Ilayaraja and Beyond
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

குறள் இன்பம் - #1 - #948

+3
fring151
Usha
V_S
7 posters

Page 6 of 40 Previous  1 ... 5, 6, 7 ... 23 ... 40  Next

Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 6 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Tue Dec 10, 2013 6:55 pm

#105
உதவி வரைத்தன்று உதவி உதவி
செயப்பட்டார் சால்பின் வரைத்து


எளிதில் குழப்பி விடக்கூடிய குறள் Smile
(துப்பார்க்குத்துப்பாய அளவுக்கு இல்லையென்றாலும் கருத்துப்புரிதலில் குழம்ப வழியுண்டு).

உண்மையில் பொருள் புரிந்து கொள்ள அவ்வளவு கடினம் இல்லை. ஆனாலும் உரை ஆசிரியர்கள் கொஞ்சம் வளவள என்று எழுதி இருப்பதாக எனக்குத்தோன்றுகிறது

உதவி வரைத்தன்று உதவி
உதவிக்குக் காண்பிக்க வேண்டிய நன்றி உதவியின் அளவின் அடிப்படையில் அல்ல.
(நன்றி என்பதைக் "கைம்மாறு / பதிலுக்குச் செய்யும் உதவி" என்றும் கொள்ளலாம்).

உதவி செயப்பட்டார் சால்பின் வரைத்து!
உதவி பெற்றவரின் பண்பைப் பொறுத்தே (நன்றியின் அளவு) இருக்கும்!

நமக்கு ஒருவர் செய்த உதவி 1000 ரூபாய் என்று வைத்துக்கொள்வோம். அதற்கு நாம் காட்டும் நன்றியின் அளவு அந்த 1000 ரூபாயின் அடிப்படையில் அல்ல!
(அதாவது, பதிலுக்கு நானும் 1000 ரூபாய் அடுத்த வாரம் மொய் வைக்கிறேன் என்பதல்ல நன்றி. அதற்கு வேறு பெயர் : வட்டியில்லாக் கடன் Embarassed )

நாம் காட்டும் நன்றி, நமது பண்பின் அடிப்படையில் இருக்கும்.

செய்தவர் மீது நாம் காட்டும் அன்பு, மதிப்பு, கைம்மாறாகச்செய்யும் உதவிகள் இவையெல்லாம் கணக்குப்போட்டுச் செய்தால் நமது பண்பும் குறைந்த அளவிலேயே இருக்கிறது என்று பொருள்!

(வையகம் வானகம் ஆற்றல் அரிது, ஞாலத்தின் மாணப்பெரிது, கடலின் பெரிது, பனையளவு என்பதெல்லாம் நினைத்துக் கொள்ளுங்கள்!)

app_engine

Posts : 10097
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 6 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Wed Dec 11, 2013 6:07 pm

#106
மறவற்க மாசற்றார் கேண்மை துறவற்க 
துன்பத்துள் துப்பாயார் நட்பு

நேரடிப்பொருள் காண்பது எளிது என்றாலும் பெரிய உரையாசிரியர்கள் எல்லோரும் குறிப்பிடத்தக்க ஒன்றைக் கண்டுகொள்ளவில்லை என்று எனக்குத் தோன்றுகிறது.

அதாவது, "ஒப்பீடு"!

எப்படி எனக்கடைசியில் பார்ப்போம். முதலில் இங்கு சொல்லப்பட்டிருக்கும் இரு நட்புகள் பற்றிய நேரடிப்பொருள் காணலாம்.

மாசற்றார் கேண்மை மறவற்க! 
மாசு (குற்றம் / குறை / அக அழுக்கு) இல்லாதவர்களின் நட்பினை ஒரு போதும் மறந்து (அல்லது விட்டு) விடாதீர்கள்!

துன்பத்துள் துப்பாயார் நட்பு துறவற்க!
துன்பமான காலத்தில் உதவி செய்தவர்களின் நட்பினைத் துறந்து விடாதீர்கள் (நன்றி மறந்து விடாதீர்கள்)!

உரைகள் இந்த நேரடிப்பொருள் மட்டுமே சொல்வதைக்காண முடியும்!

என் கருத்துப்படி, இரண்டையும் ஒப்பிடவும் வள்ளுவர் விரும்புகிறார் என்றே தோன்றுகிறது.

அதாவது, எப்படி மாசற்ற புனிதர்களின் நட்பு & தொடர்பு விலை மிக்கது என்று நாம் உணர வேண்டுமோ அதே போல நமக்குத் துன்பத்தில் உதவியோரிடம் காட்டும் நட்பும் நன்றியும் விலை மிக்கதாக எண்ண வேண்டும்!

சுருக்கமாகச் சொன்னால், நட்பு & நன்றி காட்ட வேண்டியதில் புனிதர் = துன்பத்தில் உதவியோர்!

app_engine

Posts : 10097
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 6 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  Usha Thu Dec 12, 2013 2:48 pm

app,
 Nanri for Nanri...........

 seinanri............. adhu enna...............

indha kuraluku inime dhan vara poreenga............

En Nanri kondrarkum uyundam uyvillai
Seinanri kondra magarku.

edherchaiyaga parthen. indha page ai.... paatagavum.. chinnadhaga porulum................

http://www.raaga.com/channels/tamil/moviedetail.asp?mid=TCE00011


IR music. epadi irukum.. Thirukuraluku.. ninaithu parthen.. nanraga manappadam agum......  IR seiyalam.............

Usha

Posts : 3146
Reputation : 15
Join date : 2013-02-14

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 6 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Thu Dec 12, 2013 7:35 pm

Usha wrote:app,
 Nanri for Nanri...........

 seinanri............. adhu enna...............

indha kuraluku inime dhan vara poreenga............

En Nanri kondrarkum uyundam uyvillai
Seinanri kondra magarku.

அதிகாரத்தின் கடைசிக்குறள் - அடுத்த வாரத்தில் வரும் என்று நம்புகிறேன் Smile

ஆனந்தவிகடனில் அந்தக்குறளைப் பற்றி இளையராசா எழுதியிருந்த கட்டுரை அவ்வப்போது நான் நினைவு கூர்ந்ததுண்டு.

"மகற்கு" என்ற சொல் தான் முக்கியம் என்பார் அவர்.

அதாவது, பெற்றோர் செய்த உதவி தான் அந்தக்குறளில் வரும் "செய்ந்நன்றி".  (மற்றவர்கள் செய்யும் உதவிகள் "எந்நன்றி" என்று எல்லாவற்றையும் உட்படுத்தி விடும் என்பது ராசா கருத்து.)

பெற்றோர் செய்த நன்மைகளுக்கு நன்றியுணர்வு இல்லாத பிள்ளைகளுக்கு உய்வே இல்லை என்று விளக்கி இருந்தார்.

அதுவும் நன்றாகத்தான் இருந்தது.

app_engine

Posts : 10097
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 6 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Thu Dec 12, 2013 8:29 pm

#107
எழுமை எழுபிறப்பும் உள்ளுவர் தங்கண்
விழுமந் துடைத்தவர் நட்பு


வள்ளுவர் மிகத்தெளிவாக, மீண்டும் மீண்டும், "மறு பிறப்பு" என்பதில் தமக்கிருந்த (அல்லது அவரது காலத்தவருக்குப் பொதுவில் இருந்த) நம்பிக்கையை இந்தக்குறளில் வெளிப்படுத்துகிறார்.

அதாவது, நன்றி மறவாதிருத்தல் என்பது ஒரு பிறவியோடு நிற்பதில்லை, பின் வரும் ஏழு பிறவிகளிலும் நினைவுகூறப்படும் என்று மிகைப்படுத்துகிறார்.

மறுபிறவியில் நம்பிக்கை உள்ளவர்கள் போலும் "புதுப்பிறவியில் பழைய பிறவியின் நினைவுகள் இருக்கும்" என்று பொதுவாக நம்புவது கிடையாது Smileஆதலால், இது "இல்பொருள் நவிற்சி அணி" என்று கொள்ளலாம். ("உயர்வு நவிற்சி அணி" போல அப்படி ஒன்று இருக்கிறதா தெரியாது)

தங்கண் விழுமந் துடைத்தவர் நட்பு
தமது துன்பத்தைப்போக்கி உதவியவர்களின் நட்பினை

எழுமை எழுபிறப்பும் உள்ளுவர்
ஏழேழு பிறப்பிலும் எண்ணிப்போற்றுவார்கள் (நல்லவர்கள்).

எவ்வளவு காலத்துக்கு நன்றியுணர்வு இருக்க வேண்டும் என்று சுட்டிக்காட்டும் குறள்!

app_engine

Posts : 10097
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 6 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Fri Dec 13, 2013 6:09 pm

#108
நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது
அன்றே மறப்பது நன்று

தமிழ் படித்த எல்லோருக்கும் பழக்கமான இன்னொரு குறள் Smile

நேரடியான, குழப்பமில்லாத, எளிதாகப் பொருள் காணத்தக்க பாடல்.

நன்றி மறப்பது நன்றன்று
ஒருவர் நமக்குச் செய்த நன்மையை மறப்பது நல்லதல்ல!

நன்றல்லது அன்றே மறப்பது நன்று
மறுபக்கத்தில், ஒருவர் நமக்கு நன்மையல்லாதது செய்திருந்தால் அதை உடனே (அதே நாளில்) மறந்து விடுவது தான் நல்லது!

எதிரும் புதிருமான இரண்டைச் சேர்த்துப்பாடும் இரண்டடிப் பாடல்கள் பல மொழிகளிலும் பெயர் பெற்றவை என்று முன்னமேயே பார்த்திருக்கிறோம்.

கூட வேலை செய்யும் ஒருவர் சொன்ன உருது ஷாயர் ஒன்றின் மொழிபெயர்ப்பு:

சூழமைவு:
தேநீரை மிகவும் விரும்பும் ஒருவர் சாகக் கிடக்கிறார். அவர் தன்னைப்பார்க்க வந்து கொண்டிருக்கும்  மகனிடம் சொல்லச்சொன்ன பாடலாம் இது:

நீ வரும்போது இன்னும் துளி உயிர் இருந்தால் என் வாயில் தேநீர் சுவைக்க வையடா!
அல்லாமல் நான் இறந்திருந்தால், என் உடலையேனும் தேநீரால் கழுவடா!

Smile

app_engine

Posts : 10097
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 6 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Sun Dec 15, 2013 5:27 pm

#109
கொன்றன்ன இன்னா செயினும் அவர்செய்த
ஒன்றுநன்று உள்ளக் கெடும்


நன்றி உணர்வின் வலிமையை அழகாக உணர்த்தும் குறள்!

அவர் செய்த ஒன்று நன்று உள்ள
ஒருவர் முன்பு எப்போதோ செய்த ஒரே ஒரு நன்மையை நினைத்தால்

கொன்றன்ன இன்னா செயினும்
அவர் தற்போது நம்மைக் கொல்லுவது போன்ற கொடுமை செய்தாலும்

கெடும்
அந்தத் தீமையை நாம் பொருட்படுத்த மாட்டோம்!

நன்றிக்கு எப்போதும் நாயை எடுத்துக்காட்டாகச் சொல்லுவதுண்டு. 

நமக்கு என்றோ ஒருவர் செய்த நன்றிக்காக பிற்பாடு அவர் செய்யும் தீமையையும் (அதுவும் அளவில் மிகப்பெரியது) பொறுத்துக் கொள்வதன் தேவையை நாயிலிருந்து கற்றுக்கொள்ள வேண்டும் என்று ஒரு வேளை அதை நமக்கு வழிகாட்டியாய்ச் சொன்னார்களோ என்னமோ தெரியாது Smile

எப்படி இருந்தாலும் செய்த நன்றி அறிதலின் அழுத்தத்தை "கொன்றன்ன" என்பதில் வலிமையாக வீசி விடுகிறார் வள்ளுவர்!

app_engine

Posts : 10097
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 6 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Mon Dec 16, 2013 10:42 pm

#110
எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
செய்ந்நன்றி கொன்ற மகற்கு


நன்றியுணர்வு தவிர்ப்பது மன்னிப்பே இல்லாத குற்றம் என்று அழுத்திச் சொல்லும் குறள்!

இந்தக்குறளில் நான் மிக உன்னிப்பாகக் கவனிக்கும் சொல் "உய்வு".

இதன் நேரடியான பொருள் "பிழைத்தல்". இன்னும் திருத்தமாகச் சொல்லவேண்டும் என்றால் "தப்பிப்பிழைத்தல்". அதாவது, ஏதாவது ஒரு பழிக்கான தண்டனையில் இருந்து காப்பாற்றப்படுதல்.

மணிப்பவள மொழியில் இதற்கான சொல் பலருக்கும் நன்றாகத்தெரிந்த ஒன்று - "இரட்சிப்பு" Smile

பொருள் பார்ப்போம் :

எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம்
எந்த நன்மையை அழித்தவருக்கும் பிற்காலத்தில் தப்பிப்பிழைக்க வழி இருக்கிறது என்றாலும்

செய்ந்நன்றி கொன்ற மகற்கு உய்வில்லை
உதவி செய்ததற்கான நன்றியுணர்வை அழித்த மக்களுக்கு தப்புவதற்கான வழியே இல்லை. ("தண்டனை உறுதி" என்று பொருள்).

எவ்விதமான தண்டனை, ஏன் அதிலிருந்து பிழைத்துப்போக வழியில்லை என்பன ஆழமாகச் சிந்திக்கத் தூண்டும் கேள்விகள்.

குறிப்பாக, உலகத்தின் எந்த நாட்டின் சட்டத்திலும் "நன்றி மறந்து போனான், அதனால் இவனுக்கு இப்படிப்பட்ட தண்டனை" என்று குறிப்பாக இருக்கிறதா என்று தெரியவில்லை Smile

ஆனால், மனசாட்சி உயிருடன் இருப்பவருக்கு "உள்ளே உறுத்தும் தண்டனை"யில் இருந்து தப்ப வழியில்லை என்பது உண்மை.

அதே போல, இறை நம்பிக்கை உள்ளவர்கள் (வள்ளுவரும் அதில் உட்படுகிறார் என்பதே என் கருத்து)  "நன்றி கெட்டவர்களை இறைவன் காக்க மாட்டான்" என்று இந்தக்குறள் கூறுவதாகக் கொள்ளலாம்.

app_engine

Posts : 10097
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 6 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Sun Dec 22, 2013 8:48 pm

#111
தகுதி எனவொன்று நன்றே பகுதியால்
பாற்பட்டு ஒழுகப் பெறின்
(அறத்துப்பால், நடுவு நிலைமை அதிகாரம்)

கொஞ்சம் குழப்பமான குறள் - அதாவது நடுவு நிலைமை என்பதன் பொருளாக நான் கருதுவதில் இருந்து கருத்துச் சிதறல் இருப்பது போல் தெரிகிறது. Embarassed

மேலும் உரையாளர்களும் தம் பங்குக்குக் குழப்புகிறார்கள்.

என் கருத்துப்படி "நடுவு நிலைமை" (அல்லது நடுநிலை) என்பது எந்த ஒரு பக்கமும் சார்பில்லாமல்,, சம உரிமை எல்லாப்பக்கத்துக்கும் கொடுத்து நிற்கும் நிலைமை. அல்லது, "ஒரு கண்ணுக்கு வெண்ணை, மறு கண்ணுக்குச் சுண்ணாம்பு தராத நிலைமை".

இந்தக்குறள் சொல்லுவதோ அவரவர் தகுதிக்குத் தக்க விலை தருதல் என்பது போன்ற ஒலி (பல உரைகளும் அப்படித்தான் பெயர்க்கின்றன).

பகுதியால் பாற்பட்டு
இன்னென்ன பகுதி என்று பிரித்து விட்டு

தகுதி எனவொன்று ஒழுகப் பெறின்
அந்தந்தப் பிரிவுக்கு இன்னின்ன தகுதி என்று வரையறுத்தால் (அதாவது இந்தக்கூட்டத்து இவ்வளவு தகுதி என்று சொல்லி விட்டால்)

நன்றே
அது தான் நல்லது!

"அப்படியெல்லாம் பொருள் கொள்ள முடியாது, இது ஒருதலைச்சார்பல்லவா?" என்று என் மனதில் தோன்றுகிறது.  scratch 
  
பொருள் ஒரு வேளை இப்படி இருக்கலாம் : "எந்தப்பகுதி என்றாலும் - நண்பன், உறவினன், எதிராளி இப்படி யாரானாலும் - தகுதி கண்டு மட்டும் ஒழுகுதல் தான் நடுவு நிலைமை".

எப்படியும், புரிவதற்குக் கொஞ்சம் கடினமான குறள் தான்!

app_engine

Posts : 10097
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 6 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Mon Jan 06, 2014 10:07 pm

#112
செப்பம் உடையவன் ஆக்கஞ் சிதைவின்றி
எச்சத்திற் கேமாப்பு உடைத்து


செப்பம், ஏமாப்பு என்று இரு அருஞ்சொற்கள் இந்தக்குறளில் காண்கிறோம். அவற்றின் பொருள் கிடைத்தால் குறளின் பொருள் காணுதல் எளிது.

செப்பம் = செம்மை என்று பொதுவாகப்பொருள் சொல்லிவிட்டு, அகராதியில் இந்தக்குறளைக் குறிப்பிட்டு "நடுநிலைமை" என்று விளக்குகிறார்கள் Smile

ஏமாப்பு = பாதுகாப்பு, அரண் என்றெல்லாம் நேரடிப்பொருள்.

ஆக்கமும் (செல்வமும்) ஒரு விதத்தில் மனிதருக்குப் பாதுகாப்புத்தானே? (பணம் இருந்தால் உணவு முதலான அடிப்படைத்தேவைகள் கிடைத்து விடும் அல்லவா?)

செப்பம் உடையவன் ஆக்கம்
நடுநிலை காத்து வாழ்பவனின் செல்வம்

சிதைவின்றி
(அவனோடு) அழிந்து போய் விடாமல்

எச்சத்திற் கேமாப்பு உடைத்து
அவனது வழித்தோன்றல்களுக்கும் பாதுகாப்பாய் இருக்கும்!

எச்சம் = "எஞ்சி இருப்பது" என்ற பொருளில், இறந்த ஆளின் மீந்திருக்கும் குடும்பத்தவர் என்று இங்கே கொள்ளப்படுகிறது Smile

app_engine

Posts : 10097
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 6 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Tue Jan 07, 2014 5:18 pm

#113
நன்றே தரினும் நடுவிகந்தாம் ஆக்கத்தை
அன்றே யொழிய விடல்


கொஞ்சம் குழப்பமான குறள் Embarassed

"நன்றே" என்று பொதுவாகச் சொல்லி இருப்பது தான் குழப்பத்துக்குக் காரணம். 'யாருக்கு நல்லது', 'எதனால் நல்லது', 'எப்படி நடுநிலை இல்லாமல் வரும் செல்வம் நன்று தரும்' என்றெல்லாம் கேள்விகள் எழும்புவது இயல்பு.

இந்த சமயத்தில் "புரை தீர்ந்த நன்மை" என்று வேறொரு குறளில் வள்ளுவர் பொய்மை குறித்துச் சொல்லுவது நினைவுக்கு வருவதும் தவிர்க்க இயலாதது.

இங்கே அப்படித்தான் அவர் சொல்வதாகச்சில உரையாசிரியர்கள் எழுதுவதைக் காண முடியும் ("யாருக்கும் தீங்கு தராத நன்மை").

என்ற போதிலும், என்னைப் பொருத்தவரையில் அது "உயிரே போனாலும்" என்பது போன்ற ஒரு சொல்லாடல் என்றே கொள்வேன் Smile

நடுவிகந்தாம் ஆக்கத்தை
நடுநிலை தவறி வரும் செல்வத்தை / பயனை

நன்றே தரினும்
நன்மை தருவதாகவே இருந்தாலும்

அன்றே யொழிய விடல்
ஏற்கலாகாது!
உடனே (வரும் நாளிலேயே) அதைத் தவிர்த்து (ஒழித்து) விட வேண்டும்!

பொதுவாக எல்லோருக்கும் நல்ல அறிவுரை என்றாலும், நீதிபதிகளுக்கு மிகவும் உகந்த ஒரு குறள்!

app_engine

Posts : 10097
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 6 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Wed Jan 08, 2014 7:01 pm

#114
தக்கார் தகவிலர் என்பது அவரவர்
எச்சத்தாற் காணப் படும்


எச்சம் என்பதற்கு வழித்தோன்றல்கள் / எஞ்சி இருக்கும் குடும்பத்தவர் என்று முன்னொரு குறளில் கண்டோம். இங்கும் அதே பொருள் கொள்வது பொருத்தமே.

மாறாக, மு.வ. உரையில் சொல்லுவது போல, "எஞ்சி நிற்கும் புகழ் அல்லது பழி" என்று கொண்டாலும் பொருத்தமாகவே இருக்கிறது.

தக்கார் தகவிலர் என்பது
ஒருவர் நடுவு நிலைமை உள்ளவராக வாழ்ந்தாரா இல்லையா என்பது (அதாவது "நடுநிலைமை உள்ளவர்" என்ற பட்டத்துக்குத் தகுதியானவரா இல்லையா என்பது)

அவரவர் எச்சத்தாற் காணப் படும்
அவரவர் என்ன விட்டுச்சென்றார் என்பதிலிருந்து வெளிப்படையாகத் தெரியும்! (நல்ல பிள்ளைகளா இல்லையா / புகழா அல்லது பழியா)

நடுவு நிலைமை அதிகாரத்தில் உள்ளதால் நாம் அந்தப் பண்புக்கு என்று கொள்கிறோம்.

மற்றபடி, இந்தக்குறள் வேறு பல பண்புகளுக்கும் "தக்கார் / தகவிலார்" என்ற அளவில் பொருந்தும் ஒரு பொது நீதி!
(எடுத்துக்காட்டு : விருந்தோம்பல்) Smile

app_engine

Posts : 10097
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 6 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Thu Jan 09, 2014 6:22 pm

#115
கேடும் பெருக்கமும் இல்லல்ல நெஞ்சத்துக்
கோடாமை சான்றோர்க் கணி


"சூழ்நிலைக்கைதி" என்ற ஒரு சொல் வழக்கம் தமிழ்நாட்டில் உண்டு.

சில நேரங்களில் அது முழுக்க முழுக்க உண்மை என்றாலும், வேறு சில தருணங்களில் முதுகெலும்பில்லாதவர்கள் இதை ஒரு கேடயமாகக் கொள்வதைக் காண முடியும்.

தெளிவாக, நேர்மையாக ஒரு நிலை எடுப்பதற்கு மாறாக "என்னால் என்ன செய்ய முடியும், நிலைமை அப்படி" என்று சொல்லித் தப்பித்துக்கொள்ள - அல்லது சமாளிக்க - முயலும் கோழைகளுக்கு இந்தக்குறள் ஒரு சம்மட்டி அடி!

கேடும் பெருக்கமும் இல்லல்ல
கேடான நிலையும்  மேன்மையான நிலையும் ஒருவருக்கு வருதல் இயல்பே (இத்தகைய மாற்றான நிலைகள், உலகில் இல்லாத விந்தை ஒன்றும் கிடையாது!)

நெஞ்சத்துக் கோடாமை சான்றோர்க் கணி
(என்ற போதிலும், எத்தகைய நிலையிலும் - அதாவது வாழ்விலும் தாழ்விலும்) நெஞ்சத்தில் நேர்மை தவறாது இருத்தல் தான் சான்றோர்க்கு அழகு!

நெஞ்சத்தின் நேர்மையை சுற்றுச்சூழல் தாக்கி மாற்றும் படி விட்டு  விடாதீர்கள்!

app_engine

Posts : 10097
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 6 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Fri Jan 10, 2014 4:47 pm

#116
கெடுவல்யான் என்பது அறிக தன் நெஞ்சம்
நடுவொரீஇ அல்ல செயின்

மிக நேரடியான, குழப்பமில்லாத குறள்!

இதில் என்னைக்கவருவது என்னவென்றால், மீண்டும் வள்ளுவர் நெஞ்சத்தின் நிலையைப்பற்றி எழுதுவது!

வெளிப்படையாக ஒருவர் நடுவு நிலையில் செயல்படுகிறாரா இல்லையா என்பதற்கும் அப்பால் "தன் உள்ளத்தில் என்ன நினைக்கிறார்" என்பதை உன்னிப்பாகப் பார்ப்பதால் சிறந்து விளங்கும் இன்னொரு குறள்!

தன் நெஞ்சம் நடுவொரீஇ அல்ல செயின்
தன் நெஞ்சத்தில் நடுநிலைமை இல்லாத ஒன்றைச் செய்ய நினைக்கும் தருணத்திலேயே

கெடுவல்யான் என்பது அறிக
(இத்தகைய செயல்) தன்னை அழிவுக்கு வழிநடத்தும் என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும்!

நெஞ்சத்தின் எண்ணங்கள் ஒருவரது பேச்சு மற்றும் செயல்களில் விளைவடையும் என்பது தெரிந்ததே.

அதனால், நெஞ்சத்துக்கு முதலில் கடிவாளம் தேவை!

app_engine

Posts : 10097
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 6 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Mon Jan 13, 2014 7:44 pm

#117
கெடுவாக வையாது உலகம் நடுவாக
நன்றிக்கண் தங்கியான் தாழ்வு


நேர்மையாக நடப்போருக்குப்  பொருள் அளவில் குறைபாடுகள் வரலாம் என்பதை ஒத்துக்கொள்ளும் குறள் Smile

நடுவாக நன்றிக்கண் தங்கியான் தாழ்வு
சரியான நடுநிலையில் வாழும் ஒருவனுக்குப் பொருள் அளவில் தாழ்வு (வறுமை) வந்தால்
 
உலகம் கெடுவாக வையாது
அந்த நிலையை உலகம் "கேடு" என்று இகழாது!

இங்கே சொல்லப்படும் உலகு, நல்லோர் அடங்கிய நல்லுலகு என்றே நாம் கொள்ள வேண்டும். கண்டிப்பாக, அத்தகையோர் நேர்மையான சான்றோரை  -இப்படி ஒரு நிலையை அடைந்து விட்டாலும் -  மதிப்பரே தவிர இகழ மாட்டார்கள்!

ஆனால், பொதுவான உலகில் இன்று அவ்வித மனநிலை இல்லை என்பது தெரிந்ததே Sad

என்றாலும், "பெரிய நேர்மையாய் இருந்தானாம், இப்போ கஞ்சிக்கே வழி இல்லை பாரு" என்று இகழும்போதும், அத்தகைய தீய உலகில் உள்ளோரும், மனதுக்குள் "என்ன ஒரு வியக்கத்தக்க வாழ்வு வாழ்ந்திருக்கிறார், என்னாலெல்லாம் இப்படி முடியவில்லையே" என்று ஆதங்கப்பட்டு மெச்சுவார்கள் என்பது தான் உண்மை!

app_engine

Posts : 10097
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 6 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Tue Jan 14, 2014 6:27 pm

#118
சமன்செய்து சீர்தூக்குங் கோல்போல் அமைந்தொருபால்
கோடாமை சான்றோர்க் கணி


தமிழ் படித்த பலருக்கும் நன்கு பழக்கப்பட்ட குறள்!

நீதி மன்றத்தில் இருக்கும் "கண்ணில் கருப்புத்துணி கட்டி மறைத்த சிலை" நினைவுக்கு வருவது இயல்பே.

(நேரடியாக நீதிமன்றத்தில் சென்று பார்க்காதவர்களும் ஒளிப்படங்களில் பார்த்திருக்கலாம். இல்லாவிட்டாலும் கண்டிப்பாகத் திரைப்படங்களில் பார்த்தே இருப்பார்கள் Smile )

அந்தச்சிலையின் கையில் பிடித்திருக்கும் துலாக்கோல் (தராசு) தான் இந்தக்குறளின் உவமை Smile

சமன்செய்து சீர்தூக்குங் கோல்போல் அமைந்து
தான் சமமாக நின்று, தன்மீது வைக்கும் பொருளை (எடைக்கல்லோடு) ஒப்பிடும் துலாக்கோல் போல அமைந்து

ஒருபால் கோடாமை சான்றோர்க் கணி
ஒரு பக்கமாக சாய்ந்து விடாமல் (நடுநிலையுடன்) செயல்படுவது சான்றோர்க்கு அழகு!

மின்னணு எடை இயந்திரங்கள் எங்கும் பரவி வருவதால் இத்தகைய கோல்கள் கொஞ்ச நாளில் காணாமல் போய்விட வழியுண்டு.

எங்காவது அழகான ஒன்று கிடைத்தால் வாங்கி அலங்காரப்பொருளாக வைத்து, அது காட்டும் நடுநிலை அறிவுரையையும் நினைவில் வைப்பது சிறப்பாக இருக்கும்!

app_engine

Posts : 10097
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 6 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Wed Jan 15, 2014 6:16 pm

#119
சொற்கோட்டம் இல்லது செப்பம் ஒருதலையா
உட்கோட்டம் இன்மை பெறின்


செப்பம் - என்ன ஒரு அழகான சொல்!

செம்மை என்று இதற்குப்பொருள் சொல்கிறது அகராதி! "செப்பனிடுதல்" என்பது நமக்கு நன்கு தெரிந்த ஒரு பயன்பாடு.

செப்பம் என்ற சொல்லை இங்கே "செம்மையான நடுநிலை" என்ற அளவில் வள்ளுவர் பயன்படுத்துகிறார்!

ஒருதலையா உட்கோட்டம் இன்மை பெறின்
மனதின் உள்ளே ஏதோ ஒரு பக்கம் சாய்ந்து விடும் கோட்டமான (கோணலான, நேர்மையற்ற) நிலைமை இல்லாதிருப்பதோடு

சொற்கோட்டம் இல்லது செப்பம்
சொற்களிலும் (ஒரு பக்கம் சாயும்) கோணலான நிலை இல்லாதிருப்பது தான் செம்மை!

இதன் முதல் பகுதிக்கு இன்னொரு விளக்கமும் பொருத்தமானதே. அதாவது, "மனதில் கோட்டம் இல்லாமல் இருந்தால், சொற்கோட்டம் வராது" என்றும் விளக்கலாம்.

அது விளக்கம் என்பதற்கும் அப்பால், உண்மையும் தான் Smile

app_engine

Posts : 10097
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 6 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Thu Jan 16, 2014 6:41 pm

#120
வாணிகம் செய்வார்க்கு வாணிகம் பேணிப்
பிறவும் தமபோல் செயின்


அறத்துப்பாலில் திடீரென்று பொருட்பால் வருவது போல் தோற்றம் - வாணிகம் பற்றிய குறள் ஏன் "நடுவு நிலைமை" அதிகாரத்தில் என்று எண்ண வைக்கிறது.

என்றாலும், இதன் உள்ளே பொதிந்திருக்கும் மனநிலையின் மீது நம் சிந்தனையை ஒருமுகப்படுத்தலாம்.

"பிறவும் தமபோல்" என்ற உயரிய கருத்தில், தன்னலமில்லாது, தனக்கு வேண்டிய பக்கத்தில் சாராது வாழும் பொது நெறி காண்கிறோம்.

வாணிகம் என்பது வெறுமென ஒரு "சூழல்" என்று மட்டும் கொண்டு, இந்த அறநெறி படிப்பது தான் வள்ளுவரின் நோக்கம் என்றே புரிந்துகொள்ளவேண்டும்!

பேணிப்பிறவும் தமபோல் செயின்
மற்றவர் பொருளையும் தமது போலப் பேணிப் போற்றுதல் தான்

வாணிகம் செய்வார்க்கு வாணிகம்
வணிகருக்கு நல்ல வாணிக முறை!

மொத்தத்தில் "ஒரு பக்கம் சாராமல் எல்லோரது உடைமைகளையும் பாதுகாத்தல்" என்பது மிக உயரிய பண்பு, நெறி!

app_engine

Posts : 10097
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 6 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Fri Jan 17, 2014 6:25 pm

#121
அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை
ஆரிருள் உய்த்து விடும்

(அறத்துப்பால், இல்லறவியல், அடக்கமுடைமை அதிகாரம்)

தெரிந்த குறள் என்றாலும் புதிதாய்ச் சிலவற்றைக் கற்க வாய்ப்பிருக்கிறது.

பொதுவான பொருள் புரிதல் எளிதே : "அடக்கம் ஒருவரை உயர்த்தும், அடக்கமின்மை தாழ்த்தும்".

என்றாலும், "அமரர், உய்த்தல், ஆரிருள்" என்ற சொற்களுக்கு உரையாசிரியர்கள் ஒவ்வொருவரும் தத்தம் நம்பிக்கைகளின் அடிப்படையில் பொருள் சொல்வதைப் பார்க்க இயலும் Smile

மர் / மரர் / மரித்தல் / மரணம் என்ற சொல்லின் தொடக்கம் தமிழா வடமொழியா என்ற ஆய்வு இந்த இழையின் நோக்கமல்ல Smile முதல் குறளிலேயே ஆதியும் பகவனும் இருப்பதைக் கண்டிருக்கிறோம் அல்லவா?

மரர் = இறப்பில்லாதவர்! 
(ஆங்கிலம் உட்படப்பல மொழிகளிலும் இப்படி "அ" முன்னால் சேர்த்து எதிர்ப்பதம் ஆக்குவது கவனிக்கத்தக்க ஒன்று)

பொதுவான இந்தியத்தொன்மையின் அடிப்படையில் இதை "தேவர்கள்" என்று சிலர் பெயர்க்கிறார்கள். மு.க. அவரது நம்பிக்கைப்படி, "அழியாப்புகழ்" (ஆள் இறப்பான், புகழ் இறக்காது) என்று சொல்லுகிறார்.

'உய்த்தல்' என்பதும் அதே அடிப்படையில் (புகழ்) கொடுக்கும் என்றோ (வானுலகில்) கொண்டு சேர்க்கும் என்றோ சொல்லப்படுகிறது. (தப்பிப்பிழைத்தல் என்ற பொருள் நாம் முன்னமேயே பார்த்தது தான்).

அதே போல 'ஆரிருள்' என்பது இருண்ட வாழ்வு என்றும் நரகம் என்றும் பொருள் சொல்லப்படுவதைக் காணலாம்.

அடக்கம் அமரருள் உய்க்கும்
அடக்கம் ஒருவருக்கு இறப்பில்லாத வாழ்வு தரும்

அடங்காமை ஆரிருள் உய்த்து விடும்
அடக்கம் இல்லாமை என்றென்றும் இருளுக்குள் தள்ளி விடும்!
(இறப்பை உறக்கத்துடன் ஒப்பிடுவதுண்டு. நீண்ட உறக்கம், ஆரிருள் தானே!)

app_engine

Posts : 10097
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 6 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Wed Jan 22, 2014 12:08 am

#122
காக்க பொருளா அடக்கத்தை ஆக்கம்
அதனினூஉங் கில்லை உயிர்க்கு

உவமையையும் விடக்கூடுதல் வலிமையாக ஒப்பிடுவது தான் உருவகம். முன்னதில் "போல" என்ற ஒப்பீடு இருக்கும். உருவகத்திலோ அதுவும் இல்லாமல், ரெண்டும் ஒன்றே என்ற நிலையில் இருக்கும்.

இங்கு அடக்கத்துக்கு வள்ளுவர் உருவகம் தருவதைக்காணலாம். அதிலும் வேடிக்கை என்ன என்றால், அவரே அந்த வேலையைச் செய்யாமல், உருவகப்படுத்தும் வேலையை நம்மிடம் தருகிறார் Smile

"அடக்கத்தைப் பணம் என்றே கருதுங்கள்" என்று அழகாகச் சொல்லுகிறார்!

காக்க பொருளா அடக்கத்தை
அடக்கம் என்னும் நற்பண்பைப் பொருட்செல்வம் போல் எண்ணிக்காப்பற்றுங்கள்!

ஆக்கம் அதனினூஉங் கில்லை உயிர்க்கு
ஒருத்தருக்கு அதை விடவும் பெரிய செல்வம் (ஆக்கம்) இல்லை!

என் தனிக்கருத்துப்படி, பொருட்செல்வம் ஒருக்காலும் நற்பண்புகளுடன் ஒப்பிடத் தகுதி இல்லாதது. "தங்கம் மாதிரிக்குணம்" என்று சொல்வதைக் கேட்கும்போதெல்லாம், ஒப்பீடு தான் என்றாலும், கொஞ்சம் சினம் வரும்.

அதனால், "அடக்கத்தை விடப் பெரிய ஆக்கம் இல்லை" என்று சொல்லும் அளவில் இந்தக்குறளை மதிக்கலாம்! Smile

app_engine

Posts : 10097
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 6 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Wed Jan 22, 2014 6:57 pm

#123
செறிவறிந்து சீர்மை பயக்கும் அறிவறிந்து
ஆற்றின் அடங்கப் பெறின்


அடக்கத்தோடு வாழ்பவருக்கு வரும் சிறப்பை எழுதியிருக்கிறார் வள்ளுவர்!

அறிவறிந்து ஆற்றின் அடங்கப் பெறின்
அறிவைப்பெற்று சரியான நெறியில் அடக்கத்துடன் விளங்கினால்  

செறிவறிந்து சீர்மை பயக்கும்
(அந்த நல்ல தன்மையின்) நிறைவை எல்லோரும் உணர்வதால், ஒருவருக்கு  மேன்மை கிடைக்கும்!

"அறிவறிந்து" என்பதை இன்னொரு விதத்திலும் விளக்கலாம்.

"தன்னால் இன்னின்னது முடியும்" என்ற அறிவு Smile 

அதாவது, அளவுக்கு மிஞ்சி ஒரு ஆள் தன்னைப்பற்றி நினைத்துக்கொண்டால் அது ஒரு வகையான "அடக்கமின்மை".

அப்படிப்பார்த்தால், அறிவறிந்து = "நான் இன்று, இந்தப்பொழுதில், இன்ன நிலையில் தான் இருக்கிறேன் என்று அறிவது" Smile

app_engine

Posts : 10097
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 6 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Thu Jan 23, 2014 8:11 pm

#124
நிலையின் திரியாது அடங்கியான் தோற்றம்
மலையினும் மாணப் பெரிது


"தோற்றம்" என்ற சொல்லுக்கு இரு விதமான உரைகளைக் காண முடிகிறது.

"உயர்வு" என்று பல உரைகளும் கூறுகின்றன. "மற்றவர்கள் மனதில் உருவாகும் தோற்றம்" என்றும் உரை எழுதி இருக்கிறார்கள். இரண்டும் பொருத்தமானதே Smile

நிலையின் திரியாது அடங்கியான் தோற்றம்
தன் நெறியில் மாறாமல் அடக்கத்துடன் உள்ளவனின் உயர்வு (அல்லது அவர் பற்றிய மற்றவரது அளவீடு)

மலையினும் மாணப் பெரிது
மலையை விடவும் மிகவும் பெரியது!

கவனிக்கத்தக்க ஒரு கேள்வி - எப்போது இந்த "நிலையில் மாறாத அடக்கத்தன்மை" தென்பட வேண்டும்?

வாழ்வுச்சூழலில் பெரும் மாற்றங்கள் வரும் போது! குறிப்பாகப் பொருள் உயர்வு / தாழ்வு மனிதரின் அடக்கத்தில் பெரும் மாற்றங்கள் செய்ய இயலும். அதே போல் தான் புகழும்!

அவ்வித நிலை மாற்றங்கள் வரும்போது அடக்க நெறியில் பிறழாமல் இருப்பவன் மலையினும் பெரியவன் தானே!

app_engine

Posts : 10097
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 6 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Fri Jan 24, 2014 7:01 pm

#125
எல்லார்க்கும் நன்றாம் பணிதல் அவருள்ளும்
செல்வர்க்கே செல்வம் தகைத்து


செல்வம் - இந்தச்சொல்லுக்கு அகராதி தரும் பொருள்களில் ஒன்று "கல்வி அல்லாதது" Smile

பொருள், பணம் என்றெல்லாம் பொதுவாக வரையறுக்கலாம். (கல்விச்செல்வம், செவிச்செல்வம், பிள்ளைச்செல்வம் போன்ற உருவகங்களோடு குழப்பிக்கொள்ளக் கூடாது).

இந்தக்குறளில் வரும் இன்னொன்று, அடக்கம் = பணிதல்!

வேறு சொற்களில் சொன்னால், மற்றவர்களை நம்மிலும் உயர்ந்தவர்களாக - அதாவது, என்னவோ ஒன்றில் சிறந்தவர்களாகக் கருதி - மதிப்புக்கொடுத்தல்.

எல்லார்க்கும் நன்றாம் பணிதல்
அடக்கமாக இருப்பது எல்லோருக்குமே நல்லது!

அவருள்ளும் செல்வர்க்கே செல்வம் தகைத்து
அதிலும் குறிப்பாக, செல்வந்தர்களிடம் இருக்கும் அடக்கம் அவர்களுக்கு இன்னுமொரு செல்வமாய் விளங்கும்!

செல்வத்தைப் பெருக்க என்ன ஒரு எளிய வழி!

app_engine

Posts : 10097
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 6 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Mon Jan 27, 2014 6:32 pm

#126
ஒருமையுள் ஆமைபோல் ஐந்தடக்கல் ஆற்றின்
எழுமையும் ஏமாப் புடைத்து


ஐந்தடக்கல் முன்னமேயே நாம் கண்ட, படித்த ஒன்று. (ஐந்து புலன்களையும் அடக்கி ஆளுதல்).

எழுமை என்பதும் முன்பே கண்டதே. "ஏழு முறை மறுபடி மறுபடி பிறவி எடுத்தல்" என்ற நம்பிக்கை வள்ளுவர் காலத்தில் இருந்த பொதுச்சிந்தனை. அதை அவர் அங்கங்கே உட்படுத்தி இருக்கிறார்.

இந்தக்குறளில் நாம் புதிதாய்ப் படிக்கும் சொல் "ஏமாப்பு" Smile

அதன் பொருள், பாதுகாப்பு / அரண் என்பதாக அகராதி சொல்லுகிறது Smile

நாம் காணும் இன்னொன்று, அடக்கத்துக்கு ஆமையை உவமையாக்குதல். (தன் கூட்டுக்குள்ளே அடங்குவதன் மூலம் பாதுகாப்புக் காணும் ஒரு உயிரி!)

ஒருமையுள் ஆமைபோல் ஐந்தடக்கல் ஆற்றின்
ஒரு பிறவியில் ஆமை கூட்டில் அடங்குவது போல் ஐந்து புலன்களையும் அடக்கியாண்டால்

எழுமையும் ஏமாப்புடைத்து
ஏழு பிறவியிலும் அது பாதுகாப்பைத் தரும்!

app_engine

Posts : 10097
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 6 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  app_engine Tue Jan 28, 2014 6:59 pm

#127
யாகாவாராயினும் நாகாக்க காவாக்கால்
சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு


ஐம்புலன்களில் மிகவும் வலிமை வாய்ந்தது என்ன என நமக்கு அறியத்தரும் குறள்!

நாக்கு (வாய்) தான் அது!

மனிதர்களின் வெளித்தொடர்புக்கான  உடல் உறுப்புகளில், உள்வாங்குவது மட்டுமல்லாமல் பேரளவில் "வெளியில் விடும்" உறுப்பு இது தான். (காது / மூக்குக்கு இந்தத் திறன் இல்லை, கண்ணுக்கு ஓரளவு உண்டு, நவீன உலகில் மற்ற உடல் உறுப்புகள் - குறிப்பாகக் கை - கொண்டு எழுதி / தட்டச்சு செய்து தகவல் வெளியிடலாம். எனினும், அடிப்படையான விதத்தில் நாவுக்கு ஈடு இணை இல்லை)

அதனாலேயே இதனைக் கட்டுப்படுத்துவது கூடுதல் தேவை ஆகிறது!

தமிழ் படித்த எல்லோருக்கும் நன்கு அறிமுகம் என்றாலும் எல்லாச்சொற்களுக்கும் பொருள் தெரிந்திருக்க வேண்டும் என்றில்லை.

எடுத்துக்காட்டாக, "சோகாப்பர்" என்றால் என்ன பொருள்?

இதன் அடிப்படைச்சொல் "சோகா" அல்லது "சோகாப்பு". இதற்கு அகராதி தரும் பொருள் "துன்பம்". அப்படியாக, "சோகாப்பர்" என்பதன் பொருள், "துன்புறுவர், துன்பத்துக்குள்ளாவர்" என்பதாகும்.

யாகாவாராயினும் நாகாக்க
வேறு எதை அடக்காவிட்டாலும் நாவை (பேச்சை) அடக்க வேண்டும்

காவாக்கால்
அப்படி அடக்காவிட்டால் (அடக்கமில்லாமல் பேசிக்கொண்டிருந்தால்)

சொல்லிழுக்குப் பட்டு சோகாப்பர்
சொற்களின் குற்றத்தில் அகப்பட்டுத் துன்பத்துக்குள்ளாவார்கள்!

app_engine

Posts : 10097
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI

Back to top Go down

குறள் இன்பம் - #1 - #948  - Page 6 Empty Re: குறள் இன்பம் - #1 - #948

Post  Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 6 of 40 Previous  1 ... 5, 6, 7 ... 23 ... 40  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum