Ilayaraja and Beyond
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

குறள் இன்பம் - #1 - #948

+3
fring151
Usha
V_S
7 posters

Page 20 of 40 Previous  1 ... 11 ... 19, 20, 21 ... 30 ... 40  Next

Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 20 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Thu Jun 18, 2015 10:20 pm

#444
தம்மிற் பெரியார் தமரா ஒழுகுதல் 
வன்மையுளெல்லாந் தலை

இந்தக்குறளை மேற்கோள் காட்டி அகராதி "தமரா" என்பதைச் சிறந்தார், அறிவுரை கூறி வழி நடத்துவோர் என்று விளக்குகிறது.

"தம்மிலும் பெரியாரை வழிகாட்டிகளாகக் கொண்டிருப்போர் வலியவர்" என்று மொத்தக்கருத்து.

உரைகள் எல்லாம் நாம் முன்குறளில் கண்ட "தம்முடையவர் / உறவினர்" என்ற பொருளையே சொல்வதைக்காண முடிகிறது. அதுவும் பொருத்தமாகத்தான் இருக்கிறது

தம்மிற் பெரியார்
தன்னை விடவும் சிறந்த பெரியார்

தமரா ஒழுகுதல்
சுட்டிக்காட்டும் (அறிவுரை சொல்லும்) வழியில் நடத்தல்

வன்மையுளெல்லாந் தலை
வலிமைகள் எல்லாவற்றிலும் தலையானது! (உயர்ந்தது / முதலானது)

"யாரெல்லாம், எதிலெல்லாம் தன்னை விட மேலானவர்" என்று மன்னன் தெரிந்திருப்பது இந்த வலிமையின் திறவுகோல் என்பது அடிப்படை Smile

app_engine

Posts : 10097
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 20 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Mon Jun 22, 2015 11:13 pm

#445
சூழ்வார்கண்ணாக ஒழுகலான் மன்னவன் 
சூழ்வாரைக் சூழ்ந்து கொளல்

சூழ் என்ற சொல் வைத்து விளையாடல் Smile

அதற்கு ஒன்றுக்கு மேல் பொருள் உள்ளதால், விளையாட்டிலும் "சூழ்ச்சி" வருகிறது Smile

சுற்றி / சுற்றிலும் என்பது பொதுவான பொருள். 

சூழ்ச்சி என்ற வேறொரு பொருளும் நான் அறிந்ததே.

இவை அல்லாமல், ஆராய்தல், தேர்ந்தெடுத்தல், ஆலோசனை என்றெல்லாமும் இதே "சூழ்" என்ற சொல்லுக்கு அகராதி சொல்லுகிறது.

சூழ்வார் மன்னவன் கண்ணாக ஒழுகலான்
மன்னனைச் சுற்றி இருப்பவர்கள் (பெரியோர் / அமைச்சர்கள் / வழிநடத்துவோர்) அவனது கண்ணாகச் செயல்படுவதால் 

சூழ்வாரைக் சூழ்ந்து கொளல்
அந்நிலையில் வைப்போரை (சூழ்வாரை) அவன் நன்கு ஆராய்ந்து தேர்ந்தெடுக்க வேண்டும்

சரியான அறிவுரை Smile

app_engine

Posts : 10097
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 20 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Thu Jun 25, 2015 2:38 am

#446
தக்காரினத்தனாய்த் தானொழுக வல்லானைச் 
செற்றார் செயக்கிடந்ததில்

எளிமையான குறள்.

செற்றார் = பகைவர் / எதிரிகள்.

நல்ல பெரியோரின் துணையுடன் நாம் நிற்கையில் பகைவர்களால் ஒன்றும் செய்ய இயலாது என்று மன்னனுக்கு அறிவுரை சொல்லுகிறார். 

தக்காரினத்தனாய்த் தானொழுக வல்லானை
தகுதி மிக்கவர்கள் (பெரியோர்) தன்னுடன் சேர்ந்திருந்து நடக்க வல்லவனை

செற்றார் செயக்கிடந்ததில்
(எதிர்த்து) எதிரிகள் / பகைவர்கள் செய்யக்கூடியது ஒன்றுமில்லை

மன்னா, நல்ல பெரியோர் உன்னோடிருகையில் தீங்கு உன்னை நெருங்காது Smile

app_engine

Posts : 10097
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 20 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Fri Jun 26, 2015 9:59 pm

#447
இடிக்குந் துணையாரை யாள்வரை யாரே 
கெடுக்குந் தகைமையவர்

திருக்குறளிலேயே இப்போது தான் "இடித்தல்" என்ற சொல்லை முதன்முதலாகக் காண்கிறோம் என்று நினைக்கிறேன் Smile

(இதுவரை சேர்த்து வைத்த எல்லாப்பதிவுகளிலும் தேடினேன், இந்தச்சொல் தட்டுப்படவில்லை)

கடிந்து கொள்ளுதல், திருத்துதல், குறைகூறிச் சரிசெய்தல், அடித்து வழிக்குக் கொண்டுவருதல், "தட்டி வைத்தல்" என்றெல்லாம் புரித்து கொள்ளலாம் Smile

அதற்கு வானிலிருந்து வரும் இடி உவமை. 

பொருள் காண்பது என்னவோ மிக எளிதே Smile

இடிக்குந் துணையாரை யாள்வரை
இடித்துரைக்கும் (பெரியோரைத்) துணையாகக் கொண்டிருக்கும் மன்னனை

கெடுக்குந் தகைமையவர் யாரே?
கெடுக்க / அழிக்க வல்லவர்கள் யார்? (யாருமில்லை என்று சுருக்கம்)

திருத்தல்களை ஏற்றுக்கொண்டு முன் செல்லும் மன்னனை எதிர்த்தழிக்க வல்லோர் இல்லை.  
(மற்றும், அவனுக்கு நல்ல இடிகள் கொடுக்கும் பெரியோர் இருந்தால் தான் இப்படிப்பட்ட நிலை கிடைக்கும்.)

app_engine

Posts : 10097
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 20 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Mon Jun 29, 2015 6:20 pm

#448
இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்
கெடுப்பாரிலானுங் கெடும்

அடுத்த "இடி"க்குறள் - இது பலருக்கும் நன்கு அறிமுகமான ஒன்று Smile

மன்னனுக்கு மட்டுமல்ல, நமக்கு எல்லோருக்குமே வேண்டிய மிக ஆழமான ஒரு கருத்து இந்தக்குறளில் இருக்கிறது.

அது தான் "கெடுப்பாரிலானும்" Smile

தற்பொழுது நம் ஒவ்வொருவருக்கும் உள்ளேயே ஒரு "கெட்டவன் / கெட்டவள் / கெடுப்பவன் / கெடுப்பவள்" இருக்கும் அரிய உண்மையை இந்தக்குறளில் பொதிந்து வைத்திருக்கிறார்!

அப்படியாக, வெளியில் இருந்து யாரும் வந்து நம்மைக்கெடுக்க வேண்டாம், நமக்குள்ளேயே தீது இருக்கிறது என்று வெளிப்படுத்தும் செய்யுள்!

இடித்துத் திருத்த ஆளில்லா விட்டால், மன்னன் போலவே நாமும் கெட்டழிவோம் என்று எச்சரிக்கை தரும் நல்ல குறள்!

இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்
இடித்துரைக்கும் (பெரியோர்) இல்லாத காவலற்ற மன்னன்

கெடுப்பாரிலானுங் கெடும்
கெடுக்க (அழிக்க) வேறு யாரும் இல்லாவிட்டாலும், (தானே செய்யும் தவறுகளால்) கெட்டழிவான்!

app_engine

Posts : 10097
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 20 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Tue Jun 30, 2015 7:43 pm

#449
முதலிலார்க ஊதியமில்லை மதலையாஞ் 
சார்பிலார்க்கில்லை நிலை

மதலை = பற்றுக்கோடு, தூண் என்று அகராதி சொல்லி, இந்தக்குறளை மேற்கோள் காட்டுகிறது Smile

பெரியாரைத் துணைக்கு வைத்துக்கொள்வது ஒரு கட்டடத்துக்குத் தூண் போன்றது என்பது அழகான உவமை.

அது மட்டுமல்ல, இன்னொரு உவமையும் சொல்லுகிறார் - முதல் இல்லாமல் ஊதியமில்லை என்று Smile

முதலிலார்க ஊதியமில்லை
(வணிகத்தில்) முதல் இடாமல் ஊதியம் / வருமானம் இல்லை 

மதலையாஞ் சார்பிலார்க்கில்லை நிலை
அது போல, தன்னைத்தாங்கும் (பெரியோர் என்ற) சார்பு இல்லாதவர்களுக்கு நிலை இல்லை!

தாங்கும் தூண், வணிகத்தின் முதல் - என்ன அழகான இரு உவமைகள் ஒரே குறளில் Smile

நமக்கு முதல் மற்றும் தூண் நம்மோடிருக்கும் இடித்துரைக்கும் பெரியோர் தாம்!

app_engine

Posts : 10097
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 20 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Wed Jul 01, 2015 8:45 pm

#450
பல்லார் பகைகொளலிற் பத்தடுத்த தீமைத்தே 
நல்லார் தொடர்கை விடல்

என்ன அழகான ஒப்பீடு இங்கே Smile

நல்ல பெரியோரின் கூட்டு இல்லாத நிலை, நிறையப் பகைவர் உள்ள நிலையை விடவும் கொடுமையானது என்கிறார் வள்ளுவர்! (மிக மிகச்சரி!)

நல்லார் தொடர்கை விடல்
நல்லோரின் தொடர்பைக் கைவிடுதல் (பெரியோர் துணையாக இல்லாமல் இருத்தல்)

பல்லார் பகைகொளலிற்
பலரின் பகையைப் பெறுவதை விட 

பத்தடுத்த தீமைத்தே
பத்து மடங்கு (அல்லது பல மடங்கு) தீமை தருவதாகும்!

பத்து என்பது இங்கே மோனையில் வந்த ஒரு எண் என்றே நினைக்கிறேன். 

எப்படி இருந்தாலும், இந்த ஒப்பீடு எண் / பெருக்கல் மடங்கு என்ற அளவில் அல்லவே Smile

தீமை அரசனை அணுக எதிரிகள் வேண்டாம். 

நல்லோர் உடன் இல்லாதிருத்தல் தாம் பெரிய தீமை!

app_engine

Posts : 10097
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 20 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Thu Jul 02, 2015 4:13 am

450 ஆச்சு, அதாவது எண்ணிக்கையில் 1/3 கடந்தாச்சு!

1330-ல் மூன்றிலொரு பங்கு படித்து சேகரித்தவற்றை .pdf உருவில் பகிர்கிறேன் Smile

http://www.mediafire.com/download/dplx3rm195wjmam/kural_inbam_450.pdf

app_engine

Posts : 10097
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 20 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Tue Jul 07, 2015 1:12 am

#451
சிற்றினம் அஞ்சும் பெருமை சிறுமைதான் 
சுற்றமாச் சூழ்ந்து விடும்
(பொருட்பால், அரசியல், சிற்றினஞ்சேராமை)

சிறுமையான எண்ணம் கொண்டவர்கள் எல்லாரும் சிற்றினம் என்று முதலிலேயே வரையறுத்துக்கொள்வோம்.

அப்படித்தான் வள்ளுவர் எண்ணியிருந்தார் என்று அணுகினால் குழப்பமில்லை. (அல்லாமல் பிறந்த இனம், மண்ணின் இனம் என்றெல்லாம் பிரிக்கத்தொடங்கினால் உவப்பிருக்காது Smile )

மேலும், இங்கு பெருமை என்பது பெரியோரின் பண்பு என்று மனதில் கொள்ள வேண்டும். உயர்ந்த சிந்தனைகள், பெருந்தன்மை என்றெல்லாம் கொள்ளவேண்டும் (அகந்தை அல்ல).

சிற்றினம் அஞ்சும் பெருமை
பெருந்தன்மை உள்ளோர் சிறுமை உள்ளோரை அஞ்சி ஒதுங்குவர்

சிறுமைதான் சுற்றமாச் சூழ்ந்து விடும்
(மாறாக) சிறுமை உடையோர் அதே பண்பு உள்ளவர்களைச் சூழ்ந்து உறவாக்கிக் கொள்வர்!

ஒரு தன்மை உள்ளோர் கூடிக்குலாவுவதில் வியப்பேது!

"இனம் இனத்தோடு சேரும்" என்ற பழமொழி நினைவுக்கு வருகிறது Smile

app_engine

Posts : 10097
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 20 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Tue Jul 07, 2015 10:54 pm

#452
நிலத்தியல்பால் நீர்திரிந்தற்றாகும் மாந்தர்க்கு 
இனத்தியல்பதாகும் அறிவு

அழகான உவமையுடன் கூடிய குறள் - பள்ளிக்காலத்தில் பயின்ற ஒன்றும் கூட Smile

நீரின் தன்மை அது வீழும் நிலத்தைப் பொறுத்து மாறுவது போல மனிதர் அவர் கூடும் குழுவின் தன்மையில் நடப்பது - மிகப்பொருத்தமான, அழகான உவமை!

நிலத்தியல்பால் நீர்திரிந்தற்றாகும்
(தான் சேரும் / வீழும்) நிலத்தின் தன்மையால் நீர் மாற்றமடைந்து நிலத்தின் தன்மை உள்ளதாக ஆகிவிடும்
(செம்மண், உப்பு நிலம் போன்ற எடுத்துக்காட்டுகள் மனதில் வருகின்றன)

மாந்தர்க்கு இனத்தியல்பதாகும் அறிவு
(அது போல) மாந்தர்க்கு அவர் சேரும் இனத்தின் அறிவு / தன்மை வந்து விடும்!

சிற்றினம் சேர்ந்தால் சிறுமையும் பெரியோருடன் சேர்ந்தால் பெருமையும் வரும்!

app_engine

Posts : 10097
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 20 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Wed Jul 08, 2015 9:29 pm

#453
மனத்தானாம் மாந்தர்க்குணர்ச்சி இனத்தானாம்
இன்னான் எனப்படுஞ்சொல்


சட்டென்று வள்ளுவர் ஒரு பெரிய கொள்கையை இங்கே அறிமுகம் செய்கிறார்!

"இன்னான்" என்று அறியப்படுவது சேர்க்கையின் அடிப்படையில் Smile

மனிதர்கள் மற்றவர்களை மதிப்பீடு செய்வதிலும், அடையாளம் காண்பதிலும் குழு / இன அடிப்படைகள் என்றுமே உள்ளன என்பது தெளிவு. அதிலும், 'சேர்க்கை' அடிப்படையில் சில பண்புகள் / செயல்பாடுகள் வருவதை நாம் அடிக்கடி காண்பதால் இவ்விதமான "கருத்து உளவாக்குதல்" இன்னும் வலிமை அடைகிறது.

"அந்தத்தெருவில் உள்ளவன் எல்லாம் இப்படித்தான் இருப்பான் / அந்தப் பள்ளிக்கூடத்தில் படிக்கும் பெண்களே அப்படித்தான்" போன்ற மதிப்பீடுகள் (பல நேரங்களிலும் தவறாகவும்) செய்யப்படுகின்றன.  

வள்ளுவர் காலத்திலும் அப்படித்தான் என்று காண்கிறோம்.

மனத்தானாம் மாந்தர்க்குணர்ச்சி
மாந்தரின் உணர்வு / உணர்ச்சிகள் மனத்தால் உண்டாகுபவையே. (என்றாலும்)

இன்னான் எனப்படுஞ்சொல் இனத்தானாம்
"இப்படிப்பட்டவர்" என்று அறியப்படுவது அவர்கள் சேரும் இனத்தைப் பொறுத்தே ஆகும்!

நம்முடைய கூட்டாளிகள் யார் என்பது நம்முடைய தன்மைகளை மட்டுமல்ல, அடையாளத்தையும் தீர்மானிக்கும்.

ஆதலால், சிறுமை பிடித்தவர் கூட்டு தவிர்க்க வேண்டும் என்கிறார்!

app_engine

Posts : 10097
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 20 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Fri Jul 10, 2015 11:16 pm

#454
மனத்துளதுபோலக் காட்டி ஒருவற்கு 
இனத்துளதாகும் அறிவு

மீண்டும் மனம் / இனம் இந்தக்குறளில் Smile

இங்கே "அடையாளம்" என்பது மாறி "அறிவு" என்றே வருவது கொஞ்சம் உட்கொள்ளக் கடினமானது தான்.

என்றாலும், "பெரும்பாலோர்" அளவில் அது சரியே என்று ஒத்துக்கொள்ள வேண்டி இருக்கிறது. 

சேர்க்கை அடிப்படையிலேயே பெரும்பாலோர் அவர்களது புரிதல்கள், அறிவு, நம்பிக்கைகள் எனப் பலவற்றையும் மட்டுப்படுத்தி வாழ்வது கண்கூடு. சிறுபாலோர் மட்டுமே தனித்தன்மை (அல்லது காட்சி அளவில் தனித்தன்மை) பெற விழைகின்றனர் என்பது நாம் காணும் உண்மை

ஒருவற்கு அறிவு மனத்துளதுபோலக் காட்டி
ஒருவரது அறிவு அவரது மனத்தில் உள்ளது / மனத்திலிருந்து வருவது என்று தோன்றும் 

இனத்துளதாகும்
(ஆனால், உண்மையில்) அது (சேருகின்ற) இனத்தால் உள்ளதாகும்!

சிறுமை பிடித்தவர்களின் கூட்டத்தில் எப்போதும் இருந்தால் நம் அறிவும் சிறுமைப்படும், மனதின் திறனும் குறைந்து போகும் என்று வள்ளுவர் எச்சரிக்கிறார் என்று கொள்ளலாம்!

app_engine

Posts : 10097
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 20 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Mon Jul 13, 2015 7:59 pm

#455
மனந்தூய்மை செய்வினை தூய்மை இரண்டும் 
இனந்தூய்மை தூவா வரும்

தூ(வா) என்பதற்கு வலிமை / பற்றுக்கோடு / பின்தாங்குதல் என்றெல்லாம் அகராதி பொருள் சொல்கிறது.

மற்றபடி, எல்லாமே எளிதான சொற்கள் தாம்  அவ்வண்ணமே, பொருளும் எளிது.

மனந்தூய்மை செய்வினை தூய்மை இரண்டும்
மனதின் தூய்மை, செய்யும் வினைகளின் தூய்மை ஆகிய இவ்விரண்டும்

இனந்தூய்மை தூவா வரும்
(அவர்கள் சேரும்) இனத்தின் தூய்மையின் அடிப்படையிலேயே வரும்

சிறுமை பிடித்தவர்களோடு சேர்ந்து நடந்தால், ஒருவரது மனம் தூய்மையாக இராது.

மனம் தூய்மையாக இராதவரின் செயல்களும் உருப்படப்போவதில்லை.

ஆக, மொத்தத்தில் அழுக்கான ஆள் ஆகிவிடுவார் என்று சுருக்கம்.

app_engine

Posts : 10097
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 20 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Tue Jul 14, 2015 10:15 pm

#456
மனந்தூயார்க்கெச்சம் நன்றாகும் இனந்தூயார்க்கு
இல்லை நன்றாகா வினை


எச்சம் = இறந்த பின்னர் மிச்சம் Smile

அதாவது, ஒருவர் வாழ்வுக்குப் பின்னர் எஞ்சி நிற்கும் புகழ். (இன்று இறந்த மெல்லிசை மன்னர் விசுவநாதன் உடனே நினைவுக்கு வருகிறார். அவரது எச்சம் இசை மட்டுமல்ல, புகழும் தான்).

மனந்தூயார்க்கெச்சம் நன்றாகும்
மனதில் தூயவர்களுக்கு எஞ்சி நிற்கும் நல்ல புகழ் இருக்கும்

இனந்தூயார்க்கு இல்லை நன்றாகா வினை
இனத்தில் தூயவர்களுக்கு (சிற்றினம் சேராமல் பெரியோருடன் கூட்டாக இருந்தவர்களுக்கு) நன்மையற்ற ஒரு செயலும் இருக்காது!

எல்லாம் நல்லதாகவே அமையும் என்பது "இரட்டை எதிர்ச்சொல்" முறையில் வருகிறது.

ஆக, மனதில் தூய்மையானவர்களுக்கு வரும் நற்பலனை விடவும் சேர்க்கையில் ஒழுங்கானவர்களுக்குக் கூடுதல் நன்மை வரும் என்கிறார் வள்ளுவர்!

app_engine

Posts : 10097
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 20 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Thu Jul 16, 2015 9:17 pm

#457
மனநலம் மன்னுயிர்க்காக்கம் இனநலம் 
எல்லாப்புகழும் தரும்

மீண்டும் மனம்-இனம் ஒப்பீடு Smile

மீண்டும் மனதின் சிறப்பை விட சேரும் இனத்தின் சிறப்பு பெரிது எனும் கருத்து!

மற்றபடி, இங்கு வரும் ஒரு "எல்லாப்புகழும்" என்ற சொற்றொடர் குறிப்பிடத்தக்கது Wink 
(வள்ளுவர் அதை இறைவனுக்கல்ல, மன்னுயிர் - அதாகப்பட்டது, மனிதனுக்குத்தான் தருகிறார் என்பதை உற்று நோக்குங்கள்).

மனநலம் மன்னுயிர்க்காக்கம்
மனநலம் மனிதனுக்கு ("மானிட உயிர்க்கு") ஆக்கம் தரும் (ஆனால் / என்றாலும்)

இனநலம் எல்லாப்புகழும் தரும்
(சேர்ந்த) இனத்தின் நலமோ, எல்லாப்புகழும் தரும்!

பெரியோரோடு சேர்ந்தால் எல்லாப்புகழும் ஒருவனுக்குக் கிட்டும். 

சிற்றினம் சேராதிருத்தல் புகழுக்கான வழி!

app_engine

Posts : 10097
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 20 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Mon Jul 20, 2015 6:00 pm

#458
மனநலம் நன்குடையராயினும் சான்றோர்க்கு 
இனநலம் ஏமாப்புடைத்து

ஏமாப்பு என்றால் அரண், பாதுகாப்பு, காவல், தாங்குகோல் என்றெல்லாம் முன்னமே கண்டோம்

இனநலம் சான்றோருக்கும் நல்ல பாதுகாப்பாக விளங்கும் என்று அறிவுறுத்தும் குறள்!

மனநலம் நன்குடையராயினும்
நல்ல மனநலம் (அறிவுச்சிறப்பு, உறுதி) உள்ளவர்கள் என்றாலும்

சான்றோர்க்கு இனநலம் ஏமாப்புடைத்து
(அத்தகைய) சான்றோருக்கும் அவர் சேர்ந்திருக்கும் இனத்தின் சிறப்பு அரணாக விளங்கும்!

சான்றோருக்கே அப்படி என்றால், மற்ற எல்லோருக்கும் பொருந்தும் என்று சொல்ல வருகிறார். 

நமக்கு மனதின் சிறப்பு எவ்வளவு இருந்தாலும், சிற்றினம் சேர்ந்தால் அரண் இல்லாமல் போகும் என்கிறார். 

சிந்திக்க வேண்டிய கருத்து! 

நம் நாட்களில் உள்ள "குழுவாய் வேலை செய்தல்" என்ற முறைக்கு இந்த அதிகாரம் ஒரு முன்னோடி என்று கொள்ளலாம்.

app_engine

Posts : 10097
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 20 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Wed Jul 22, 2015 12:27 am

#459
மனநலத்தின் ஆகும் மறுமை மற்றஃதும் 
இனநலத்தின் ஏமாப்புடைத்து

பொருட்பாலில் முதல் முறையாக "மறுமை" வருகிறதோ என்று ஐயம்.

மற்றபடி, மனம் / இனம் ஒப்பீடு இன்னும் தொடர்கிறது. "விட மாட்டேன்" என்கிறார் Smile

மறுமை என்றால் என்ன என்றெல்லாம் இங்கு சொல்வதில்லை, அப்படியாக நாமும் அந்த ஆராய்ச்சியை இந்தக்குறளில் செய்ய வேண்டாம். (அது வள்ளுவரைப் பொறுத்த மட்டில் "இன்னொரு பிறவி" என்பதாக இருந்திருக்க வேண்டும், என்றாலும் இங்கே தெளிவில்லை).

மனநலத்தின் ஆகும் மறுமை
மன நலத்தின் அடிப்படையில் மறுமை கிடைக்கும் (என்ன என்று தீர்மானிக்கப்படும்)

மற்றஃதும் இனநலத்தின் ஏமாப்புடைத்து
ஆனால் அதுவும் இன நலத்தால் பாதுகாப்பு அடையும்!

ஆக, நமது சேர்க்கை எப்படியோ அது நமது இறப்புக்குப்பின்னரும் விளைவுகள் ஏற்படுத்தும் என்கிறார்...

app_engine

Posts : 10097
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 20 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Wed Jul 22, 2015 9:03 pm

#460
நல்லினத்தினூங்குந் துணையில்லை தீயினத்தின் 
அல்லற்படுப்பதூஉம் இல்

இந்த அதிகாரம் முழுதும் சொன்னதையே திரும்பச் சொல்வது போல் தோன்றியது. அவ்வளவும் போதாது என்று இங்கே "அதிகாரச்சுருக்கம்" என்பது போல் பத்தாவது குறள் Smile

அதாவது, நல்லினம் தான் மிக நல்ல துணை, தீயினம் மிகப்பெரிய தொல்லை என்று சொல்லி முடிக்கிறார்!

நல்லினத்தினூங்குந் துணையில்லை
நல்ல இணைத்தை விடவும் சிறந்த துணை இல்லை 
(பெரியோர் / சான்றோர் துணைக்கு ஈடு இல்லை என்று பொருள்)

தீயினத்தின் அல்லற்படுப்பதூஉம் இல்
(நேர் மாறாக) தீய இனத்தை விடவும் கூடுதல் துன்பம் தரும் வேறொன்றும் இல்லை!

சிற்றினம் சேர்ந்தால் தொல்லையோ தொல்லை என்கிறார் வள்ளுவர்!

உண்மை தான் Smile

app_engine

Posts : 10097
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 20 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Fri Jul 24, 2015 7:14 pm

#461
அழிவதூஉம் ஆவதூஉம் ஆகி வழிபயக்கும் 
ஊதியமும் சூழ்ந்து செயல்
(பொருட்பால், அரசியல், தெரிந்து செயல்வகை அதிகாரம்)

விளைவுகள் குறித்து முன் கூட்டியே சிந்தித்து, அதற்கேற்ப நல்ல திட்டம் தீட்டிச்செயல்படுதல் என்பது என் புரிதல் Smile
  
அழிவதூஉம் ஆவதூஉம் ஆகி
(செய்யப்போகும் ஒன்றால்) அழிவது எவை, ஆவது எவை என்று ஆராய்ந்து

வழிபயக்கும் ஊதியமும் சூழ்ந்து செயல்
முடிவில் இதன் வழியாக வரும் பலனையும் (ஊதியத்தையும்) கணக்கிலெடுத்தே செயல்பட வேண்டும்!

எந்த ஒரு செயலிலும் இறங்கு முன்னரே விளைவுகளைத் தெரிந்து செயல்படுங்கள் என்கிறார்.

கண்மூடித்தனமாக செயல்களில் இறங்குவது பட்டறிவற்றவர்களின் பொதுவான பண்பு. 

"கையைக் கடித்துக்கொண்டு" பின்னர் புலம்புதல் இத்தகையவர்களின் வழக்கம்.  அறிவாளி மற்றவர்களின் செயல்களைப் பார்த்துப் பாடம் கற்றுக்கொள்வான். 

அல்லாமலும், தான் செய்யும் செயல்களின் விளைவுகள் குறித்து முன்னமேயே சிந்திப்பான்!

app_engine

Posts : 10097
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 20 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Mon Jul 27, 2015 6:08 pm

#462
தெரிந்த இனத்தொடு தேர்ந்தெண்ணிச் செய்வார்க்கு 
அரும்பொருள் யாதொன்றும் இல்

அருமையான மேலாண்மைச்சிந்தனை இந்தக்குறளில் காண முடியும். 

முன்காலங்களில் மன்னர்களுக்கு எழுதின அறிவுரை இன்று எல்லா மேலாளர்களும் பயன்படுத்த வல்லன!

தெரிந்த இனத்தொடு
தேர்ந்தெடுத்த கூட்டாளிகளுடன்
(சிற்றினம் சேராமல், பெரியோரின் துணையுடன் என்று சுருக்கம்)

தேர்ந்தெண்ணிச் செய்வார்க்கு
தெரிந்து, சிந்தித்துச் செயல்படுபவர்களுக்கு

அரும்பொருள் யாதொன்றும் இல்
அரிதான பொருள் என்று ஒன்றும் இல்லை!
(இயலாத, கடினமான செயல் யாதொன்றும் இல்லை என்று கொள்ளலாம்)

விண்ணில் ஊர்தி விடுதல், கைபேசி கொண்டு நடத்தல் என்று நம் கண் முன்னே நடக்கும் அரிதான செயல்கள் ஒவ்வொன்றின் பின்னிலும் சிறந்த தலைமை மற்றும் தெரிந்தெடுத்த குழு இருந்தது என்பது உண்மை. 

இவற்றோடு, விளைவுகள் குறித்த அலசல் மற்றும் சிந்தனை எந்த அளவுக்குப் பலன் தந்தது என்பது சொல்லித்தெரிய வேண்டியதில்லை!

(யாதொன்றும் இல் = உயர்வு நவிற்சி, என்ன தான் திட்டமிட்டுக் "கூட்டணி" அமைத்தாலும் ஆணால் குழந்தை பெற இயலாது அல்லவா?  Laughing )

app_engine

Posts : 10097
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 20 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Tue Jul 28, 2015 8:14 pm

#463
ஆக்கம் கருதி முதலிழக்கும் செய்வினை 
ஊக்கார் அறிவுடையார்

இந்தக்குறளைப்படிக்கையில் 24% வட்டி / 36% வட்டி போன்ற விளம்பரங்கள் உடனே நினைவுக்கு வந்து துன்புறுத்தின.

அப்படிப்பட்ட திட்டங்களில் பெரிதும் ஏமாந்தவர்கள் ஒரு வேளை பள்ளிக்காலத்தில் இந்தக்குறளை மனப்பாடப்பகுதியில் படித்து மதிப்பெண் பெற்றிருப்பார்கள் Sad

பொருட்பாலில் வரும் பொருள் மிகுந்த இக்குறளைப் பொருள் புரியாமல் படித்துப் பொருள் இழந்த தமிழர்கள் Sad

ஆக்கம் கருதி
(கிடைக்கப்போகும்) ஆதாயத்தை எண்ணி 

முதலிழக்கும் செய்வினை
உள்ள முதலையும் இழந்து போகும் செயலில்
(அப்படிப்பட்ட முட்டாள்தனத்தை)

அறிவுடையார் ஊக்கார்
அறிவு உள்ளவர்கள் ஈடுபட மாட்டார்கள்!

app_engine

Posts : 10097
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 20 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Wed Aug 05, 2015 5:31 pm

#464
தெளிவிலதனைத் தொடங்கார் இளிவென்னும் 
ஏதப்பாடு அஞ்சுபவர்

இளி என்றவுடன் "என்ன, பல் இளிக்கிற?" என்ற பேச்சு வழக்கு நினைவுக்கு வருகிறது. (சிரித்தல் / நகைத்தல்)

இந்தக்குறளில் "எள்ளி நகையாடல் / இகழ்தல்" என்ற பொருளில் வருகிறது.

ஏதம் என்றால் குற்றம். ஏதப்பாடு = குற்றம் உண்டாகை.

மற்றபடி, நேரடியான பொருள் உள்ள செய்யுள் தான் Smile

இளிவென்னும் ஏதப்பாடு அஞ்சுபவர்
இகழ்ச்சி என்னும் குற்றம் நேரிட அஞ்சுபவர்கள் 
(பிறர் நகைக்கும் நிலைக்கு ஆளாகி விட விரும்பாதவர்கள்)

தெளிவிலதனைத் தொடங்கார்
தெளிவில்லாத செயல்களைத் தொடங்க மாட்டார்கள்!
(இன்ன விளைவுகள் வரும் என்று தெரியாமல் செயல்பட மாட்டார்கள்)

நாம் தொடங்கும் செயல் நமக்கு இகழ்ச்சி வருத்துமா புகழ்ச்சி வருத்துமா என்ற தெளிவு மிகத்தேவை!

app_engine

Posts : 10097
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 20 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Thu Aug 06, 2015 10:45 pm

#465
வகையறச் சூழாதெழுதல் பகைவரைப் 
பாத்திப்படுப்பதோ ராறு

"பாத்தி கட்டி, நாத்து நட்டு" என்ற வழக்கம் நாட்டுப்புறங்களில் உள்ளவர்களுக்குப் பழக்கமே Smile

பாத்தி = பகுதி (விளைநிலத்தைப் பகுதிகளாகப் பிரித்து அத்தகைய "பாத்தி"களில் நாற்று மற்றும் பயிர் வளர்ப்பது நம் வழக்கம்)

விளைவு பற்றி ஆராயாமல் செயல்படுதல், எதிரிகளை நன்றாக வளர்த்து விடும் செயல் (பாத்தி கட்டிப்பராமரித்துப் பயிர் வளர்ப்பது போன்றது)  என்கிறார் வள்ளுவர்!

வகையறச் சூழாதெழுதல்
எல்லா விளைவுகளையும் ஆராயாமல் ஒரு செயலுக்கு எழுதல் 
(எ-டு : எதிரி நாட்டின் சூழ்ச்சிகள் ஆராயாமல் போர் தொடுக்க எழும் மன்னன்)

பகைவரைப் பாத்திப்படுப்பதோ ராறு
பகைவரைப் பாத்தியில் (பயிர் போல) நிலை பெறச்செய்யும் வழியாகும்

அறிவில்லாத மன்னர்கள் தங்கள் ஆய்வற்ற செயல்களால் எதிரிகளை வலிமைப்படுத்தி விடுவர் என்று எச்சரிக்கை செய்கிறது இந்தக்குறள்!

app_engine

Posts : 10097
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 20 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Mon Aug 10, 2015 4:43 pm

#466
செய்தக்க அல்ல செயக்கெடும் செய்தக்க 
செய்யாமையானுங்கெடும்

பள்ளிக்காலத்தில் இருந்தே நன்கு பழக்கமான குறள் - தமிழ் படித்தோரில் இந்தக்குறள் அறியாதோரைக் காண்பது அரிதே Smile

பொருள்  புரிதல் எளிதே. ஆனால் வாழ்வில் செயல்படுத்துதல் அவ்வளவு எளிதல்ல Smile

செய்தக்க அல்ல செயக்கெடும்
செய்யக்கூடாதவற்றைச் செய்தால் கேடு (கெடுதல், அழிவு) வரும் 

செய்தக்க செய்யாமையானுங்கெடும்
(அதே  நேரத்தில்) செய்ய வேண்டியவற்றைச் செய்யாமல் இருந்தாலும் கேடு வரும்!

தனிமனிதன், இல்லறம், நிறுவனம், மன்னன், அரசாங்கம் என்று எல்லோருக்கும் பொருந்தும் அருமையான குறள்!

சும்மா இருக்கக்கூடாது - அதே நேரத்தில் வேண்டாதது செய்வதும் கூடாது Smile

வேறு சொற்களில் சொன்னால், செய்யப்போகும் செயலின் விளைவு அறிந்து தக்க நடவடிக்கை தக்க நேரத்தில் எடுத்துக்கொண்டே இருக்க வேண்டும்!

எ-டு : 
நல்ல உடல் நலத்துக்கு -
செய்தக்கவல்ல = புகை பிடித்தல் (தேவையற்றது, செயக்கெடும், நுரையீரல் நோய்கள் - தனக்கும் பக்கத்தில் உள்ளவர்க்கும்)
செய்தக்க = உடற்பயிற்சி (தேவை - செய்யாவிடில் பலதும் கெடும்)

app_engine

Posts : 10097
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 20 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Tue Aug 11, 2015 10:01 pm

#467
எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்
எண்ணுவம் என்பது இழுக்கு


"கருமம்" என்றால் செயல் என்று அறிவதற்கு முன்பு அது அழுக்கு / அருவருப்பு / கெடுதல் என்றெல்லாம் மட்டுமே எண்ணியதுண்டு.

தமிழில் இப்படிச்சில வேடிக்கைகள் உண்டு.  உடனே நினைவுக்கு வரும் இன்னொரு சொல் "நாற்றம்". மணம் என்ற பொருளில் செய்யுள்களில் வரும் இந்தச்சொல்லுக்கு நாட்டின் பேச்சு வழக்கில் துர்நாற்றம் (வீச்சம்) என்று மட்டுமே புரிதல்.

பேச்சுத்தமிழ் / எழுத்துத்தமிழ் வேறுபாடுகள் வேறெந்த மொழியையும் விட வேடிக்கையானவை என்று எனக்கு ஒரு கருத்து உண்டு. (ஆங்கிலம், மலையாளம், இந்தி மொழிகளில் எப்படி எழுதுகிறோமோ அப்படியே பேசவும் செய்யலாம். யாரும் ஏளனம் செய்ய முடியாது. தமிழில்? Laughing )

மற்றபடி, நன்கு அறிமுகமான / எளிய பொருள் உள்ள இன்னொரு குறள்.

எண்ணித் துணிக கருமம்
(விளைவுகள், விதங்கள் எல்லாம்) சிந்தித்து ஆய்ந்த பின்னரே செயலில் துணிந்து இறங்க வேண்டும்

துணிந்தபின் எண்ணுவம் என்பது இழுக்கு
செய்யத்துணிந்த பின்னால் சிந்திக்கலாம் / ஆராயலாம் என்பது குற்றமாகும்

app_engine

Posts : 10097
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 20 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 20 of 40 Previous  1 ... 11 ... 19, 20, 21 ... 30 ... 40  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum