Ilayaraja and Beyond
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

குறள் இன்பம் - #1 - #948

+3
fring151
Usha
V_S
7 posters

Page 4 of 40 Previous  1, 2, 3, 4, 5 ... 22 ... 40  Next

Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 4 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Fri Oct 04, 2013 5:33 pm

#61
பெறுமவற்றுள் யாமறிவது இல்லை அறிவறிந்த
மக்கட்பேறு அல்ல பிற


மனைவி குறித்த அதிகாரத்தின் இறுதியில் "மக்கள் பெறுதல் தான் அணிகலன்" என்று சொன்ன வள்ளுவர், தொடர்ந்து மக்கள் பெறுதலுக்கென்று ஒரு முழு அதிகாரம் ஒதுக்குகிறார்.

புதல்வரைப்பெறுதல் என்ற அந்த அதிகாரத்தில் நமக்கு மிகவும் பழக்கமான 'தந்தை மகற்காற்றும் உதவி', 'மகன் தந்தைக்காற்றும் உதவி' 'குழலினிது யாழினிது' போன்ற குறள்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது.

இவற்றுள் "நல்ல மக்களைப்பெறுதல் போன்றது இல்லற வாழ்வில் வேறொரு பேறும் இல்லை" என்று சொல்லும் முதல் குறள் தான் இது.

பெறுமவற்றுள்
ஒருத்தர் பெறக்கூடிய செல்வங்களில்

அறிவறிந்த மக்கட்பேறு அல்ல பிற
அறிவுடைய மக்களைப் பெறுதல் அல்லாத வேறொன்றும்

யாமறிவது இல்லை
எமக்குத் தெரிந்து இல்லை (அதாவது குறிப்பிடத்தக்க அளவில் இல்லை எனலாம்).

"யாமறிவது" என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. பிற்காலத்தில் "யாமறிந்த மொழிகளிலே" என்று பாரதி பாடியது நினைவுக்கு வருகிறது Smile

"கருத்து" சொல்லும் பழக்கம் வள்ளுவர் காலந்தொட்டு இருந்து வருகிறது என்பது தெளிவு Smile

app_engine

Posts : 10097
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 4 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Mon Oct 07, 2013 5:46 pm

#62
எழுபிறப்பும் தீயவை தீண்டா பழிபிறங்காப்
பண்புடை மக்கட் பெறின்


இந்தக்குறளில் வள்ளுவர் தெளிவாகவே "மீண்டும் மீண்டும் பிறவி எடுத்தல்" என்ற கொள்கையின் மீதுள்ள தமது நம்பிக்கையைத் தெளிவாகக் காட்டி விடுகிறார்!

பழிபிறங்காப் பண்புடை மக்கட் பெறின்
பழி இல்லாத நல்ல பண்பு உடைய பிள்ளைகளைப் பெற்றார்கள் என்றால், அப்படிப்பட்டவர்களுக்கு

எழுபிறப்பும் தீயவை தீண்டா
ஏழு (அல்லது ஏழேழு) பிறவியிலும் தீமை வந்து தீண்டாது (தொடாது)!

நல்ல பண்புகள் உடைய பிள்ளைகளைப் பெறுவோருக்கு நன்மைகளே வரும் - தீமைகள் அல்ல என்ற கருத்து கண்டிப்பாக எல்லோருக்கும் ஏற்புடையது தான்.

ஒரு பிறப்போ, மறு பிறப்போ - எப்படிப்பட்ட நம்பிக்கை உடையோருக்கும் அதில் மாற்றுக்கருத்து இருக்காது Smile

app_engine

Posts : 10097
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 4 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Tue Oct 08, 2013 4:30 pm

#63
தம்பொருள் என்பதம் மக்கள் அவர்பொருள்
தம்தம் வினையான் வரும்


குழந்தை பிறந்த உடனேயே பலரும் அதன் தகப்பனை "பெருமையடைந்த அப்பன்" (குறிப்பாக ஆங்கிலத்தில், "ப்ரௌட் ஃபாதர்") என்று சொல்லும் வழக்கத்தை நடைமுறையில் காண்கிறோம்.

எனக்கு மகன் பிறந்த போதும் இவ்வாறே சொன்ன என்னோடு உடன்-பணிபுரிவோரிடம் நான் சொன்னது : "பெருமையா அல்லது சிறுமையா என்பதை இன்னும் பல வருடங்கள் கழித்தே சொல்ல முடியும், தற்போதைக்கு நான் மகிழ்ச்சியான அப்பன் மட்டுமே" Smile

இந்தக்குறள் கிட்டத்தட்ட அந்தப்பொருளில் இருக்கிறது Smile

தம்பொருள் என்பதம் மக்கள்
தம் பிள்ளைகள் தாம் தமது செல்வம் (செல்வங்கள்) என்று சொல்லுவார்கள்

அவர்பொருள் தம்தம் வினையான் வரும்
அந்தப்பிள்ளைகள் எப்படிப்பட்ட செல்வங்கள் என்பது அவர்கள் ஒவ்வொருவரது செயல்களால் விளங்கும்!

உண்மையில் பிள்ளைகளைப் பெறுதல் என்பது இறைவன் அளித்த ஒரு உயிரியல் காரணியின் விளைவு மட்டுமே (அதிலும் குறிப்பாக, ஆணின் பங்கு சில மணித்துளிகளின் வேலையோடு முடிந்தது). இதில் அளவுக்கு மீறிய பெருமைப்படுவது தக்கதல்ல என்பது என் தாழ்மையான கருத்து.

அவர்களை நற்பண்புகள் உள்ள மக்களாக வளர்ப்பதில் தான் பெருமிதப்பட வழி இருக்கிறது!

app_engine

Posts : 10097
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 4 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Wed Oct 09, 2013 4:47 pm

#64
அமிழ்தினும் ஆற்ற இனிதே தம் மக்கள்
சிறுகை அளாவிய கூழ்


"கூழானாலும் குளித்துக்குடி" என்ற பழமொழி நமக்குச் சொல்லுவது இது தான் :
உணவு வகைகளில் மிகவும் தாழ்ந்த நிலையில் எண்ணப்படுவது கூழ் - மனிதர்களிலேயே ஏழ்மை நிலையில் உள்ளோரின் எளிமையான உணவு. (வெறும் தானியத்தை நீரில் குழைவாகக் காய்ச்சி விட்டால், அது தான் கூழ்).

உணவு வகைகளின் உச்சத்தில் உள்ளதோ அமிழ்தம் - தேவர்களின் உணவாக இந்தியத்தொன்மைகளில் கருதப்படுவது.

கூழ் எப்போது அமிழ்தத்தை விடவும் கூடுதல் சிறப்பான நிலையை அடையும்?

தம் குழந்தையின் கையால் அளாவப்பட்டால் அப்படி ஆகிவிடும் என்கிறார் வள்ளுவர்!

தம் மக்கள் சிறுகை அளாவிய கூழ்
தம் குழந்தைகளின் சின்னக்கைகள் அளாவிய கூழ்

அமிழ்தினும் ஆற்ற இனிதே
அமிழ்தத்தை விடவும் சிறப்பாக, சுவையானதாக ஆகி விடும்!

ஆதலினால், மக்கள் உள்ளோர், தம் குழந்தைகளின் கைகள் உழப்பிய உணவை உண்டு களிக்குமாறு கேட்டுக்கொள்ளுகிறோம்!

app_engine

Posts : 10097
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 4 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  Usha Wed Oct 09, 2013 4:54 pm

app_engine wrote:#64
அமிழ்தினும் ஆற்ற இனிதே தம் மக்கள்
சிறுகை அளாவிய கூழ்




தம் மக்கள் சிறுகை அளாவிய கூழ்
தம் குழந்தைகளின் சின்னக்கைகள் அளாவிய கூழ்

அமிழ்தினும் ஆற்ற இனிதே
அமிழ்தத்தை விடவும் சிறப்பாக, சுவையானதாக ஆகி விடும்!

ஆதலினால், மக்கள் உள்ளோர், தம் குழந்தைகளின் கைகள் உழப்பிய உணவை உண்டு களிக்குமாறு கேட்டுக்கொள்ளுகிறோம்!
romba romba nejam app...... kuzhandhai... naam seiyum velaiyai gavanichu thirupi seiyum. adhil indha ragalaiyum varum....  azhuku kaiyil.. nam saapidum thattil   .. or paathirathil.....kaiyai pottu. oru kozhapu kozhapitu pogum parunga... adhu dhan idhu..... 
azhagana kural.. azhagana vilakam app...... Nandri.......

Usha

Posts : 3146
Reputation : 15
Join date : 2013-02-14

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 4 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Wed Oct 09, 2013 6:14 pm

பாராட்டுக்கும், உங்கள் அனுபவம் பகிர்ந்ததற்கும் மிக்க நன்றி உஷாக்கா!

app_engine

Posts : 10097
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 4 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Thu Oct 10, 2013 5:21 pm

#65
மக்கள்மெய் தீண்டல் உடற்கின்பம் மற்றுஅவர்
சொற்கேட்டல் இன்பம் செவிக்கு


கூடுதல் குழப்பமில்லாமல் புரிந்து கொள்ளக்கூடிய இன்னொரு குறள் இது Smile

"மெய்" என்ற சொல்லுக்கு மட்டும் பொருள் தெரிந்தால் போதும்.
(வாலி : மெய்யென்று மேனியை யார் சொன்னது?
வேற யாரு, நம்ம வள்ளுவர் தாங்க!)

மக்கள்மெய் தீண்டல் உடற்கின்பம்
பெற்ற பிள்ளைகளின் உடலைத்தொடுதல் உடம்புக்கு இன்பம் தரும்

(தூக்கிக்கொண்டு நடத்தல், தழுவுதல், குளிப்பாட்டுதல், கட்டிக்கொள்ளுதல், முத்தமிடல், வெறும் சின்னத்தொடல், அணைத்தல், கை குலுக்கல் , உச்சி மோந்தல் - எத்தனை எத்தனை வகையான தீண்டல்கள்! எத்தனை எத்தனை இன்பங்கள்!)

மற்றுஅவர் சொற்கேட்டல் இன்பம் செவிக்கு
மேலும் அவர்கள் மொழி பேசுவதைக் கேட்பது தான் செவிக்கு எவ்வளவு இன்பம்!

சின்னக்குழந்தை சொற்களைப் பேசத்தொடங்கும் பொழுதுகளை நினைத்தாலே மேனி சிலிர்க்கிறது! அது எல்லா நாடு, இனம், மொழியினருக்கும் பொதுவான ஒரு இன்பம்!

ஆனால் வேடிக்கை என்ன தெரியுமா? கிட்டத்தட்ட நான் இப்போது கிழவன் என்றாலும் இன்றும் என் ஒலி தொலைபேசியில் கேட்கும் போது ஆயிரக்கணக்கான மைல்களுக்கு அப்பால் என் பெற்றோர் குரலில் தொனிக்கிறதே ஒரு குதூகலம்!

அவர்களுக்கு இன்றும் நான் சிறு பிள்ளை தானோ?

app_engine

Posts : 10097
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 4 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Fri Oct 11, 2013 9:17 pm

#66
குழல் இனிது யாழ் இனிது என்பதம் மக்கள்
மழலைச்சொல் கேளாதவர்


எல்லோருக்கும் மிகப்பழக்கமான குறள்!

நேரடியான பொருள் மிக எளிது:

தம் மக்கள் மழலைச்சொல் கேளாதவர்
தமது குழந்தைகள் மழலை மொழியில் பேசும் சொற்களைக் கேட்காதவர்கள் தான்

குழல் இனிது யாழ் இனிது என்ப
"புல்லாங்குழல் எவ்வளவு இனிமை" , "யாழ் இனிமையோ இனிமை" என்றெல்லாம் சொல்லிக்கொண்டிருப்பார்கள்!

இசை (மட்டும்) விரும்பிகள் இதைப்புரிந்து கொள்வது கடினம் தான்.

ஆனால், வாழ்வில் ஒரு முறையேனும் சிறு குழந்தையின் தொடக்கம் முதல் நன்றாகப்பேசும் வரையான பருவத்தை அனுபவித்தவர்களோ வள்ளுவர் சொன்னது மிகச்சரி என ஒத்துக்கொள்ளுவார்கள்!

இதில் கண்டிப்பாக உவமைக்கும் மேலான ஏதோ ஒரு அணி இருக்கிறது - ஆனால், என்ன அணி என்று தான் தெரியவில்லை Embarassed

app_engine

Posts : 10097
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 4 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Sat Oct 12, 2013 3:13 pm

#67
தந்தை மகற்காற்று நன்றி அவையத்து
முந்தி இருப்பச் செயல்


அவை என்பதற்கு அகராதியில் இரண்டு விதமான பொருள் காண முடிகிறது. ஒன்று, மனிதர்களின் கூட்டம். மற்றொன்று அறிஞர்களின் (கற்றோரின்) கூட்டம்.

இந்தக் குறளுக்கு கிட்டத்தட்ட எல்லா உரைகளுமே "கற்றோர் கூட்டம்" என்றே பொருள் சொல்வதைக்காண முடிகிறது.

தந்தை மகற்காற்று நன்றி
ஒரு தந்தை தன் பிள்ளைக்குச் செய்ய வேண்டியது என்னவென்றால்

அவையத்து முந்தி இருப்பச் செயல்
கற்றோர் கூட்டத்தில் நன்றாக (முதன்மையாக) விளங்கும்படி ஆக்குவது தான்!

இதன் உட்பொருள் "நல்ல கல்வி, திறமைகள் அடைய உதவுதல், ஏற்பாடு செய்தல்" என்றெல்லாம் கொள்ள முடியும்.

தமிழ்நாட்டின் தகப்பான்மார்கள், சொல்லப்போனால் இந்தியாவெங்கும் உள்ள தந்தைகள் இதை மிகவும் சிறப்பாகச் செய்ய முயல்வதை நாம் நாள்தோறும் பார்க்கிறோம்!

app_engine

Posts : 10097
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 4 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Mon Oct 14, 2013 6:22 pm

#68
ம்மின்தம் மக்கள் அறிவுடைமை மாநிலத்து
மன்னுயிர்க் கெல்லாம் இனிது


கடினமான சொற்கள் ஒன்றுமில்லை என்றாலும், இந்தக்குறளுக்கு இரண்டு விதத்தில் உரைகள் இருப்பதைக்காணலாம்.

இரண்டுக்கும் உள்ள வேற்றுமை, "தம்மின்" என்ற சொல்லை எந்த இடத்தில் இடுவது என்பதில் தான் Smile

அதாவது, 'தம்மின் அறிவு'  அல்லது 'தம்மின் இனிது'  என்று இரு விளக்கங்கள் Smile

ரெண்டு கூட்டமும் ஒத்துக்கொள்ளும் பகுதி இது:

தம் மக்கள் அறிவுடைமை
பிள்ளைகள் அறிவில் சிறந்து விளங்குவது

மாநிலத்து மன்னுயிர்க்கெல்லாம் இனிது
உலகில் வாழும் உயிர்களுக்கெல்லாம் இனியதாகும்

ரெண்டு கூட்டமும் வேறுபடும் விதம்:

தம்மின் தம் மக்கம் அறிவுடைமை:
தன்னை விடவும் பிள்ளைகள் அதிக அறிவுடன் விளங்குதல்

தம்மின் மன்னுயிர்க்கெல்லாம் இனிது:
தன்னை விட மற்ற உயிர்களுக்கு மிகவும் இனிமையானது

தமிழ்ச்செய்யுள்கள் பொருள் கொள்ளும்பொழுது சொற்களை ஆற்று நீர் போல ஒழுக்கிலோ அல்லது இங்கும் அங்கும் மாற்றியோ பல விதத்தில் செய்யும் வழக்கங்கள் இருப்பதால், ரெண்டு விதமாகவும் எடுத்துக்கொள்ளலாம்.

மொத்தத்தில், பிள்ளைகளை அறிவுடையவர்கள் ஆக்க உழையுங்கள் என்கிறார்!

app_engine

Posts : 10097
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 4 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Tue Oct 15, 2013 5:52 pm

குழலினிது குறளின் அணி குறித்து சொக்கன் அவர்களுடன் ட்விட்டரில் சிறு உரையாடல்:

https://twitter.com/r_inba/status/389782929166970880


நான்:
'குழல் இனிது யாழ் இனிது' திருக்குறள் என்ன அணி சார்?
https://ilayaraja.forumms.net/t118p75-68#10635

திரு.சொக்கன்:
பெற்றோரைப் பொறுத்தவரை இயல்பு நவிற்சி அணி, மற்றோருக்கு உயர்வு நவிற்சி அணி :-P

நான்:
நன்றி சார்!
ஆனால், அந்த "வேறுபடுத்தல் மாதிரி ஒப்பிடல்" நடக்கிறதே, அதற்கு ஏதாவது பெயர் இருக்க வேண்டுமே என்று தான் கேட்டேன் :-)

கொஞ்சம் "பாரி பாரி என்று சொல்வோரே, மாரியும் இருக்கு தெரியுமா" என்பது போன்ற தொனி இருக்கு. ஆனா இது கண்டிப்பா வஞ்சப்புகழ்ச்சி இல்லை

திரு.சொக்கன்:

இதுவோ:
http://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%BF

நான்:

நான் "வேறுபடுத்தல்" என்று சொன்னது தவறு. வேற்றுமை இல்லை, ஒப்பிட்டு உயர்வு சொல்லல் மட்டும் தானே? "ஆலையில்லா ஊருக்கு" மாதிரி. :-)

என்ன அணி என்றாலும், என்ன ஒரு அழகு!
ஒரு "கிறள்":
கவியரசன் பேரரசன் என்பார் வள்ளுவனின்
குழலினிது காணா தவர்!
:-)
Smile

app_engine

Posts : 10097
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 4 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Tue Oct 15, 2013 6:19 pm

#69
ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச்
சான்றோன் எனக்கேட்ட தாய்


இந்தக்குறளின் அடிப்படைப்பொருள் காண்தல் எளிது தான்.

தன் மகனைச்சான்றோன் எனக்கேட்ட தாய்
தனது மகன் "சான்றோன்" என்று மற்றவர்களால் அழைக்கப்படுவதை ஒரு தாய் கேட்டால்
 
ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும்
அவனைப் பெற்ற பொழுதில் அடைந்ததை விடவும் பெரிதான மகிழ்ச்சியை அடைவாள்!

இப்போது கேள்வி :

"சான்றோன்" என்ற சொல்லின் பொருள் என்ன?

அகராதி சொல்லும் பொருள் : அறிவொழுக்கங்களாற் சிறந்தவன்

இதை இப்படியும் விளக்கலாம் - "சான்றாக விளங்குபவன் சான்றோன்" Smile

அதாவது, சான்று = சாட்சி / எடுத்துக்காட்டு / நிரூபணம்.
"இப்படித்தான் மனிதன் வாழ வேண்டும், சிறந்து விளங்க வேண்டும்" என்று மற்ற எல்லாருக்கும் எடுத்துக்காட்டாகச் சொல்லத்தக்கவன் "சான்றோன்")

app_engine

Posts : 10097
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 4 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Wed Oct 16, 2013 3:48 pm

#70
மகன்தந்தைக்கு ஆற்றும் உதவி இவன்தந்தை
என்நோற்றான் கொல்எனும் சொல்


பெற்றோர் நமக்குச்செய்யும் நன்மைகளுக்கு நாம் என்ன விதத்தில் நன்றி சொல்ல முடியும்?

சிறந்த ஒரு வழி இந்தக்குறள் சொல்லித்தருகிறது - பலருக்கும் மிகவும் நன்கு அறிமுகம் ஆன திருக்குறள்!

மகன் தந்தைக்காற்றும் உதவி
ஒரு புதல்வன் தன் தந்தைக்குச் செய்யத் தக்க உதவி என்னவென்றால்

இவன் தந்தை என் நோற்றான் கொல் எனும் சொல்
"இவன் தந்தை என்ன தவம் செய்தானோ (இப்படி ஒரு மைந்தனை அடைய)" என்று மற்றவர்கள் புகழும் படி வாழ்வதே!

நல்ல ஒழுக்கங்கள், பண்புகளோடு வாழும் ஒரு மனிதனால் அவனைப்பெற்றவர்களுக்கும் வளர்த்தவர்களுக்கும் பெருமை!

அதை விடப்பெரிய கைம்மாறு ஒன்றுமில்லை என்று எடுத்துக் கொள்ளலாம் Smile

app_engine

Posts : 10097
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 4 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Thu Oct 17, 2013 4:54 pm

#71
அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர்
புன்கணீர் பூசல் தரும்

(அறத்துப்பால், இல்லறவியல், அன்புடைமை அதிகாரம்)

திருக்குறளிலேயே எனக்கு மிகவும் பிடித்த அதிகாரங்களில் ஒன்று!

பெரும்பாலும் எல்லாக்குறள்களுமே நன்கு அறிமுகம் ஆனவை! (பள்ளிக்காலத்தில் ஏதாவது ஒரு வகுப்பில் இந்தக்குறள்கள் இருந்திருக்க வேண்டும். மேலும், இலக்கிய மன்றம் / கட்டுரைப்போட்டி இன்ன பிற இடங்களில் இவை தவறாமல் சுட்டப்பட்ட பாடல்கள் என்பதில் ஐயமில்லை).

உள்ளே இருக்கும் அன்பு எப்படி வெளிப்படுகிறது என்று மனித உணர்வுகளை மிக அழகாக இந்தச்செய்யுள் சுட்டுவதைக் காண முடியும்:

அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்?
வெளியே தெரியாமல் அன்பை அடைத்து வைக்கத்தக்க தாழ்ப்பாள் ஏதாவது இருக்கிறதா? (இல்லவே இல்லை என்று பொருள்!)

ஆர்வலர் புன்கணீர் பூசல் தரும்
தாம் விரும்புவோரின் துன்பம் கண்ட உடன் வெளிவரும் கண்ணீரே அதை வெளிப்படுத்தி விடுமே!

(புன்கண் = துன்பம்)
 
ஆதலினால், கண்ணீர் விடமுடியாதவர்கள் உள்ளே அன்பு இருக்கிறதா இல்லையா என்று கண்டுபிடிப்பது மிகக்கடினம் தான்.

அதே போல நடிப்புக் கண்ணீர் விடும் பேர்வழிகளும் இருக்கிறார்கள் என்பதையும் மனதில் கொள்ள வேண்டும்.

மொத்தத்தில், இது பொதுவான பொருளில் - நெருங்கியோரின் துன்பம் அன்புடையோரால் தாங்க இயலாது என்ற அளவில் - புரிந்து கொள்ளலாம் Smile

app_engine

Posts : 10097
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 4 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Fri Oct 18, 2013 4:57 pm

#72
அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்
என்பும் உரியர் பிறர்க்கு


யேசுதாசின் இனிய குரலிலும் கே.வி.மகாதேவனின் இசையிலும் இந்தக்குறள் கேட்க இங்கே சொடுக்குங்கள்:
எனக்கு மிகவும் பிடித்த எம்ஜியார் பாடல்களில் ஒன்று!
 
எல்லோருக்கும் மிகவும் பழக்கமான குறள்.

தன்னலமற்ற வாழ்வு தான் அன்பின் சாரம் என்று மிக எளிதில் உணர்த்தும் அதிசயம் என்றே இதைப்புகழலாம்!

அன்பிலார் எல்லாம் தமக்குரியர்
அன்பில்லாதவர்கள் எல்லாம் தமக்கு வேண்டும் என்று தன்னலம் நாடுவார்கள்!

அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு
ஆனால் அன்புள்ளவர்களோ, தன் எலும்பையும் கூட மற்றவர்களுக்காகத் தருவார்கள். (அதாவது பொருட்கள் மட்டுமல்ல, உடலையும் மற்றவர்களுக்காக அர்ப்பணித்தல் அன்பின் பண்பு என்று அழகாகச் சொல்லுகிறார்)!

இறைவனின் உயர்ந்த பண்பு அன்பு என்று விவிலியம் சொல்லுகிறது. சொல்லப்போனால் "கடவுள் அன்பாகவே இருக்கிறார்" என்று அதில் எழுதப்பட்டிருக்கிறது Smile

ஒவ்வொரு நாளும் நம்முள்ளே இருக்கும் அன்பு எப்படி வெளிப்படுகிறது என்று சிந்திப்பது கண்டிப்பாக நம்மை உயர்ந்த உயிரியாக ஆக்கும்!

app_engine

Posts : 10097
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 4 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Mon Oct 21, 2013 6:37 pm

#73
அன்போடு இயைந்த வழக்கென்ப ஆருயிர்க்கு
என்போடு இயைந்த தொடர்பு


விளங்க சற்றே கடினமாக இருப்பதால், இந்தக்குறளுக்கு விதவிதமாய் உரைகள் இருப்பதைக்காணலாம்

அவற்றையெல்லாம் சற்றே மறந்து விட்டு, என் சிற்றறிவில் இதைப்புரிந்து கொள்ள முயலப்போகிறேன்.
(ஒத்துக்கொள்ள முடியவில்லை என்றால் , இங்கே சொடுக்கி  மு.க, மு.வ, சாலமன் பாப்பையா, பரிமேலழகர், மணக்குடவர் எல்லாரது உரையையும் படித்துக்கொள்ளுங்கள் Smile )

ஆருயிர்க்கு என்போடு இயைந்த தொடர்பு
அருமையான உயிருக்கு உடலோடு சேர்ந்திருக்கும் தொடர்பு
(என்பு என்றால் எலும்பு, இங்கே உடம்பு என்பது ஆகுபெயர்)

அன்போடு இயைந்த வழக்கென்ப
அன்போடு சேர்ந்திருக்கும் வாழ்க்கை நெறி எனலாம். (அதாவது ஒப்பிடலாம்).

உடலுக்கு உயிர் எவ்வளவு இன்றியமையாததோ அது போலத்தான் வழக்கங்களுக்கு (வாழ்க்கை நெறி அல்லது வழக்கு என்பதற்கு) அன்பும்!

அன்பில்லாத வாழ்க்கையும் உயிரற்ற உடலும் ஒன்றே!

app_engine

Posts : 10097
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 4 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Tue Oct 22, 2013 7:06 pm

#74
அன்புஈனும் ஆர்வம் உடைமை அதுஈனும்
நண்பு என்னும் நாடாச் சிறப்பு


மிகவும் பழக்கமான குறள்.

"தொடர் விளைவு" "சங்கிலி நிகழ்வு" என்றெல்லாம் அறிவியலில் சொல்வது போன்ற வடிவமைப்பு உள்ள ஒரு குறள் Smile

அன்புஈனும் ஆர்வம் உடைமை
அன்பு ஒருவருக்கு மற்றவரிடம் விருப்பம் கொள்ளும் தன்மையைத்தரும்

அதுஈனும்  நண்பு என்னும் நாடாச் சிறப்பு
அப்படிப்பட்ட ஆர்வம் உடைமை, நட்பு என்னும் அளவில்லாத சிறப்பைக் கொடுக்கும். (நிறைய நண்பர்களையும் தரும் என்று சொல்லலாம்).

அதாவது, அன்பு --> ஆர்வம் --> நட்பு!

மனதில் அன்பு நிறைந்து விளங்குவோருக்கு நல்ல நண்பர்கள் கிடைப்பார்கள் என்பது உண்மை தான்!

app_engine

Posts : 10097
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 4 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Wed Oct 23, 2013 11:40 pm

#75
அன்புற்று அமர்ந்த வழக்கென்ப வையகத்து
இன்புற்றார் எய்தும் சிறப்பு

பொதுவாகப்பார்த்தால் குழப்பம் ஒன்றும் இல்லை. ஆனால், முற்கால உரையாசிரியர்கள் இதை மறுபிறப்பு என்றெல்லாம் சேர்ப்பதைக் காண முடிகிறது.

ஆகவே, நமக்குப்புரிந்த மற்றும் ஏற்புடைய பொருளைப்பார்ப்போம் Smile

வையகத்து இன்புற்றார் எய்தும் சிறப்பு
உலகில் இன்பத்தோடு வாழுவோரின் சிறப்பு

அன்புற்று அமர்ந்த வழக்கென்ப
அவர்கள் அன்பு பொருந்தினவர்களாக வாழ்ந்ததன் விளைவு தான் என்று கூறலாம்.

இந்தக்குறளைப் பொறுத்த மட்டில் நான் பிற்கால உரையாசிரியர்கள் (மு.வ. / மு.க. போன்றோர்) கூட்டத்தில் இருக்கிறேன் என்பது தெளிவு Smile

முற்காலத்தோர், "வையகம்" என்ற சொல்லை இடம் மாற்றிப்பொருள்  கொண்டதால் இருக்கலாம் மறுபிறவி / வேறு உலகு எல்லாம் வருதல்!

app_engine

Posts : 10097
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 4 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Thu Oct 24, 2013 3:17 pm

#76
அறத்திற்கே அன்பு சார்பென்ப அறியார்
மறத்திற்கும் அஃதே துணை


இந்த அதிகாரத்தின் மற்ற குறள்களில் இருந்து மிகவும் வேறுபட்ட ஒன்று. புதுமையான சில கருத்துகள் இதில் காண முடியும்!

1. அறமும் மறமும் Smile  நாம் முன்னமேயே வரையறுத்த படி அறம் = நன்மை செய்தல். அதை மறத்திலிருந்து வேறு படுத்துவதன் மூலம் வள்ளுவர் ஒரு புதுக்கருத்தைத் தெளிவு படுத்துகிறார் என்றே நான் நினைக்கிறேன் - அதாவது, எல்லாம் நன்மையாகவே இருக்கும் ஒரு நிலையில் மறத்துக்கு (வீரம் / சண்டை போன்றன) வேலையில்லை என்று சொல்ல வருகிறாரோ?

2. அறம் வேறு அன்பு வேறு என்று தெளிவுபடுத்துவது இன்னொரு அழகான கருத்து. அறம் என்பது செயல், அன்பு என்பது அதற்கான உந்துவிக்கும் ஆற்றல். அறத்தின் வழி நாம் அன்பின் வெளிப்பாட்டைக் காணலாம் என்றாலும், இரண்டும் வேறு வேறு.

3. வேண்டி வரும்போது, மறச்செயல்கள் செய்யலாம், என்றாலும் அதற்கும் உந்துவிக்கும் ஆற்றல் அன்பாக இருக்கவேண்டுமே ஒழிய அறமற்ற கோபம், மூர்க்கம், வெறி போன்றவற்றின் வெளிப்பாடாக இருத்தலாகாது!

அறியார்  அறத்திற்கே அன்பு சார்பென்ப
அறிவில்லாதவர்கள் தான் (அறியாமையால் தான்) சொல்லுவார்கள் "அறத்திற்கே அன்பு துணை" என்று.

மறத்திற்கும் அஃதே துணை
வீரத்தும் அதுவே தான் (அதாவது அன்பு தான்) துணை!

அன்பே உருவான இறைவன் சில சூழ்நிலைகளில் வீரச்செயல்கள் செய்ய நேரிட்டால் (கெட்டோரை அழித்தல்), அதற்கும் உந்துவிக்கும் ஆர்வம் / உள் ஆற்றல் அன்பு தான் என்பதை இதற்கு எடுத்துக்காட்டாகக் கொள்ளலாம்!

app_engine

Posts : 10097
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 4 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Thu Oct 24, 2013 3:48 pm

நமது தளத்தின் "தேடல்" திறனை விட ட்விட்டரின் திறன் கூடுதல் என்பது தெரிந்ததே. நாள்தோறும் ட்விட்டரில்  குறள் பதிப்பின் வலைமுகவரியைக் கீச்சி வருகிறேன்.

ஆதலினால் குறிப்பிட்ட குறள் குறித்த பதிப்பை எளிதில் தேட ட்விட்டர் ஒரு வழி!

app_engine

Posts : 10097
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 4 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Fri Oct 25, 2013 7:31 pm

#77
என்பிலதனை வெயில்போலக் காயுமே
அன்பிலதனை அறம்


இங்கே அறம் என்பது சீற்றம் என்ற பொருளில் வருகிறது Smile

வேறு சொற்களில் சொன்னால் - நமக்குப் பழக்கப்பட்ட "நன்மை" என்ற பொருளில் மட்டும் அல்ல - "நேர்மை" என்ற பொருளிலும் அறம் புரிந்து கொள்ளப்பட முடியும் என்று காண்கிறோம்.

நேர்மையும் மனசாட்சியும் ஒன்றோடு ஒன்று மிகவும் நெருங்கியவை என்பதை இந்தக்குறள் சுட்டிக்காட்டுவதாகக் கொள்ள  முடியும்.

அன்பிலதனை அறம்
அன்பில்லாதவரை நேர்மையான மனசாட்சி (அறம்)

என்பிலதனை வெயில்போலக் காயுமே
எலும்பு இல்லாத உயிரினை ("புழுவினை") வெயிலின் வெம்மை வதைப்பது போல வருத்தும்!

மிக அழகான உவமை!

அன்பு இல்லாமல் செயல்கள் புரிவோரின் நிலைமை எவ்வளவு கடினமாக ஆகி விடும் என்று நமக்கு "சுரீர்" என்று உறைக்குமாறு வள்ளுவர் எழுதிய குறள்!

app_engine

Posts : 10097
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 4 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Mon Oct 28, 2013 7:39 pm

#78
அன்பகத்தில்லா உயிர்வாழ்க்கை வன்பாற்கண்
வற்றல் மரந்தளிர்த் தற்று

இல்பொருள் உவமையணி - அதுவும் எப்படி ஒரு வலிமையான விதத்தில் அன்பின் தேவையை வள்ளுவர் சொல்லுகிறார்!

சொற்களைப் பொறுத்த மட்டில் இங்கே ஒரு சின்ன நினைவூட்டல் - "அற்று" என்பதற்கு "அது போல" என்ற ஒரு பொருளும் இருக்கிறது Smile

அன்பகத்தில்லா உயிர்வாழ்க்கை
உள்ளத்தில் அன்பு இல்லாத ஒருவரின் உயிர் வாழ்க்கை

வன்பாற்கண்
வலிமையான (பாறைகள் நிறைந்த) பாலை நிலத்தில் (வறண்டு போன பாலைவனத்தில்)

வற்றல் மரம்
பட்டுப்போன மரம்

தளிர்த்தற்று
தளிர் விடுவது போன்றதாகும்!

வேறு சொற்களில் சொன்னால், அது வாழ்க்கையே அல்ல!

செத்துப்போனதற்குச் சமம்!

app_engine

Posts : 10097
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 4 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Tue Oct 29, 2013 5:26 pm

#79
புறத்துறுப் பெல்லாம் எவன்செய்யும் யாக்கை
அகத்துறுப்பு அன்பிலவர்க்கு


இரு விதமான உரைகள் இந்தக்குறளுக்கு இருப்பதைக்காணலாம்.

யாக்கை என்னும் சொல்லை இரு விதத்தில் பார்ப்பதால் வரும் விளைவு Smile

ஒன்று அதன் நேரடியான பொருள் - உடம்பு - என்று கருதி எழுதப்பட்ட உரை. மற்றது, இல்லறவியல் என்ற நோக்கத்தில், அதை "இல்லம்" என்று ஆகுபெயராக்கி எழுதப்பட்ட உரை.

நாம் நேரடிப்பொருள் பார்ப்போம் - ஆகுபெயர் உரை வேண்டுவோர் பரிமேலழகர் மற்றும் சாலமன் பாப்பையா சொல்லுவதை இங்கே சொடுக்கிக்காணலாம் Smile

யாக்கை அகத்துறுப்பு அன்பிலவர்க்கு
உடலின் உள்ளான உறுப்பாக அன்பில்லாதவர்களுக்கு (உள்ளே / உள்ளத்தில் அன்பற்ற மனிதருக்கு)

புறத்துறுப்பெல்லாம் எவன்செய்யும்
வெளியில் இருக்கும் உறுப்புகளால் என்ன பயன்? (அவை நன்றாக இருந்தாலும் இல்லாவிட்டாலும் ஒரு பயனும் இல்லை)

அன்பற்ற அழகு வீண் என்ற கருத்து மிகவும் ஏற்புடையதே!

app_engine

Posts : 10097
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 4 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Wed Oct 30, 2013 5:01 pm

#80
அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு


முந்தைய குறளின் ஒரு "பயமுறுத்தும் படமாக்கல்" என்று இதனைக்கூறலாம் Smile

அன்பில்லாத ஒரு ஆள் வெறும் பிணம் என்று அடித்துச்சொல்லும் குறள்!

அன்பின் வழியது உயிர்நிலை
அன்பின் வழியில் இயங்குவது தான் ஒரு ஆள் உயிருள்ள நிலையில் இருப்பதை அறிவிப்பது!

அஃதிலார்க்கு
அந்த அன்பு இல்லாதவருக்கோ

என்புதோல் போர்த்த உடம்பு
எலும்பைத் தோலால் போர்த்தி வைத்த வெற்று உடம்பு தான். (அதாவது, உயிரற்ற பிணம் / நடைப்பிணம் என்றெல்லாம் சொல்லலாம்).

நேரடியாகப்பிணம் என்று பொருள் கொள்ளாவிட்டாலும் "இப்படிப்பட்ட ஒரு ஆள் வாழ்வதில் ஒரு பயனும் இல்லை - வீண் " என்ற அளவில் புரிந்து கொள்வது கடினம் அல்ல Smile

app_engine

Posts : 10097
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 4 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Thu Oct 31, 2013 9:31 pm

#81
இருந்தோம்பி இல்வாழ்வதெல்லாம் விருந்தோம்பி
வேளாண்மை செய்தற்பொருட்டு

(அறத்துப்பால், இல்லறவியல், விருந்தோம்பல் அதிகாரம்)

இன்று காலை "அடுத்த குறள் என்ன?" என்று பார்த்த போது இன்பமான அதிர்ச்சி - விருந்தோம்பல் அதிகாரம் Smile

மதிய உணவு இங்கு ஒரு அமெரிக்கத்தம்பதிக்கு விருந்தோம்பல் என்ற தற்செயல் நிகழ்வோடு பொருந்தியதால் அந்த வியப்பு!

தமிழர்கள் விருந்தோம்பலுக்கு எவ்வளவு முதன்மை அளித்தவர்கள் என்பதை இந்த அதிகாரம் நமக்கு அழகாகச் சொல்லுகிறது! அதிலும், இந்த முதல் குறள் மிக வலிமையாக, இல்வாழ்வின் குறிக்கோளே அது தான் என்பது போலச்சொல்வது என்ன ஒரு அழகு!

இருந்தோம்பி இல்வாழ்வதெல்லாம்
இல்லத்தில் இருந்து, பொருட்களைக்காத்து வாழ்வதெல்லாமே

விருந்தோம்பி வேளாண்மை செய்தற்பொருட்டு
விருந்தினரைப்போற்றி அவருக்கு வேண்டிய உதவிகள்  செய்வதற்குத்தான்! (வேளாண்மை = உதவி, கொடை என்றெல்லாம் அகராதி சொல்கிறது).

இல்வாழ்வில் குறிப்பிடத்தக்க பங்கு விருந்தோம்பலுக்கு இருக்கிறது என்று சொல்லும் இந்தக்குறள், "அழைப்பு மணியின் தேவை இல்லாமல் " வாழ்ந்திருந்த (அதாவது எப்போதும் கதவுகள் திறந்திருந்த) நாட்டுப்புற வாழ்வை எனக்கு நினைவூட்டியது!

அடடா, என்ன அருமையான நாட்கள் அவை!

app_engine

Posts : 10097
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 4 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 4 of 40 Previous  1, 2, 3, 4, 5 ... 22 ... 40  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum