Ilayaraja and Beyond
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

குறள் இன்பம் - #1 - #948

+3
fring151
Usha
V_S
7 posters

Page 31 of 40 Previous  1 ... 17 ... 30, 31, 32 ... 35 ... 40  Next

Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 31 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Thu Aug 18, 2016 4:45 pm

#714
ஒளியார்முன் ஒள்ளியராதல் வெளியார்முன் 
வான்சுதை வண்ணம் கொளல்

இங்கே ஒளி என்பது "அறிவொளி" & ஒளியார் = அறிவுடையோர். வெளியார் = அதற்கு வெளியே உள்ளவர்கள் Laughing , அதாவது அறிவில்லாதவர்கள் (அகராதி இந்தக்குறளை மேற்கோள் காட்டி, வெளியார் என்றால் அறிவற்றோர் என்கிறது).

ஒட்டு மொத்தமாக மாந்தரை "அறிவுள்ளோர் / இல்லாதவர்" என்று பிரிக்க முடியாது தான். என்றாலும், ஒரு குறிப்பிட்ட பொருளின் மீது புரிதல் இருக்கிறதா இல்லையா என்ற அடிப்படையில், எந்த ஒரு அவையிலும் அதற்கேற்ற அறிவுள்ளோர் / இல்லாதவர் என்று இரு கூட்டார் இருக்க வழியுண்டு.

எடுத்துக்காட்டாக, மூளை / நரம்பு அறுவை மருத்துவம் குறித்த ஒரு அவையில் நான் சென்றால் அங்கு "ஒன்றும் அறியாதவனாக" , அதாவது "வெளியானாக" இருப்பேன். 

அப்படி, எந்த ஒரு குறிப்பிட்ட சூழலுக்கும் ஒளியார் / வெளியார் இருப்பார்கள், அந்த அடிப்படையில் தான் இந்தக்குறளைப் படிக்க வேண்டும் என்று எண்ணுகிறேன்.

இப்போது, ஒரு அவையில் பேசுகிறவன் என்ன விதத்தில் தன்னை (அல்லது தன அறிவை)  வெளிப்படுத்த வேண்டும் என்ற வள்ளுவரின் அறிவுரைக்கு வருவோம்.

ஒளியார்முன் ஒள்ளியராதல்
அறிவுடையோர் முன்பு அறிவுத்திறனோடு விளங்க வேண்டும் 
(அவர்களது அறிவுக்குத்தக்க வண்ணம் உயர்ந்த / ஆழ்ந்தவற்றைப் பற்றிப்பேச வேண்டும்)

வெளியார்முன் வான்சுதை வண்ணம் கொளல்
அறிவில்லாதோர் முன் சுண்ணாம்பு போல் வெண்மை நிறம் கொள்ள வேண்டும்

சுண்ணாம்பின் உவமையில் சொல்லப்படும் வெண்மைக்கு என்ன பொருள்? 

வெளுப்பு என்பது இங்கே "அறிவுக்குறைவு" (ஒன்றுமில்லாத / நிறமற்ற) என்ற பொருளில்  வருகிறது. 

அதாவது, குறிப்பிட்ட பொருளின் மீது அறிவற்றோர் அவையில் பேசும்போது, அவர்களுக்கு ஏற்ப எளிய / அடிப்படையான வழியில் விளக்க வேண்டும் Smile

(நாம் முட்டாள் சுண்ணாம்பு ஆக வேண்டும் என்று பொருள் அல்ல - "இறங்கிச்செல்ல வேண்டும்" என்று தான் இங்கு சொல்கிறார்)

app_engine

Posts : 10097
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 31 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Thu Aug 18, 2016 7:12 pm

#715
நன்றென்றவற்றுள்ளும் நன்றே முதுவருள் 
முந்து கிளவாச் செறிவு

கிளத்தல் என்றால் "புலப்படக்கூறுதல்" (தெளிவாகப்பேசுதல்) என்று அகராதி சொல்லுகிறது.

இந்த அடிப்படையில் தான் கிள்ளை / கிளி என்று அந்தப்பறவைக்குப் பெயர் வந்திருக்கும் என்று நினைக்கிறேன். (புரியாத ஒலியெழுப்பும் விலங்கினங்கள் / பறவைகள் நடுவே, மாந்தருக்கும் புரியும் வண்ணம் கூறும் பறவை Smile )

இன்னொரு சொல்லும் கண்டேன் - "கிளத்தி" = பேச்சுக்கான பெண் கடவுள் / சரசுவதி / கலைமகள் Smile

ஒரு வேளை சில இல்லக்கிழத்திகள் "ல ள ழ" குழப்பத்தினால் தான் "இல்லக்கிளத்திகள்" ஆகிப்பேசிக்கொண்டே இருக்கிறார்களோ?  Smile

சரி, குறளுக்கு வருவோம் - அறிவுடையோர் அவையில் நாம் முந்திக்கொண்டு கிளத்தக்கூடாது என்கிறார் வள்ளுவர் - நாவடக்கம் Smile

முதுவருள் முந்து கிளவாச் செறிவு
அறிவு முதிர்ந்தோர் அவையில் முந்திக்கொண்டு பேசாமல் இருக்கும் அடக்கம்

நன்றென்றவற்றுள்ளும் நன்றே
நன்று எனச்சொல்லப்படும் எல்லாவற்றுக்கும் மிக நன்று

அறிவுடையோர் அவையில் கேட்டுக்கற்க நிறைய இருக்கும். 

நாமே பேசிக்கொண்டிருந்தால் அந்த வாய்ப்பை இழப்போம்.

app_engine

Posts : 10097
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 31 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Fri Aug 19, 2016 6:05 pm

#716
ஆற்றின் நிலைதளர்ந்தற்றே வியன் புலம் 
ஏற்றுணர்வார் முன்னர் இழுக்கு

இந்தக்குறளுக்கு விதவிதமான உரைகளை வலையில் காண முடிகிறது. 

"ஆற்றின் நிலை" என்பதை "ஆற்றில் நீந்துபவன் நிலை" என்று சொல்லும் வேடிக்கை கூட இருக்கிறது. 
(நகைச்சுவைக்காகச்சொல்லவில்லை, இங்கே காண்க) 

ஆறு என்பது வாழ்க்கை வழி / ஒழுக்க நெறி என்பது தெளிவு. அதில் நிலை குலைந்து போதல் என்பது   "உயர்ந்த ஒழுக்க நெறியில் இருந்து வீழ்தல் / நல்ல பெயரை இழத்தல் / கற்பிழத்தல்" என்றெல்லாம்  பொருள் கொள்ள வேண்டியது. 

அடுத்து, வியன் புலம்.  இரு சொற்களுக்கும் பல பொருட்கள் உள்ளன. 

வியன் - விரிந்த / அகன்ற / பரந்த / சிறப்பு / வியப்பு
புலம் - இடம் / நிலம் / அறிவு 

எந்த இரண்டை எடுத்துச் சேர்த்தாலும் பொருத்தமாக இருப்பது அழகு. அதாவது, விரிவான / சிறப்பான / வியக்கத்தக்க அறிவுடையோர். அல்லது, விரிந்த நிலத்தை  "ஏற்றுணர்வார்"  - அதாவது உலகறிந்தவர்.

எப்படி எடுத்துக்கொண்டாலும், சான்றோர் / அறிவுடையோர் / உலகம் தெரிந்தோர் அவையில் இழுக்காகப் பேசக்கூடாது என்று அறிவுறுத்தும் குறள்.

வியன் புலம் ஏற்றுணர்வார் முன்னர் இழுக்கு
விரிவான அறிவுணர்வு உள்ளோர் (அல்லது உலகறிந்தோர்) முன்னர் தவறாகப்பேசுதல்

ஆற்றின் நிலைதளர்ந்தற்றே
(ஒருவரது) ஒழுக்க நிலையில் தளர்ந்து விடுவது போன்றதாகும்

app_engine

Posts : 10097
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 31 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Fri Aug 19, 2016 10:27 pm

#717
கற்றறிந்தார் கல்வி விளங்கும் கசடறச் 
சொல்தெரிதல் வல்லார் அகத்து

நம்முடைய திறமை உண்மையில் எத்தகைய அவையில் விளங்கும் / வெளிப்படவேண்டும்?

அதற்கான விடை இந்தக்குறளில். பொருள் பார்ப்போம் 

கசடறச்சொல்தெரிதல் வல்லார் அகத்து
மாசற்ற சொற்களைத் தெரிந்தெடுக்க வல்லவர் நடுவில் 
(நல்ல சொற்களை அறிய வல்ல அறிஞர்களது அவையில்)

கற்றறிந்தார் கல்வி விளங்கும்
கற்று அறிந்தவர்களின் கல்வி (நன்றாக) வெளிப்படும் (விளங்கும் / புகழ் பெறும்)

ஆக, இதில் குறிப்பான "அவை அறிதல்" பண்பு ஒன்றை நமக்கு வள்ளுவர் கற்பிக்கிறார்,

நாம் கற்று அறிந்த ஒரு பொருளை அதன் சிறப்பு நன்கு தெரிந்த வல்லுநர்களின் அவையில் பேசினால் நமது திறன் வெளிப்படும் / விளங்கும்.

உண்மையிலேயே நாம் சரிவரக்கற்று அறிந்திருந்தால் மதிப்புக்கிடைக்கும். இல்லாவிட்டாலும், அதில் உள்ள குழப்பங்களைக் களைய வழி வகுக்கும். 

ஆகவே, நம் அறிவை வெளிப்படுத்த, ஏற்றவர்களது அவையைக் கண்டு பிடிக்க வேண்டும்.

app_engine

Posts : 10097
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 31 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Sun Aug 21, 2016 5:28 pm

#718
உணர்வதுடையார்முன் சொல்லல் வளர்வதன் 
பாத்தியுள் நீர்சொரிந்தற்று

அழகான உவமையுடன் நல்ல அவையை ஒப்பிடுகிறார் இங்கே.

"வளரும் பயிர் உள்ள பாத்தி" இங்கே "கேட்டு உணரும் தன்மையுள்ளோர் கூடி இருக்கும் அவை"க்கு உவமை ஆகிறது.

அது போலவே சிறந்த கருத்துக்கள் / பேச்சு நீரோடு சேர்த்தி Smile

உணர்வதுடையார்முன் சொல்லல்
உணர்ந்து கொள்ளும் திறன் உள்ளோர் (உள்ள அவையின்) முன் (நம் கருத்துக்களைச்) சொல்லுவது 

வளர்வதன் பாத்தியுள் நீர்சொரிந்தற்று
வளர்கின்ற பயிர்கள் உள்ள பாத்தியில் நீர் ஊற்றுவது போன்றதாகும் 

எளிய, விளக்கம் ஒன்றும் தேவையில்லாத உவமை.  அதோடு கலந்திருக்கும் அறிவுரை என்ன?

1. நன்று கேட்டு உணரத்தக்கவர்களிடம் பேசுங்கள் - காதிருந்தும்  கேளாதோரிடம் நேரம் வீணாக்க வேண்டாம்.

2. நமது சொற்கள் பயிருக்கு நீர் போல் உயிர் தரும் / நன்மை தரும் தன்மையோடு இருக்கட்டும். (நெருப்பு போல் அழிக்கும் சொற்களை அவற்றுக்குத் தேவையான இடத்துக்கென்று சேமித்து வைப்போம். கேட்டு உணரும் அவையிலோ, நீர் மட்டும் ஊற்றுவோம் Smile )

app_engine

Posts : 10097
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 31 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Sun Aug 21, 2016 6:37 pm

#719
புல்லவையுள் பொச்சாந்தும் சொல்லற்க நல்லவையுள் 
நன்கு செலச்சொல்லுவார்

உற்று நோக்க வேண்டிய இரு சொற்கள் - புல்லவை  & செலச்சொல்லு   

புல்லறிவு என்றால் "அறிவின்மை" என்று பொருளாம் Smile மேலும், இழிவு / குறைவு என்றெல்லாம் புல்லுக்குப் பொருள் சொல்கிறார்கள்.

அப்படியாக, இழிவான / அற்பமான / அறிவற்ற அவை. மூடர் கூட்டம் இந்தப் புல்லவை.

செலச்சொல்லு = செல்லும்படியாகச் சொல்லு. 
அதாவது, மனதில் இறங்கும்படி, உள்ளே தைக்கும்படி, புரியும்படி உணர்த்திப் பேசுதல். கற்பிக்கும் திறன். 

அறிவுரையைப் புரிந்து கொள்வது கடினமல்ல - "என்ன தான் நல்ல கற்பிக்கும் திறன் இருந்தாலும், இழிவானவர்கள் அவையில் மறந்தும் வாய் திறக்காதே" என்ற நடைமுறை வழிநடத்துதல்.  "முத்துக்களைப் பன்றிகளுக்குப் போடாதீர்கள்" என்ற இயேசுவின் சொற்கள் நினைவுக்கு வரலாம்.

நல்லவையுள் நன்கு செலச்சொல்லுவார்
நன்மையானவற்றுள் சிறந்தவற்றை உள்ளே உணரும் வண்ணம் சொல்பவர்கள்

புல்லவையுள் பொச்சாந்தும் சொல்லற்க
அறிவற்ற இழிவானோர் அவையில் மறந்தும் பேசக்கூடாது

app_engine

Posts : 10097
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 31 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Mon Aug 22, 2016 5:41 pm

#720
அங்கணத்துள் உக்க அமிழ்தற்றால் தங்கணத்தார் 
அல்லார்முன் கோட்டி கொளல்

தங்கணம் (தன் + கணம்) என்பது இங்கே குறிப்பிடத்தக்க பயன்பாடு. அதோடு எதுகையில் வரும் "அங்கணம்" என்ற சொல்லும் படிக்கத்தக்கது.

முதலில் தன் கணம் :  "தன்னுடைய கூட்டம்" என்று நேரடிப்பொருள். பல விதங்களில் விளக்கலாம், உரையாசிரியர்கள் விளக்கங்கள் வேடிக்கையாகவும் ஆராயத்தக்கனவாகவும் உள்ளன.

1. (தன்னைப்போல) அறிவுள்ளவர்கள் கூட்டம் 
2. தன் இனத்தவர்கள் (இனக்குழு)
3. தனக்குச் சமமானவர்கள்

"அமைச்சியல் - அவை அறிதல்" என்ற அடிப்படையில் எண்ணினால், "குறிப்பிட்ட பொருளில் தம் கூட்டம்" என்று எடுத்துக்கொள்ளலாம். 

அதாவது, தொழில் அளவில் தம் குழு / மொழி அளவில் தம் குழு / பண்பாட்டின் அடிப்படையில் தம் குழு என்று சூழலுக்கேற்ற விதத்தில் "தங்கணம்" காணலாம்.

அடுத்து அங்கணம் - இது இப்போதும் தென் தமிழ்நாட்டில் பயன்பாட்டில் உள்ளதாக இணையம் சொல்கிறது. பொருள் : உள் முற்றம் / கழிவுநீர் வழி; நடைமுறைத்தமிழில் சாக்கடை Smile

தங்கணத்தார் அல்லார்முன் கோட்டி கொளல்
தம் குழுவில் இல்லாதவர் முன் சொற்பொழிவு ஆற்றுதல் 
(சொல்லும் பொருளுக்குச் சற்றும் பொருத்தமில்லாத அவையில் பேசுவது)

அங்கணத்துள் உக்க அமிழ்தற்றால்
அமிழ்தத்தைக் கழிவுநீர் வாய்க்காலில் கொட்டுவது போன்றதே

என்ன ஒரு வலிமையான உவமை! 
(அமிழ்தம் / அமுதம் = உயிர் காக்கும் உணவு)

app_engine

Posts : 10097
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 31 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Mon Aug 22, 2016 9:10 pm

#721
வகையறிந்து வல்லவை வாய்சோரார் சொல்லின் 
தொகையறிந்த தூய்மையவர்
(பொருட்பால், அமைச்சியல், அவையஞ்சாமை அதிகாரம்)

சென்ற அதிகாரத்தின் முதல் குறளில் பிற்பாதி அப்படியே இங்கும் உள்ளது Smile (சொல்லின் தொகையறிந்த தூய்மையவர்) எனவே, நாம் பாதி படித்தால் போதும்! 

அதிகாரத்தின் தலைப்பு எளிதும் நேரடியுமானது. "அவையில் பேச அஞ்சாதிருத்தல்". 

சென்ற அதிகாரத்தின் அடிப்படையில் எந்த அவையில் என்ன பேசவேண்டும் என்று முடிவு செய்த ஒருவர்க்கு அடுத்த படிக்கான அறிவுரைகள்.

வல்லவை  - வலியோர் நிறைந்த அவை என்று பொருள் கொள்கிறேன். 
(வல்லவைக்கு நேரடியான பொருள் 'மனைவி'யாம், "உண்மை தான் எங்கள் வீட்டில் வல்லவள் அவளே" என்று பலரும் ஒத்துக்கொள்ள வழியுண்டு) 

சொல்லின் தொகையறிந்த தூய்மையவர்
சொற்களின் தொகை அறிந்த மனத்தூய்மை உள்ளவர்கள்

வல்லவை வகையறிந்து
வலியோர் நிறைந்த அவையின் தன்மை அறிந்து

வாய்சோரார்
(அதற்கேற்ப, அஞ்சாமல்) பிழையின்றிப் பேசுவார்கள்

அஞ்சி அஞ்சிப்பேசுபவர்களுக்குத் தான் சொற்களில் பிழையும், கருத்துக்களில் குழப்பமும் இருக்கும்.

தான் சொல்ல வருவதில் தெளிவு, கேட்போர் குறித்த நல்ல புரிதல் - இவை இருந்தால் அச்சம் எதற்கு?

app_engine

Posts : 10097
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 31 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Tue Aug 23, 2016 5:13 pm

#722
கற்றாருள் கற்றார் எனப்படுவர் கற்றார்முன் 
கற்ற செலச்சொல்லுவார்

கற்றோரில் சிறந்தவர் யார்?

"மற்றவர்களுக்குக் கற்பிக்கும் திறன் உடையவர்கள் தான்" (பொதுவான மொழியில் சொன்னால், ஆசிரியர்கள்) என்று சொல்லும் குறள்.

ஏனென்றால் அவர்களுக்கு அவையில் பேச அச்சம் இல்லை. (நாள் தோறும் மாணவர் அவையில் பேசித்தள்ளுபவர்கள் தானே? Smile)  

அதற்கும் மேலாக, அவர்கள் கற்று அறிந்தவற்றை மற்றவர் உள்ளே புகுத்தும் திறமை வாய்ந்தவர்கள். அது அவ்வளவு எளிதல்ல என்று செய்து பார்க்கும்போது தான் தெரியும் Smile

கற்றார்முன் கற்ற செலச்சொல்லுவார்
கற்றவர்கள் அவையில் தாம் படித்தவற்றை (மற்றவர்) மனதில் பதியும் படிச்சொல்லுபவர்கள்

கற்றாருள் கற்றார் எனப்படுவர்
கற்றவர்களுக்குள் (நன்கு) கற்றவராக அறியப்படுவார்கள்!

நிறுவனங்களில் உயரத்துக்குச் சென்றோர் பலரும் தமது தொடக்க கால ஆசிரியர்களை மதிப்போடு நினைவு கூருவது நாம் பலமுறை காண்பதே. அவைக்கு அஞ்சாமல் கற்பிப்பது ஒரு கலை. சிறந்த ஒரு திறமை. 

"கற்றாருள் கற்றார்" என்று வள்ளுவர் சொல்லுவது சற்றும் மிகையல்ல! 

இதில் பொதிந்திருக்கும் இன்னொரு கருத்து "கொடுத்தல்"

நாம் கற்றவற்றைத் தன்னலத்தோடு தேக்கி வைக்காமல் மற்றவர் அறியக்கொடுக்கும் பண்பு யாருக்கு உண்டோ, அவர்கள் தாம் கல்வியில் சிறந்தோர்!

app_engine

Posts : 10097
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 31 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Tue Aug 23, 2016 8:42 pm

#723
பகையகத்துச் சாவார் எளியர் அரியர் 
அவையகத்து அஞ்சாதவர்

"அந்தக்காலத்து"த் தமிழகம் குறித்து இங்கே வள்ளுவர் எழுதி இருக்கிறார் என்று தோன்றுகிறது.

"வாய்ச்சொல்லில் வீரரடி" என்று ஆகிவிட்ட நம் நாளில், மேடைப்பேச்சுக்கு யாரும் அஞ்சுவதாகத் தெரியவில்லை. இவர்களில் எத்தனை பேருக்கு உயிர் குறித்த அச்சமின்றிப் போருக்குச் செல்லும் துணிவு இருக்குமோ தெரியவில்லை.

என்றாலும், இன்றும் "அவை" என்றால் தொடை நடுங்கும் நிறையப்பேரை நான் நேரடியாகக் கண்டிருக்கிறேன். அவர்களை மனதில் கொண்டு பொழிப்புரை படித்து விட்டுப்போவோம் Wink

பகையகத்துச் சாவார் எளியர்
பகைவர் உள்ள போர்க்களத்தில் சாவதற்குத் துணிவோர் கிடைப்பது எளிது 
(போர்க்களம் செல்ல நிறையப்பேர் துணிவார்கள்)

அவையகத்து அஞ்சாதவர் அரியர்
(ஆனால்) அவையின் முன் அஞ்சாமல் இருப்பவர்கள் அரிதானவரே 

முற்காலங்களில் அறிவுடையோர் நிறைந்த அவையில் சென்று அஞ்சாமல் பேசுவது எளிய செயல் அன்று. அதற்கான அறிவும், கல்வியும், திறமையும் நிறைந்தவர் மிகச்சிலரே காணப்படுவர்.

ஏமாற்றிப்பிழைப்போர் கூடுதல் ஆன நம் நாளில், மற்றும் அவையோரே அறிவு இல்லாமல் கூட்டம் கூட்டமாய் இருக்கும் நிலையில், எவன் அவைக்கு அஞ்சுகிறான்? 

வள்ளுவரை மீண்டும் கொண்டு வந்து இவர்களைக் காட்டினால், இந்தக்குறளைத் தலைகீழ் ஆக்க வழியுண்டு Sad

ஒரு வேளை, இப்படிப்புரிந்து கொள்ள வேண்டும் என நினைக்கிறேன் :
"எளியவர்கள் போருக்கு வேண்டுமானாலும் சென்று உயிர் விடுவர்,  ஆனால் அவைக்கு அஞ்சுவர். கற்ற வெகு சிலரே அவைக்கு அஞ்சாதவர்கள்"

app_engine

Posts : 10097
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 31 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Wed Aug 24, 2016 6:41 pm

#724
கற்றார்முன் கற்ற செலச்சொல்லித் தாம்கற்ற 
மிக்காருள் மிக்க கொளல்

அவை அஞ்சாமை என்பது பேசுவது மட்டுமல்ல, கற்றுக்கொள்வதும் தான் என்று கற்பிக்கும் குறள்.

கற்றார்முன் கற்ற செலச்சொல்லி
(தாம்) கற்றவற்றை அறிவுடையோர் அவையில் (அவர்கள்) உள்ளத்தில் செல்லும்படிச்சொல்லி 

தாம்கற்ற மிக்காருள் மிக்க கொளல்
அவற்றை விடவும் மிகுதியான அறிவுடையோரிடமிருந்து கூடுதல் அறிவைப் பெற்றுக்கொள்ள வேண்டும் 

அருமையான நடைமுறை வழிகாட்டுதல் இங்கு படிக்கிறோம்.

முதலில் நமக்கு என்ன தெரியும் என்று அஞ்சாமல் சொல்லி விளங்க வைப்பது. அந்நேரத்தில், நம்மை விடவும் கூடுதல் தெரிந்தவர்கள் அவையில் இருந்தால், அவர்களோடு உரையாடுவது நன்மை பயக்கும். 

நமக்குத்தெரியாத என்னவெல்லாம் அவர்கள் அறிவார்கள் என்று உரையாடலில் தெரிய வரும். 

அவற்றையும் நம் அறிவில் சேர்த்துக்கொள்ள அப்போது நல்ல வாய்ப்பு Smile

அவையில் பேசுவதற்கு மட்டுமல்ல, "உரையாடுவதற்கும்" அஞ்ச வேண்டாம். ("அடுத்தவன் என்ன சொல்கிறான்" என்று செவிகொடுத்துக் கேட்பது இங்கே முதலிடம் பெறும்)

app_engine

Posts : 10097
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 31 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Wed Aug 24, 2016 11:58 pm

#725
ஆற்றின் அளவறிந்து கற்க அவையஞ்சா 
மாற்றங் கொடுத்தற் பொருட்டு

"அவையஞ்சா மாற்றம் கொடுத்தற்பொருட்டு" எளிதாகப் புரிகிறது.
(எதிர்வரும் வினாக்களுக்கும் ஐயங்களுக்கும் எதிர்ப்புகளுக்கு தக்க விடை அவையில் கொடுக்க முன்னமேயே ஆயத்தமாக இருத்தல்).

ஆனால், "ஆற்றின் அளவறிந்து கற்க" என்பது அவ்வளவு எளிதல்ல Smile

அளவு தெரிந்து கற்பது - புரிகிறது, அது என்ன "ஆற்றின்"?

நாம் பலமுறை பார்த்திருக்கிற படி, ஆறு = வாழ்க்கை வழி / நெறி / ஒழுக்கம். இந்த இடத்தில் அதை எப்படிப் பொருத்துவது?

சில விளக்கங்கள் :
1. நாம் என்ன கற்கிறோமோ, அதன் முழுமையான நெறிமுறைகளைத் தெரிந்து வைப்பது.
2. கற்பதன் "நெளிவு சுளிவு"களைச் சரியாக அறிந்திருப்பது 
3. அவையின் அளவைத் தெரிந்து கொண்டு, அதற்கு ஏற்ற வழிவகைகளைக் கற்றல் 

சுருக்கமாக, நாம் பேசும் அவையில் என்ன நிலையையும் சந்திக்கும் அளவுக்கு முழுமையாக / ஒழுங்காக ஆயத்தம் செய்து செல்ல வேண்டும்.

அவையஞ்சா மாற்றங்கொடுத்தற் பொருட்டு
அவைக்கு அஞ்சாமல் மாற்று (விடை) கொடுக்க ஏற்ற வண்ணம் 

ஆற்றின் அளவறிந்து கற்க
(அவைக்கும் / கற்கும் பொருளுக்கும்) என்ன தேவையோ அதன் அளவு தெரிந்து கற்றுக்கொள்ள வேண்டும்

"ஆழம் தெரியாமல் காலை விடாதே" என்ற பழமொழி நினைவுக்கு வரலாம். 

தெரிந்திருந்தால் அவைக்கு அஞ்ச வேண்டியதில்லை Smile

app_engine

Posts : 10097
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 31 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Thu Aug 25, 2016 4:36 pm

#726
வாளொடென் வன்கண்ணர் அல்லார்க்கு நூலொடென் 
நுண்ணவை அஞ்சுபவர்க்கு

மிகப்பொருத்தமான உவமையுடன் இங்கே "அவை அஞ்சாமை" வருகிறது.

போரிட அஞ்சும் கோழைக்கு வாள் எதற்கு? அதோடு அவனுக்குத் தொடர்பொன்றும் இல்லையே.

அதே போல, அவைக்கு அஞ்சுபவன் நூலைத்தொட வேண்டியதில்லை. 

போர்க்களம் அவைக்கு உவமை, வாள் நூலுக்கு உவமை. அழகு!

வன்கண்ணர் அல்லார்க்கு வாளொடென்
வீரம் இல்லாதவர்க்கு வாளோடு என்ன தொடர்பு?  (கிடையாது)

நுண்ணவை அஞ்சுபவர்க்கு நூலொடென்
(அதுபோல) நுண்ணறிவுள்ளோர் அவைக்கு அஞ்சுபவர்க்கு நூலோடு என்ன தொடர்பு?

இதையே கொஞ்சம் விரிவு படுத்தினால், அவைக்கு அஞ்சுவோர் பல நூற்களைப்படிப்பதில் பயனொன்றும் இல்லை என்றும் வரும். 

வாள் தனியறையில் சுழற்றுவதற்கு அல்ல, போர்க்களத்தில் அஞ்சாமல் வீரத்துடன் போராடத்தான். 

அது போல் தான் நூற்களின் கல்வியும். தானே படித்து இன்புற (மட்டும்) அல்ல. அவையில் சென்று அஞ்சாமல் விளக்கவும் தான். அப்படி இல்லாதவை நல்ல நூற்களும் இல்லை Smile

app_engine

Posts : 10097
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 31 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Thu Aug 25, 2016 7:45 pm

#727
பகையகத்துப் பேடிகை ஒள்வாள் அவையகத்து
அஞ்சுமவன் கற்ற நூல்


ஒள்வாள் = ஒளிரும் வாள், மின்னும் / பளபளக்கும் / கூர்மையான வாள் Smile

பேடி - முன்னமேயே பார்த்திருக்கிறோம் அஞ்சி நடக்கும் பேர்வழி
(மலையாளத்தில் அச்சமுள்ள கோழைக்கு எப்போதுமே இந்தச்சொல் தான். "பேடித்தொண்டன்" என்பது ஏளனம் செய்யும் வழக்குச்சொல்)

மற்றபடி, உவமை முந்தைய குறளில் வந்ததே மீண்டும் இங்கும்.

பகையகம் = போர்க்களம் (அல்லது பகைவனின் அகம்) - அவைக்கு உவமை ; வாள் நூலுக்குவமை.

அவைக்கு அஞ்சும் பேடியிடம் எவ்வளவு உயரிய நூல் இருந்தாலும் (அதைப்படித்து அறிந்திருந்தாலும்) பயனில்லை என்கிறார்.

"நான் படித்தது எனக்குப்பயன் தானே" என்று வாதிடலாம்.

இல்லை என்று சொல்லவில்லை. வாள் கொண்டு வெங்காயம், தக்காளி எல்லாம் நறுக்கலாம் தான். சமையல் செய்ய உதவும் தான். Laughing

ஆனால், போர்க்களத்தில்? அஞ்சி நடந்தால் வாள் உள்ள கை நடுங்குமேயொழிய வேறு பலனில்லை. அது போலத்தான் அவைக்கு அஞ்சுபவன் படித்த நூலும்.

அவையகத்து அஞ்சுமவன் கற்ற நூல்
அவையில் பேச அஞ்சுபவன் கற்ற நூல்

பகையகத்துப் பேடிகை ஒள்வாள்
போர்க்களத்தில் பேடியின் கையில் உள்ள ஒளிரும் வாள் போன்றது 
(ஒரு பயனுமில்லை)

app_engine

Posts : 10097
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 31 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Fri Aug 26, 2016 4:45 pm

#728
பல்லவை கற்றும் பயமிலரே நல்லவையுள் 
நன்கு செலச்சொல்லாதார்

இந்தக்குறளிலும் இனி அதிகாரத்தில் மிச்சம் இருக்கும் இரண்டிலும், கற்றிருந்தும் அவைக்கு அஞ்சுபவரை மூன்று விதமாக வள்ளுவர் திட்டுவதைப் படிக்கிறோம் Smile

இதில் அவர் திட்டும் மொழி "பயமிலர்" (அதாவது, ஒன்றுக்கும் பயன்படாத உதவாக்கரை Laughing ).

நல்லவையுள் நன்கு செலச்சொல்லாதார்
நல்ல அவையில் (அல்லது, நன்மையானவற்றை) மற்றவர்களுக்கு நன்கு விளங்கும்படிச் சொல்லாதவர்கள் 
(அவைக்கு அஞ்சி வாய் மூடி இருப்பவர்கள், அல்லது புரியாதபடி உளறித்தள்ளுபவர்கள்)

பல்லவை கற்றும் பயமிலரே
பலவற்றைக் கற்றிருந்தாலும் பயன் அற்றவர்களே!

நாம் கற்றவற்றை மற்றவர்களுக்கு விளங்க வைக்க முடியாவிட்டால், அப்படிப்பட்ட கல்வி கொண்டு யாருக்கும் பயன் இல்லை.

இந்த சின்ன உண்மை புரியாத நிறையப்பேர் தங்களைத் தாங்களே "அறிவு உயிரிகள்" என்று நினைத்துக்கொண்டும், தம்பட்டம் அடித்துக்கொண்டும் இருக்கிறார்கள் Sad

app_engine

Posts : 10097
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 31 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Fri Aug 26, 2016 9:54 pm

#729
கல்லாதவரின் கடையென்ப கற்றறிந்தும் 
நல்லாரவை யஞ்சுவார்

"கண்ணிருந்தும் குருடன் / காதிருந்தும் செவிடன்" என்று சொல்வதைப்போன்ற ஒரு திட்டு இந்தக்குறளில்.

அவைக்கு அஞ்சுபவன், "கல்வி பெற்றிருந்தாலும் கல்லாதாரை விடவும் கீழானவன்"  - இது உதவாக்கரைக்கு அடுத்தபடியான பட்டம். 

கற்றறிந்தும் நல்லாரவை யஞ்சுவார்
கற்று அறிந்திருந்தாலும் நல்லவர்களின் அவைக்கு அஞ்சுபவர் 
(அங்கே வரவோ, பேசவோ அஞ்சுவோர்)

கல்லாதவரின் கடையென்ப
கல்லாதவர்களை விடவும் இழிவானவர்களாக எண்ணப்படுவர்

நான் பலமுறை சொல்லி இருப்பது போல, கல்வி என்றவுடன் "பல்கலைக்கழகக்கல்வி" என்று எடுக்கக்கூடாது. ஒரு "குறிப்பிட்ட பொருளிலான படிப்பு" என்று தான் கொள்ள வேண்டும்.

அந்தக்குறிப்பிட்ட பொருள் குறித்து நடக்கும் அவையில் பேச அஞ்சினால், அதைக்குறித்து ஒருவர் படித்திருந்து என்ன பயன்? 

படிக்காதவனாவது "படித்ததில்லை, தெரியாது" என்று சொல்லலாம். இவருக்கு அப்படிச்சொல்லவும் வழியில்லை. ஆகவே தான், "கல்லாதாரிலும் கடையன்" என்ற வசை

app_engine

Posts : 10097
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 31 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Fri Aug 26, 2016 11:48 pm

#730
உளரெனினும் இல்லாரொடு ஒப்பர் களன்அஞ்சிக் 
கற்ற செலச்சொல்லாதார்

மூன்றாவதான திட்டு வசையின் உச்சக்கட்டம் எனலாம். 

அதாவது, அவைக்கு அஞ்சுபவன் வாழ்ந்தாலும் செத்தவனே என்கிறார் Shocked

இங்கே, அவையைக் "களன்" என்று சொல்வது குறிப்பிடத்தக்கது. அடிக்கடி "களப்பணி" என்ற சொல்லை வலையிலும் மற்ற இடங்களிலும் பயன்படுத்துவதை நாம் காண்கிறோம்.

அவையில் சென்று அஞ்சாமல் பேசுவது ஒரு வகையான "களப்பணி" என்கிறது குறள் Smile 

தாம் கற்றவற்றை அவையில் சென்று மற்றவருக்குப் புரியும்படிச் சொல்லும் களப்பணி ஆற்றாதார், உயிரோடு இருந்தாலும் இல்லாதவர்களாகவே (அல்லது பிணமாக / நடைப்பிணமாக) எண்ணப்படுவார்கள்.

உட்கொள்ளக் கொஞ்சம் கடினம் தான் - என்றாலும் இப்படியெல்லாம் உயர்வு (தாழ்வு?) நவிற்சியில் சொன்னால் தான் சிலருக்கு உறைக்கிறது - எனவே சில நேரங்களில் அறிவுரை சொல்லும்போது அடித்துத்தான் சொல்ல வேண்டி இருக்கிறது

களன்அஞ்சிக் கற்ற செலச்சொல்லாதார்
அவைக்கு அஞ்சி, தாம் கற்றவற்றை மற்றவர்கள் உள்ளே செல்லும் வண்ணம் செல்லாதவர்கள் 

உளரெனினும் இல்லாரொடு ஒப்பர்
(உயிரோடு) இருந்தாலும் (உயிர்) இல்லாதோரைப் போன்றவர்களே!

இதோடு அமைச்சியல் நிறைவு பெறுவதால், இந்த "அவைக்கு அஞ்சாமை" அமைச்சர்களுக்கு மிகத்தேவை என்று சொல்லி முடித்துக்கொள்ளலாம். (தமிழ்நாட்டில் இருந்து மத்திய அமைச்சவரைக்குப் போன ஒருத்தர் மக்களவைக்கு அஞ்சி நடந்தது அண்மைக்காலங்களில் கண்டது என்பதால், நம் நினைவுக்கு வரலாம் Wink )

app_engine

Posts : 10097
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 31 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Mon Aug 29, 2016 9:45 pm

#731
தள்ளா விளையுளும் தக்காரும் தாழ்விலாச் 
செல்வரும் சேர்வது நாடு
(பொருட்பால், அரணியல், நாடு அதிகாரம்)

இன்று புதிதாகப் படித்துப்புரிந்த ஒன்று - இந்த "இயல்" பிரிப்பில் உரையாசிரியர்கள் நடுவே வேறுபாடுகள் இருக்கின்றன என்பது 

அதாவது, பரிமேலழகர் / மணக்குடையார் போன்றோர் பிரித்திருக்கும் இயல்கள் அல்ல மு.வ. போன்ற அண்மைக்காலத்தோர் பயன்படுத்தியது. 

நாம் இதுவரை பார்த்திருக்கும் "இயல்" பிரிவினை மு.வ. போன்றோர் பயன்படுத்தியது, அதையே தொடருவோம்.

இந்தக்கணக்கில் அரணியல் 20 குறள்களைக் கொண்டது - நாடு / அரண் என்று இரண்டு அதிகாரங்கள் மட்டும். 
(இரண்டும் எனக்கு உவப்பில்லாதவை - எல்லைகள் கூடாது, மண் முழுவதும் ஒரே நாடாக வேண்டும் / ஆகும் என்ற எதிர்பார்ப்புடன் வாழ்வதால், இந்த அதிகாரங்கள் எனக்குத் தாமரை இலையில் தண்ணீர்)

நாடு என்பதன் வரையறையுடன் முதல் குறளைத் தொடங்குகிறார்.

தள்ளா விளையுளும் தக்காரும்
குறைவில்லாத விளை பொருளும், தக்க குடிமக்களும் 
(தக்க : அறமுள்ள / அறிவுள்ள / தகுதியுள்ள - எப்படி வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளலாம்)

தாழ்விலாச் செல்வரும் சேர்வது நாடு
தாழ்வு இல்லாத செல்வரும் சேர்ந்தது தான் நாடு 
(தாழ்வு / குறைவு : பொருளில் அல்லது ஒழுக்கத்தில், உங்களுக்கு எப்படி வேண்டுமோ அப்படி)

app_engine

Posts : 10097
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 31 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Mon Aug 29, 2016 10:26 pm

#732
பெரும்பொருளால் பெட்டக்கதாகி அருங்கேட்டால் 
ஆற்ற விளைவது நாடு

பெட்பு என்றால் விருப்பம் என்று பொருள் சொல்கிறார்கள் (இன்று புதிதாய்த் தெரிந்து கொண்டது). 

பெட்டக்கது = விரும்பத்தக்கது. 

அதாவது, வேற்று நாட்டினர் "இதல்லவோ நாடு, இங்கே சென்று நாம் வாழ வேண்டும்!" என்று விரும்பத்தக்கதாம்.

ஏனாம்? "பெரும் பொருள்"!

நடைமுறையான உண்மை. 

பொருள் வளம் மிக்க நாட்டில் வாழ மற்ற நாட்டில் உள்ளோர் இடம் மாறிச்செல்வது வரலாற்றில் எங்கும் காணும் ஒன்றே.  வாழ்வில் நுகர்வு இன்பம் (பெரும்பாலோருக்கு) முதலிடத்தில் இருக்கும் நம் நாளில், பொருள் வளம் வழியாக அதை அடைய நினைப்பது  இன்னுமே கூடுதல். 

விடுதலை மிகக்குறைவு (மத்திய கிழக்கு & சில கீழை நாடுகள்), மதிப்பின்மை (மேலை நாடுகள்), உறவுகளைப்பிரிந்து வாழவேண்டிய துன்பம் (எல்லா வெளிநாடுகளுக்கும் பொருந்தும்) - இப்படிப்பல எதிர்மறைகள் இருந்தாலும், வெளிநாட்டில் வேலை செய்யத் தமிழர்கள் கடின முயற்சி செய்வது சொல்லித்தெரிய வேண்டிய ஒன்றல்ல.

பெரும்பொருளால் பெட்டக்கதாகி
பெருகி இருக்கும் பொருள் வளத்தால் விரும்பத்தக்கதாகி

அருங்கேட்டால் ஆற்ற விளைவது நாடு
அழிவு அரிதாக இருப்பதால் நிறைய விளைச்சல் அடைவது தான் நாடு

app_engine

Posts : 10097
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 31 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Tue Aug 30, 2016 4:57 pm

#733
பொறையொருங்கு மேல்வருங்கால் தாங்கி இறைவற்கு 
இறையொருங்கு நேர்வது நாடு

பொறை என்றால் பொறுமை என்று தெரியும். அதோடு இணைந்து வரும் இன்னொரு பொருளில் இங்கே வருகிறது : "சுமை"

அதே போல இறை என்றால் தலைமை / ஆட்சி என்று கண்டிருக்கிறோம். இங்கு "வரி" என்கிற பொருளிலும் வருகிறது. "இறைவனுக்கு இறை" = மன்னனுக்கு வரி 

தமக்கோ சுற்று நாடுகளுக்கோ ஏதோ நேர்ந்து, அதன் விளைவாகக் கூடுதல் சுமை வந்தாலும், அவற்றைத் தாங்கிக்கொண்டு எப்போதும் போல் அரசுக்கு வேண்டிய வரியை வழங்குவது தான் (நல்ல) நாடு என்கிறது குறள். (இப்போது புரிகிறது பொறை என்பது இறைக்கு எதுகை மட்டுமல்ல, பல பொருள் தருவதும் தான் என்று Smile )

இறை / பொறை  போலவே ஒருங்கு என்ற சொல்லும் இரு பொருள்களில் வருகிறது. "ஒன்றாக / ஒரேயடியாக" என்று ஒரு பொருள். "முழுவதுமாக" என்று இன்னொரு பொருள்.

பொறையொருங்கு மேல்வருங்கால் தாங்கி
(அகதிகள், பேரிடர் போன்றவற்றால்) சுமை ஒன்று சேரத் தம்மேல் வரும் பொழுது அதைத்தாங்கிக்கொண்டு

இறைவற்கு இறையொருங்கு நேர்வது நாடு
ஆளுவோர்க்கு வரியை (எப்போதும் போல்) முழுமையாகத் தருவது தான் நாடு 

செல்வச்செழிப்பு என்பது நல்ல பொழுதில் இன்பம் துய்ப்பதில் மட்டுமல்ல, இடர் வரும்போது அதைப் பொறுமையுடன் கையாளுவதிலும் இருக்கிறது என்று அறிவுறுத்தும் செய்யுள்.

app_engine

Posts : 10097
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 31 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Tue Aug 30, 2016 10:46 pm

#734
உறுபசியும் ஓவாப் பிணியும் செறுபகையும் 
சேராதியல்வது நாடு

பள்ளியில் படித்திருப்பதால் பலருக்கும் நன்கு அறிமுகமான குறள்.

கூடுதல் விளக்கமும் அதனால் வேண்டி இருக்காது Smile

உறுபசியும் ஓவாப் பிணியும் செறுபகையும்
மிகுந்த பசியும் (பட்டினிக்கொடுமை), ஓயாத நோய்களும் (உடல் நலம் குறைந்த குடிமக்கள்), தாக்கி அழிக்கும் பகைவரும் (அண்டை நாட்டோடு சண்டை நிலை)

சேராதியல்வது நாடு
இல்லாமல் நடை போடுவதே நல்ல நாடு!

பட்டினி, நோய், பகை - இவை மூன்றும் இல்லாத நாடு இன்று மண்ணில் இல்லை!

சில ஐரோப்பிய நாடுகள் மற்றும் கனடா போன்றவை "எங்கள் நாட்டில் பட்டினி இல்லை, அண்டை நாடுகளுடன் நட்பும் பாதுகாப்பு உணர்வும் உள்ளதால் பேரளவில் நாங்கள் படைகளுக்குச் செலவழிப்பதில்லை" என்று சொல்லலாம்.

என்றாலும், அவர்களாலும் "ஓயாத நோயில்லை" என்று சொல்ல இயலாது. Sad

தொற்றுநோய்கள் குறைவு என்று வேண்டுமானால் சொல்லிக்கொள்ளலாம். என்றாலும், இவை மருத்துவத்துக்காகச் செலவழிப்பது கொஞ்சநஞ்சம் அல்ல. 

அமெரிக்காவின் நிலை கிட்டத்தட்ட இந்தியாவைப்போல். (அமெரிக்காவை செல்வநாடு என்றும் சொல்கிறார்கள், ஐந்தில் ஒருத்தர் பட்டினி என்றும் சொல்கிறார்கள். அதோடு, மற்ற ரெண்டிலும் - அதாவது, நோய் / பகை இவற்றில் மிகக்கொடிய நிலைமை! நாட்டு மக்கள் உழைப்பில் உண்டாகும் செல்வத்தின் பெரும்பகுதி படைகளுக்கும், நோய்களுக்கும் செலவிடுவது தெரிந்ததே!).

அதாவது, 734-ஆம் குறளில் சொல்லப்படும் நாடு தற்போது எங்குமில்லை!

app_engine

Posts : 10097
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 31 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Wed Aug 31, 2016 4:41 pm

#735
பல்குழுவும் பாழ்செய்யும் உட்பகையும் வேந்தலைக்கும் 
கொல்குறும்பும் இல்லது நாடு

பல நாடுகளிலும் இன்று காணும் கடினமான நிலைமைகள் இங்கே பட்டியல் படுத்தப்படுகின்றன.

1. பல் குழு - வேற்றுமைகள் பல குழுக்களாக உருவெடுத்துப் பிரிவினைகளை ஊக்குவித்தல் 
2. உட்பகை -  உள்ளே இருந்து வரும் கலகங்கள் / குழுக்கள் இடையே அல்லது அரசுக்கு எதிரான பகை 
3. கொல்குறும்பு - கொலையை விரும்பும் குறுநில மன்னர்கள் / குழுத்தலைவர்கள் 

இவையெல்லாம் இல்லாதது தான் நல்ல நாடு என்கிறார்.

இப்படிப்பட்ட நாடு இன்று உலகில் உண்டா தெரியவில்லை. ஒரு வேளை சிறிய நாடுகள் ஓரிரண்டு இருக்கலாம். 

பெரும்பாலான நாடுகளில் பிரிவினை / குழுச்சண்டைகள் / கொலை செய்யும் குற்றக்கூட்டங்கள் இருந்தாலும், பேரளவில் அவற்றை அரசுகள் கட்டுப்படுத்திச்செல்லுவதும் இருக்கிறது என்பதே நிலைமை.

என்றாலும், குறிப்பிடத்தக்க அளவிலான நாடுகளில் பகையும் சண்டைகளும் பேரழிவு விளைவிப்பதும் நாம் கடந்த சில பத்தாண்டுகளாகக் கண்டு வருவதாகும்.

ஆக மொத்தம், நம் நாளைக்குறித்துக் கவலைப்பட வைக்கும் குறள் Sad

பல்குழுவும் பாழ்செய்யும் உட்பகையும்
பல குழுக்களும் (வேறுபாடுகள் / பிரிவினைகள்) அழிவு உண்டாக்கும் உள்நாட்டுப் பகையும்

வேந்தலைக்கும் கொல்குறும்பும்
வேந்தனுக்கு அலைக்கழிப்பு உண்டாக்கும் கொலைகாரக் குறுநில மன்னர்களும்

இல்லது நாடு
இல்லாதது தான் (நல்ல) நாடு

app_engine

Posts : 10097
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 31 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Wed Aug 31, 2016 11:39 pm

#736
கேடறியாக் கெட்ட இடத்தும் வளங்குன்றா 
நாடென்ப நாட்டின் தலை

நாடுகளில் எல்லாம் மிகச்சிறந்த நாடு எது?

இந்தக்கேள்விக்கு வள்ளுவரின் விடை இந்தக்குறளில். 

எளிய சொற்கள் பயன்படுத்தப்படுவதால், பொருள் புரியக்கடினமில்லை.

கேடறியா
கேடு / கெடுதல் என்பதை அறியாததாய் 
(பகைவராலோ அல்லது வேறு எதனாலுமோ பொதுவாகக் கெடுதல் வராத நாடு)

கெட்ட இடத்தும் வளங்குன்றா
(அப்படி ஒருவேளை அரிதாகக்) கெடுதல் வரும்போதும் வளம் குன்றாமல் இருக்கும்

நாடென்ப நாட்டின் தலை
நாடு தான் எல்லா நாட்டிலும் மிகச்சிறந்தது என்பர்

கேடறியாத நாடு என்று மண்ணில் எங்கும் இல்லை என்பதை மீண்டும் மீண்டும் சொல்ல வேண்டியதில்லை Smile 

ஆனால், அழிவு / இடர் வரும்போது வளம் குன்றாமல் காக்கும் வண்ணம் எல்லா நாடுகளும்  முன்னெச்சரிக்கையுடன் இருக்கின்றன என்றும் சொல்ல இயலாது. 

வரலாறு முழுவதும் துன்பம் வருகையில் அழிந்து போன நாடுகள் கணக்கு வழக்கில்லாமல் இருக்கின்றன. (பலவற்றின் பெயர் வரலாற்றிலும் புராணங்களிலும் மட்டுமே உள்ளது - இன்று அவை இல்லவே இல்லை. வேடிக்கை என்னவென்றால், அவை தான் சிறந்த நாடுகள் / பொற்காலம் என்றெல்லாம் சொல்லி இன்புறும் அப்பாவிகள் நிறைய இருக்கிறார்கள்).

app_engine

Posts : 10097
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 31 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Thu Sep 01, 2016 5:18 pm

#737
இருபுனலும் வாய்ந்த மலையும் வருபுனலும் 
வல்லரணும் நாட்டிற்கு உறுப்பு

இருபுனல் என்பதற்கு இரு வகையில் பொருள் சொல்கிறார்கள் Smile

1. இரண்டு புனல் , இரண்டு வகை நீர். அகராதியும் பரிமேலழகரும் "மேல் நீர்" "கீழ் நீர்" என்று இதை விளக்குகிறார்கள். (அதாவது, மண்ணுக்கு மேல் / கீழ்). வேறு சிலர், ஆற்று நீர் / ஊற்று நீர் என்கிறார்கள்.

2. இன்னொன்று வினைத்தொகையாக "இரு" என்று எடுத்துக்கொண்டு, "இருந்த / இருக்கின்ற / இருக்கும்" புனல் என்ற விளக்கம். (நாட்டில் இருக்கும், ஏரி / குளம் / நிலத்தடிநீர் / கடல் இவையெல்லாம் "இருபுனல்").

இதில் இரண்டாவதே மிகப்பொருத்தமாக அடியேனுக்குப்படுகிறது. 

ஏனென்றால், இதே குறளில் பின்னால் வரும் "வருபுனல்" என்பதற்கு மாற்று மற்றும் துணையாக இதுவே பொருந்துகிறது Smile  வரு புனல் என்பதை எல்லோருமே, வரும் நீர் - வானிலிருந்து வரும் மழை / ஓடி வரும் ஆறு - என்று சொல்லுகிறார்கள். அப்படியானால், இருபுனல் = இருக்கும் நீர் என்பது தானே செய்யுளுக்குப் பொருத்தம்? அதை மட்டும் என் மேல் / கீழ் என்று பிரிக்கும் வேலை?  Smile

ஒரு சுவைக்காக அப்படி எடுத்துக்கொள்ளலாம் என்றாலும், அந்தப்பொருளையே சொல்லுக்கு அகராதிப்பொருள் ஆக்குவது கொஞ்சம் கூடுதல் என்று தோன்றுகிறது.

இருபுனலும் வாய்ந்த மலையும்
இருக்கின்ற நீர் வளமும் (கடல் / ஏரி / குளம் / கிணறு / ஊற்று), ஏற்றதாக அமைந்த மலையும்

வருபுனலும் வல்லரணும்
வருகின்ற நீர் வளமும் (மழை / ஆறு), வலிமையான அரணும்

நாட்டிற்கு உறுப்பு
நாட்டுக்கு (வேண்டிய) உறுப்புகள்

app_engine

Posts : 10097
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 31 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Thu Sep 01, 2016 8:39 pm

#738
பிணியின்மை செல்வம் விளைவின்பம் ஏமம் 
அணியென்ப நாட்டிற்கிவ் வைந்து

ஒரு நாட்டுக்கு என்னவெல்லாம் அழகு?

ஐந்து அணிகளைப் பட்டியல் இடுகிறார் இந்தக்குறளில்:

1.    பிணி (நோய்) இல்லாமை 
2.    செல்வம் 
3.    விளைச்சல் 
4.    இன்பம் 
5.    காவல் / பாதுகாப்பு 

பிணியின்மை செல்வம் விளைவின்பம் ஏமம்
பிணி (நோய்) இல்லாமை, பொருட்செல்வம் , நல்ல விளைச்சல், (மக்களின்) இன்பநிலை, (எல்லோருக்கும்) பாதுகாப்பு

இவ்வைந்து நாட்டிற்கு அணியென்ப
ஆகிய இந்த ஐந்தும் ஒரு நாட்டுக்கு அழகு எனப்படும்

நோயில்லை - உணவும் பொருளும் நிறைய உண்டு - காவலும் உண்டு, ஆகவே கவலைகள் ஒன்றுமில்லை.

என்றால், எல்லோரும் இன்பமாகத்தானே இருப்பார்கள்? பிறகு எதற்கு "இன்பம்" என்று இன்னொன்று ஐந்தாவதாக? செய்யுளின் வடிவுக்காக இப்படி ஒன்றை வெறுமெனச் சேர்த்திருக்கிறாரா வள்ளுவர்?

இருக்கலாம். 

என்றாலும், மேற்சொல்லப்பட்ட நான்கும் முழுவதுமாக உடல் / பொருள் மட்டும் சார்ந்தவை என்பதை நினைவில் கொள்ளுங்கள். (நலம், உணவு, பொருள், காப்பு). 

இவை கொண்டு மட்டுமே மனிதருக்கு இன்பம் நிறைவடையாது என்று சொல்ல வருகிறார் என நினைக்கிறேன்.  இன்னும் ஏதோ ஒன்று - அல்லது சில பல - வாழ்வில் இருந்தால் தான் இன்பம் முழுமை அடையும் என்கிறார். 

அது என்னவெல்லாம் என்பது ஆராயத்தூண்டுவது! Smile

app_engine

Posts : 10097
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 31 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 31 of 40 Previous  1 ... 17 ... 30, 31, 32 ... 35 ... 40  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum