளில் அமைந்த குறள். அதிலும் குறிப்பாகப்பெண்ணின் கண், மையழுதிய அந்த அழகான கண்கள் அழுது தவிக்கும் சூழல், தலைவனைப் பிரிந்த தலைவியின் துன்பம் கண்களின் அழுகையில் வெளிப்படும் நிலைமை.

"காதலனை முதன்முதல் கண்டபோது ஆராயாமல் காதல் கொள்ள வழிசெய்தவை இந்தக்கண்களே. பிரிந்து சென்றவுடன் மட்டும் அழுவதேன், இப்போதும் அவனுக்குப் பரிவு காட்டிக்கொண்டிருக்கக் கூடாதா"  - என்று தன் கண்களைத் தானே நொந்து கொள்கிறாள் பெண்.

தெரிந்துணரா நோக்கிய உண்கண்
(எப்படிப்பட்டவன் என்று) தெரிந்து ஆராயாமல் நோக்கிப்பார்த்த (காதலுக்கு வழி செய்த) மையெழுதிய கண்களே!
("கண்டதும் காதல்"  என்ற நடைமுறை உண்மையை இங்கே காண்கிறோம்)

பரிந்துணராப்பைதல் உழப்பது எவன்
(பிரிந்தவுடன்) பரிவோடு உணராமல் துன்பத்தில் உழலுவது ஏனோ?

உண்மையில் "காதலுக்குக்கண்ணில்லை" என்ற இன்னொரு நடைமுறை உண்மையை மறைக்க இங்கே தலைவி கண்களின் மீதே பழி போடப்பார்க்கிறாள் Smile

ஆராய்ந்து காதல் கொள்ளத்தான் கண்களும் அறிவும் வேண்டும். தெரிந்து உணராமல் காதலில் வீழ்வது குருட்டுத்தனம் அல்லவா? கண்கள் தான் காதலின் சாரளங்கள் என்றாலும் அவற்றுக்குப்பின்னால் இருந்து இயக்கம் மூளைக்கு அறிவிருக்க வேண்டாமா?

இல்லாமல் செயல்பட்டால், அந்த "ஐயோ பாவம் கண்கள்" அழும்போது அவற்றின் மீதே பழியைப்போடும் இந்த நிலைமை தான் வரும்!

app_engine

Posts : 10097
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை - Page 10 Empty Re: குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை

Post  app_engine Tue Apr 17, 2018 10:30 pm

#1173
கதுமெனத் தாநோக்கித் தாமே கலுழும்
இது நகத்தக்க துடைத்து


"கதுமெனல்"  என்றால் விரைவுக்குறிப்பு என்கிறது அகராதி. ("சட்டென்று / சட்டுனு" என்று பேச்சு வழக்கில் சொல்லுகிறோமே, அதே போன்று).

நாம் ஏற்கனவே பார்த்து வருவது போல், இந்த அதிகாரம் முழுவதும் பெண் தன் கண்களின் அழுகையைக் குறித்து இளக்காரமாகப் பேசும் ஒன்று. அதாவது, தலைவன் பிரிந்த வெறுப்பில் இருக்கும் அவள், கண்களின் மீது குறை கூறி அவ்வாறாகத்தன் துன்பத்துக்கு வடிகால் காண முயல்கிறாள்.

"நீ தானே அவரை விரைவாக நோக்கி எனக்குக்காதல் உண்டாக்கினாய் - இப்போது நீயே அழுவதைப்பார்த்து எனக்கு நகைப்பாக இருக்கிறது" என்று வஞ்சப்புகழ்ச்சி செய்கிறாள். துன்ப நிலையில் நகைப்பு எப்படி வரும்? ஆனால், இது வஞ்சப்புகழ்ச்சியா என்றும் சொல்ல முடியவில்லை - அதாவது இங்கே கண்களைப் பழிப்பது புகழ்வதற்கு அல்லவே...தனது துன்ப நிலையை மறக்க மட்டும் தானே முயல்கிறாள்? மது அருந்துவது போல இங்கே கவிதை Wink

கதுமெனத் தாநோக்கித் தாமே கலுழும்
தானே விரைவாக நோக்கி (அதனால் காதலுற்று, அதன் பிறகு) தானே அழுகின்ற

இது நகத்தக்க துடைத்து
இந்தக்கண்கள் நகைக்கத்தக்கவை
(இப்படியாப்பட்ட இந்தக்கண்களைப் பார்க்கையில் எனக்குச் சிரிப்பு வருகிறது)

தன் கண்கள் அழுவதைப் பார்த்துத் தானே சிரித்துக்கொள்ளும் இந்தப்பேதைப்பெண்ணைப் பார்த்தால் எனக்கும் தான் நகைப்பு வருகிறது Smile

app_engine

Posts : 10097
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை - Page 10 Empty Re: குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை

Post  app_engine Wed Apr 18, 2018 9:30 pm

#1174
பெயலாற்றா நீருலந்த உண்கண் உயலாற்றா
உய்வில்நோய் என்கண் நிறுத்து


"அழக்கண்ணில் நீரில்லை" "அழுது அழுது கண்கள் வற்றி விட்டன" - இப்படிப்பட்ட சொற்றொடர்களை நாம் அடிக்கடி கேட்டிருக்கிறோம். (அப்படிப்பட்ட நிலையில் தான் இன்று உலகில் பலரும் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பது கொடுமையான ஒன்று).

இங்கே தலைவி அதே நிலையில் - தலைவன் விட்டுச்சென்று பிரிவுத்துயரால் அந்நிலை. இந்தச்செய்யுளிலும் அவர் தம் கண்ணைப் பழிப்பதைக் காண முடியும். சென்ற பாடலில் கண்ட நகைக்கும் மனநிலை இங்கே இல்லை என்பது வேற்றுமை.

உயலாற்றா, உய்வில் என்று இரண்டு முறை தப்ப வழியற்ற / நீங்காத என்று தமது காதல் நோயைப்பற்றிச் சொல்லுவது சிறப்பு!

உயலாற்றா உய்வில்நோய் என்கண் நிறுத்து
(அதிலிருந்து) தப்ப வழியில்லாத, நீங்காத இந்தக் காமநோயை எனக்குள் வைத்து விட்டு

பெயலாற்றா நீருலந்த உண்கண்
(பிரிவினால் அழுது அழுது) இனியும் பெய்வதற்கு நீரில்லாமல் உலர்ந்த நிலையில் இருக்கின்றன என் மையெழுதிய கண்கள்!

நோயைத்தந்தவை என்று கண்கள் மீது சினம் உள்ளது போலப் பாடினாலும். அவையும் வற்றிப்போய்த் துன்பத்தில் உள்ளனவே என்று பரிவு கொள்கிறாள் இங்கே. ஐயோ பாவம்!

app_engine

Posts : 10097
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை - Page 10 Empty Re: குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை

Post  app_engine Thu Apr 19, 2018 8:57 pm

#1175
படலாற்றா பைதல் உழக்கும் கடலாற்றாக்
காமநோய் செய்த என் கண்


மீண்டும் "பைதல் உழக்கும்" என்ற பயன்பாடு (துன்பத்தில் உழலுதல்).

அதே போல, மீண்டும் "கடலை விடவும்" என்ற பயன்பாடும் வருகிறது.

பொருளும் முன்பு கண்டதே - காம நோயை எனக்குத்தந்த கண்களே இப்போது நோயில் பாடுபடுகின்றன - என்பதை இந்த அதிகாரத்தில் மீண்டும் மீண்டும் படித்துக்கொண்டிருக்கிறோம்.

"படல்" என்ற சொல்லுக்கு உறக்கம் என்றும் பொருள் இருக்கிறதாம்.

கடலாற்றாக்காமநோய் செய்த என் கண்
கடலினும் பெரிதான (மிக்க / கொள்ளாத) காம நோயை எனக்கு உருவாக்கிய இந்தக்கண்கள்
(கிட்டத்தட்ட "என் கண்களே என் எதிரிகள்" என்பது போன்ற பேச்சு)

படலாற்றா பைதல் உழக்கும்
(தாமும்) உறங்க முடியாமல் துன்பத்தில் (நோயில்) உழன்று கொண்டிருக்கின்றன

நோய்களில் கொடிய நோய் "உறங்க இயலாமல் இருப்பது" என்ற நோய். நம்நாளின் அறிவியல் தெரிவிப்பதன் அடிப்படையில் உறக்கம் ஒழுங்கில்லை என்றால் வேறு பல உடல்நலக் கோளாறுகளும் தொடர்ந்து வரும். அப்படியாக, இது ஒரு நோய் மட்டுமல்ல மற்ற நோய்கள் தரும் காரணமும் ஆகிறது.

அதில் உழலும் நிலை இப்போது தலைவிக்கு. அது தனக்குள்ள நோய் என்று சொல்லாமல், தன்னை இதில் இழுத்து விட்ட கண்களுக்குள்ள நோய் என்று சொல்லி ஆற்றாமையில் புலம்புகிறாள்.

கவிச்சுவையோடு கூடிய துன்பநிலை!

app_engine

Posts : 10097
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை - Page 10 Empty Re: குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை

Post  app_engine Fri Apr 20, 2018 6:05 pm

#1176
ஓஒ இனிதே எமக்கிந்நோய் செய்தகண்
தாஅம் இதற்பட்டது


"ஆகா ஓகோ" என்று மகிழ்ச்சியின் உச்சத்தில் இருப்போர் பயன்படுத்தும் ஒலியை இங்கே துயரத்தின் உச்சத்தில் இருக்கும் காதலி பயன்படுத்துவது விந்தை தான்.

அதுவும், தனது கண்கள் அழுது துன்பப்படுவதை அவ்வளவு இனிமையான ஒன்றாகப்பாடுகிறாள். "இடுக்கண் வருங்கால் நகுக" செய்யத் தன் பாடலின் தலைவியைப் பயிற்றுவிக்கிறார் போலும் Smile

என்றாலும், இதற்குள் புதைத்து வைத்திருக்கும் "பழிவாங்கல் உணர்ச்சி" அவ்வளவு உவப்பாக இல்லை என்பதையும் குறிப்பிட வேண்டியிருக்கிறது. (எனக்குத் தொல்லை வர வைத்தாய் தானே, இப்போது உனக்குத்துன்பம் வருவது எனக்கு மகிழ்ச்சியே என்பது தெளிவாகவே பழி தீர்க்கும் உணர்வு)

எமக்கிந்நோய் செய்தகண்
எனக்கு இந்தக்காதல் நோயை உண்டாக்கிய (அதன் விளைவாகத்துன்பம் பிறப்பித்த) கண்கள்

தாஅம் இதற்பட்டது
தாமும் அதற்குள் சிக்கிக்கொண்டது (துன்பத்தில் உழலுவது)

ஓஒ இனிதே
ஓ! எவ்வளவு இனிமை / மகிழ்ச்சி!

தலைவன் பிரிந்து சென்ற ஆற்றாமையில் அழுது கொண்டிருப்பவள் வேறு என்ன தான் செய்ய முடியும்? விதம் விதமாகப் புலம்புவது தான் துயரத்தைக் கையாளுவதற்கான வடிகால்.

இந்த அதிகாரம் முழுவதும் தனக்கு நோய் உண்டாக்கிய கண்களைச் சாடி (அவற்றைக்கண்டு நகைத்து, அழுது, மகிழ்ந்து - இப்படிப்பல உணர்ச்சிகளையும் வெளிக்காட்டி) அவ்வழியே தனது துன்பத்துக்கு வடிகால் தேடுகிறாள்.

app_engine

Posts : 10097
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை - Page 10 Empty Re: குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை

Post  app_engine Mon Apr 23, 2018 10:56 pm

#1177
உழந்துழந்துள்நீர் அறுக விழைந்திழைந்து
வேண்டி அவர்க்கண்ட கண்


தனது கண்களைத் தலைவி திட்டித்தீர்த்துக்கொண்டிருக்கும் அதிகாரம்.

இந்தக்குறளில் "உன்னிடத்தில் நீர் வற்றிப்போவதாக" என்று சாபம் இடுகிறாள்.
("சாபம்" தமிழ்ச்சொல்லா இல்லையா - இல்லையென்றால் இதற்குரிய சொல் என்ன? "ஒழிக" என்று சொல்வதால் "ஒழிச்சொல்"?)

விழைந்திழைந்து வேண்டி அவர்க்கண்ட கண்
(காதல் தோன்றுவதற்கு) விரும்பி இழைந்து வேண்டி அவரைக்கண்ட கண்களே

உழந்துழந்துள்நீர் அறுக
(அவர் பிரிந்து சென்றுவிட்ட இந்நிலையில்) துன்பத்துள் உழன்று உழன்று உங்களுக்குள்ளே நீர் வற்றி இல்லாமல் போகட்டும்

"தன் கண்ணைத்தானே யாராவது குத்துவார்களா" என்பது அவ்வப்போது சொல்லப்படும் ஒரு உவமை.

"கண்ணைப்போல உன்னைக்காப்பேன்" என்று சொல்வதும் இன்னொரு பொது மொழி.

அப்படியெல்லாம் பொதுவாக இருக்கும் மானிடர்களில் ஒருத்தி தன் கண்களை "நீர் அற்றுப்போகக்கடவாய்" என்று கடுஞ்சொல்லோடு திட்டுவது எப்பேர்ப்பட்ட மன அழுத்தத்தில் இருக்கிறாள் என்று காட்டுகிறது. (கிட்டத்தட்டத் தற்கொலை செய்து கொள்வது போன்ற "தன்னைத்தானே தாக்கும் மனநிலை" அதாவது மனப்பிறழ்வு).

app_engine

Posts : 10097
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை - Page 10 Empty Re: குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை

Post  app_engine Tue Apr 24, 2018 8:30 pm

#1178
பேணாது பெட்டார் உளர்மன்னோ மற்றவர்க்
காணாது அமைவில கண்


ஒரே போன்ற இரண்டு சொற்கள் (பேணுதல் / பெள்தல்) - இவற்றைக்கொண்டு சிறிய விளையாட்டு.

பேணுதல் என்பது நன்கு தெரிந்த சொல் தான் - போற்றுதல் / பாதுகாத்தல் / வைத்துப்பராமரித்தல் என்பனவெல்லாம் நமக்கு அன்றாடம் பழக்கத்தில் உள்ளவை. இவையல்லாமல், விருப்பம் என்ற பொருளும் இருக்கிறது. அதை இன்னும் கொஞ்சம் பெரிதாக்கி, "மனதுக்குள் விருப்பம்" என்று உரையாசிரியர்கள் விளையாடுகிறார்கள்.

பெள் என்ற சொல்லும் விருப்பம் / காதல் என்ற பொருள் கொண்டிருப்பதால், "பேணாது பெட்டார்" என்பது விருப்பமின்றிக் காதலித்தவர் என்று முரணாக வருவது போல் தோன்றலாம். காதல் என்றாலே விருப்பம் தான் - ஆகவே அந்தப்பொருளில் இங்கே "பேண" முடியாது Wink

"பொறுப்பற்ற காதலன்" என்று மட்டுமே கொள்ள முடியும். அதாவது, பெண்ணைப்பார்த்து இளிக்கவும் கொஞ்சவும் கூடவும் எல்லாம் தெரியும். காலங்காலமாக வைத்துக்காப்பாற்றத்தான் - பேணத்தான் - துப்பில்லை. கொஞ்சல் இன்பம் எல்லாம் கழிந்தவுடன் பொறுப்பில்லாமல் பிரிந்து ஓடி விட்டான்.

பேதைப்பெண் ஆற்றாமையை அவன் மீது காட்ட முடியாமல் "இன்னமும் அவனைக்காணத்துடிக்கும்" தனது கண்களைக் குறை சொல்லிக்கொண்டிருக்கிறாள்.

பெட்டார் பேணாது உளர்மன்னோ
காதலித்தவர் (என்னை வைத்துக்)காப்பாற்றாமல் (பிரிந்து, தான் தோன்றியாக) இருக்கிறார்

மற்றவர்க்காணாது அமைவில கண்
மாறாக இந்தக்கண்கள் அவரைக்காணாமல் (தவித்துக்கொண்டு) உறக்கமின்றி இருக்கின்றனவே

பெண்களுக்கு, குறிப்பாக அந்நாளையத் தமிழ்ப்பெண்டிருக்கு இருந்த "கல்லானாலும் கணவன்" என்ற இயலாமை மனநிலையை அழகாகப்படம் பிடிக்கும் பாடல்.

"தன்னைப்பேணாத காதலனையும் மறக்க மாட்டேன்" என்று அடம்பிடிக்கும் பேதைப்பெண் நெஞ்சம் Sad

app_engine

Posts : 10097
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை - Page 10 Empty Re: குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை

Post  app_engine Wed Apr 25, 2018 9:31 pm

#1179
வாராக்கால் துஞ்சா வரின்துஞ்சா ஆயிடை
ஆரஞர் உற்றன கண்


சுவையான பாடல் - எள்ளல் செய்யும் மனநிலையில் படித்தால் சற்றே நகைச்சுவையான பாடலும் கூட Smile

"முன்னால் போனால் கடிக்கிற, பின்னால் போனால் உதைக்கிற" என்ற எண்ணத்துடன் படித்துப்பார்த்தேன், சிரிப்பு வந்தது. "எப்படியும் எனக்குத்துன்பம் தான் - அதிலிருந்து விடுதலை இல்லை" என்ற விதத்தில் எழுதப்பட்டிருக்கும் பாடல்.

வாராக்கால் துஞ்சா
(காதலர்) வராவிட்டால் தூங்காது
(அவர் வருவாரா, மாட்டாரா, எப்போது காண்பேன் என்றெல்லாம் புலம்பி உறக்கம் கெட்டுக்கிடப்பது இந்த அதிகாரம் முழுவதும் நாம் படிப்பது தான்)

வரின் துஞ்சா
அவர் வந்தாலும் தூங்க மாட்டா
(அவரைப்பார்த்துக்கொண்டே இருக்க வேண்டும் என்ற ஆவலோ அல்லது கண்ணை மூடினால் விட்டுவிட்டுப்போய் விடுவாரோ என்ற சிறுபிள்ளைத்தனமான அச்சமோ - எப்படியானாலும் உறக்கம் ஒழிந்தது)

ஆயிடை ஆரஞர் உற்றன கண்
இவற்றுக்கிடையில் (இந்த இரு நிலைகளிலும்) என் கண்கள் கொடுமையான துன்பம் அடைகின்றனவே
(அஞர் = துன்பம்)

"நீ என்ன அவருக்கு அடிமையா - உன் இன்பத்தையெல்லாம் அவரிடம் அடகு வைத்து விட்டு ஏன் துன்பத்தையெல்லாம் கண்களுக்குத்தருகிறாய் - பேதைப்பெண்ணே" என்று எள்ளல் செய்யத்தோன்றுவது நான் ஆண் என்பதால் இருக்கலாம்.

ஆனால், இப்படி உறக்கம் கெட்டு உறுவது காதலருக்கு (நானறிந்த வரையில் இரு பாலாருக்கும்) உண்மையிலேயே உள்ளது தான். இயற்கை நிலை தான். எள்ளலோ, நகைப்போ இல்லாமல் பரிவுடன் தான் இப்படிப்பட்ட மென்மையான காதலர்களை நாம் நோக்க வேண்டும்.

கூடுதல் எள்ளல் அவர்களுக்கு மனச்சோர்வு உண்டாக்குமேயல்லாமல் மனமாற்றம் எல்லாம் வருத்தாது!

app_engine

Posts : 10097
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை - Page 10 Empty Re: குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை

Post  app_engine Thu Apr 26, 2018 7:37 pm

#1180
மறைபெறல் ஊரார்க்கு அரிதன்றால் எம்போல்
அறைபறை கண்ணார் அகத்து


"என் நிலையை என் கண்களே காட்டிக்கொடுத்து விடுகின்றன" என்பதைக் கவியழகுடன் சொல்லும் பாடல்.

"பறையடித்து அறிவித்தல்" என்ற செய்தி சொல்லும் தமிழர் முறையை இங்கு மீண்டும் பார்க்கிறோம். அந்நாள் தொட்டு இன்றுவரை இருக்கும் இந்த வேலைக்கு உதவும் இசைக்கருவி இங்கே திருக்குறளில் விளிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

அந்த "அறை பறை" இங்கே கண்ணுக்கு உவமை!

காதல் கொள்வதிலும் பிரிவில் துயருறுவதிலும் கண்களுக்குத்தான் எப்போதும் வெளிப்படையான பங்கு. அதிலும் குறிப்பாகப் பெண்களின் கண்கள் "ஒலிபெருக்கி"க்கருவிகளுக்கு இணையானவை. மைவிழிகளினூடே ஆயிரம் செய்திகள் வெளிப்படும் நிலையில் மறைபொருளைக் காப்பது பெண்களுக்கு எப்போதுமே கடினமான ஒன்று தான்.

எம்போல் அறைபறை கண்ணார் அகத்து
எம்மைப்போன்ற "பறை அறிவிக்கும்" கண்களை உடையவரிடம் இருந்து
(அகத்தில் அழகை முகத்தில் காட்டும் கண்களை உடைய பெண்டிரிடமிருந்து)

மறைபெறல் ஊரார்க்கு அரிதன்றால்
மறைபொருளை (ஒளித்து வைக்க வேண்டிய தகவல்களை) வெளியில் பெறுவது ஊராருக்கு அரிதல்லவே!

காதலரோடு வாழும் மகிழ்ச்சி என்றாலும் அவர் விட்டு விட்டுப்போன துயரம் என்றாலும் அந்த நிகழ்வுகளை வெளிப்படையாகப் படம் போட்டுப் பறை அறிவிக்கும் கண்கள் பெண்களுக்குண்டு.

பார்க்கும் ஊராருக்கு இமைப்பொழுதில் நிலைமை விளங்கி விடும் - அந்தக்கண்களைப் பார்த்தாலே!

இனி என்னைத்தை மறைக்க?

app_engine

Posts : 10097
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை - Page 10 Empty Re: குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை

Post  app_engine Fri Apr 27, 2018 9:10 pm

#1181
நயந்தவர்க்கு நல்காமை நேர்ந்தேன் பசந்தவென்
பண்பியார்க்கு உரைக்கோ பிற

(காமத்துப்பால், கற்பியல், பசப்புறு பருவரல் அதிகாரம்)

பசலை நோய் என்பதைத் தமிழ் படித்தவர்கள் எல்லோரும் கேள்விப்பட்டிருப்போம். (உண்மையில் யாருக்கும் இந்த நோய் வந்த யாரையும் நான் நேரில் கண்டதில்லை!)

அதாவது, காதலன் அல்லது கணவன் பிரிந்த பிரிவுத்துயரால் அழுது / உண்ணாமல் - உறங்காமல் இருந்து / துன்புற்று வாடி வாடி அதன் விளைவாகப் பெண்ணின் உடலின் நிறமே மாறி விடுதல்.

பசலை நோய் வந்து வருந்துதல் என்று அதிகாரத்தின் தலைப்பு இருப்பதால், பிரிவு நடந்து நெடுங்காலமாகி விட்ட சூழல் என்று புரிந்து கொள்கிறோம். (அதாவது, கடந்த அதிகாரங்களின் தொடர்ச்சியாக இது வருகிறது.)

நயந்தவர் என்றால் நண்பர் / கணவர் என்றெல்லாம் அகராதி பொருள் சொல்கிறது. விரும்பியவர் என்றும் கொள்ளலாம். அவ்வழியில், காதலர் என்பது இங்கு மிகப்பொருத்தம்.

நல்குதல் = விரும்புதல், நல்காமை = விரும்பாமை / பிரிதல்.

நயந்தவர்க்கு நல்காமை நேர்ந்தேன்
விரும்பிய காதலர் என்னைப் பிரிந்த பொழுது ஏற்றுக்கொண்டேன்
(நேர்தல் = பொருந்துதல்)

பசந்தவென் பண்பியார்க்கு உரைக்கோ பிற
ஆனால், இப்போது என்னுடல் பசலை படர்ந்து கிடைக்கும் தன்மையை யாரிடம் போய்ச்சொல்வேன்?

"யாரிடம் போய்ச்சொல்லுவேன்?" என்று அழும் நிலை யாருக்கும் வரக்கூடாது. எந்தக்கொடிய சூழ்நிலையிலும் சாய்வதற்கு ஒரு தோள் வேண்டும் - இருக்கும்.

ஆனால், தானே தேர்ந்தெடுத்து ஒப்புக்கொண்ட ஒரு சூழலில், கொடுமையான பின்விளைவுகள் - குறிப்பாக வெளியில் சொல்ல இயலாத உடல் அளவிலான துன்பங்கள் - வந்தால், இப்படிப்பட்ட எதிர்மறை எண்ணங்கள் மனதை மூடிவிட முடியும்.

அந்நிலையில் தான், அதாவது கடினமான மனஅழுத்தத்தில், தலைவி இருக்கிறாள்.

தொடர்ந்து என்னென்ன புலம்புவாளோ இந்த அதிகாரத்தில்...

app_engine

Posts : 10097
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை - Page 10 Empty Re: குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை

Post  app_engine Mon Apr 30, 2018 7:03 pm

#1182
அவர்தந்தார் என்னும் தகையால் இவர்தந்தென்
மேனிமேல் ஊரும் பசப்பு


உண்மையிலேயே சொல்கிறாளா அல்லது வஞ்சப்புகழ்ச்சியா என்று தெளிவாகப் புரிந்து கொள்ளவிடாமல் குழப்பும் பாடல்.

அதாவது, தன் மேனி மேல் பரவும் பசலையை "அவர் தந்தார் என்னும் தகை (பெருமை)" என்று சொல்வதைத் திட்டா / பாராட்டா என்று ஒற்றை அடியாகச் சொல்ல முடியவில்லை. பிரிவினால் வரும் துன்பம் என்பதால் ஒரு வெறுப்பில் திட்டுவதாகவும் (மணக்குடவர் உரை சொல்வது போல, "ஏ தோழி, அவரை வந்து இந்நோயை நீக்கச்சொல்லு" என்பதாகவும்) புரிந்து கொள்ளலாம். அல்லது, என் காதலர் என் மேனியின் மீது உருவாக்கியிருக்கும் பசலை நோயைப்பாருங்கள் என்று உண்மையிலேயே தகைமை உணர்வுடன் சொல்வதாகவும் கொள்ளலாம்.

"பொதுவாகவே இந்தக்காதல் நோயில் துவளுவோரின் எண்ணங்கள் இரு புறங்களிலும் ஊசலாடும்" என்பதாக எனக்கு இருக்கும் மயக்கத்தால் இந்தப்புரிதல் குழப்பம் இருக்கலாம்.

ஆக, அவ்வளவு எளிதல்லாத திருக்குறள் Smile

அவர்தந்தார் என்னும் தகையால்
அவர் (அந்தக்காதலர்) தந்தார் என்ற பெருமையுடன்

இவர்தந்தென் மேனிமேல் ஊரும் பசப்பு
என் மேனியின் மேல் பசலை நோய் ஊர்ந்து பரவி வருகிறது

எப்படிப்பார்த்தாலும் இந்தப்பெண்ணின் நிலை குறித்து எண்ணுகையில் மனதுக்கு வலி தான்!

app_engine

Posts : 10097
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை - Page 10 Empty Re: குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை

Post  app_engine Tue May 01, 2018 6:24 pm

#1183
சாயலும் நாணும் அவர்கொண்டார் கைம்மாறா
நோயும் பசலையும் தந்து


சாயல் என்றவுடன் நமக்கு நினைவுக்கு வரும் ஒரே பொருள் "ஒப்பாக" என்பதே. (அம்மாவின் சாயலில் பையன் இருக்கிறான், அதே சாயல் - போன்ற பயன்பாடுகள் அன்றாடம் உள்ளவை).

இங்கு அந்தப்பொருள் அல்ல - அகராதியில் இந்தச்சொல்லுக்கு இருக்கும் பல பொருள்களில் முதலாமதான "அழகு" என்று பல உரையாசிரியர்களும் ஒத்துக்கொள்ளுகிறார்கள். அது தான் பொருத்தமானது.

"கைம்மாறு" என்ற சொல்லும் நாட்டுப்புறங்களில் பயன்படுத்தப்படும் "கடன்" என்ற பொருளில் இங்கே இல்லை. ("கைம்மாத்தா ஒரு 100 ரூவா வாங்கியிருக்கேன்"). இங்கே அது "பண்டமாற்று" என்ற பொருளில் Sad

சாயலும் நாணும் அவர்கொண்டார்
என்னுடைய அழகையும் நாணத்தையும் அவர் எடுத்துக்கொண்டார் (கொண்டு போய் விட்டார்)

கைம்மாறா நோயும் பசலையும் தந்து
அதற்குக் கைம்மாறாக இந்தத் தனிமை நோயையும் (அல்லது காதலால் ஏங்கும் நோயையும்) பசலையும் தந்து விட்டு.

"என்னை ஏமாற்றி விட்டார்" என்று அடிப்படைப்பொருள்.

உண்ணாமல் உறங்காமல் ஏங்கித்தவிப்பதால் பெண் அழகு குலைந்து பசலை படர்ந்து கண்ணீருடன் இருக்கிறாள். காதல் தொடங்கியபோது (அல்லது அதற்கு முன்பு) இருந்த நாணமும் இப்போது இல்லை. காண்பவர் எல்லாரும் இவள் நிலை குறித்து அறிவது கொண்டோ, இகழ்வது கொண்டோ ஒரு வெட்கமும் இல்லாமல் அழுது அரற்றிக்கொண்டு இருக்கிறாள்.

மனதை மிகவும் உறுத்தும் பாடல். உண்மையில் எத்தனையோ பெண்களுக்கு இவ்விதமாக "ஆசை காட்டி மோசம் செய்யும்" ஆண்களால் துயர் நிலை வந்திருக்கிறது என்று நம்முடைய சில ஆண்டு கால வாழ்விலேயே நேரடியாகக் கண்டிருக்கிறோம். அவர்களுடைய முகங்கள் உடனே மனதில் தோன்றித்துன்புறுத்துகின்றன!

app_engine

Posts : 10097
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை - Page 10 Empty Re: குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை

Post  app_engine Wed May 02, 2018 10:16 pm

#1184
உள்ளுவன் மன்யான் உரைப்பது அவர்திறமால்
கள்ளம் பிறவோ பசப்பு


"அவரைப்பற்றி நான் நல்லது தானே நினைத்துக்கொண்டிருக்கிறேன் - பிறகு எப்படி இந்தப்பசலை வந்தது? இது கள்ளத்தனமா அல்லது வேறு என்னமுமா?" என்று தலைவி அதிர்ச்சி அடைந்தது போன்ற குரலில் புலம்பும் பாடல்.

அதாவது, பசலை நோய் வருவது தன தலைவனைக்குறித்துத் தவறாக எண்ணும் / பேசும் பெண்களுக்கு மட்டுமே என்று நினைத்துக்கொண்டிருக்கிறாள் இந்தப்பேதை. (அதாவது, பேதை போலப் பேசுகிறாள் என்கிறார் வள்ளுவர்).

அபலைப்பெண் என்பதற்கான வரையறை Sad

உள்ளுவன் மன்யான் உரைப்பது அவர்திறமால்
நான் எண்ணுவதும் உரைப்பதும் அவரது நல்ல பண்புகளைக் குறித்து மட்டும் தானே?

கள்ளம் பிறவோ பசப்பு
(அப்படியிருக்க எனக்குப்) பசலை வருவது கள்ளமா (வஞ்சனையா) அல்லது வேறு ஏதாவது காரணமா?

நாம் முன்னமேயே கண்டபடி பசலை நோய் என்பது பெண்ணின் உடல் நிறம் மாறுமளவுக்குத் தாக்கியிருக்கும் ஒன்று - கவலை, உண்ணாமை, உறக்கமின்மை , துயரம், அழுகை, மன அழுத்தம் என்று தன் உடலைத்தானே வருத்தி அதன் வழி தானே வருத்தும் நோய்.

அப்படி இருக்க, அது என்னமோ தீமையாக அவரைக்குறித்து எண்ணுவதால் வரும் தண்டனை என்று நினைக்கிறாள்.

ஐயோ பாவம்!

app_engine

Posts : 10097
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை - Page 10 Empty Re: குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை

Post  app_engine Thu May 03, 2018 9:14 pm

#1185
உவக்காண் எம் காதலர் செல்வார் இவக்காண்என்
மேனி பசப்பூர்வ
து

அ, இ, உ - இம்மூன்றும் தமிழில் "சுட்டெழுத்துக்கள்" (சுட்டிக்காட்டும் எழுத்துக்கள்) என அழைக்கப்படுகின்றன.

இவற்றுள், அ & இ நாம் எப்போதும் பேச்சு வழக்கில் பயன்படுத்துகிறோம். (அங்கே / இங்கே, அவன் / இவன், அது / இது என்று சேய்மை / அண்மை சுட்டுவதற்கு இந்த எழுத்துக்கள்).

ஆனால், உ எங்கே பயன்படுத்தப்படுகிறது என்று பள்ளிக்காலங்களில் நான் கேள்வி எழுப்பியதுண்டு - விடை தெளிவாகக்கிடைத்ததில்லை (அல்லது நான் புரிந்து கொள்ளவில்லை).

இன்று அழகாக இந்த விளக்கம் கண்டேன் :
சுட்டெழுத்து விக்கிப்பீடியா

அதாவது, இந்த மூன்று எழுத்துக்களின் முற்காலப்பயன்பாடு இப்படி :

இ - அண்மையில் (கிட்டத்தில்) உள்ளவற்றைச்சுட்டுவது. (இங்கே, இந்த இடத்தில், இவர்கள், இவன், இது, இப்போது, இந்தக்காலம்)

அ - சேய்மையில், அதுவும் குறிப்பாகக் "கண்காணாத தொலைவில்" உள்ளவற்றைச்சுட்டுவது. (அங்கே, அந்த இடத்தில், அவர்கள், அவன், அது, அப்போது, அந்தக்காலம்)

உ - இரண்டுக்கும் இடைப்பட்ட தொலைவு - அதாவது, நெருக்கமாக இல்லை என்றாலும் கண்ணில் காணும் தொலைவு!  அதற்கான ஒரு சொல் தான் இந்தக்குறளில் பார்க்கிறோம் - உவக்காண் / உங்கே .


இந்தச்சொல்லின் பொருள், கண் காணக்கூடிய தொலைவில், சேய்மை தான் என்றாலும் வெகு தொலைவு அல்ல.

இந்தப்பொருள் புரிந்தால் இந்தக்குறளை நன்கு சுவைக்க முடியும். அதாவது, கிட்டத்தட்ட "மோப்பக்குழையும் அனிச்சம்" என்பது போன்ற உயர்வு நவிற்சியான பயன்பாடு.

உவக்காண் எம் காதலர் செல்வார்
(என்னைப்பிரிந்த என்) காதலர் கண்காணும் தொலைவிற்குத்தான் சென்றிருக்கிறார்

இவக்காண் என் மேனி பசப்பூர்வது
(அதற்குள்ளேயே) இங்கே என் மேனியில் பசப்பு ஊரத்தொடங்கி விட்டதே!

காதலன் பிரிந்த சற்று நேரத்திலேயே, சற்றுத்தொலைவு மட்டுமே அவன் சென்ற நிலையியிலேயே (அதாவது, கண் காணும் தொலைவில் அவன் இருக்கும்போதே) இவளது மேனியில் பசலை நோய் தோன்றி விட்டதாம்.

அவனுடைய பிரிவு அவளை எவ்வளவு கொடுமையாகத் தாக்குகிறது, அவள் எவ்வளவு மென்மையானவள் என்றெல்லாம் இதை விட அழுத்தமாகச் சொல்ல இயலாது! அதற்கு உதவும் சுட்டெழுத்து "உ" (உவக்கண்) நம் மொழியின் அழகு / சிறப்பு!

app_engine

Posts : 10097
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை - Page 10 Empty Re: குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை

Post  app_engine Fri May 04, 2018 8:58 pm

#1186
விளக்கற்றம் பார்க்கும் இருளேபோல் கொண்கன்
முயக்கற்றம் பார்க்கும் பசப்பு


சென்ற குறளைப்போன்ற அதே உயர்வு நவிற்சியில் எழுதப்பட்ட இன்னொன்று.

அதாவது, காதலனின் தழுவல் இளகிய உடனேயே பெண்ணின் மேனியில் பசலை வந்து விடுமாம்.

நடைமுறையில் அப்படியெல்லாம் வராது என்பதே உண்மை. சொல்லப்போனால், எவ்வளவு உயிருக்குயிராகக் காதலிப்போரும் 24 மணி நேரமும் தழுவிக்கட்டிக்கொண்டே இருக்க இயலாது. Laughing ஆக, இது உயர்வு நவிற்சி என்பதில் ஐயமில்லை. என்றாலும், அவளது இழப்பு குறித்த உணர்வு எவ்வளவு விரைவாக வருகிறது என்று தெரிவிப்பதில் கவிஞர் பெரும் வெற்றி அடைகிறார் என்பதில் மாற்றுக்கருத்து இருக்காது!

அற்றம் = சோர்வு, நெகிழ்வு, முடிவு, அழிவு (இங்கே நெகிழ்வு / சோர்வு என்ற பொருளில்)
கொண்கன் = கணவன் (கொச்சை மொழியில் "கொங்கன்" என்று வருவது இது தானோ? Laughing )

விளக்கற்றம் பார்க்கும் இருளேபோல்
விளக்கு சோர்வடைந்த (அணைந்த) உடனே வரப்பார்க்கும் இருளைப்போல்

கொண்கன் முயக்கற்றம் பார்க்கும் பசப்பு
கணவனின் தழுவல் நெகிழ்ந்த (சோர்ந்த) உடனேயே பசப்பு வரப்பார்க்கிறது

அருமையான உவமை - பெண்ணுக்கு அவளது கணவனின் தழுவல் & நெருக்கம் (உடலளவில் என்று மட்டுமல்ல மனதளவில் என்று கொள்ள வேண்டும்) வாழ்வில் ஒளி தரும் விளக்குப் போன்றது. அது விலகினால் சூழும் இருள் போல வாழ்வில் துயரம் வரும் / துன்பம் வரும் - அவ்வழியே பசலை நோய் படரும்.

இருவருக்கும் நெருக்கம் எவ்வளவு தேவை என்று அறிவுறுத்தும் பாடல். ஆக மொத்தம் இந்த அதிகாரம் முழுவதுமே நெடும் பிரிவு கூடாது என்று காதலன்-காதலி (கணவன்-மனைவி) இருவருக்கும் அறிவுறுத்தும் பாடல்கள் என்பது புரிந்து கொள்ள வேண்டிய செய்தி!

app_engine

Posts : 10097
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை - Page 10 Empty Re: குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை

Post  app_engine Mon May 07, 2018 9:05 pm

#1187
புல்லிக் கிடந்தேன் புடைபெயர்ந்தேன் அவ்வளவில்
அள்ளிக்கொள்வற்றே பசப்பு


இந்தப்பசலையை வைத்துக்கொண்டு வள்ளுவர் செய்யும் விளையாட்டுக்கள் (உயர்வு நவிற்சிகள்) - அட அட!

இந்தக்குறளில் மிகைப்படுத்தலின் உச்சத்துக்குச் செல்கிறார்!

அதாவது, கட்டிப்பிடித்துக்கொண்டு இருவரும் கிடக்கையில் (உறக்கமோ அல்லது வேறேதோ காரணத்தால்) சற்றே அகன்றாளாம் - உடனே பசலை பிடித்து விட்டதாம் Laughing

புல்லிக் கிடந்தேன் புடைபெயர்ந்தேன்
(அவரைத்) தழுவிக்கொண்டு படுத்திருந்தேன். பக்கத்தில் சற்றே விலகினேன் (அகன்று விட்டேன்).

அவ்வளவில் அள்ளிக்கொள்வற்றே பசப்பு
உடனேயே பசலை என் உடல் முழுவதும் அள்ளிக்கொண்டு பரவி விட்டது!

தலைவைனோடு எப்போதும் மிக நெருக்கத்தில் இருக்க வேண்டும் என்ற பெண்ணின் ஆவலை இப்படியாக மிகையுணர்வுடன் சொல்லும் கவிதை என்று புரிந்து கொள்கிறோம். சற்றளவும் அகலுதல் அவளுக்கு மன அழுத்தமும் நோயும் தரவல்லது என்று பொருள்.

மற்றபடி, புல்லுதல் என்ற சொல்லுக்குப் புணர்ச்சி என்ற பொருளும் உள்ளதாக அகராதி சொல்கிறது. அதைக்கொண்டு பார்த்தால், இருவருக்குமான உறவில் "பெயர்ச்சி" (பிரிவு) ஏற்பட்டால் அது உடல்நலத்துக்குக் கேடு என்று சொல்வதாகவும் எடுத்துக்கொள்ளலாம்.

இருவருக்கும் ஒப்புதலும் மேலும் / அல்லது தவிர்க்கமுடியாத காரணங்களும் இல்லாவிடில் கூடல் இன்றி வாழ்வது இணைகளுக்கு ஏற்றதல்ல!

app_engine

Posts : 10097
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை - Page 10 Empty Re: குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை

Post  app_engine Wed May 09, 2018 12:31 am

#1188
பசந்தாள் இவள் என்பது அல்லால் இவளைத்
துறந்தார் அவர் என்பார் இல்


குறிப்பிடத்தக்க குறள் - இருபாலார் குறித்த எந்த ஒரு துன்ப நிலையிலும் (குறிப்பாக உடல் அளவிலான துன்பங்கள்) இழுக்கு / பழி வந்து சேருவது பெண்ணுக்குத்தான் என்ற கொடுமையைச் சுட்டிக்காட்டும் செய்யுள் என்றே சொல்லலாம்.

பொதுவாக எல்லோருக்கும் தெரிந்த ஒன்று - உடல் அளவில் உறவு கொண்டு பின்னர் காதலன் ஏய்த்து விட்டுப்போனால் அங்கே கரு உண்டாதல் வழியாகப் பெண்ணுக்கே கடின நிலை.
(அது மட்டுமல்ல, "கற்பழிப்பு" என்ற பழிச்சொல் கொண்டு பொதுவெளியில் எவ்வளவு காலமாகப் பெண்கள் மீதான இழுக்கு சுமத்தப்பட்டு வந்தது! அண்மையில் தான் பாலியல் வன்முறை என்று மாற்றத்தொடங்கி இருக்கிறார்கள்).

அது ஒரு புறம் இருக்க, இந்தப்பசலை நோயும் ஆண்களுக்கு ஏன் வந்து தொலைப்பதில்லை? ஏமாற்றியவன் அவன் - துன்பம் பெறும் உடலோ பெண்ணுடையது.

குறளில் அவள் இந்த மனக்குறையைச் சொல்லிப்புலம்புகிறாள் :

பசந்தாள் இவள் என்பது அல்லால்
(ஆணுக்காக ஏங்கி ஏங்கி) இவளுக்குப் பசலை நோய் வந்து விட்டது என்று சொல்லுவார்களேயல்லாமல்
(பெண்ணைக் குறை சொல்லுவார்களேயொழிய)

இவளைத்துறந்தார் அவர் என்பார் இல்
"அவர் இவளை விட்டு விட்டு (ஏமாற்றிவிட்டு) ஓடிவிட்டார்" என்று சொல்வோர் யாருமில்லை!

கற்பியல் என்ற இந்த இயலில் மட்டுமாவது கொஞ்சம் பெண்ணின் மனநிலையில் இருந்தும் வள்ளுவர் பேசுகிறார் என்பது சற்றே ஆறுதலாக, "அப்பாடா" என்று இருக்கிறது!


app_engine

Posts : 10097
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை - Page 10 Empty Re: குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை

Post  app_engine Wed May 09, 2018 6:32 pm

#1189
பசக்கமன் பட்டாங்கென் மேனி நயப்பித்தார் 
நன்னிலையர் ஆவர் எனின்

மேலோட்டமாகப் படித்தால் சாபம் இடுவது போன்று தோன்றினாலும், உண்மையில் "எங்கிருந்தாலும் வாழ்க" என்ற ஒலியில் எழுதப்பட்டிருக்கும் குறளோ என்று தோன்றுகிறது. (குறிப்பாக, உரையாசிரியர்களின் விளக்கங்களைப் பார்க்கையில்).

மனஅழுத்தத்தில் / நோயில் இருக்கும் தலைவி பேசுவது என்பதால் எப்படி வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளலாம்.

நயப்பித்தார் என்ற சொல்லுக்கு "பிரிவுக்கு என்னை உடன்படச்செய்தவர்" என்று கூட்டிச்சேர்ப்பு விளக்கங்கள் கிட்டத்தட்ட எல்லா உரைகளிலும் இருக்கின்றன. என்றாலும், பிரிவு என்று நேரடியாக இல்லாததால் அப்படி மட்டுமே விளக்க வேண்டுமென்றில்லை.

நயப்பித்தல் = விரும்பும்படி செய்தல், உடன்படச்செய்தல், மலிவாக்குதல், பயன்படுத்துதல் 

இந்த நான்கு பொருள்களில் எதை வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளலாம். அப்படியாக, இந்தக்குறளுக்கு இருவகை (நேர்மறை / எதிர்மறை) விளக்கங்கள் கொடுக்க முடியும் Wink

நயப்பித்தார் நன்னிலையர் ஆவர் எனின்
பிரிவுக்கு உடன்படச்செய்த காதலர் (அல்லது, என்னை விரும்பச்செய்து பயன்படுத்தி மலிவாக்கியவர்) நல்ல நிலையை அடைவார் என்றால் 

பசக்கமன் பட்டாங்கென் மேனி
என் மேனி பசலை பட்டே கிடக்கட்டும் 

இந்தப்பசலை என்பதை இரண்டு வழிகளில் எடுத்துக்கொள்ளலாம் :

1. "அவர் நன்றாக இருப்பார் என்றால் நான் எக்கேடு கேட்டாலும் பரவாயில்லை" என்று சொல்லும் உயிர்ப்பலி எண்ணம்

2. எனக்கு இவ்வளவு தீங்கிழைத்தவர் நன்றாக இருக்க முடியுமா? அப்படி நேர்ந்தால், நீதி என்று ஒன்று உலகில் இல்லை - நான் பசலை பிடித்துச் செத்துப்போகிறேன்.

app_engine

Posts : 10097
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை - Page 10 Empty Re: குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை

Post  app_engine Thu May 10, 2018 10:41 pm

#1190
பசப்பெனப் பேர்பெறுதல் நன்றே நயப்பித்தார் 
நல்காமை தூற்றார் எனின்

சென்ற குறளில் நான் கண்ட "இரட்டை விளக்க நிலை" தெளிவாகவே இங்கே இல்லை Smile

இங்கே "நயப்பித்தார்"  என்பது "பிரிவுக்கு உடன்பட வைத்த காதலர்" என்று தான் பொருள் படுகிறது. ஏனென்றால் இங்கே தெளிவாகவே "நல்காமை தூற்றார்" என்று தன்னுடைய (முன்னாள்) காதலருக்கு எல்லார் முன்னிலையிலும் உள்ள புகழ் கெடக்கூடாது, தன பசலையைக் குறித்து வேண்டுமானாலும் மற்றவர்கள் எள்ளட்டும் என்று உயிர்ப்பலி மனநிலையில் பெண் இருப்பது தெளிவு!

இது போன்ற குறள்கள் படிக்கையில் நாம் ஒரு வேளை புரிந்து கொள்ளலாம் "காதல் முறிவினால் தற்கொலை" என்பது போன்ற செய்திகள் கண்டு ஏன் வியக்க வேண்டியதில்லை என்று Sad

நயப்பித்தார் நல்காமை தூற்றார் எனின்
பிரிவுக்கு என்னை உடன்படச்செய்த என் காதலரை அன்பற்றவர் என்று ஊரார் தூற்ற மாட்டார்கள் என்றால் 
(அவரது பெயருக்கும் புகழுக்கும் குறைவு வராதென்றால்)

பசப்பெனப் பேர்பெறுதல் நன்றே
பசலை பிடித்தவள் என்ற பெயர் எனக்குக்கிடைப்பது நல்லது தான்

அதாவது, "எனக்கு இழிவு வந்தாலும் அவருக்குப் பழி வர வேண்டாம்" என்கிறாள் பெண். 

இப்படித்தான் பெண்கள் எண்ணிக்கொள்ள வேண்டும் என்று சமூகம் விரும்புகிறதா என்ற கேள்வியும் எழாமல் இல்லை.  

தனிப்பட்ட விதத்தில் இந்நிலையில் எனக்கு ஏற்பு இல்லை. அவனுக்குப் பழி வர வேண்டும் என்றல்ல, இவளுக்கு இழிவு வருதல் கூடாது என்பதே என் கருத்து. 

அதற்கும் மேலாக, விட்டுப்பிரிந்தவனை நினைத்துப் பசலை பிடித்துக் கிடப்பதை விட "செய்ய இன்னும் ஆயிரம் உண்டு வாழ்வில்" என்று முன்னோக்கிச் செல்வது தான் பெண்ணுக்கு உகந்த நிலை என்பேன்!

app_engine

Posts : 10097
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை - Page 10 Empty Re: குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை

Post  app_engine Fri May 11, 2018 8:45 pm

#1191
தாம்வீழ்வார் தம்வீழப் பெற்றவர் பெற்றாரே
காமத்துக் காழில் கனி

(காமத்துப்பால், கற்பியல், தனிப்படர் மிகுதி அதிகாரம்)

"தனிப்படர் மிகுதி = தனக்கே மிகுந்த துன்பம்" என்று பொருள் சொல்கிறார்கள். (அதாவது, பெண்ணுக்கு - மிகச்சரியான உண்மை).

தொன்றுதொட்டு நாம் கேட்டு வருகிறபடி, முதலில் காதலிப்பதும், முடிந்தால் உடலளவிலும் உறவு கொள்வதும் பின்னர் "கம்பி நீட்டி விட்டு ஓடுவதும்" (அதாவது, பிரிந்து விடுவதும்) - அதற்குப்பிறகு மலர்மலராய்த் தாவும் வண்டு போல அடுத்த பெண்ணுக்கு வலை வீசுவதும் ஆண்கள் செய்திருப்பவை!

வரலாறுகளில் மட்டுமல்ல, நம்முடைய அண்டை அயலிலும் காணும் ஒன்று.

அப்படியாக, பெண்ணுக்குத்தான் "தனிப்படர்மிகுதி" என்ற சொல் பொருந்தும். பசலை பிடித்து நோய்ப்பட்டது குறித்த அதிகாரத்துக்கு அடுத்து வருவதால் இது பெண்ணின் உணர்வுகள் கொண்டு எழுதப்பட்டதாகவே இருக்கும் என்று எதிர்பார்க்கிறேன்.

முதல் குறள் அப்படிப்பட்ட ஒரு தனிப்படர் குறித்த புலம்பல் தான்!

தாம்வீழ்வார் தம்வீழப் பெற்றவர்
தாம் யாரை விரும்பினோமோ அவரே நம்மை விரும்பும் நிலை பெற்றவர்கள்
(நான் காதலித்த ஆண் என்னைக்காதலிக்கும் நிலை கிடைத்தால்)

காமத்துக் காழில் கனி பெற்றாரே
காதலில் / காமத்தில் பழச்சுளை போன்று (கொட்டை இல்லாத கனி போன்று) முழு இன்பம் பெற்றவர்கள்!  
காழ் = விதை / கொட்டை

விதை இல்லாத பழம் / கொட்டை நீக்கிய பழம் (சுளை) என்பது ஆகச்சிறந்த சுவையுடையது / தொந்தரவு இல்லாமல் உண்ணத்தக்கது என்பதில் மாற்றுக்கருத்து இருக்காது. இப்போதெல்லாம் மரபியல் மாற்றங்கள் வழியாகக் கொட்டையில்லாத கனிகளை விளைச்சலிலேயே செய்வது இதற்குத்தானே?

அப்பேர்ப்பட்ட - ஒரு இடைஞ்சலுமில்லாத - சுவை / இன்பம் எப்போது பெண்ணுக்குக் கிடைக்கும்? யார் யாரோ ஆண்கள் அவள் பின்னால் அலைவதில் இல்லை. அவள் யாரை விரும்பினாளோ அவரே அவளை விரும்பினால் தான் அத்தகைய சுவை.

இந்தக்கருத்து ஏன் இந்த அதிகாரத்தில்?

அப்படிப்பட்ட ஆண் அவளை விட்டுவிட்டுப் போய் விட்டான் - விருப்பமில்லை என்று தெரிவித்து அழ வைத்து விட்டுப் பிரிந்து விட்டான். "தனிப்படர்மிகுதி" அதன் விளைவு தான். (அவனுக்கு இல்லை துன்பம் - அவளுக்கு இல்லை இன்பம் எனும் நிலை).

எனவே பாடிப்புலம்புவதாக வள்ளுவர் எழுதுகிறார்!

app_engine

Posts : 10097
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை - Page 10 Empty Re: குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை

Post  app_engine Mon May 14, 2018 8:51 pm

#1192
வாழ்வார்க்கு வானம் பயந்தற்றால் வீழ்வார்க்கு 
வீழ்வார் அளிக்கும் அளி

தலைவன் பிரிந்து சென்று விட்ட துன்ப நிலையில் "வானம் பார்த்த நிலம்" போல வறண்டு கிடக்கும் வாழ்வு நிலை பெண்ணுக்கு. 
(சில பல தமிழ்த்திரைப்பாடல்கள் இக்கருத்தில் உள்ளது நினைவுக்கு வரலாம் - அவையெல்லாம் வள்ளுவர் வழியில் தான் என்று இதைப்படிக்கும்பொழுது தெரிந்து கொள்கிறோம்)

வீழ்வார்க்கு வீழ்வார் அளிக்கும் அளி
விரும்புபவருக்கு (காதலிக்கும் பெண்ணுக்கு) அவரது விருப்பமானவர் (காதலர்) காட்டும் அன்பு 
(அளி = அன்பு)

வாழ்வார்க்கு வானம் பயந்தற்றால்
உயிர் வாழுவோருக்கு வானம் மழை பொழிவது போன்றதாகும் 

அவனது அன்புக்காக அவள் ஏங்கி நிற்கும் நிலை மிகத்தெளிவாக விளக்கும் உவமை. அதாவது, அன்பு  கிடைக்காவிடில் மழையில்லா நிலத்தவர் போல வாடி, வறண்டு அழிந்து போவேன்!

சூழலை வைத்து மட்டுமே இது பெண்ணின் நிலை என்று சொல்கிறோம். நேரடியாகக் குறளை விளக்க முனைந்தால் இரு பாலாருக்கும் பொருத்தலாம் தான்!  (வீழ்வாருக்கு வீழ்வார் - ஆணுக்கும் பெண்ணுக்கும் பொருந்தும்)

app_engine

Posts : 10097
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை - Page 10 Empty Re: குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை

Post  app_engine Tue May 15, 2018 8:58 pm

#1193
வீழுநர் வீழப்படுவார்க்கு அமையுமே 
வாழுநம் என்னும் செருக்கு

"வாழுநம்" - இது எதிர்காலமா இல்லை எந்தக்காலம் என்ற சின்னக்குழப்பம் உரையாசிரியர்களுக்கு நடுவில் இருப்பது வெவ்வேறுபட்ட கருத்துக்களைப்பார்க்கையில் தெரிகிறது.

அதிகாரத்தின் அடிப்படையில் பார்த்தால் இது "எதிர்மறைக்காலம்" என்று கொள்ளலாம். (அதாவது, ஒருபோதும் நடக்க இயலாத - வரவே வராத காலம்). வேறு யார் யாருக்கோ கிடைத்ததும் தனக்கு அமையாததுமான ஒன்றைக்குறித்துப் புலம்புவதாகவும் கொள்ளலாம்.

வீழுநர் வீழப்படுவார்க்கு அமையுமே
(தான்) விரும்பினவரால் விரும்பப்படுபவருக்கு (மட்டுமே) அமையும்

வாழுநம் என்னும் செருக்கு
"வாழ்கிறோம்" (அல்லது "வாழுவோம்") என்று சொல்லத்தக்க பெருமை.

இங்கே "வாழ்வு" என்பது "மெய்யாகவே சிறப்பான வாழ்வு" என்று பொருள்படுகிறது. (வெறும் உயிர்வாழ்வு அல்ல என்பது தெளிவு)

இனி இங்கே கவிதை பாடும் காதலியின் கதைக்கு வருவோம். இப்படி அவள் பாடுவதன் பின்னணி என்ன? இரன்டு வகையில் விளக்கலாம் :

1. நான் அவரை விரும்பினாலும் இன்று அவர் என்னை விரும்பாமல் பிரிந்து விட்டார் - அவ்வளவு தான் என் வாழ்க்கை. இத்தோடு எனக்கு எல்லாம் முடிந்தது. இனித்துன்பமும் துயரும் தான் மிச்சம். மெய்யான வாழ்வு "வீழுநர் வீழப்படுவாருக்கு"த்தானே, எனக்கு இல்லையே Sad

2. இன்று பிரிந்து சென்றாலும், என்றாவது அவர் என்னை விரும்பி மீண்டும் வருவார். அன்று எனக்கு "வாழுநம் என்னும் செருக்கு" மீண்டு விடும்.

app_engine

Posts : 10097
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை - Page 10 Empty Re: குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை

Post  Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 10 of 16 Previous  1 ... 6 ... 9, 10, 11 ... 16  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum