Ilayaraja and Beyond
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

குறள் இன்பம் - #1 - #948

+3
fring151
Usha
V_S
7 posters

Page 18 of 40 Previous  1 ... 10 ... 17, 18, 19 ... 29 ... 40  Next

Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 18 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Thu Apr 23, 2015 6:22 pm

#396
தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக் 
கற்றனைத் தூறும் அறிவு

பள்ளிக்காலம் தொட்டே நன்கு பழக்கமான குறள் என்பதால் நேரடிப்பொருள் புரிந்து கொள்ளுதல் எளிதே Smile

அதாவது,

தொட்டனைத் தூறும் மணற்கேணி
மணல் கிணறு தோண்டத்தோண்ட நீர் சுரக்கும் / ஊறும் ; (அது போல) 

மாந்தர்க்குக் கற்றனைத் தூறும் அறிவு
மாந்தர்களுக்குக் கல்வி கற்கும் தோறும் அறிவு வளரும்

என்றாலும், இந்தக்குறளை இன்று படிக்கும்போது மனதில் ஒரு வலி Sad

அதாவது, நான் நேரடியாகக் காண நேர்ந்த "இன்னும் அதிக ஆழம், இன்னும் அதிக ஆழம்" என்று நீருக்கான தோண்டல்கள் Sad

வற்றாத சீவநதி ஒன்றும் இல்லாத போதிலும், ஆண்டில் சில மாதங்கள் மழை மற்றும் ஊரில் ஓடும் காட்டாற்றில் வெள்ளம், நீர் சுரந்து கொண்டே இருக்கும் கிணறுகள்,  பல மாதங்கள் நீர் நிறைந்த குளங்கள் என்று ஓரளவுக்குப் பசுமையான நாட்டுப்புறத்தில் தான் என் சிறு வயதும் பள்ளிக்காலமும்.

நாட்கள் செல்லச்செல்ல மழை பொய்த்தல் / எதிர்பாராமல் பெய்தல் என்று நிலைமை மாறி வரலாயிற்று.

குடிநீருக்கே கடின நிலைமை, ஆற்றில் நீருக்குப்பதில் மணல் எடுத்தல், குளங்கள் வற்றல் / மூடல், ஆழ்துளைக் கிணறுகள், இன்னும் இன்னும் தோண்டல், விசையும் வலிமையும் கூடிய எந்திரங்கள் கொண்டு நீர் உறிஞ்சல் என்று நிலைமை மோசமாகி வந்தது / வந்து கொண்டிருக்கிறது. 

வேறு ஊர்களில் இன்று வாழ்கிறோம் என்றாலும், ஊர் சென்று வற்றிப்போன கிணறுகள் கண்ட வலி / காயம் மனதில் அகலாமல் இருக்கிறது. 

இந்தக்குறள் சொல்லும் பொருள் அதுவல்ல என்றாலும், நீருக்கான போராட்டம் எதிர்காலத்தில் எப்படியெல்லாம் இருக்கும் என்ற அச்சம் மனதில் எப்போதும் உள்ளது.

app_engine

Posts : 10097
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 18 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Fri Apr 24, 2015 7:10 pm

#397
யாதானும் நாடாமால் ஊராமால் என்னொருவன் 
சாந்துணையுங் கல்லாதவாறு?

உலகம் எங்கும் வாழும் தமிழ் மக்கள் இந்தக்குறளின் முதல் வரிக்கு நேரடியான எடுத்துக்காட்டுகள் Smile

பெரும்பாலும் கற்ற கல்வியின் விளைவாகத்தான் இவ்வித மதிப்பு நமக்கு எங்கு சென்றாலும் கிடைக்கிறது என்பது நேரடியாகக் கண்டறிந்த உண்மை!

"கல்லூரிப்படிப்பு" என்ற கல்வி அல்ல, ஏதாவது ஒரு துறையில் நாம் அடைந்திருக்கும் அறிவும் புரிதலுமே நம்மைத் திரைகடலோடியும் சொந்த ஊர் போல வாழ வழி செய்கின்றன!

யாதானும் நாடாமால் ஊராமால்
(கற்றவருக்கு) எதுவானாலும் சொந்த நாடாகவும் ஊராகவும் ஆகிவிடும்!
(கல்வியறிவு இருந்தால் எங்கு சென்றாலும் சிறப்புப்பெறலாம் / பிழைத்துக்கொள்ளலாம்)

என்னொருவன் சாந்துணையுங் கல்லாதவாறு?
(அப்படி இருக்கையில்) ஏன் சிலர் சாகும் வரையும் கற்காமலே இருக்கிறார்கள்?

"புரியாமல் தான் கேட்கிறேன், ஏனப்பா இப்படி இருக்கே" என்கிறார் வள்ளுவர்!

app_engine

Posts : 10097
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 18 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Mon Apr 27, 2015 12:38 am

#398
ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்கு 
எழுமையும் ஏமாப் புடைத்து

"ஏழு பிறப்பு" (அல்லது மீண்டும் மீண்டும் பிறப்பு) என்ற கோட்பாட்டில் வள்ளுவருக்கு நம்பிக்கை இருந்ததாகவே (என் கருத்து என்று) முன்பு பல குறள்களையும் படிக்கும்போது சொல்லி இருக்கிறேன். 

இங்கு அது மீண்டும் வருகிறது. என்றாலும், "அப்படி அவர் நம்பி இருக்க மாட்டார்" என்று நம்பும் (அல்லது விளக்க முயலும்) மு.க. போன்றோர் இங்கும் எழுமை என்பது "ஏழு தலைமுறை" என்றெல்லாம் சொல்லிப்பார்க்கிறார்கள் Smile

ஒருமைக்கண் தான்கற்ற கல்வி
ஒரு பிறப்பில் தான் கற்ற கல்வி

ஒருவற்கு எழுமையும் ஏமாப்புடைத்து
ஒருவருக்கு ஏழு பிறப்பிலும் பாதுகாப்பாக (அரணாக) விளங்கும்!

ஒரு பிறவியில் கல்வி அடைந்தவன் மற்ற எல்லாப்பிறப்பிலும் மனிதப்பிறவியே அடைவான், அப்போதும் படிப்பான் என்று சொல்ல வருகிறாரோ என்னமோ Laughing

எது எப்படி இருந்தாலும், இந்த ஏழு என்ற எண்ணுக்கு என்னவோ ஒரு சிறப்பு இருக்கிறது. இந்தியத்தொன்மங்களில் மட்டுமல்ல, வேறு இடங்களிலும் Smile

app_engine

Posts : 10097
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 18 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Mon Apr 27, 2015 6:46 pm

#399
தாமின் புறுவது உலகின் புறக்கண்டு 
காமுறுவர் கற்றறிந்தார்

இந்த அதிகாரத்தில் இது வரை கேட்டில்லாத முதல் குறள் Smile

"யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்" என்ற சொல் வழக்கு சில சமயங்களில் நேர்மறையாகவும் வேறு சில சமயங்களில் நகைச்சுவையாகவும் பயன்படுத்தியது நினைவுக்கு வருகிறது Smile

கிட்டத்தட்ட அந்தப்பொருளில் உள்ள குறள்!

கற்றறிந்தார்
கல்வி அறிவு அடைந்தவர்கள் 

தாமின்புறுவது உலகின்புறக்கண்டு
தமக்கு இன்பம் தருவது உலகமனைத்துக்குமே இன்பம் தருவதைக்கண்டு 
(அதாவது, கல்வி நமக்கு மட்டுமல்ல எல்லோருக்கும் இன்பம் தருகிறது என்று அறிந்து)

காமுறுவர்
(கல்வியின் மீது மேன்மேலும்) விருப்பம் கொள்வார்கள்!

கல்வியின் மீதான காதல் வாழ்நாள் முழுவதும் குறைவதில்லை, ஏனென்றால் அது தரும் இன்பம் அப்படி!

app_engine

Posts : 10097
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 18 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Tue Apr 28, 2015 6:16 pm

#400
கேடில் விழுச்செல்வம் கல்வியொருவற்கு 
மாடல்ல மற்றையவை

எளிமையான, நேரடியான குறள்!

தமிழ் படித்த / படிக்கும் பலருக்கும் மிக நன்றாக அறிமுகமான ஒன்றும் கூட Smile

கேடு / மாடு என்று எதுகையில் வரும் இரு சொற்களின் பயன்பாடு குறிப்பிடத்தக்கது.

கேடு என்பது இங்கே "அழிவு" என்ற பொருளில் வருகிறது. 
("கெட்டு / அழுகிப்போன உணவு" என்று மனதில் படம் வந்தால் பொருள் புரிந்து விட்டதாகக் கொள்ளலாம்)

மாடு?

அகராதி சொல்லும் பொருள் "செல்வம்" Smile  

(முன்பெல்லாம் மாடு = மாட்சிமை / சிறப்பு என்று எண்ணிக்கொண்டிருந்தேன். இது இன்னும் தெளிவு - செல்வமே இல்லை / ஒன்றுக்கும் உதவாதவை என்று அடிக்கிறார்)

கல்வியொருவற்கு கேடில் விழுச்செல்வம்
கல்வி தான் ஒருவருக்கு அழிவில்லாத சிறந்த செல்வம் 

மற்றையவை மாடல்ல
(செல்வம் என்று நினைத்துக்கொண்டிருக்கும்) மற்றவை எல்லாம் செல்வங்களே அல்ல!

மாடு என்பதற்கு அகராதி சொல்லும் இன்னும் சில விளக்கங்கள் : பொன், சீதனம், அகன்மணி (ரத்தினம்) Smile

அதாவது, கல்வி தான் நல்ல மாடு Smile

app_engine

Posts : 10097
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 18 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  Drunkenmunk Tue Apr 28, 2015 6:44 pm

the clap amazing dedication saar. 1/3rd done. idhu mAri 2 times effort left. Way to go. Good luck for the remaining journey.
Drunkenmunk
Drunkenmunk

Posts : 1263
Reputation : 12
Join date : 2013-05-01
Age : 35
Location : Chennai

http://raajasongadaykeepsboredomaway.wordpress.com/

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 18 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Tue Apr 28, 2015 7:07 pm

Drunkenmunk wrote:the clap amazing dedication saar. 1/3rd done. idhu mAri 2 times effort left. Way to go. Good luck for the remaining journey.

மிக்க நன்றி, டி எம் Smile

கற்பதில் வரும் இன்பத்தைத் துய்த்துக் கொண்டிருக்கிறேன் Smile

app_engine

Posts : 10097
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 18 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Wed Apr 29, 2015 6:11 pm

#401
அரங்கின்றி வட்டாடியற்றே நிரம்பிய 
நூலின்றிக் கோட்டி கொளல்
(பொருட்பால், அரசியல், கல்லாமை அதிகாரம்)

நகைச்சுவை உணர்வுடன் கல்லாமையை வள்ளுவர் குத்திக்காட்டுகிறார் Smile

"ஆடத்தெரியாதவள் மேடையைக் குறை சொன்னாள்" என்ற பழமொழியும் நினைவுக்கு வருவது தவிர்க்க இயலாது Smile

என்ற போதிலும், "வட்டாடி" என்றால் என்ன என்று தெரிந்து கொள்ள வேண்டி இருக்கிறது.

அகராதி மற்றும் உரைகளின் அடிப்படையில், சொக்கட்டான் / பகடை உருட்டல் / சூதாட்டம் / தாயம் என்றெல்லாம் வருகிறது. "வட்டாட்டு ஆடும் இடம் பலவும் கண்டார்" என்று கம்பர் எழுதியுள்ளதாகவும் ஒரு இடத்தில் படித்தேன்.

"சோழிகளைச் சுழற்றிச் சுழற்றி வீசுதல்" என்ற பொருளில் "வட்ட ஆட்டம்" என்று வருகிறதோ என்னமோ Smile

ஆக, இங்கே சொல்லப்படும் "அரங்கு" என்பது பெரிய அரங்கமோ அல்லது மேடையோ அல்ல. விளையாடுவதற்காக இடப்படும் கட்டம் Smile 
("பரம பத சோபன படம்", அதாவது "ஏணி / பாம்பு" விளையாட்டு  சிலருக்கு நினைவுக்கு வரலாம் Laughing )

நிரம்பிய நூலின்றிக் கோட்டி கொளல்
நூல்கள் கற்று அறிவு நிரம்பாமல் அவையில் பேசுதல்

அரங்கின்றி வட்டாடியற்றே
கட்டம் போடாமல் சோழி விளையாடுவது போலாகும்

app_engine

Posts : 10097
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 18 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Thu Apr 30, 2015 6:21 pm

#402
கல்லாதான் சொற்காமுறுதல் முலையிரண்டும் 
இல்லாதாள் பெண்காமுற்றற்று

போன குறளில் "அரங்கின்றி வட்டாடி" என்றது போல இந்தக்குறளிலும் இன்னொரு அடிதடி உவமையை வள்ளுவர் புகுத்துகிறார் Smile கல்லாமை அதிகாரம் என்றவுடனே அவருக்கு ஒரு "இகழ்வு மனப்பான்மை" பொங்கி விட்டது போலும்!

கல்லாதான் சொற்காமுறுதல்
கல்வியறிவு இல்லாதவன் சொற்பொழிய ஆவல் கொள்வது
("கல்லாதவனின் சொல் கேட்க விரும்புவது" என்றும் சிலர் விளக்குகிறார்கள்)

முலையிரண்டும் இல்லாதாள் பெண்காமுற்றற்று
மார்பகம் இரண்டும் வளராத பெண் (முதிர்ச்சியற்ற அல்லது பெண்மையற்ற ஒருத்தி) காமம் கொள்வது போல!
("மார்பகங்கள் இல்லாத  பெண் மேல் காமம் கொள்தல்" என்றும் விளக்குகிறார்கள்)

சுருக்கமாகச் சொன்னால் இப்படி :
கல்வியறிவு இல்லாதவன் அவையில் பேசும் தகுதி / முதிர்ச்சி அற்றவன். (அப்படிப்பட்டவனின் பேச்சு கேட்க ஆவல் கொள்ளுவதும் தகுதி / முதிர்ச்சி அற்ற செயல்)
Smile

app_engine

Posts : 10097
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 18 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Fri May 01, 2015 5:38 pm

#403
கல்லாதவரும் நனிநல்லர் கற்றார்முன் 
சொல்லாதிருக்கப் பெறின்

"படிக்காதவனா, பரவாயில்லை - வாயை மட்டும் மூடிக்கொண்டிருந்தால் உன்னை சேத்துக்கறேன்' என்று வள்ளுவர் கரிசனம் காட்டும் குறள் Smile

முன்னமேயே பார்த்தது போல, அவரது "இகழ்ந்து தள்ளும் மனநிலை" இங்கு மீண்டும் வெளிப்படுகிறது.

கற்றார்முன் சொல்லாதிருக்கப் பெறின்
கற்றோர் அவையில் (ஒன்றும்) சொல்லாதிருக்கும் பண்பைப் பெற்றிருந்தால்

கல்லாதவரும் நனிநல்லர்
கல்லாதவர்களும் மிகவும் நல்லவர்களே! 
(அல்லது, நல்லவர்களாகத் தோன்றுவார்கள் / கருதப்படுவார்கள்)

பொதுவாகவே, குறைவாகப் பேசுபவர் தன் அறியாமையை வெளிப்படுத்தாமல் தப்பித்து விடுவார். அவ்வாறாக, அவரை "அறிவாளியோ" என்று சிலர் கருதவும் வாய்ப்புண்டு. 

அந்தக்கருத்தே இந்தக்குறளிலும் வெளிப்படுகிறது.

மற்றபடி, இங்கு சொல்லப்படும் "நல்லர்" என்பது, அறிவு / கல்வி அளவில் என்று தான் கருதப்பட வேண்டும். 

அல்லாமல், மொத்தத்தில் அறவாழ்வு வாழும் நல்லவர் என்ற கருத்தில் அல்ல.

app_engine

Posts : 10097
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 18 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Mon May 04, 2015 6:24 am

#404
கல்லாதான் ஒட்பம் கழிய நன்றாயினும் 
கொள்ளார் அறிவுடையார்

கொஞ்சம் குழப்பமான குறள் தான் Smile

"வள்ளுவரின் சொந்தக்கருத்தா, அல்லது பொதுவாகக் கற்றோர் நடுவில் உள்ள எண்ணத்தைச் சொல்லுகிறாரா?" என்பது ஒரு கேள்வி.

"உள்ள நிலையைத்தான் சொல்லுகிறார்" என்று கொண்டோமென்றால், "அதை ஏற்றுக்கொள்கிறாரா, அல்லது எள்ளுகிறாரா?" என்பது அடுத்த கேள்வி Smile

எப்படியென்றாலும் மையக்கருத்தில் எனக்கு உடன்பாடில்லை Smile

ஒட்பம் / ஒண்மை என்றால் அறிவு என்று பொருள். 

கழிய = மிகவும்!

கல்லாதான் ஒட்பம் கழிய நன்றாயினும்
கல்லாதவனுடைய அறிவு மிக நன்றாக இருப்பினும்

கொள்ளார் அறிவுடையார்
(கல்வி) அறிவுடையவர்கள் அதை (அறிவென்று / கல்வியென்று) ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்

"கல்வியறிவே அறிவு" என்று அடம் பிடிக்கும் ஒரு மனநிலை இங்கு தென்படுகிறது. 

எனக்கு ஏற்புடையதல்ல!

app_engine

Posts : 10097
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 18 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Tue May 05, 2015 5:00 pm

#405
கல்லா ஒருவன் தகைமை தலைப்பெய்து 
சொல்லாடச் சோர்வு படும்

தகைமை  என்பதற்குப் பல பொருட்கள் அகராதி சொல்லுகிறது.

தகுதி, பெருமை, மதிப்பு, பண்பு (குணம்), அழகு, ஒழுங்கு என்றெல்லாம் வருகிறது.

இந்தக்குறளைப் பொருத்தமட்டில் "பெருமை" என்பதே சரி என்று தோன்றுகிறது.

மீண்டும் "வாய் மூடி நிற்பதே கல்லார்க்கு அழகு" என்று வள்ளுவர் சொல்ல வருகிறார். இல்லாவிடில் "சாயம் வெளுத்து விடும்" என்று உணர்த்தும் குறள் Smile

கல்லா ஒருவன் தகைமை
கல்லாத ஒருவனின் பெருமை (பெருமிதமான நிலை)

தலைப்பெய்து சொல்லாட
(பலரும், குறிப்பாகக் கற்றவர்கள்) ஒன்று கூடிய இடத்தில் உரையாடுகையில்

சோர்வு படும்
கெட்டுப்போய் விடும்

அதிகாரத்தின் மூன்றாம் குறளில் சொன்ன அதே அறிவுரை தான் - கற்றோர் முன்னிலையில் பேசாதிருந்தால் கல்லாதவன் தன் மதிப்பைக் காக்க இயலும்!

app_engine

Posts : 10097
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 18 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Wed May 06, 2015 4:28 pm

#406
உளரென்னும் மாத்திரையர் அல்லால் பயவாக் 
களரனையர் கல்லாதவர்

விளைநிலங்களையும் களராக்கி மாற்றி, மனைகள் ஆக்கிக் காசு பார்க்கும் காலத்தில் வாழும் மக்களுக்கு இந்த உவமை எந்த அளவுக்குப் பொருந்தும் / புரியும் என்று தெரியவில்லை Smile

என்றாலும், கொஞ்சம் கடுமையான சொற்சாடல் தான் இங்கே Sad

மாத்திரை என்பது 'அளவு' என்ற பொருளில் வருகிறது. (கால அளவில் "இமைப்பொழுது" = ஒரு மாத்திரை).

உளரென்னும் மாத்திரையர் அல்லால் பயவா
(இவர்களும்) இருக்கிறார்கள் என்ற அளவில் அல்லாமல் வேறொரு பயனுமற்ற

கல்லாதவர் களரனையர்
கல்லாதவர்கள் களர் நிலத்தைப் போன்றவர்கள்!

உழவுக்கு உதவாத களர் நிலம் எவ்வளவு கீழானது (குறிப்பாக முற்காலங்களில்) என்று உவமையைப் புரிந்து கொள்ளவேண்டும் Smile

(சதுர அடி என்ன விலை என்றெல்லாம் சிந்திக்கக்கூடாது) Laughing

app_engine

Posts : 10097
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 18 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Thu May 07, 2015 5:59 pm

#407
நுண்மாண் நுழைபுலம் இல்லான் எழில்நலம் 
மண்மாண் புனைபாவையற்று

கல்லார் மீது வள்ளுவரின் தாக்குதல்கள் தொடர்கின்றன!

"மண் பொம்மை" என்று திட்டுகிறார் இங்கே!

நுண்மாண் நுழைபுலம் இல்லான் எழில்நலம்
நுட்பமான மற்றும் சிறப்பான விதத்தில் ஆராயும் அறிவுத்திறன் இல்லாதவனின் அழகும் நலமும் 
(ஆக மொத்தத்தில் கல்லாதவனின் வெளித்தோற்றம்)

மண்மாண் புனைபாவையற்று
மண்ணால் அழகாகச் செய்யப்பட்ட பாவையினை ஒத்ததே!

அரங்கமற்ற விளையாட்டு, மார்பக வளர்ச்சியற்ற பெண், களர் நிலம் & இப்போது, மண் பாவை!

இன்னும் என்னென்ன கொடுமையான உவமையெல்லாம் இந்த அதிகாரத்தில் கொட்டுவாரோ என்று அச்சமாக இருக்கிறது!

வள்ளுவர் கையில் கிட்டிய கல்லாதவன் நிலைமை ஆகக்கடினம் தான் Smile

app_engine

Posts : 10097
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 18 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Fri May 08, 2015 4:33 pm

#408
நல்லார்கண் பட்ட வறுமையின் இன்னாதே 
கல்லார்கண் பட்ட திரு

பள்ளி நாட்களில் படித்த குறள் , நினைவிருக்கிறது Smile

திரு = பொருட்செல்வம் 
(அப்படியாக, திருவாளர் / திருமதி எல்லாமே பொருள் கொண்டுள்ள மதிப்பீடுகள் என்று நினைவில் கொள்ள வேண்டும்)

நேரடியான, எளிதான குறள் Smile

கல்லார்கண் பட்ட திரு
கல்லாதவர்களிடம் சேர்ந்த பொருட்செல்வம் (பணம்)

நல்லார்கண் பட்ட வறுமையின் இன்னாதே
நல்லவர்களுக்கு வரும் வறுமையை விடவும் தீமையானதாகும்

அத்தகைய செல்வத்தை நேர்முறையான நல்ல வழிகளில் பயன்படுத்த அவர்களுக்கு அறிவிருக்காது என்கிறார். 

ஆகையால், கண்டிப்பாக அதைத் தீய வழிகளில் பயன்படுத்தித் தமக்கும் மற்றோருக்கும் இன்னல்களை வரவழைப்பார்கள்! (நம்மைச்சுற்றிலுமே இதற்கு நிறைய எடுத்துக்காட்டுகள் காணமுடியும்!)

app_engine

Posts : 10097
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 18 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Mon May 11, 2015 2:28 am

#409
மேற்பிறந்தராயினும் கல்லாதார் கீழ்ப்பிறந்தும் 
கற்றார் அனைத்திலர் பாடு

வள்ளுவர் குலப்பெருமை பேசமாட்டார் என்று காண்பிக்க மு.க. படும் பாட்டைப்பார்த்தால் சிரிப்பு வருகிறது Smile

இந்தக்குறளில் தெளிவாகவே வள்ளுவர் மேற்குலம் / கீழ்க்குலம் (பிறப்பால் வரும் உயர்வு / தாழ்வு, சாதி என்பன) பற்றிய தம் நம்பிக்கையை வெளிப்படுத்துவது எளிதில் புரியத்தக்கதே!

அதென்ன "மேல் பிறப்பு / கீழ்ப்பிறப்பு" என்று எள்ளவும் தோன்றுகிறது. அது இருக்கட்டும், பொருள் பார்ப்போம்!

இந்தக்குறளில் "பாடு" என்பதன் பொருள் "பெருமை". (துன்பம் அல்ல Smile

"ஒருவரைக் குறித்துப் புலவர் பாராட்டிப் பாடும் நிலை" என்று கொள்ளலாம் Smile

மேற்பிறந்தராயினும் கல்லாதார்
மேற்குடியில் பிறந்திருந்தாலும் கல்லாதவர்

கீழ்ப்பிறந்தும் கற்றார்
கீழான குடியில் பிறந்திருந்தாலும் கற்றவர்

அனைத்திலர் பாடு
அளவிலான பெருமை இல்லாதவரே!

ஒருவேளை அன்றைய காலத்து நடைமுறை உண்மையாக இருக்கலாம்!

app_engine

Posts : 10097
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 18 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Mon May 11, 2015 4:15 pm

#410
விலங்கொடு மக்கள் அனையர் இலங்குநூல் 
கற்றாரோடு ஏனையவர்

நான் முன்னமேயே அச்சப்பட்டது போன்று உவமைகள் கொண்டு கல்லாதாரை அடித்தல் பல வழிகளில் நடக்கிறது.

கடைசிக்குறளில் மனிதரும் விலங்குகளும் என்று கற்றார் / கல்லாதாரை ஒப்பிட்டு முடிக்கிறார்! Shocked

மட்டுமல்ல, இங்கு தெளிவாகவே "நூல் கற்று" என்று சொல்லுவதன் மூலம் என்ன விதமான கல்வி என்றும் சொல்லிவிடுகிறார். 

வாழ்க்கையில் இருந்து கற்ற பட்டறிவு அல்ல, வாசித்துப்படிக்கும் கல்வி!

இலங்கு = ஒளிருதல் / வெளிச்சம் தருதல்

இலங்குநூல் கற்றாரோடு ஏனையவர்
அறிவொளி தரும் நூல்களைக் கற்றவர்களோடு மற்றவர்கள் (கல்லாதவர்கள்),

விலங்கொடு மக்கள் அனையர்
மக்களோடு ஒப்பிட விலங்குகளைப் போன்றவரே!

படிக்காவிட்டால் ஆறாவது அறிவே இருக்காது என்று சொல்ல வருகிறார்!

app_engine

Posts : 10097
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 18 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Tue May 12, 2015 8:10 am

#411
செல்வத்துட் செல்வஞ் செவிச்செல்வம் அச்செல்வம்
செல்வத்து ளெல்லாந் தலை

(பொருட்பால், அரசியல், கேள்வி அதிகாரம்)

கேள்வி என்ற சொல்லின் பொருளே கொஞ்சம் தலைகீழ் என்பது தான் வேடிக்கை.

பொதுவான புரிதல், கேள்வி = நாம் மற்றவர்களை வினவுதல் மட்டும்  Smile
("எனக்குக் கேள்வி கேட்கத்தான் தெரியும் - விடையெல்லாம் நீயே சொல்லு")

இங்கோ, கேள்வி = செவி கொடுத்தல் Smile

மற்றபடி, பள்ளிக்காலம் தொட்டு நன்கு பழக்கமான, விருப்பமான ஒரு திருக்குறள்!

செல்வத்துட் செல்வஞ் செவிச்செல்வம்
செவி கொடுத்துக் கேட்டல் என்பது செல்வங்களுள் ஒன்று!
(மட்டுமல்ல)

அச்செல்வம் செல்வத்துளெல்லாந் தலை
அது தான் செல்வங்களுக்கெல்லாம் தலையானது!
(உயர்ந்தது, முதலிடம், மேலானது)

"ஒவ்வொருவரும் கேட்பதற்குத் தீவிரமாகவும், பேசுவதற்கு நிதானமாகவும், கோபிப்பதற்கு தாமதமாகவும் இருக்க வேண்டும்."
-விவிலியம்

app_engine

Posts : 10097
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 18 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Tue May 12, 2015 7:50 pm

#412
செவிக்குணவில்லாத போழ்து சிறிது 
வயிற்றுக்கும் ஈயப்படும்

அறிவு தருவன குறித்துத்தான் இங்கு குறள் சொல்கிறது என்றாலும் என்னைப்பொறுத்த மட்டில் "இசை" என்று எடுத்துக்கொள்வதில் இன்பம் Smile

கருத்துச்செறிவான குறள்களில் ஒன்று!

மனிதன் உட்பட வாழும் உயிர்களுக்கெல்லாம் உணவு எந்த அளவுக்கு இன்றியமையாததோ அதற்கும் மேலானது கேள்வி என்று வற்புறுத்துவது!

செவிக்குணவில்லாத போழ்து
செவிக்கு உணவு (கேள்வி) இல்லாத போது மட்டுமே 

சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும்
சிறிதளவு உணவு வயிற்றுக்குத் தரப்படும் 

வயிற்றுக்கு உணவு கொடுக்கப்படாவிட்டால் ஒருவர் சில நாட்களில் இறந்து போவார். அவ்வளவு தேவையான ஒன்று அது. 

என்றாலும், அதை விட மேன்மையான உணவு செவியில் கேட்கும் அறிவு என்று மதிப்பீடு செய்கிறார்!

நடைமுறையிலும் இந்தக்குறளை நாம் பல சமயங்களில் உணர்ந்திருக்க வழியுண்டு Smile

app_engine

Posts : 10097
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 18 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Wed May 13, 2015 8:25 pm

#413
செவியுணவிற் கேள்வியுடையார் அவியுணவின் 
ஆன்றாரோடொப்பர் நிலத்து

அவியுணவு என்றால் அவித்த உணவு மட்டுமல்ல (கடலை, கிழங்கு, புட்டு நினைவுக்கு  வந்தால் நான் பொறுப்பல்ல) Smile

அகராதி சொல்லுகிறபடி : 
வேள்வித்தீயில் தேவர்க்குத் கொடுக்கும் உணவு. (குறள், 413.)

Smile

ஆக, இங்கே சொல்லப்படும் "ஆன்றோர்", வானுலகில் வாழும் தேவர் என்று வருகிறது. வேள்வியில் தரப்படும் உணவை அவர்கள் உண்பதாகச் சொல்லப்படும் நம்பிக்கையையும் சுட்டுகிறது எனலாம்.

ஒரு விதத்தில், கேள்வி அறிவுடையோரைப் புகழ வள்ளுவர் பயன்படுத்துவது "உயர்வு நவிற்சி" (நம்பிக்கை இல்லாதோருக்கு "இல் பொருள் உவமை") Smile

நிலத்து செவியுணவிற் கேள்வியுடையார்
மண்ணில் (வாழ்ந்தாலும்) செவி உணவை நன்கு உண்ணும் கேள்வி என்னும் சிறப்புடைவர்கள் 

அவியுணவின் ஆன்றாரோடொப்பர்
அவி உணவு (வேள்வியில் தரப்படும் உணவு) உண்ணும் தேவர்களுக்கு ஒப்பானவர்களே!

கேட்கும் சிறப்புடையவர்கள் வானவருக்குச் சமம்!

app_engine

Posts : 10097
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 18 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Thu May 14, 2015 4:26 pm

#414
கற்றிலனாயினுங் கேட்க அஃதொருவற்கு 
ஒற்கத்தின் ஊற்றாந்துணை

முந்தைய அதிகாரத்தில் "விலங்கு, மண் பாவை" என்றெல்லாம் அடித்து நொறுக்கப்பட்ட கல்லாதோருக்கு இங்கே "போனாப்போகுது" என்று ஒரு ஊன்றுகோல் கொடுக்கிறார் Smile

கேள்வி அறிவு கல்லாதவருக்கும் கை கொடுக்கும் என்பதே மொத்தக்கருத்து!

கற்றிலனாயினுங் கேட்க
(நூல்கள்) கற்கவில்லை என்றாலும் (கற்றவரிடத்தில்) கேட்டுக்கேட்டு அறிவைப் பெறுங்கள்!

அஃதொருவற்கு ஒற்கத்தின் ஊற்றாந்துணை
தளர்ந்தவருக்கு ஊன்றுகோல் போல அது ஒருவருக்குத் துணை செய்யும்!

ஒற்கம் = தளர்ச்சி (முதுமையில் வரும் தளர்ச்சி, ஊன்றுகோல் அப்போது தேவை)

"கால் என்றல்ல , ஊன்றுகோல்" என்று சொல்வதில் இருந்து இதைக் கல்விக்கு இணையாகக் கருதவில்லை என்பதும் கருத்தில் கொள்ள வேண்டிய ஒன்று!

app_engine

Posts : 10097
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 18 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Fri May 15, 2015 7:21 am

#415
இழுக்கல் உடையுழி ஊற்றுக்கோல் அற்றே 
ஒழுக்க முடையார்வாய்ச் சொல்

பனிச்சறுக்கு விளையாட்டை மனதில் கொண்டு வரும் குறள் Smile

அருமையான உவமை - வழுக்கு நிலத்தில் ஊன்று கோல்! 

வடதுருவத்துக்கருகில் வாழுவோர்க்கெல்லாம் (அதாவது எங்களைப்போல் மிசிகனில் உள்ளோர்க்கு) வருடத்தில் சில மாதங்கள் வீட்டைச்சுற்றிலும் வழுக்கு "நிலம்" தான் Smile

ஒழுக்கமுடையார் வாய்ச்சொல்
நல்ல வாழ்க்கை நடத்துவோரின் வாய்ச்சொற்கள் (கேட்டு நடப்பது)

இழுக்கல் உடையுழி ஊற்றுக்கோல் அற்றே
வழுக்கு நிலத்தில் செல்கையில் ஊன்றுகோல் போல!

அப்படியாக, இரண்டாம் முறையாக ஊன்றுகோல் இந்த அதிகாரத்தில் Smile

(இங்கே கல்லாதவர் என்று குறிப்பிடவில்லை)

app_engine

Posts : 10097
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 18 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Sat May 16, 2015 6:02 am

#416
எனைத்தானும் நல்லவை கேட்க அனைத்தானும் 
ஆன்ற பெருமை தரும்

எனைத்து = எவ்வளவு, எந்த அளவுக்கு  & அனைத்து = அவ்வளவு, அந்த அளவுக்கு 

ஆன்ற = மாட்சிமையான / நிறைந்த / அகன்ற 

பள்ளிக்காலத்திலேயே நல்ல பழக்கமான குறள் என்றாலும் சொற்களுக்குப் பொருள் அகராதியில் பார்க்க வேண்டி இருக்கிறது Smile

எனைத்தானும் நல்லவை கேட்க
எந்த அளவில் கேட்டாலும், நல்லவற்றைக் கேளுங்கள்!

அனைத்தானும் ஆன்ற பெருமை தரும்
அந்த அளவுக்கான சிறப்பான பெருமையை அது தரும்!

நல்லன கேட்டால் அதற்குரிய விகிதத்தில் நமக்கு சிறப்பு வந்து சேரும் என்று கணக்குச் சொல்லுகிறார்!

நம்மால் ஆனமட்டும் நிறைய நன்மையானவற்றைக் கேட்க நேரம் ஒதுக்குவோம்!

app_engine

Posts : 10097
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 18 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Mon May 18, 2015 5:17 pm

#417
பிழைத்துணர்ந்தும் பேதைமை சொல்லாரிழைத்துணர்ந் 
தீண்டிய கேள்வியவர்

கொஞ்சம் குழப்பமான (கிட்டத்தட்ட மூடநம்பிக்கை போல உள்ள) குறள் Smile

அதாவது, வள்ளுவர் சொல்லியுள்ள நேரடிப்பொருள் கண்டிப்பாக மூடநம்பிக்கை 

எனப்படவே செய்யும். 

இல்லையென்று விளக்க, நாம் அவர் இதில் இன்னும் என்ன உள்பொதிந்தாரோ என்று 

ஆய்வு செய்ய வேண்டி இருக்கும் Smile

"தவறான புரிதல் இருந்தாலும் பேதைமை செய்ய மாட்டார்கள்" என்பது என்ன விதமான நம்பிக்கை? 

மாந்தரின் பேச்சுகளும் செயல்களும் அவர்கள் புரிந்த / உணர்ந்தவற்றின் அடிப்படையில் நடப்பவை தானே?

இழைத்துணர்ந்து ஈண்டிய கேள்வியவர் 
ஆராய்ந்துணர்ந்து, செறிந்த கேட்கும் திறனுடையோர்

பிழைத்துணர்ந்தும் பேதைமை சொல்லார்
தவறாகப் புரிந்து கொண்டிருந்தாலும் பேதைமையாகப் பேச மாட்டார்கள்!

இதை இரண்டு விதத்தில் விளக்க முயலலாம் :

1. கேள்வியறிவு நிறைந்தவர்கள், ஒரு முறை தவறாகப் புரிந்தாலும், அது குறித்துப் பேசுமுன் இன்னும் கேட்டுத்தேற முயல்வார்கள். அப்படியாக முட்டாள்தனமாகப் பேசாமல் தப்பிப்பார்கள்!

2. கேள்வியறிவு நிறைந்தோர் பொதுவில் பேச்சைக் குறைத்திருப்பதால், அவர்களது தவறான புரிதல்கள் கூட எளிதில் வெளி வராது Smile

app_engine

Posts : 10097
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 18 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Tue May 19, 2015 7:51 am

#418
கேட்பினுங் கேளாத்தகையவே கேள்வியால் 
தோட்கப்படாத செவி

"கண்ணிருந்தும் காணாமல், காதிருந்தும் கேளாமல்" என்ற சொல் வழக்கு நமக்கு நன்கு அறிமுகமான ஒன்று.

அந்தக்குரலில் எழுதப்பட்டிருக்கும் குறள். 

கேள்வியறிவு இல்லாத செவிகள் வெறும் செவிடு (ஒலிகளைக் கேட்க முடிந்தும் பயனில்லாதவை) என்று அறிவுறுத்தும் செய்யுள் Smile

தோட்கப்படாத என்ற சொல்லுக்கு அகராதிப்பொருள் காண்பது வலையில் கடினமாக இருக்கிறது. என்றாலும், உரையாசிரியர்கள் "துளைக்கப்படாத" என்று சொல்லுவதை அப்படியே எடுத்துக்கொள்கிறேன். 
(தோண்டுதல் என்ற அடிப்படையில் வருகிறதோ என்னமோ? அல்லது, "தோடு" அணியத் துளையிடுவதிலிருந்து வருகிறதோ? Laughing )

கேள்வியால் தோட்கப்படாத செவி
கேள்வியறிவால் துளைக்கப்படாத செவி 

கேட்பினுங் கேளாத்தகையவே
(ஒலிகளைக்) கேட்க முடிந்தாலும் கேட்கும் திறனற்ற (அதாவது, செவிட்டுக்) காது என்றே கருதப்படும்!

கேள்வியறிவு இல்லாதவனுக்கு (மீண்டும் என் இசைப்பற்று அடிப்படையில், இசையை மகிழ்ந்து கேட்காதவனுக்கு) எதற்கய்யா காதுகள்? 

வீண்!

app_engine

Posts : 10097
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 18 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 18 of 40 Previous  1 ... 10 ... 17, 18, 19 ... 29 ... 40  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum