Ilayaraja and Beyond
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை

3 posters

Page 7 of 16 Previous  1 ... 6, 7, 8 ... 11 ... 16  Next

Go down

குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை - Page 7 Empty Re: குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை

Post  app_engine Thu Dec 07, 2017 7:42 pm

#1098
அசையியற்கு உண்டாண்டோர் ஏஎர் யான் நோக்கப்
பசையினள் பைய நகும்


அசையியல் / பசையினள் என்று எதுகைகள் வந்து விழுகின்றன பெண்ணை விவரிக்க Smile

இனிமையான இவற்றின் பொருளும் சுவையானவை!

அசையியல் : மெல்லிய / மெலிந்த தோற்றமுள்ள ("நுடங்கிய" இயல்புடைய என்கிறது அகராதி)

பசையினள் : அன்பு கொண்ட / பரிவுள்ள / நட்புணர்வு காட்டும் பெண் (பசை ஒட்டிக்கொள்ளும் என்பது தெரிந்தது தானே?)

ஓசைச்சுவையுள்ள இந்தக்குறளில் மகிழ்ச்சி தரும் இன்னொரு சொல் :  இன்றும் நாம் பேச்சு வழக்கில் பயன்படுத்தும் "பைய" (மெதுவா / மெல்ல என்று பொருள்) Smile

இந்தக்குறளுக்கு முன் குறள்களில் பார்வைக்கும் / பேச்சுக்கும் முரண் காட்டிக் கொஞ்சம் விளையாடிப்பார்க்கும் பெண்ணாகத் தோன்றியவள், இப்போது அன்பும் பரிவும் காதலும் கொண்டு மென்மையோடு இருக்கிறாள்.

"ஐயோ பாவம், இவனோடு விளையாடியது போதும்" என்பதாலோ அல்லது "இதற்கு மேலும் சுற்றியுள்ளவர்களுக்காக நடிக்க வேண்டியதில்லை" என்ற நிலைமை வந்ததாலோ தெரியாது. எப்படியானாலும், அவள் ஒருவழியாகப் "பசை" போல ஒட்டிக்கொள்ளத் தொடங்கி விட்டாள் Wink

யான் நோக்கப்பசையினள் பைய நகும்
நான் நோக்கும் போது அன்பு கொண்ட (அல்லது பரிவுணர்வு / நட்போடு) அவள் மென்மையாகச் சிரிப்பாள்

அசையியற்கு உண்டாண்டோர் ஏஎர்
மெல்லிய இயல்புடைய (மென்மையான அல்லது மெலிந்த) அவளுக்கு அப்போது ஒரு (கூடுதல் / புதிதான) அழகு உண்டு

நட்போடு பையனைப்பார்த்து மெல்லியாள் மெல்லச்சிரித்ததும் அவன் கிறுகிறுத்துப்போகிறான் என்று பொருள் Smile

அதாவது, அப்போது அவன் அவளிடத்து ஒரு புது வனப்பை / அழகை / பொலிவை / தோற்றத்தைக்காண்கிறான்!  (ஏர்)

app_engine

Posts : 10099
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை - Page 7 Empty Re: குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை

Post  app_engine Fri Dec 08, 2017 7:20 pm

#1099
ஏதிலார் போலப் பொதுநோக்கு நோக்குதல்
காதலார் கண்ணே உள


மீண்டும் சூழல் கருதி நடிக்கும் தன்மைக்கு - அதாவது சென்ற குறளில் முன்னாள் அடியெடுத்து வைத்த காதலர்கள் இங்கே பின்வாங்குகிறார்கள் Embarassed

பொது வெளியில் "எங்களுக்குள் ஒன்றும் இல்லை" என்பது போன்ற நடிப்பு காதலர்களுக்கு அன்றும் இன்றும் தேவையாக இருக்கும் கடினமான சூழலை மீண்டும் வலியுறுத்தும் பாடல்.

அப்படி மற்றவர்களை ஏய்க்கும் நிலைமை வேறு பல நாடுகளில் இன்று இல்லை என்பதை அவர்கள் வெளிப்படையாகச் செய்யும் செயல்கள் மூலம் காண இயலும். தமிழ்நாட்டின் தற்போதைய நிலைமை எப்படி என்று தெரியவில்லை - 30 ஆண்டுகளுக்கு முன் இருந்த நிலை கண்டிப்பாகத் திருக்குறளில் சொல்வது போலத்தான். (ஒரு வேளை வேறுபட்ட சாதிக்குழுக்களில் இருந்து வரும் காதலர்களுக்கு இப்போதும் அதே போன்ற நெருக்கடி இருக்கலாம்).

ஏதிலார் போலப் பொதுநோக்கு நோக்குதல்
அறிமுகமற்றவர் போலப் பொதுவான விதத்தில் நோக்குதல்
(ஒருவருக்கொருவர் பழக்கம் இல்லாதவர் போல நடித்தல்)

காதலார் கண்ணே உள
காதல் கொண்டவர்களிடம் மட்டும் இருக்கும் ஒரு பண்பாகும்
(உள்ளுக்குள் காதல் கொண்டு வெளியே அறிமுகம் அற்றவர் போல் காட்டிக்கொள்ளுதல்)

அது அவர்களது பிழையன்று - தற்காப்பு வித்தை Smile

மற்றபடி அவர்கள் கண்கள் தம்மில் தம்மில் குறிப்புகளைப் பரிமாறிக்கொண்டு தான் இருக்கும் என்பது நாமெல்லாரும் அறியாத ஒன்றல்ல.

சொல்லப்போனால், "கண்ணே உள" என்று வள்ளுவர் சொல்லுவதில் அது உட்பொருளாக ஒளிந்திருக்கிறது என்று எடுத்துக்கொள்ளலாம் Smile

app_engine

Posts : 10099
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை - Page 7 Empty Re: குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை

Post  app_engine Mon Dec 11, 2017 5:51 pm

#1100
கண்ணொடு கண்இணை நோக்கொக்கின் வாய்ச்சொற்கள் 
என்ன பயனும் இல

கண்கள் பேசும் மொழி குறித்த மிகச்சிறந்த குறள் Smile

நம் காலங்களில் திரைப்பாடல்களில் இதே கருத்து நிறைய முறை கேட்டிருக்கிறோம் என்பதை மறுப்பதற்கில்லை. காட்சிகளிலும் நூற்றுக்கணக்கான முறை பார்த்திருப்போம். 

என்றாலும், இதை நடைமுறையில் உணராதோர் விழியற்றவர் என்றே சொல்லி விடலாம். காதலர் ஒருவரை ஒருவர் பார்த்துக் குறிப்பு மொழியில் உரையாடும்போது இமைக்க மறப்பது இயல்பாகி விடும். 

நேரடியான பொருள் உள்ள குறள்:

கண்ணொடு கண்இணை நோக்கொக்கின்
(அவன்) கண்ணோடு (அவள்) கண்ணும் இணைந்து நோக்கத்தில் ஒத்து விட்டால் 

வாய்ச்சொற்கள் என்ன பயனும் இல
வாய்ச்சொற்கள் கொண்டு ஒரு பயனும் இல்லை (வீண்)

இதனைத் தலைகீழாகவும் புரிந்து கொள்ளலாம். 

வாய்ச்சொற்கள் என்ன வேண்டுமானாலும் சொல்லலாம். ("நீங்க யாரு? உங்களுக்கு என்ன வேணும்? இங்கே என்ன வேலை?" என்றெல்லாம் மிரட்டுவது போல் அவள் பேசலாம்). ஆனால் அவை உண்மையா இல்லையா என்பது கண்ணில் தான் தெரியும் Smile

கண்ணின் மொழி மெய்யானது, அதில் ஏய்ப்பு இருக்காது. அதில் இருவரும் ஒத்து விட்டால் அங்கே காதல். 

இனி வாய்மொழி தேவையில்லை - வீண்!

app_engine

Posts : 10099
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை - Page 7 Empty Re: குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை

Post  app_engine Fri Dec 15, 2017 10:50 pm

#1101
கண்டுகேட்டு உண்டுயிர்த்து உற்றறியும் ஐம்புலனும்
ஒண்தொடி கண்ணே உள

(காமத்துப்பால், களவியல், புணர்ச்சி மகிழ்தல் அதிகாரம்)

ஐம்புலன்களால் கிடைக்கும் சுவைகள் எல்லாம் ஒருங்கே பெண்ணிடம் உண்டு என்று ஆண் பாடும் கவிதை இந்த அதிகாரத்தைத் தொடங்கி வைக்கிறது.

புணர்ச்சி = சேருதல், கூடுதல், கலத்தல், கலவி ; அப்படியாக, இந்த அதிகாரம் ஆணும் பெண்ணும் ஒன்று கூடி மகிழ்வது குறித்தது. முதல் அதிகாரத்தில் பெண்ணால் தாக்கப்பட்டு, அதன் பின் கண்ணால் மொழி பேசி உரையாடி விட்டு இப்போது ஒட்டி உறவாடும் நிலைக்கு வந்து விட்டார்கள் என்று பொருள்.

ஒண் தொடி என்றால் நேரடியான பொருள் "ஒளிரும் வளையல்" (பளபளப்பான அணிகலன்).

என்றாலும் செய்யுள்களில் பெரும்பாலும் அது "பெண்" என்ற பொருளிலேயே வருவதாக அகராதி சொல்லுகிறது. (அதாவது, மினுமினுக்கும் வளை அணிந்த பெண் என்றோ, அழகு ஒளிரும் பெண் என்றோ எடுத்துக்கொள்ளலாம்).

கண்டுகேட்டு உண்டுயிர்த்து உற்றறியும்
கண்டும் கேட்டும் உண்டும் உயிர்த்தும் (மூச்சால் நுகர்வது) தொட்டும் அறியக்கூடிய

ஐம்புலனும் ஒண்தொடி கண்ணே உள
ஐம்புலன்களால் கிட்டும் இன்பங்களும் (சுவைகளும்) மிளிரும் வளையல் அணிந்த பெண்ணிடம் தான் உள்ளன

துய்த்து உணர்ந்து சொல்லுகிறார் புலவர் Wink

app_engine

Posts : 10099
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை - Page 7 Empty Re: குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை

Post  app_engine Wed Dec 20, 2017 4:36 am

#kuRaLinbam #குறள்இன்பம்

அறத்துப்பால் மற்றும் பொருட்பால் முழுவதும் pdf வடிவில் இங்கே:
http://www.mediafire.com/file/bqre2nj0z2r9h70/kural_inbam_aRam_poruL.pdf
http://www.mediafire.com/file/bqre2nj0z2r9h70/kural_inbam_aRam_poruL.pdf

கருத்துக்கள் எப்போதும் போல் வரவேற்கப்படுகின்றனSmile

app_engine

Posts : 10099
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை - Page 7 Empty Re: குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை

Post  app_engine Wed Jan 03, 2018 11:45 pm

#1102
பிணிக்கு மருந்து பிறமன் அணியிழை
தன்நோய்க்குத் தானே மருந்து


வள்ளுவர் அவ்வப்போது பயன்படுத்தும் "எதிரெதிராக இரண்டு" எனும் உத்தி இந்தக்குறளில் வருகிறது.

(என்றாலும் அதில் சிறிய மருத்துவ இயல் பிழை உண்டு - நாம் முன்னர் மருந்து குறித்த அதிகாரத்தில் பெரும்பாலும் உணவோடு தொடர்பு படுத்தியே அவர் எழுதினதைப்பார்த்தோம். நோய்க்கிருமிகள் குறித்த அறிவியல் வளர்ச்சியில்லாத காலத்தில் எழுதிய நூல் என்பதால் அப்படி. அதே கருத்து இங்கும் பிணி குறித்து வருகிறது. அதாவது, "பிணிக்கு மருந்து பிறமன்" என்பது தற்போது சரியல்ல - தடுப்பூசிகள் அதே கிருமி கொண்டே நோயை வெல்வது இக்காலத்தில்).

மற்றபடி, புணர்ச்சி மகிழ்தல் குறித்து அவர் எழுதியது மிகச்சரியே Smile பெண்ணால் வரும் நோய்க்கு மருந்தும் அவளே என்று சொல்லும் அழகான குறள் - நம் நாட்களில் இது திரைப்பாடல்களில் அவ்வப்போது வருவதைக்காண இயலும்.

பிணிக்கு மருந்து பிறமன்
(பொதுவாகப்) பிணிக்கு மருந்தாவது வேறு பொருட்கள்

அணியிழை தன்நோய்க்குத் தானே மருந்து
அணிகள் கொண்டு இழைத்தவளால் (நகை அணிந்த இந்தப்பெண்ணால்) வந்த நோய்க்கு இவள் தானே மருந்தாவாள்

அது சரி, பெண்ணால் என்ன நோய் வரும்?

காதல் / காமம் - அது ஒரு நோயாகப் பல நூல்களிலும் சொல்லப்படுவது அறிந்ததே.

ஏக்கம் தரும் உணர்வு, எப்போதும் அவளை நினைக்கும் ஒருவிதப்பைத்தியம் போன்ற மனநிலை. ஆம், காதல் என்பது மனநோய்.

அவளை அடைந்தால் (புணர்ந்து மகிழ்ந்தால்) தானே அது நீங்கும்? ஆகவே, அவள் தான் மருந்து என்கிறார் வள்ளுவர்.


app_engine

Posts : 10099
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை - Page 7 Empty Re: குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை

Post  app_engine Fri Jan 05, 2018 12:49 am

#1103
தாம்வீழ்வார் மென்றோள் துயிலின் இனிதுகொல்
தாமரைக் கண்ணான் உலகு


வெளிநாட்டில் வாழும் தமிழர்களுக்கு அவ்வப்போது "சொர்க்கமே என்றாலும் அது நம்மூரைப்போல வருமா?" என்ற ஒரு பாடல் வழியே ஏக்கத்தை உண்டாக்குவது இளையராசா வழக்கம். (இசைத்தட்டு வழியே மட்டுமல்ல, அவர் வெளிநாடுகளில் நிகழ்ச்சிகள் நடத்தும்போதும் இது தவறாமல் இடம்பெறுகிறது).

அது போன்ற ஒரு குறள் Wink பெண்ணின் தோளில் சாய்ந்து துயில்வதை விட தேவர்களின் வானுலகு இனிதல்ல என்கிறார்.

"தாமரைக்கண்ணான்" என்று இங்கே சொல்லப்படுபவர் திருமால் என்று உரைகள் விளக்குகின்றன. (தாமரை போன்ற கண்கள், தாமரையின் செந்நிறம் கொண்ட கண்கள் என்றெல்லாம் விளக்குகிறார்கள்.) அவர் வாழுவதாகச்சொல்லப்படும் உலகு - சொர்க்கம் / வானுலகு - என்றெல்லாம் புரிந்து கொள்ளப்பட வேண்டும்.

மு.க. உரை இதை நேரடியாக ஒத்துக்கொள்ளாவிட்டாலும், வள்ளுவர் அப்படிப்பட்ட ஒரு "இன்பமயமான" வேறுலகு (தேவர் உலகு) பற்றித்தான் சொல்கிறார் என்பதில் ஐயமில்லை.

இன்னொரு குறிப்பிடத்தக்க சொல்லாடல் "தாம் வீழ்வார்" - தாம் விரும்புகின்ற பெண் என்பது தான் இதற்குப்பொருள். என்றாலும், "தாம் வீழ்ந்து போன " (தன்னைக் "கவுத்திய") பெண் என்றும் நாம் விளையாட்டாக எடுத்துக்கொள்ளலாம்.

தாம்வீழ்வார் மென்றோள் துயிலின்
தாம் விரும்பும் பெண்ணின் மென்மையான தோளில் துயில்வதை விடவும்

தாமரைக் கண்ணான் உலகு இனிதுகொல்
தாமரை போன்ற கண்களை உடையவனின் உலகம் (திருமாலின் சொர்க்கம்) அவ்வளவு இனிதாகி விடுமா?  

அதாவது, மறுமை எல்லாம் கிடக்கட்டும் - இம்மையில் பெண்ணின் தோளில் துவளும் இன்பத்தை இப்போது துய்ப்போம் என்கிறார்.

app_engine

Posts : 10099
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை - Page 7 Empty Re: குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை

Post  app_engine Fri Jan 05, 2018 10:33 pm

#1104
நீங்கின் தெறூஉம் குறுகுங்கால் தண்ணென்னும்
தீயாண்டுப் பெற்றாள் இவள்


தீ நெருங்கினால் சுடும் - அகன்றால் குளிரும்.
(இன்று காலை எங்கள் ஊரில் 0 டிகிரி ஃபாரன்ஹீட், தீ இல்லையேல் இங்கு வாழ்வில்லை - உறைந்து போய் விடுவோம்!).

இயற்கைக்கு நேரெதிர் காதல். நீங்கினால் சுடும், நெருங்கினால் மனம் குளிரும் என்று சொல்லும் குறள் Smile குறிப்பாக, இங்கே "காதல் நோய் ஒரு வேறுபட்ட நெருப்பு" என்று சொல்லாமல் "பெண் வியக்கத்தக்க புது நெருப்பு" என்று சொல்லி ஆணின் பார்வை என்று வள்ளுவர் தெரிவிக்கிறார்.

நீங்கின் தெறூஉம் குறுகுங்கால் தண்ணென்னும்
நீங்கினால் சுடுவதும் நெருங்கினால் தண்மையாகக் குளிர்வதுமான (இயற்கைக்கு மாறான)

தீயாண்டுப் பெற்றாள் இவள்
(புதுமையான) இந்தத்தீயை இவள் எங்கிருந்து பெற்றாள்?

அப்படியாக, வள்ளுவர் காலம் முதலே "கோடையில் அவள் மார்கழி, குளிரில் கதிரொளி" என்னும் கருத்து இருக்கிறது என்று புரிந்து கொள்கிறோம் Smile

புணர்ச்சி மகிழ்தல் என்னும் அதிகாரத்தில் இக்கருத்து வருவதால், இரு உடல்கள் பற்றியது என்றும் புரிந்து கொள்ள வேண்டும். தலைவன் தலைவி சேர்ந்து மகிழும் வரை காதல் நோய் மனதையும், ஏன், உடலையும் கூடச்சுடும் என்பது கிட்டத்தட்ட "மருத்துவ உண்மை". Laughing

கூடிக்கலந்த பின்னர் அது (அப்போதைக்குத்) தணிந்து விடும் Embarassed


app_engine

Posts : 10099
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை - Page 7 Empty Re: குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை

Post  app_engine Mon Jan 08, 2018 11:09 pm

#1105
வேட்ட பொழுதின் அவையவை போலுமே
தோட்டார் கதுப்பினாள் தோள்


பெண்களை நம் நாளில் நடக்கும் நுகர்வோர் விளம்பரம் போல (அதாவது, கிட்டத்தட்ட) ஆக்கி விடும் ஒரு குறள். ஆண் என்ற மனநிலையில் இருந்து படித்தால் பெரிய குழப்பம் இருக்காது என்றாலும் பெண்கள் (குறிப்பாகப் பெண்ணியத்தில் கூடுதல் ஈடுபாடு உடையோர்) இதை எப்படிப்பார்ப்பார்கள் என்று தெரியவில்லை.

அதாவது, சிறு குழந்தைக்கு வேண்டும் போதெல்லாம் இனிப்பு கிடைத்தால் எவ்வளவு மகிழ்ச்சி உண்டாகுமோ அது போல் தான் தலைவனுக்குப் பெண்ணின் தோளை அணைப்பது என்கிறார் Wink

வேட்ட பொழுதின் அவையவை போலுமே
விரும்பும் நேரத்தில் என்னென்ன விரும்பினோமோ அவை (கிடைப்பது) போன்றதே

தோட்டார் கதுப்பினாள் தோள்
மலர் சூடிய கூந்தலை உடையவள் தோள் (சேர்ந்து அணைத்தல்)

தோட்டார் என்பதைத் தோட்டு +ஆர் என்று கொண்டால் மேற்சொன்ன பொருள் (மலரிதழ் சூடிய).

சில உரையாசிரியர்கள், தோள் + தாழ் என்று பிரித்து, "புணருகையில் தோள் வரை தாழும் கூந்தல்" என்கிறார்கள். (வெறுமென தோள் வரை தாழ்வது என்று சொல்ல வழியில்லை - கிட்டத்தட்ட எல்லா மகளிருக்கும் தோள் வரையாவது தாழ்ந்த கூந்தல் இல்லாமல் இருக்குமா? அதனால் 'புணருகையில்" என்று சேர்க்கிறார்கள்.)

எப்படி இருந்தாலும், இங்கே மையப்பொருள் பெண்ணின் தோள்சேர்ந்து அணைப்பது இன்பத்தின் ஊற்று - என்னென்ன விரும்புகிறோமோ அவற்றை எல்லாம் அப்போதே பெறுவது போன்ற இன்பம் என்கிறார்.

"கட்டிப்புடி" மருத்துவம் Laughing

app_engine

Posts : 10099
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை - Page 7 Empty Re: குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை

Post  app_engine Tue Jan 09, 2018 10:38 pm

#1106
உறுதோறு உயிர்தளிர்ப்பத் தீண்டலால் பேதைக்கு
அமிழ்தின் இயன்றன தோள்


பேதை என்ற சொல் சற்றே குழப்பம் தரும் ஒன்று.

5 முதல் 7 வயதுள்ள பெண் என்றோ அவ்வளவாக அறிவில்லாத (மடமையுள்ள , ஏமாறத்தக்க) பெண் என்றோ அகராதி சொல்வதை எடுத்துக்கொண்டால் வள்ளுவர் மீது சினம் வர வழியுண்டு.

அப்படியெல்லாம் பொங்காமல், "எளிமையான பெண்" என்று வைத்துக்கொண்டு இங்கே உள்ள அழகியலை நுகர்வோம் Wink

உறுதோறு உயிர்தளிர்ப்பத் தீண்டலால்
(இந்தப்பெண்ணைத்) தழுவும் போதெல்லாம் என் உயிர் தளிர்க்கும்படித் தீண்டுவதால்

பேதைக்கு அமிழ்தின் இயன்றன தோள்
பேதைப்பெண்ணுக்கு தோள் அமிழ்தத்தால் செய்யப்பட்டது (என்பேன்)

பசியால் சோர்ந்து சாகப்போவனுக்கு அமுதம் கிடைத்தால் உயிர் மீண்டு வரும். தண்ணீர் கிடைத்ததும் வறண்ட பயிர் துளிர்ப்பது போன்று உயிர் மீளும் நிலை.

இறப்பது போன்ற நிலையில் உள்ளவனுக்கு மீண்டும் உயிர் தருவது பேதைப்பெண்ணை அணைப்பது. ஆகவே அவளது தோள்கள் அமுதத்தால் ஆனவை என்கிறார் புலவர். (சாவு தரும் பசிக்கு உணவு என்றோ சாகாவரம் தரும் பாற்கடல் அமுதம் என்றோ எப்படி வேண்டுமானாலும் கொள்ளலாம்).

அருமையான உவமை!

app_engine

Posts : 10099
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை - Page 7 Empty Re: குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை

Post  app_engine Wed Jan 10, 2018 10:45 pm

#1107
தம்மில் இருந்து தமதுபாத்து உண்டற்றால் 
அம்மா அரிவை முயக்கு

"பெறுவதை விடக்கொடுப்பதிலேயே கூடுதல் மகிழ்ச்சி" என்பது ஈகைப்பண்பு உடையோர் உணர்ந்து அறிந்த ஒன்று.

இதற்கு முந்தைய குறள்களில் பெண்ணோடு புணர்தலை நமக்குக்கிட்டும் பொருட்களோடு (என்னென்ன வேண்டுமோ அவை கிடைப்பது போல், உயிர் மீண்டும் தரும் அமிழ்தம் போல் என்றெல்லாம்) ஒப்பிட்டு மகிழ்ந்த வள்ளுவர் இங்கே ஈகையால் வரும் மகிழ்வோடு ஒப்பிடுகிறார்.

தம் உழைப்பால் ஈட்டியதை மற்றவர்களோடு பகிர்ந்து உண்பது போன்ற மகிழ்ச்சி மாநிறப்பெண்ணை அணைப்பதால் கிடைக்கும் என்கிறார். (அம் மா அரிவை = (அம் மா அரிவை = அந்த மாநிறப்பெண், 20 முதல் 25 வயதினள்) 

அம்மா அரிவை முயக்கு
அழகிய (அந்த மாநிறமான) பெண்ணைத் தழுவுவது 

தம்மில் இருந்து தமது பாத்து உண்டற்றால்
தம் வீட்டில் இருந்து தமது (உழைப்பில் ஈட்டியதை) (மற்றவர்களுடன்) பகிர்ந்து உண்ணுவதைப் போன்று (இன்பம் தருவதாகும்)

மா என்பதை மாமை என்று சில உரைகள் சொல்வதைக்காணலாம். இதற்கு அழகு என்றும் மாந்தளிர் நிறம் என்று இரு பொருள்கள் அகராதி சொல்வதைக்காணலாம். அதனால் தான் இரு விதமான உரைகளும் காண்கிறோம். 

ஆக மொத்தம் பெண்ணோடு கூடும் இன்பம் மற்றவர்க்குப் பகுத்துண்ணும் அதே அளவு மகிழ்ச்சி தரும் என்று காதல் கொண்ட நிலையில் வள்ளுவர் உவமிக்கிறார்.

app_engine

Posts : 10099
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை - Page 7 Empty Re: குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை

Post  app_engine Thu Jan 11, 2018 10:36 pm

#1108
வீழும் இருவர்க்கு இனிதே வளியிடை 
போழப் படாஅ முயக்கு

போழ்தல் = பிளத்தல் / பிரித்தல் 

அப்படியாக, "வளியிடை போழப்படா" = காற்று இடையில் செல்லும் வண்ணம் பிரிக்காத நிலை Smile.

காதலன் காதலி அணைத்துக்கொள்ளும் போது தழுவல் அவ்வளவு இறுக்கமாக இருப்பதால் காற்று இருவருக்கும் ஊடே செல்ல இயலாது. (அவ்வளவு நெருக்கம் இருந்தால் தானே அது சரியான தழுவல்).

அப்படிப்பட்ட நெருக்கத்தைப் புகழும் குறள். 

சிறுவயதில் ஏதோ ஒரு வார இதழில் நான் படித்த "இந்தியப்பழமொழி" நினைவுக்கு வருகிறது : "அன்பு இருந்தால் புளிய மரத்து இலையில் இருவர் படுத்து உறங்கலாம்"  - உயர்வு நவிற்சி என்றாலும் எவ்வளவு அழகு என்று வியந்து பலரிடம் இதைப்பகிர்ந்திருக்கிறேன்.

வளியிடை போழப் படாஅ முயக்கு
காற்று இடையில் நுழைய முடியாத தழுவல் தான் 

வீழும் இருவர்க்கு இனிதே
(ஒருவரை ஒருவர்) விரும்பும் இருவருக்கு இனிமையானது

வீழும் = விழையும்

விருப்பம் / காதல் கூடும்போது இடைவெளி குறையும். இறுதியில் காற்றுப்புகவும் இடமிருக்காது என்பது தெரிந்தது தானே?

app_engine

Posts : 10099
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை - Page 7 Empty Re: குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை

Post  app_engine Fri Jan 12, 2018 10:22 pm

#1109
ஊடல் உணர்தல் புணர்தல் இவைகாமம்
கூடியார் பெற்ற பயன்


பொதுவாகக் காதலன்-காதலி இடையில் நடக்கும் தொடர்ச்சங்கிலி நிகழ்வுகளின் பட்டியல் இங்கே.

ஊடல் - உணர்தல் - புணர்தல் என்று அடுக்குமொழி நடையில் மேடைப்போச்சு போல் எளிதாகச்சொல்லி இருக்கும் குறள் Smile ஆக, இதைப்படித்துப்பொருள் புரிதல் கடினமல்ல.

நடைமுறை வாழ்வில் இதைக் காதலுற்ற பலரும் (அல்லது மணவாழ்வில் காதலோடோ அல்லாமலோ புகுந்தவர் எல்லோரும்) உணர்ந்திருப்பர் என்பது தான் இங்கே குறிப்பிடத்தக்கது. அதாவது, வாழ்வில் ஒரு முறையேனும் இந்தச்சங்கிலியில் சென்றோர் கோடிக்கணக்கில் இருப்பர் என்பது தான் இந்தக்குறளின் சிறப்பு!

அப்படியாக, இது ஒரு "மக்கள் குறள்"

ஊடல் உணர்தல் புணர்தல் இவை
ஊடுதல் (ஒருவருக்கொருவர் பிணங்குதல் அல்லது ஒருத்தர் மட்டும் சினந்து கொள்ளுதல் போன்றவை), உணர்தல் ("அது வேண்டாமே" என்று புரிந்து கொள்ளுதல்), புணர்தல் (அதன் பின்பு கூடுதல்) ஆகிய இவையெல்லாம்

காமம் கூடியார் பெற்ற பயன்
காதல் கைகூடி வாழ்வோர் பெரும் நன்மைகளாகும்

பலருக்கும் நன்கு அறிமுகமான கடைசிக்குறள் கிட்டத்தட்ட இதே பொருளில் தான். (ஊடுதல் காமத்துக்கு இன்பம், அதற்கின்பம் கூடி அணைத்தல்).

ஆக, இந்தக்குறள் படிப்போர் மனதில் தோன்றுவது : "வீட்டுக்கு வீடு வாசப்படி" Laughing



app_engine

Posts : 10099
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை - Page 7 Empty Re: குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை

Post  app_engine Fri Jan 12, 2018 11:04 pm

#1110
அறிதோறு அறியாமை கண்டற்றால் காமம்
செறிதோறும் சேயிழை மாட்டு


சேயிழை என்பதற்கான உரைகள் மலைக்க வைக்கின்றன Smile

மணக்குடவர் அப்படியே சேயிழை என்கிறார். சிறந்த இழை என்றும் நல்ல அணிகலன் என்றும் சொல்லும் உரைகள் உண்டு (செம்மை + இழை).

முக மாம்பழ மேனியில் அழகிய அணிகலன் என்கிறார் (எங்கிருந்து மாம்பழம் வந்தது என்று குழப்பமாக இருக்கிறது). பரிமேலழகர் சிவந்த இழை என்றும், முவ செந்நிற அணிகலன் என்றும் சொல்கின்றனர்.

என்றாலும் எல்லோரும் ஒத்துக்கொள்ளும் ஒன்று இது பெண்ணைத்தான் குறிக்கிறது என்பது! (அகராதியும் இந்தச்சொல்லை அவ்வாறே விளக்குகிறது).

பெண்ணோடு ஒவ்வொரு முறை கூடும்போதும் முன்பு அறிந்திராத புதுப்புது இன்பம் / சுவை கிட்டுகிறது என்று சொல்ல வரும் குறள் - அதற்கு அறியாமை அகற்ற ஒருவன் எடுக்கும் முயற்சிகளை (நூல்கள் கற்றல் போன்றவை) உவமையாகச் சொல்லுகிறார் வள்ளுவர். ஆகவே, "புணர்ச்சி என்பது இது வரை அறியாதிருந்த புதுமைகளை அறிவிக்கும்" என்று திரைப்படப்பாடல்கள் நாள்தோறும் சொல்வது எங்கிருந்து தொடங்கியது என்று விளங்குகிறது Smile

சேயிழை மாட்டு செறிதோறும்
செம்மையான அணிகள் பூண்ட பெண்ணிடம் சேரும் போதெல்லாம்

காமம்
காதல்

அறிதோறு அறியாமை கண்டற்றால்
(ஒன்றை) அறியும் போதெல்லாம் (அதுவரை இருந்த) அறியாமை குறித்து உணருவது போன்றே இருக்கிறது

அதாவது, கலவி = கல்வி என்று சொல்ல வருகிறார். ஆணுக்கு ஒரு பெண்ணிடம் அறிந்து கொள்ள எப்போதும் புதுமைகள் நிறைந்திருக்கின்றன என்றும் எடுத்துக்கொள்ளலாம்.

app_engine

Posts : 10099
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை - Page 7 Empty Re: குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை

Post  app_engine Wed Jan 17, 2018 12:36 am

#1111
நன்னீரை வாழி அனிச்சமே நின்னினும் 
மென்னீரள் யாம் வீழ்பவள்

(காமத்துப்பால், களவியல், நலம் புனைந்துரைத்தல் அதிகாரம்)

முதலில் பெண்ணால் தாக்குண்டான், காதலில் இருவரும் கண்களால் பேசி மகிழ்ந்தார்கள். தொடர்ந்து உடல்கள் இணைந்து தழுவி மகிழ்வதைக்கண்டோம்.

புணர்ச்சி மகிழ்தல் நிறைவேறிய பின்னர் வரும் அதிகாரம் இது. இங்கே தலைவன் தலைவியைக் குறித்து என்னவெல்லாம் புகழ்வான் என்று பார்க்கலாம் Wink

'மோப்பக்குழையும் அனிச்சம்' என்று விருந்தோம்பலில் வந்த மலர் இங்கே மீண்டும் வருகிறது. (மிகவும் மென்மையானது, முகர்ந்தாலே வாடி விடும் அளவுக்கு மெல்லியது என்று அங்கே சொல்லி, பார்த்தாலே வாடி விடும் விருந்தினர் அதிலும் மென்மையானவர்கள் என்று சொன்னது நினைவுக்கு வரலாம்).

இங்கும் கிட்டத்தட்ட அதே நிலை தான் மலருக்கு. அதாவது, அனிச்சம் மென்மையில் சிறப்பு என்றாலும் பெண் அதிலும் கூடுதல் மென்மையாக்கும் என்று வள்ளுவர் புகழும் செய்யுள். அனிச்சத்தை நினைத்தால் பாவமாக இருக்கிறது. Laughing

நன்னீரை அனிச்சமே வாழி
நல்ல இயல்பு (மென்மை) உடைய அனிச்ச மலரே, நீ வாழ்க!

யாம் வீழ்பவள்
நான் விரும்பும் பெண் (என் காதலி)

நின்னினும் மென்னீரள்
உன்னை விடவும் மென்மையானவள் (தெரியுமா?) 

இப்படி இயற்கையில் காணும் எல்லாவற்றோடும் பேசுவது, அவற்றோடு தம் இணையை ஒப்பிடுவது என்று ஒரு பறக்கும் நிலையில் காதல் களிப்பில் உள்ளவர்கள் சுழலுவது இயல்பே Smile தலைவியோடு கூடி மகிழ்ந்த தலைவன் இப்படியெல்லாம் பேசாமல் / பாடாமல் இருந்தால் தான் அது வியப்புக்குரியது.

app_engine

Posts : 10099
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை - Page 7 Empty Re: குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை

Post  app_engine Thu Jan 18, 2018 12:17 am

#1112
மலர்காணின் மையாத்தி நெஞ்சே இவள் கண் 
பலர்காணும் பூவொக்கும் என்று


முன் குறளில் நாம் கண்டது போன்றே தலைவன் ஒரு "பறக்கும் உணர்வில்" இருக்கிறான். பெண்ணால் உறுத்தப்பட்டு, காதலில் விழுந்து, கண்களால் பேசி, உடல்களும் தழுவிப்புணர்ந்த நிலை. 

கால்கள் தரையில் இல்லை Smile மனம் காணும் எல்லாவற்றிலும் அவளைக்கண்டு களிக்கிறது! பூவோ புல்லோ, இலையோ கிளையோ, செடியோ கொடியோ - எதைக்கண்டாலும் அவளைக்குறித்துக் கவிதை பாடி அலைகிறான்.

அந்த உன்மத்த நிலையை அழகாகச் சொல்லும் திருக்குறள் இது!

மலர்காணின்
மலரைக்கண்டாலே
(அழகான எந்தப்பூவைப்பார்த்தாலும்) 

இவள் கண் பலர்காணும் பூவொக்கும் என்று
"என்னவளது கண் பலரும் காண்கின்ற இந்தப்பூவைப்போன்றே இருக்கிறதே" என்று

மையாத்தி நெஞ்சே
மயங்கிக்குழம்புகிறாயே நெஞ்சே!

பையன் குழப்பத்தில் என்றாலும் கவிதையில் சிறப்பு என்பதில் மாற்றுக்கருத்தில்லை! உணர்வை அழகாகப் படம் பிடிப்பது மட்டுமல்ல, இங்கே மலரோடு உவமையும் பொருத்தமாக வந்து விழுகிறது!

என்றாலும், "மயக்கம் / குழப்பம்" (மையாத்தல்) என்று ஏன் சொல்கிறார்? சில காரணங்கள் உரையாசிரியர்கள் சொல்கிறார்கள்.

1. அவள் கண் நான் மட்டும் பார்ப்பது - மலரோ பலரும் காண்பது, ஏன் இரண்டையும் போட்டுக்குழப்பிக்கொள்கிறாய் நெஞ்சே?

2. கண்ணும் பூவும் நிறத்தால் ஒரே போல் இருக்கலாம் (கருங்குவளை) - ஆனால் இரண்டின் பண்புகளும் வேறு வேறு அல்லவா? அதையும் இதையும் ஏனப்பா போட்டுக்குழப்பிக் கொள்கிறாய்?

அதாவது, மயக்கம் = ஒப்பிட இயலாத இரண்டை ஒப்பிட்டுக் குழம்பிய நிலை Smile 

வேறு விதத்தில் பார்த்தால் இப்படி :  "அவளது கண்களை நேரிட்டுக்கண்டு அறிந்த எனக்குத்தானே தெரியும் - பலரும் காணும் இந்த மலர்கள் அவளது கண்களோடு ஒப்பிட அப்படியொன்றும் பெரிதில்லை என்று"!

app_engine

Posts : 10099
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை - Page 7 Empty Re: குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை

Post  app_engine Thu Jan 18, 2018 10:30 pm

#1113
முறிமேனி முத்தம் முறுவல் வெறிநாற்றம்
வேலுண்கண் வேய்த்தோளவட்கு


உவமைகள் நிறைந்து பெண்ணின் "நலம் புனைந்து உரைக்கும்" பாடல்.

புனைவு என்றாலே கொஞ்சம் மிகைப்படுத்தல் இருக்கக்கூடும் தான். அது போன்றே உவமை / உருவகம் என்பனவும் 100% ஒத்துப்போக வேண்டும் என்றெல்லாம் அடம் பிடிக்கக்கூடாது.

அவ்விதமான நேர்மறையான மனநிலையில் படித்தால் இந்தப்பாடலின் அழகை உணர முடியும் Wink

முறிமேனி
(இளந்)தளிர் போன்ற மேனி
(மென்மைக்காக அல்லது புத்துணர்வு தரும் இளமைக்காக இப்படிச்சொல்லுகிறார் என்று நினைக்கிறேன்)

முத்தம் முறுவல்
முத்துப்பற்கள்
(மிகப்பொருத்தமான, நேரடியான உவமை)

வெறிநாற்றம்
கூடலுக்குப்பின்னான நறுமணம்
(இதை இயல்பான மணம், மயங்கவைக்கும் நறுமணம் என்றெல்லாமும் உரைகள் சொல்கின்றன. "புணர்ச்சிக்குப் பின் உள்ள மணம்" என்கிறது அகராதி)

வேலுண்கண்
மையெழுதிய வேல் விழி

வேய்த்தோளவட்கு
(இவற்றோடு) அவளுக்கு மூங்கில் போன்ற தோளும் (உண்டு)
மெலிவு, உறுதி, வழுவழுப்பு என்று மூங்கிலுக்குப் பல அழகுகள் உண்டு, பெண்ணின் தோளுக்கு அது பொருத்தமான உவமை தான்!

அப்படியாக, இது பெண்ணை வகைப்படுத்தும் ஒரு பட்டியல்.

நூற்றுக்கணக்கான ஆண்டுகளுக்குப்பின்னர் ஆயிரக்கணக்கான திரைப்பாடல்களில் இதே உவமைகள் மீண்டும் மீண்டும் பயன்படுத்தப்படும் என்றெல்லாம் வள்ளுவர் எதிர்பார்த்திருக்க வழியில்லை!

app_engine

Posts : 10099
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை - Page 7 Empty Re: குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை

Post  app_engine Fri Jan 19, 2018 7:15 pm

#1114
காணின் குவளை கவிழ்ந்து நிலன்நோக்கும்
மாணிழை கண்ணொவ்வேம் என்று


இந்த அதிகாரத்தின் இரண்டாவது குறளுக்கு இதில் கூடுதல் விளக்கம் கொடுக்கிறார்.

அங்கே "மயங்காதே நெஞ்சே" என்று சொன்னவர், இங்கே வெளிப்படையாக மலர் எவ்விதத்திலும் என் மங்கையின் கண்ணுக்கு இணையாகாது என்று தெளிவாக்குகிறார்.

குவளை காணின்
குவளை மலர் காணும் ஆற்றல் பெற்றால்

மாணிழை கண்ணொவ்வேம் என்று
மாட்சிமை பொருந்திய பெண்ணின் கண்ணுக்கு நாம் இணையில்லை என்று

கவிழ்ந்து நிலன்நோக்கும்
(வெட்கப்பட்டுத்) தலை கவிழ்ந்து நிலத்தைப் பார்க்கும்

குவளை பல நேரங்களிலும் பெண்ணின் கண்களுக்கு உவமையாகச் சொல்லப்படுவது. அழகான மலர், தோற்ற அளவில் ஒப்பிடத்தக்கதே - என்றாலும் அதற்குப் பார்க்கும் ஆற்றல் இல்லை அல்லவா? அதிசயம் நடந்து, அதற்குப் பார்க்கும் ஆற்றல் கிடைத்தால் - என்று கவிஞரின் கற்பனை!

உடனே மலர் உணர்கிறது - "நாமெல்லாம் என்ன அழகு, அந்தப்பெண்ணின் கண் போல் வருமா? அதன் திறனென்ன, பண்புகள் எல்லாம் என்னென்ன? அறிவில்லாமல் நம்மைப்போய் அதனோடு சிலர் ஒப்பிட்டு விட்டார்களே" - இவ்வாறு வெட்கி, நாணித்தலை குனிந்து விடுகிறதாம்.

பெண்ணின் கண்ணைப்புகழும் கவித்துவம் அழகோ அழகு!

app_engine

Posts : 10099
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை - Page 7 Empty Re: குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை

Post  app_engine Sat Jan 20, 2018 12:29 am

#1115
அனிச்சப்பூக் கால்களையாள் பெய்தாள் நுகப்பிற்கு
நல்ல படாஅ பறை


என்ன ஒரு கற்பனை என்று வியக்க வைக்கும் பாடல் Smile உயர்வு நவிற்சி தான் - "இடையா அது, இல்லாதது போல் இருக்கிறது" என்று பிற்காலத்தில் திரைப்பாடலில் இதே கருத்து வந்திருந்தாலும் வள்ளுவரின் கற்பனையே கற்பனை என்று திகைக்காமல் இருக்க முடியவில்லை.

ஏற்கனவே நாம் பார்த்த அனிச்ச மலர் என்பது மென்மையிலும் மென்மையான ஒன்று. அதன் எடை எந்த அளவுக்கு இருக்கும் என்பது தெரிந்ததே. அதைக்கொண்டு ஒரு அணி / மாலை செய்தால் அது எவ்வளவு எடையிருக்கும் என்றெல்லாம் சொல்லவே தேவையில்லை.

அப்படி ஒரு பூச்சரத்தை இட்டதும் ஒரு பெண்ணின் இடை முறிந்து போனதாம்! (பூவின் காம்புகளைக் களையாமல் கோர்த்ததால் வந்த வினை என்று பாடுகிறார்)! அந்த அளவுக்கு மென்மையான இடை (நுகப்பு) என்று பெண்ணின் அழகைப்புகழும் செய்யுள்!

இதிலே இசைத்தமிழ்ச்சுவையும் கூட்டுகிறார் - அதாவது, பறை நல்ல சூழலுக்கு ஒரு விதமாகவும், அல்லாத சூழலுக்கு வேறு விதமாகவும் இசைக்கப்படும் என்று இசை குறித்த செய்தி தருகிறார்!

அனிச்சப்பூக் கால்களையாள் பெய்தாள்
அனிச்ச மலர்களைக் காம்புகளைக் களையாமல் அணிந்து விட்டாளே

நுகப்பிற்கு நல்ல படாஅ பறை
(இனி) இவளது இடைக்கு நல்ல பறை ஒலி கிடைக்காதே

மகிழ்ச்சியான பறையொலி மணம் புரியும் விழாவுக்குத்தானே? அல்லது அது போன்ற நிகழ்வுகளுக்குத்தான்!

இடை முறிந்து தளர்ந்தால் எங்கிருந்து மகிழ்ச்சி வரும்? அழுகைக்கான பறையொலி தானே கிடைக்கும்? (இறப்பு போன்ற நிகழ்வு) அதைத்தான் "நல்ல படா பறை" என்கிறார்.

அப்பாவுடைய ஊரில் நடக்கும் திருமண நிகழ்வுகளின் பறையொலி நினைவுக்கு வருகிறது.

என்ன தான் வெளியூரில் இருந்து நாதம் / மேளம் எல்லாம் கொண்டு வந்தாலும் ஊர்வலம் வீட்டில் வந்து சேர்கையில் உள்ளூர்க்காரரின் பறையொலி வரவேற்பு இல்லாவிட்டால் சிறப்பில்லை! இந்த "உள்ளூர் மேளம்" குறித்து அப்பா அடிக்கடிப் புகழ்ந்து தன் மேடைப்பேச்சுகளில் குறிப்பிடுவார்!

app_engine

Posts : 10099
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை - Page 7 Empty Re: குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை

Post  app_engine Mon Jan 22, 2018 9:39 pm

#1116
மதியும் மடந்தை முகனும் அறியா 
பதியின் கலங்கிய மீன்

பதி என்றால் "உறைவிடம்" (வீடு) என்று அகராதி விளக்குகிறது, இந்தக்குறள் தான் அதற்கு மேற்கோள். 

அதாவது, தன் இடத்தில் இல்லாமல் நிலையின்றிக் கலங்கித்திரியும் ஒரு சூழல் இங்கே காட்டப்படுகிறது. யார் அப்படிக் கலங்கித்திரிவது? மீன் / விண்மீன் Smile

பெண்ணின் முகத்தைப் பார்த்து விட்டு, இது தான் நிலவு என்று எண்ணித் தங்கள் இடத்தை விண்மீண்கள் மாற்றிக்கொள்வதாக இங்கே கற்பனை! மதி - மடந்தை முகம் இவை இரண்டுக்கும் வேறுபாடு விண்மீனுக்குத் தெரிகிறதோ இல்லையோ நமது தலைவனுக்குத் தெரியவில்லை என்பதே உண்மை! காணும் இடமெல்லாம் அவள், காணும் அழகிய பொருளெல்லாம் அவளது உடலின் பகுதிகள் என்று ஒரே உன்மத்தத்தில் இவன் சுற்றித் திரிகிறான்.

தனது நிலையை ஒப்புக்கொள்ள நாணுவதால், அதை விண்மீன் தலையில் போடுகிறான் Smile

மதியும் மடந்தை முகனும் அறியா
நிலவும் மடந்தையின் முகமும் (ஒரே போல் இருப்பதால், அவை தம்மில்) வேறுபாடு தெரியாமல்

பதியின் கலங்கிய மீன்
விண்மீன்கள் தங்கள் நிலையில் இருந்து மாறித்திரிகின்றன

அக்காலத்தின் வானியல் அறிவு குறித்தும் இங்கே கொஞ்சம் தெரிகிறதோ என்று ஐயம். (அதாவது, "நிலவைச்சுற்றும் மீன்கள்" என்ற எண்ணம் இருந்திருக்கலாம்). எப்படி இருந்தாலும், பெண்ணின் அழகை, அதிலும் அவளது முகத்தின் ஒளியை நிலவோடு ஒப்பிடுவது காலம் காலமாக இருந்து வருகிறது. 

வள்ளுவரும் அதற்கு விலக்கல்ல!

app_engine

Posts : 10099
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை - Page 7 Empty Re: குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை

Post  app_engine Tue Jan 23, 2018 10:02 pm

#1117
அறுவாய் நிறைந்த அவிர்மதிக்குப் போல
மறுவுண்டோ மாதர் முகத்து


சென்ற குறளின் தொடர்ச்சி போல இது வருகிறது. இங்கும் நிலவோடு ஒப்பீடு தான், ஆனால் வேற்றுமை சுட்டிக்காட்டப்படுகிறது. (சில உரையாசிரியர்கள் சொல்வது போல, "இப்படி வேறுபாடு இருக்கும்போது ஏனப்பா நீ குழம்புகிறாய்" என்று விண்மீனை நோக்கிப் பகடி செய்யும் குறள் என்று கொள்ளலாம்).

அறுவாய் நிறைந்த அவிர்மதிக்குப் போல
(தேய்பிறையால்) அறுபட்ட இடங்கள் நிறைந்த ஒளி வீசும் நிலவினைப்போல
(அறுவாய் - வாளால் அறுபட்ட இடம், அவிர்தல் - ஒளிர்தல்)

மாதர் முகத்து மறுவுண்டோ?

(இந்த) மாதரின் முகத்தில் மறு இருக்கிறதா என்ன?
(மறு = அழுக்கு / களங்கம்)

ஆக, நிலவு எல்லாம் பெண்ணின் முகத்துக்கு ஒப்பிடத்தகுதி இல்லாதது என்று கிட்டத்தட்ட வஞ்சப்புகழ்ச்சி செய்கிறார். அதாவது, நிலவைப்பழிப்பது அல்ல இங்கே வள்ளுவரின் நோக்கம் - மங்கையின் நலம் புனைந்து புகழ்ந்து உரைப்பது.

நிலவும் கூடத்தேயும், அதில் களங்கம் இருக்கும் (பால் நிலவு என்றெல்லாம் சொன்னாலும் அதில் யாரோ உட்கார்ந்திருப்பது போன்ற மறு உள்ளது நாம் அறிந்ததே - இது குறித்து சிறு வயதில் கதைகள் சொல்லுவதை நம்மில் பலரும் கேட்டு வளர்ந்திருப்போம்).

ஆனால், என்னவளின் முகம் களங்கமற்று, தேய்வற்று ஒளிர்கிறதே! இதையும் அதையும் போட்டு எப்படிக் குழப்பலாம் - என்று கேள்வி கேட்கிறார். சரி தான் Smile

app_engine

Posts : 10099
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை - Page 7 Empty Re: குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை

Post  app_engine Thu Jan 25, 2018 2:09 am

#1118
மாதர் முகம்போல் ஒளிவிட வல்லையேல்
காதலை வாழி மதி


பெண்ணின் நலம் புனைந்துரைப்பதில் நிலா மீதான தாக்குதல் தொடர்கிறது Smile

முன்னிரு குறள்களில் எப்படி நிலா பெண்ணின் முகத்தழகுக்கு இணையில்லை - மறு உள்ளது என்றெல்லாம் சொன்னாரே, அதையே இங்கும் தொடர்கிறார். அதாவது, நிலவுக்கு ஒரு வேளை மாதர் முகம் போல் ஒளிவிட முடிந்தால், அதையும் காதலிப்பேன் என்கிறார் Laughing

இப்படிச்சொல்லி நிலவை ஏளனம் செய்வதில் ஒரு "வாழ்க" வேறு போடுகிறார்! ஆக, "வாழி, வாழ்க" என்று ஒருவரை ஏளனம் செய்வது வள்ளுவர் தொடங்கி வைத்தது என்று சொல்லலாம்! (மணக்குடவர் இந்த வாழி அசைச்சொல் என்கிறார். அதாவது, மறு கொண்ட முகமுள்ள நிலவுக்கு எப்படிக்காதல் கிட்டும், வாழ்ந்துட்டுப்போ என்ற நகைப்பொலியாம்).

மாதர் முகம்போல் ஒளிவிட வல்லையேல்
மாதர் முகம் போல உன்னால் ஒளிர இயலுமானால்

காதலை வாழி மதி
மதியே, (நீயும் என்) காதலைப் (பெறுவாய்)! வாழ்க!

உயர்வு நவிற்சி அணி என்றும் வஞ்சப்புகழ்ச்சி என்றும் கொள்ளலாம். அதாவது, நிலவைப்பழிப்பது போல இங்கே மாதரைப் புகழ்கிறார். நிலவின் ஒளியோடு பெண்ணின் முகக்களையை ஒப்பிட்டு அதிலும் மேல் என்பது ஒரு வித உயர்வு நவிற்சி. (உலகில் பாதிக்கு வெளிச்சம் தரும் நிலவொளி எங்கே மங்கையின் முக ஒளி எங்கே)

எப்படி இருந்தாலும், இந்த அதிகாரம் முழுவதும் மலர்களையும் நிலவையும் ஒப்பிட்டு மங்கையைப் புகழும் பித்தநிலையில் காதலன் இருக்கிறார் என்பது எளிதில் தெரியும் ஒன்று!


app_engine

Posts : 10099
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை - Page 7 Empty Re: குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை

Post  app_engine Thu Jan 25, 2018 10:37 pm

#1119
மலரன்ன கண்ணாள் முகமொத்தியாயின்
பலர்காணத் தோன்றல் மதி


நிலவை விட மாட்டேன் என்கிறார் - தொடர்ந்து காய்ச்சுகிறார்!

பெண்ணின் நலம் புனைந்துரைக்க நிலவை இவ்வளவு தாக்க வேண்டுமா என்று தோன்றுகிறது Wink

மலரன்ன கண்ணாள் முகமொத்தியாயின்
மலர் போன்ற கண்ணுள்ள என்னவள் முகம் போன்று நீ ஆக வேண்டுமானால்

பலர்காணத் தோன்றல் மதி
நிலவே, நீ பலர் காணத் தோன்றாதே!
(பலரும் பார்க்கும் படித் தோன்றி நிற்காதே - மறைந்து கொள் / எனக்கு மட்டும் காட்சி தா)

அவர் சொல்ல வருவது நிலவொன்றும் என் காதலியின் முக அழகுக்கு இணையல்ல என்பது தான். அக்கருத்தை வெவ்வேறு வழிகளில் தொடர்ந்து சொல்கிறார். இங்கே "வெளியே வந்து நிற்காதே" என்று சொல்லுமளவுக்குச் செல்கிறார். கொஞ்சம் வன்முறையான கருத்துத்தான்!

"எனக்கு மட்டும் தோன்று" என்பதாகச் சில உரைகள் விளக்குவதும் அழகு தான். பெண்ணானவள் தனக்கு உரியவனைப் பார்க்கையில் அவளது முகத்தில் காணும் அழகும் ஒளியும் மற்ற நேரங்களில் இல்லை என்பது (எனது உட்படப்) பலரும் சொல்லும் பொதுவான கருத்து.

அப்போது காணும் பெண் முகம் வெறும் தோல் போர்த்திய உடல் அங்கம் அன்று - அங்கே உணர்ச்சிகளின் கூட்டம் கொப்பளிக்கும்! முறுவல் கண்களிலும், கன்னங்களிலும் எல்லாம் மிளிர என்னென்னவோ மொழிகள் பகரப்பட - இவையெல்லாம் நிலவால் முடியுமா என்ன? பாவம் அது வெறும் ஒரு துணைக்கோள் தானே? உணர்வுகள் அதற்கு இல்லையே? கதிரவனின் ஒளியை மறுபரப்பு செய்யும், சுற்றி ஓடும் கனிமங்கள் கொண்ட ஒரு (பெரிய) உருண்டை மட்டுமே!

வாய்மொழியோ கண்மொழியோ புன்னகையோ அதற்குண்டா?


app_engine

Posts : 10099
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை - Page 7 Empty Re: குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை

Post  app_engine Sat Jan 27, 2018 12:09 am

#1120
அனிச்சமும் அன்னத்தின் தூவியும் மாதர்
அடிக்கு நெருஞ்சிப் பழம்


நலம் புனைந்துரைத்தலில் கொஞ்சம் கொஞ்சமாக ஒப்பிடப்படும் பொருளை "இடித்துரைத்தல்" கூடி வருவதைக்காண்கிறோம்.

அனிச்ச மலரையும் அன்னப்பறவையின் இறகையும் - அதாவது மேன்மைக்கென்றே அறியப்படும் இரண்டை - "நெருஞ்சி முள்" என்று திட்டும் அளவுக்கு இப்போது வந்திருக்கிறது. (நெருஞ்சி முள் - கொடுமையான வலியும் காயமும் ஏற்படுத்தக்கூடிய ஒன்று, அது காலில் தைத்தவர்களிடம் கேட்டுப்பாருங்கள்).

அனிச்சமும் அன்னத்தின் தூவியும்
(மிகவும் மென்மையானவை என்று அறியப்படும்) அனிச்ச மலரும், அன்னப்பறவையின் இறகும்

மாதர் அடிக்கு நெருஞ்சிப் பழம்
மாதரின் கால் பாதத்தை நெருஞ்சி முள் போல் குத்த வல்லவை
(அதாவது பெண்ணின் பாதம் அவ்வளவு மென்மையாம் - எப்பேர்ப்பட்ட மென்மையான பொருளும் முள் போல அதை வருத்துமாம்)

இந்த அதிகாரத்தில் நிறையக்குறள்கள் இதே போன்ற ஒலியுடன் வருவது கொஞ்சம் களைப்பைத் தருகிறது.

அய்யா, பெண்ணைப்புகழை வேண்டியது தான் - அதற்காக அனிச்சம், குவளை, அன்னம், நிலவு என்று இயற்கையின் அத்தனை அருமைகளைச் சிறுமைப்படுத்தித் தள்ள வேண்டுமா என்ன?

எப்படி இருந்தாலும் ஒன்று புரிகிறது - காதல்வயப்பட்டு உன்மத்தத்தின் உச்சத்தில் இருப்பவனுக்கு அவளைத்தவிர வேறொன்றும் இனிக்காது என்பது தான் ஆக மொத்தத்தில் இங்கே வள்ளுவர் சொல்ல வருவது.

"பாலும் புளிக்குது, பழமும் கசக்குது" போன்ற விவரிப்புகள் இத்தகைய சூழலுக்கு மிகப்பொருத்தம் என்பதை அதற்குள் உழன்று வந்தவர்கள் சரியாகவே புரிந்து கொள்வார்கள். Laughing

app_engine

Posts : 10099
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை - Page 7 Empty Re: குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை

Post  app_engine Mon Jan 29, 2018 10:53 pm

#1121
பாலொடு தேன்கலந்தற்றே பணிமொழி
வாலெயிறு ஊறிய நீர்

(காமத்துப்பால், களவியல், காதற்சிறப்புரைத்தல் அதிகாரம்)

காதலனும் காதலியும் மனதாலும் உடலாலும் கூடிக்கலந்து, அவளுடைய சிறப்புகளை எல்லாம் நிலவு மலர் என்பனவற்றோடு ஒப்பிட்டு மிகைப்படுத்திப்புனைந்து சொல்லியாகி விட்டது.

இனி அடுத்து என்ன? இந்தக்கேள்விக்கு வள்ளுவர் கொடுக்கும் விடை தான் இந்த அதிகாரம்.

அதாவது, பெண்ணின் காதல் சிறப்புகளை இன்னும் நுணுக்கமாக - விதவிதமாகச் சொல்லப்போகிறாராம்.  இது வரை வந்த முகம் / கண்கள் என்று வெளிப்படையாகத் தெரியும் அழகைக்கடந்து, இருவரும் காதல் புரிந்தபோது கிட்டிய கூடுதல் சிறப்புகள் இங்கே வர இருக்கின்றன.

"வயதுக்கு வந்தவர்கள் மட்டும்" படிக்கத்தக்கவை என்று எதிர்பார்க்கலாம் Smile

எயிறு என்பதற்குப் பல் / பற்கள் என்றும் ஈறு (பல்லினைப் பிடித்து வைக்கும் தசை) என்றும் இரண்டு பொருள்களும் உண்டு. என்றாலும், வால் (வெண்மை) என்பதால், முத்துப்போன்ற வெண்மையான பற்கள் என்று புரிந்து கொள்ள வேண்டும். அதன் வழியாக ஊறி வரும் நீர் / வாயமுதம் இங்கே சிறப்பிக்கப்படுகிறது.

பொதுவாகக் கவிஞர்கள் தேன் என்று புகழும் ஒன்று தான். வள்ளுவர் அதையே "பாலோடு தேன் கலந்து போல" என்று இங்கே சொல்லுகிறார். பெண்ணின் வாயைச் சுவைத்துப்பார்க்காமலா இதைச்சொல்லுவார்? ஆதலினால் வாயோடு வாய் வைத்து முத்தம் கொடுப்பது என்னமோ மேலை நாடுகளில் இருந்து வந்ததாக எண்ணிக்கொள்ள வேண்டாம். (அவர்கள் பொது இடங்களிலும் இதைச்செய்வார்கள் என்பது மட்டுமே வேறுபாடு. மற்றபடி, முத்தம் எல்லோருக்கும் பொது Laughing )

பணிமொழி வாலெயிறு ஊறிய நீர்
மென்மையாகப்பேசும் இவளது வெண் பற்கள் வழியே ஊறி வரும் நீர் (வாயமுதம்)

பாலொடு தேன்கலந்தற்றே
பாலோடு தேன் கலந்தது போன்று அவ்வளவு இனிமையும் சுவையானது

"காதல் சிறப்பு உரைப்பது" சிறப்பாகத் தொடங்கியிருக்கிறது. உதடுகள் ஓட்டல் மட்டுமல்ல உமிழ்நீரான தேனை சுவைத்துக்குடித்தும்   தொடங்குகிறார்!

app_engine

Posts : 10099
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை - Page 7 Empty Re: குறள் இன்பம் - 949-1330 & பின்னுரை

Post  Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 7 of 16 Previous  1 ... 6, 7, 8 ... 11 ... 16  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum